Monday, August 23, 2021

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க வேண்டும்!

 

தமிழகத்தைப் போல் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளை செப்டம்பர் 1 அன்று திறக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (22.08.2021) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு வரும் 01.09.2021 அன்று முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. ஏற்கனவே பள்ளிகள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.

சென்ற ஜீலை 15 முதல் அரசு ஊழியர்கள் 100 விழுக்காடு பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் ஆசிரியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவிடவில்லை. இதனால், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், மாணவர் சேர்க்கைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வகுப்புகளும் முறையாக அனைத்து ஆசிரியர்களும் நடத்தவில்லை. ஏழை எளிய மாணவர்கள் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத ஆசிரியர்கள் மீதும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் புதுச்சேரி அரசு மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் வரும் 01.09.2021 அன்று பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’சார்பில் வலியுறுத்துகிறோம்.

Saturday, August 14, 2021

உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (13.08.2021) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் போலியான பயனாளிகளைக் கண்டறிந்து நீக்கி உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரியில் முதியோர், விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சமூக நலத்துறை மூலம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. புதுச்சேரி முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் மேற்கண்ட திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே வழங்கப்பட்ட உதவித் தொகையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2000, 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2000, 60 வயது முதல் 79 வயது வரை உள்ள முதியோருக்கு ரூ.2500, 80 வயதுக்கு மேலுள்ள முதியோருக்கு ரூ.3500 என உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்க தற்போதைய அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது உயர்த்தப்பட்ட உதவித் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரியில் முதியோர் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் 55 வயது முழுமையடையாத நிலையில், வயதைத் திருத்திப் போலியான ஆதார் அட்டைகளைத் தயாரித்து சட்ட விதிகளுக்கு முரணாக உதவித் தொகைப் பெற்று வருகின்றனர். அதே போன்று தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் இதுபோன்று போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டு அரசுப் பணம் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் நடந்த இந்த முறைகேடுகளைத் தடுக்க முதியோர் உதவித் தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் வயதுச் சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். போலியான ஆதார் அட்டைகள் வழங்கியவர்களைக் கண்டறிந்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைப் பெறும் பயனாளிகளின் ஆதார் அட்டை எண்களை இணைத்து போலியான பயனாளிகள் உதவித் தொகைப் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

அதேபோல், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைப் பெறும் பயனாளிகளையும் ஆய்வு செய்து உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம்.