Monday, April 16, 2007

போலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்

புதுச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.

போராட்டக் குழுவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் 13-04-2007 வெள்ளிக்கிழமை கூறியது:

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து இதுவரை அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது அரசு திட்டமிட்டு தடியடி நடத்தியுள்ளது. இப்போராட்ட இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை, 3 போலீஸ் கண்காணிப்பாளர்கள் உள்பட அதிக அளவில் போலசார் குவிக்கப்பட்டதே இதற்கு ஆதாரம். போலீஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளைக் கூறியது அவமானமாக இருந்தது.

இத்தாக்குதலை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.

போராட்டம் நடத்தும் தேங்காய்த்திட்டு மக்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது தவறு.

தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இப் பிரச்சினையில் மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் இறங்குவது என்பது தொடர்பாக 14-04-2007 சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றனர்.

போலீஸ் தாக்குதலில் காயபட்டவர்கள் செய்தியாளர்களிடம் போலீஸ் அத்துமீறல் குறித்து விளக்கினர். தங்கள் உடம்பில் பட்ட காயங்களைக் காட்டினர்.

இப் பேட்டியின்போது போராட்டக் குழு அமைப்பாளர் பாலமோகனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments: