Thursday, April 12, 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது


கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது. தீர்ப்பை தனி நீதிமன்ற நீதிபதி கே.ருத்ராபதி நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இதையடுத்து, கோவை குண்டு வெடிப்பு நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ளது.

கோவை மாநகரில் 1998 பிப்.14 அன்று 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அடுத்த, ஐந்து நாள்களில் 19-ஆம் நாள் வரை மேலும் 7 குண்டு வெடிப்புகள் நடந்தன.

இது தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டு வெடிப்பு மற்றும் தொடர் சம்பவங்கள் தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதில், 181 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். 167 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தஸ்தகீர் என்பவர் இறந்து விட்டார். போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். யசூர் ரகுமான் என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 2001 செப். 23 அன்று குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. சாட்சிகள் விசாரணை 2002 மார்ச் 7 அன்று தொடங்கியது.

வழக்கின் சாட்சிகளான 1330 பேரிடம் 2006 ஜூன் 27-இல் அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை முடித்தனர். இதையடுத்து, 2006 ஜூலை 7 அன்று அரசுத் தரப்பு வாதம் தொடங்கியது.

ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல்:

அரசுத் தரப்பில் 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆயிரத்து 731 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 480 சான்று பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அரசுத் தரப்பின் 1300 சாட்சிகளில் முக்கிய சாட்சிகள் 210. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் சொத்துகள் பாதிக்கப்பட்டோர் என 423 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

நான்கு கட்டங்களாக நடந்த வாதம்:

வழக்கின் முதல் கட்ட வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கினர். குண்டு வெடிப்புக்கான நோக்கம், கூட்டுச் சதி, சதித் திட்டம் தயாரிப்பு, திட்டம் நிறைவேற்றம் என நான்கு கட்டங்களாக வாதங்களை முன் வைத்தனர்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் 2006 ஆகஸ்ட் 21 அன்று வாதத்தைத் தொடங்கினர். 2007 மார்ச் 30 அன்று வாதத்தை முடித்தனர்.

எதிர்த்தரப்பு வாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் 100 தீர்ப்புகளை ஆதாரம் காட்டி அரசுத் தரப்பு பதிலுரை அளித்தது.பதிலுரை அளிக்க அரசுத்தரப்பு நான்கு நாள்கள் எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, அரசுத் தரப்பு கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆதாரங்கள் இந்த வழக்குக்கு பொருந்தாது என எதிர்த் தரப்பு வாதத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 10-04-2007 செவ்வாய்க்கிழமை முடிந்தது.

நாள் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி கே.ருத்ராபதி ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான், பி.திருமலைராஜன், ப.பா.மோகன் உள்ளிட்ட 23 வழக்கறி்ஞர்கள் வாதிட்டனர். மதானி உள்ளிட்ட கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் விருத்தாசலம் (ரெட்டியார்) ஆஜராகி வாதிட்டார்.

No comments: