Friday, April 13, 2007

பொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்படுமா?

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், 03-4-2007 அன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இவ்வழக்கைக் காரணம் காட்டி முந்தைய அதிமுக அரசு தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்தது. தற்போதிய திமுக அரசும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இத்தடையை நீட்டிக்கச் செய்வது தவறான போக்காகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

2 comments:

வெற்றி said...

சுகுமாரன்,
பதிவுக்கு நன்றி.
கலைஞர் நல்ல முடிவாக எடுப்பார் என நம்புகிறேன்.

Anonymous said...

பொடாவை பொடிப்பொடியாக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்