Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts

Saturday, December 29, 2007

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல - பழ.நெடுமாறன்


பழ.நெடுமாறன் (கோப்புப் படம்)

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் 29-12-2007 சனியன்று காலை 11.30 மணிக்கு, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குண்டுவீச்சில் காயம் அடைந்தது உண்மையல்ல. வெறும் வதந்திதான். இதனை விடுதலைப் புலிகளே மறுத்துள்ளனர். ஏற்கனவே நான்கு முறை இதுபோன்ற செய்திகள் வெளிவந்துள்ளன. சில சமையங்களில் அவர் இறந்துவிட்டதாகக் கூட செய்தி வந்தது. அவையெல்லாம் உண்மையல்ல என்பது நிரூபனமானது. பிரபாகரன் ஈழப் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்.

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் சிங்கள் ஆட்சியாளர்களால் தொடரப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஐந்து தலைமுறைக்கும் மேலாக உழைத்து அந்நாட்டை வலமாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்கள் எனப்படும் மலையகத் தமிழர்கள், குடியுரிமைப் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஈழத் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கப்பட்டார்கள். அவர்களின் கல்வி, நில, மொழி உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை வாழ் தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றிய இலங்கை விடுதலை நாளை துக்க நாளாக தமிழர்கள் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலைமைகளையும் சிங்கள் இனப் பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலைகளையும் கவனத்தில் கொள்ளாமல், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை விடுதலைநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது இலங்கைச் சுற்றுப் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 18-12-2007 அன்று இந்தியப் பாதுகாப்புச் செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும், இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகர தலைமையிலான சிங்கள உயர்மட்ட குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கு ராடார் சாதனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தியா வழங்கும் இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கப் பயன்படுத்தப்படும் என நன்கு தெரிந்தும் இந்திய அரசு, சிங்கள அரசுக்கு உதவுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இராணுவ ரீதியான உதவிகளை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்துகிறேன்.

சிங்கள இராணுவ விமானங்களை ஓட்டுவதற்கு பாகிஸ்தான் விமானிகளைப் பயன்படுத்தி, தமிழர் பகுதிகளில் குண்டுவீசி அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்றுக் குவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய - இலங்கை விமானப் படைகள் கூட்டாக ரோந்துப் பணியாற்ற முடிவு செய்துள்ளனர். அதனைக் கைவிட வேண்டும்.

ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்ப இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இதற்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடித்துக் கொள்ளும்படியும், மத்திய அரசிடம் பேசி அனுமதி பெற்றுத் தருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதிமொழி கடிதம் கொடுத்தார்.

டாக்டர் இராமதாஸ், வைகோ, நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர். இச் சம்பவம் முடிந்து 100 நாள்கள் ஆகின்றன.

இதற்கு அனுமதி அளிக்காதைக் கண்டித்துக் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர் தாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவே தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி கூறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Sunday, September 16, 2007

முதல்வர் கருணாநிதி மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை

ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பும் நடவடிக்கையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்காததைக் கண்டித்து, பழ.நெடுமாறன் 12-09-2007 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

முதல்வர் கருணாநி்தியின் உறுதிமொழியோடு பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தினார். அதனை ஏற்று பழ.நெடுமாறன் 15-09-2007 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:

"இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி பெற்று விட்டோம். ஆனால், இந்திய அரசு 7 மாதங்களாக அதை அனுப்ப மறுப்பு தெரிவித்து வந்தது. அதை எதிர்த்துதான் எனது உண்ணாவிரதம்.

நான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது தமிழக அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் என் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு முதல்வரிடம் பேசும்போது, இந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என்று அவர் உறுதிமொழி அளித்துள்ளார். அதை நிறைவேற்ற தானும் முயற்சி எடுப்பதாக மருத்துவர் இராமதாசு கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்புவதில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி வலியுறுத்துவார்."

இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட பழ.நெடுமாறன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி்கிச்சைப் பெற்று வருகிறார். சி்கிச்சை முடிந்து நாளை (17-09-2007) வீடு திரும்புவார் என்று தெரிகிறது. பழ.நெடுமாறன் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தினால் ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப மத்திய அரசு இன்னும் சில நாட்களில் அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Saturday, September 15, 2007

பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பரப்புரை மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தமிழகப் போலிசார் நாகைக் கடலோர மீனவர்களிடம் படகுகள் தரக் கூடாது என்று மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டித்து, பழ.நெடுமாறன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பழ.நெடுமாறன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு 13-09-2007 உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வர் கருணாநிதி 14-09-2007 அன்று இரவு பழ.நெடுமாறன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடித விவரம்:

பேரன்புடைய நெடுமாறன் அவர்களுக்கு,
வணக்கம்.

ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் ரயிலில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாநிலைப் போராட்டம், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மு. கருணாநிதி.


இக்கடிதத்தை ஏற்காத பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 14-07-2007 அன்று பதில் கடிதம் எழுதினார். அதன் விவரம்:

முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

13.09.2007 நாளிட்ட தங்கள் மடல் கிடைக்கப்பெற்றேன்.

என் உடல்நிலை குறித்த அக்கறையுடனும் என் கோரிக்கை குறித்த பரிவுடனும் தாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளுக்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கள அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார முற்றுகைக்கு உள்ளாகி பட்டினியிலும் நோயிலும் அல்லற்படும் 5 லட்சம் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வழங்கிட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரட்டப்பட்ட சற்று ஏறக்குறைய 1 கோடிரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதில் தராமல் இந்திய அரசு 7 மாத காலமாக இழுத்தடித்து வருவதனை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

தாங்கள் சேலம், ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்து தலைநகரம் திரும்பிய பின்னர் இது குறித்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த அணுகுமுறை அடிப்படையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு தங்களை சந்தித்து பேச அணியமாக உள்ளது.

எனவே இந்நிலையில் என் கால வரம்பற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவை உள்ளது என்பதனை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள
பழ. நெடுமாறன்.


இச்சூழலில், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சியினரும் (அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. தவிர), இயக்கத்தினரும் பழ.நெடுமாறன் உடல்நிலையைக் கணக்கில் கொண்டு, அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இன்று (15-09-2007) மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்குச் சென்று பழ.நெடுமாறன் அவர்களைச் சந்தித்தார். பா.ம.க. தலைவர் கோ.க.மணி உடனிருந்தார்.

அப்போது அவர் முதல்வர் கருணாநி்தி அளித்த உறுதிமொழியைத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டறிந்த பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். உடனே, மருத்துவர் இராமதாசு அளித்த பழச்சாறை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார். தமிழக அளவில் ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.

Friday, September 14, 2007

பழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 14-09-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிப்பதன் மூலம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசு கொழும்பு தலைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதின் விளைவாக அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர். இதையொட்டி, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசும் அனுமதி பெற்றுதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 12-09-2007 அன்று, சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்த போது, தமிழகப் போலிசார் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை நாகப்பட்டினம் கடற்கரையில் கைது செய்தனர். இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்கும் வரை பழ.நெடுமாறன் சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக்கத்தோடு நேற்றைய தினம் (13-09-2007) உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்துப் போட்டு, அத்துமீறி நடந்துள்ளனர். இதனைப் படம்பிடித்த ஒரு தனியார் தொலைக்காட்சி புகைப்படக்காரரை தாக்கியுள்ளனர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழக முதல்வரால் “நேருவின் மகளே” என்று வர்ணிக்கப்பட்ட இந்திரா காந்தியால் “என் மகன் நெடுமாறன்” என்று அழைக்கப்பட்டவர். பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற சீடராவார். கன்னட நடிகர் இராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது, கடும் நெருக்கடியில் அப்போதைய தி.மு.க. அரசு திணறிய போது, தன் உடல்நிலையைப் பற்றிக்கூட கவலைப்படாமல் காட்டிற்குச் சென்று நடிகர் இராஜ்குமாரை மீட்டவர். தமிழ், தமிழர் நலனுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்.

இதுபோன்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பழ.நெடுமாறன் அவர்களிடம் தமிழகப் போலிசார் அத்துமீறி நடந்ததை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வேடிக்கைப் பார்ப்பது அழகல்ல. உடனடியாக இந்த அத்துமீறலில் ஈடுபட்ட போலிசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமேனக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க இந்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்கள் துயர் துடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

செய்தி வெளியிட்டுள்ள இதழ்கள்:

மாலை மலர், தமிழ் முரசு, தினமணி, தினகரன், தினத்தந்தி.

Thursday, September 13, 2007

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் பழ.நெடுமாறன் மீது போலிசார் அடக்குமுறை-பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்-பதற்றம்

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர்.

சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர்.

பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, September 12, 2007

"எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்துப் போராடும்" - பழ.நெடுமாறன்.

12-09-2007: இலங்கையில் வாடும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் படகு மூலம் எடுத்துச் செல்ல முயன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களைத் தமிழகப் போலிசார் கைது செய்து நாகை அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது பழ.நெடுமாறன் அளித்த பேட்டி:

ஈழத் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் திரட்டி வைத்திருந்த உதவிப் பொருட்கள் மருந்து, உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.

பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு நாங்கள் திரட்டி வைத்திருந்த பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிச் செல்ல படகுகளைத் தயார் செய்து வைத்திருந்தோம். மாநில அரசு படகு தரக் கூடாது என மீனவர்களை மிரட்டியுள்ளது. இதனால் யாரும் படகு தரவில்லை. இது எங்களுடையப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். அதனால் எங்கள் குழு உடனடியாக கூடிப் பேசி முடிவெடுத்து, இன்று முதல் நான் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பது என்றும், மற்றவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதன்படி போராட்டத்தைத் தொடர்கிறோம்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் போராட்டக் குழு தொடர்ந்து போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கைக்குப் படகுமூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற பழ.நெடுமாறன் கைது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் போர் நடந்து வருவதைத் தொடர்ந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் உணவு, மருந்து கிடைக்காமல் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் செயல்படும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தமிழகமெங்கும் ரூ.1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், மருந்துகள் திரட்டினர். அதனை யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி வைக்க அனுமதி கோரினர். ஆனால், அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இதனிடையே, பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உணவு, மருந்துகள் அனுப்ப அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தினர். அதன்பின்னும், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நாகப்பட்டினம், இராமேசுவரம் ஆகிய பகுதிகளின் கடல் வழியாக படகு மூலம் சேகரித்த உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல தியாகப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதன்படி, இரண்டு குழுவினர் 07-09-2007 முதல் 11-09-2007 வரை பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்சியிலிருந்து நாகை வரையிலும், மதுரையிலிருந்து இராமேசுவரம் வரையிலும் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் ஏராளமான வாகனங்களில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

இதன்படி, 12-09-2007 அன்று காலை 10 மணியளவில் பழ.நெடுமாறன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு இயக்கத்தினர் உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் நாகப்பட்டினம் கடற்கரை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர். அப்போது, மீனவர்களிடம் போலிசார் படகுகள் கொடுக்கக் கூடாது என மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பழ.நெடுமாறன், நாகை கடற்கரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து அமர்ந்து கொண்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

செய்வதறியாது தவித்த போலிசார் பின்னர் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நாகை அருகேயுள்ள காடம்பாடி காவலர் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, பழ.நெடுமாறன் “ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்ப மத்திய, மாநில அரசுகள் தடை போடுகின்றன. என்ன விலைக் கொடுத்தாவது எடுத்த செயலை முடிப்போம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ளார். அவரோடு கைது செய்யப்பட்ட அனைவரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசும் காவல்துறையும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பழ.நெடுமாறன் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Friday, April 13, 2007

பொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்படுமா?

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், 03-4-2007 அன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், இவ்வழக்கைக் காரணம் காட்டி முந்தைய அதிமுக அரசு தமிழர் தேசிய இயக்கத்தைத் தடை செய்தது. தற்போதிய திமுக அரசும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இத்தடையை நீட்டிக்கச் செய்வது தவறான போக்காகும். எனவே, தமிழக அரசு உடனடியாக தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

Friday, March 09, 2007

துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் 08-03-2007 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:

ரூ.2700 கோடி மதிப்பிலான புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சி பெறுவதைக் காட்டிலும் பேரழிவைச் சந்திக்கும் நிலை உள்ளது.

மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆதாயத்துக்காக புதுச்சேரி மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத் திட்டத்தின் காரணமாக தேங்காய்த்திட்டு என்ற கிராமம் முற்றிலும் அழியும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் விளைவாக மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வரும் என்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுவது வெற்று வாக்குறுதிகளே.

இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாவார்கள். துறைமுகப் பகுதிக்குள் அவர்கள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேங்காய்த்திட்டு பகுதியில் வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு புதியதாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறுவது மோசடியாகும்.

இத் துறைமுக திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மக்கள் விரோதப் போக்காகும். எனவே இதை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் சிறிய நிலப்பகுதியான புதுச்சேரியில் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் சுமார் 1000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியைச் சுற்றியுள்ள எல்லா நிலத்தையும் இப்படி தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டால் புதுச்சேரி மக்கள் எங்கு போவார்கள்? தனியார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்களைப் பாதிக்கும் இத் திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.

Wednesday, March 07, 2007

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மக்களுடன் பழ.நெடுமாறன்


4-3-2007 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேங்காய்த்திட்டுப் பகுதி மக்களைச் சந்தித்து பேசினார்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேங்காய்த்திட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.

இந் நிலையில் புதுச்சேரி வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்றார். அவருக்கு மரப்பாலம் அருகே நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவின் தலைவர் காளியப்பன் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது "துறைமுக விரிவாக்கத்துக்காக தேங்காய்த்திட்டு பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் தங்கள் கிராமத்தை காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், "உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. விளை நிலங்களை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

இது உலக அளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவான செயலாகும். இதை மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.

துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடர்பாக தேங்காய்த்திட்டு மக்களின் போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு மக்களுக்கு எதிராக விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்து அளிக்கக் கூடாது. இதனை தடுக்க இயக்கம் நடத்தி, போராடவும் தயாராக வேண்டும்' என்றார்.

புதுவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் கு.இராமமூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tuesday, March 06, 2007

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை: பழ.நெடுமாறன் கண்டனம்


தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படையின் செயலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா, இலங்கைத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கும் விழா ஆகியவை புதுச்சேரியில் 4-3-2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசியது:

ஆசிய கண்டத்தில் முதல் கம்யூனிஸ்டாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். இவர் உலகத் தொழிலாளர் தினத்தை இந்தியாவில் முதன் முதலில் கொண்டாடினார்.

அவரது பிறந்த நாள் விழாவை மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசிய உணர்வுப் படைத்த இயக்கமாகத் திகழ்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈழத்தில் வாழும் மக்கள் இலங்கை இராணுவத்தின் இனவெறியால் பலியாகி வருகின்றனர். அவர்களுடன் சகோதர உணர்வு கொண்டவர்கள் என்பதால் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்லும் கொடுமையும் நடந்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பழ.நெடுமாறன்.

இவ்விழாவில் அமைப்புச் செயலர் விசுவநாதன், தமிழக மீனவ மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கில்பர்ட் ரோட்ரிகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக மு.முத்துக்கண்ணு, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்