Wednesday, April 18, 2007

"அது ஒரு பொடா காலம்" சுப.வீரபாண்டியன்



1

இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது.

இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன்.

‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார்.

எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன்.

‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.

என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அதுவும் இந்த நள்ளிரவில் ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.

அவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.

நான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட் 1) பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.

ஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்!

சற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.

‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா!’’

‘‘ஏம்ப்பா, என்ன விஷயம்?’’

மெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத்துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக் கொண்டனர்.

‘‘என்ன.. என்ன..?’’ அவர்கள் குரலில் பதற்றம்! இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.

‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்?’’ மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது?’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.

‘‘தைரியமா இரு! நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க!’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.

‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா!’’ என்றான்.

விரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.

ஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ?’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.

நானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.

நானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினைகள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.

ஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென்னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.

ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி!

அடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.

தமிழர் தேசிய இயக்கம், 1908-ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950-ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.

அடுத்த நாள், இந்திய விடுதலை நாளையொட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட்டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.

தென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.

‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.

அடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.

சரியாகக் காலை 6.10-க்கு அழைப்பு மணி ஒலித்தது.

கதவைத் திறந்தால்...

காக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.

துப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரியும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

பொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்!

நன்றி: ஆனந்த விகடன் - ஏப்ரல் 18, 2007.

3 comments:

Anonymous said...

தோழர் சுப.வீரபாண்டியன் தமிழின உணர்வாளர்களால் மதிக்கக்கூடிய போராளி என்பதில் மாற்று கருத்தில்லை...

இருப்பினும்
தலைவர் பழ.நெடுமாறனையும்...
தமிழர்தேசிய இயக்கத்தையும் விட்டுப் பிரிந்ததும்... புதிய இயக்கம் கண்டதும்...
தமிழின மேம்பாட்டிற்காக கருணாநிதியை நம்புவதும் நெருடலாக உள்ளது...

தோழமையுடன்...
மு.சீ.செந்தமிழன்
புதுச்சேரி.

Anonymous said...

உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் துன்பத்தையும் சிறையையும் அனுபவிக்கின்றார்கள். என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?. இரு கைகளைக் கூப்பி உங்கள் திசையை நோக்கி வணங்குகின்றோம்.
நங்கள் செய்யும், செய்த தவறுகளை உரிமையுடன் மன்னியுங்கள்.
எங்கள் தேசம் விடுதலை பெறும்போது எங்கள் மண்ணிற்கு வருங்கள்.

உங்கள் ஈழ உறவுகள்.

Anonymous said...

உங்கள் பதிவை வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் துன்பத்தையும் சிறையையும் அனுபவிக்கின்றார்கள். என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?. இரு கைகளைக் கூப்பி உங்கள் திசையை நோக்கி வணங்குகின்றோம்.
நங்கள் செய்யும், செய்த தவறுகளை உரிமையுடன் மன்னியுங்கள்.
எங்கள் தேசம் விடுதலை பெறும்போது எங்கள் மண்ணிற்கு வருங்கள்.

உங்கள் ஈழ உறவுகள்.