Showing posts with label மதவெறி. Show all posts
Showing posts with label மதவெறி. Show all posts

Saturday, October 02, 2010

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!


வீரபாண்டியன்...


ஆரூண்...


பேராசிரியர் ஜவாகிருல்லா...



கோ. சுகுமாரன்...


அருணன்...


சுதர்சன நாச்சியப்பன்...



தேவநேயன்...


பங்கேற்றோர்...
----------------------------------------------------------------------------------------------------

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.

“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.

கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் அவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.

‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.

நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.

Friday, September 17, 2010

சென்னையில் "இந்தியாவும் மதசார்பின்மையும் - கருத்தரங்கம்"


மதசார்பற்றோர் மாமன்றம் மற்றும் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் இணைந்து 18.09.2010 சனியன்று, மாலை 4.30 மணியளவில், சென்னை லயோலா கல்லூரியிலுள்ள லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் "இந்தியாவும் மரசார்பின்மையும் - கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

மதசார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவுநர் வீரபாண்டியன் வரவேற்புரையும், இணைப்புரையும் ஆற்றுகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமைத் தாங்குகிறார்.

'உலகப் பார்வையில் இந்திய மதசார்பின்மை' என்ற தலைப்பில் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மைய செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் - தாளாளருமான  முனைவர் ஜோ.ஆருண் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

'குஜராத் - என்ன நடக்கிறது' என்ற தலைப்பில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், 'காவிமயமும் கோட்சேக்களும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், 'இந்திய மதசார்பின்மையும், நமது கடமையும்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தோழமையின் இயக்குநர் தேவநேயன் நன்றியுரை ஆற்றுகிறார்.

Friday, May 21, 2010

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைக் கெடுக்கும் வகையில் சுவரொட்டி: விளக்கம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 21.05.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

அமைச்சர் ஷாஜகான் பதவி விலக கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் புதுச்சேரி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைச்சர் ஷாஜகான் மீது சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை நடத்த தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்ய கோரி நேற்றைய தினம் புதுச்சேரி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்தன. இந்த சுவரொட்டிகள் “மனித உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் பாரதீய ஜனதா கட்சி, காலாப்பட்டு தொகுதி” ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த சுவரொட்டிகள் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஒட்டப்பட்டதாக மக்கள் எண்ணும்படி திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ளன. கூட்டமைப்பு பெயரைப் போன்ற தோற்றமுடைய அமைப்புப் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அமைச்சர் ஷாஜகான் வழக்கு குறித்து அனைத்து ஆவணங்களையும் சேகரித்து எங்களது சட்ட வல்லுநர்களிடம் உரிய சட்ட ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதன் பின்னரே, இப்பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்ய உள்ளோம்.  

மக்களைப் பிரித்து மலிவான அரசியல் செய்யும் மதவாத அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றோடு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருபோதும் இணைந்து செயல்படாது. இந்நிலையில், கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல பெயரையும், ஆதரவையும் சீர்குலைக்கும் வகையில் மதவாத கட்சியின் பெயரோடு சேர்ந்து இருப்பதுபோல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.  

அண்மைக் காலமாக மனித உரிமை என்ற பெயரில் போலியான அமைப்புகள் கட்டப் பஞ்சாயத்து செய்வது, சட்டத்திற்குப் புறம்பாகவும் செயல்படுவது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி வருகிறோம். இது பற்றி விரைவில் புதுச்சேரி அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.

Sunday, January 18, 2009

புதுச்சேரியில் எழுச்சியாக நடந்த அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளியீட்டு விழா!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரையில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பேசினார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்கினார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் 'அமைதியாக வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கி பிளவு ஏற்படுத்தும் சக்திகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சமயத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

டாக்டர் சே.சாதிக் 'மதவாதிற்கு எதிராக நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பிரச்சனையை அனுகும் போது உணர்ச்சிக்கு இடமளிக்க கூடாது. உணர்வுபூர்வமாக அனுக வேண்டும். மதவதிற்கு எதிரான இந்த நூலை எழுதிய அ.மார்க்ஸ், வெளியிட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்' என்றார்.

மேலும், இந்த நூல் வெளியீட்டிற்கு ரூ.5000/- அன்பளிப்பாக அளித்தார். மேலும், நூல் வெளியீட்டு அரங்கில் கலந்துக் கொண்டவர்களில் நூல் வாங்க வசதி இல்லாதவர்களுக்கு நூல் வழங்கும்படியும், அதற்கான தொகையை அளிப்பதாகவும் உறுதியளித்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைத்தட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது காவல் (காவி) துறை நடத்திய தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட்டன. அதைப் பார்த்த பல கன்னியஸ்திரிகள் கண்கலங்கினர். அமைதியை நேசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மீளாத அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் வண்ண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன. வண்ண பதாகைகள் நகரெங்கும் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், மாலை மலர் உள்ளிட்ட தமிழ், ஆங்கில நாளேடுகளும், உள்ளூர் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டிருந்தன.

வண்ண சுவரொட்டி...


Sunday, January 11, 2009

புதுச்சேரியில் அ.மார்க்ஸ் எழுதிய ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா–கர்நாடகம்' நூல் வெளியீட்டு விழா!





புதுச்சேரியில் 12.01.2009 திங்களன்று, மாலை 6.00 மணியளவில், லப்போர்த் வீதியிலுள்ள பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அரங்கில், பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ஒரிசா – கர்நாடகம்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்குகிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் மு.முத்துக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி வரவேற்புரை ஆற்றுகிறார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சே.சாதிக் இந்நூலை வெளியிட்டு கருத்துரை வழங்குகிறார். புதுச்சேரி – கடலூர் மறை மாவட்ட முதன்மைக் குரு மேன்மைமிகு பொன்.அந்தோணிசாமி அடிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இந்நூலை தொகுத்து எழுதியுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் ஏற்புரை வழங்குகிறார். முடிவில் அமைப்புக் குழு உறுப்பினர் உளவாய்க்கால் பெ.சந்திரசேகரன் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியின் முடிவில், கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 13 நிமிடங்கள் கொண்ட காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதல்கள், இந்திய கிறிஸ்துவம், அதை இந்துத்துவம் எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல் மொத்தம் 136 பக்கங்கள். விலை ரூ. 65.

Wednesday, December 24, 2008

அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துவிட்டது!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/-

ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கைகள், நேரடியாக சென்று பார்த்த அனுபவங்கள், இந்திய கிறிஸ்துவம் அதை இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டம் பற்றிய அலசல் என விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

மதவாததிற்கு எதிராக சமரசமின்றி எழுதியும், போராடியும் வரும் அ.மார்க்ஸ் இந்நூலை எழுதியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை "புலம்" மிகச் சிறப்பாக தயாரித்து வடிவமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், "புலம்" மதவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்நூலை பரவலாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

நூல் பெற விரும்புவோர் கீழ்காணும்
முகவரியில் தொடர்புக் கொள்ளவும்:

புலம்,
72, மதுர நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுரவாயில்,
சென்னை - 600 095.
பேசி: 97907 52332, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com.

கோ.சுகுமாரன்,
179-அ, மாடி, மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி -605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com