Wednesday, July 08, 2020

கண்ணகி முருகேசன் – நினைவஞ்சலி!

08.07.2003 : கண்ணகி முருகேசன் இருவருக்கும் பூச்சி மருந்தை வாயில் திணித்து, உயிர் போகும் முன்னே எரித்துக் கொன்றனர் சாதி வெறியர்கள். கண்ணகி வன்னியர் சமூகத்திலும், முருகேசன் தலித்தாகவும் பிறந்ததைத் தவிர வேறொன்றும் இக்கோடூரப் படுகொலைக்குக் காரணமல்ல. 17 ஆண்டுக் காலம் இவ்வழக்கை நடத்திக் குற்றவாளிகளுக்குத் தண்டனைப்
பெற்றுத் தர போராடி வருகிறார் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம். உடன் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சில நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் உதவியாக உள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்தவுடன் நேரில் சென்று விசாரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக் கோரி வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் இரத்தினம். 2004-இல் உயர்நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், சி.பி.ஐ. சட்டப்படியும், சரியாகவும் நடந்து கொள்ளவில்லை. முதலில் விசாரித்த சி.பி.ஐ. காவல் ஆய்வாளர் கே.சுப்பையன், பின்னர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பின் விசாரித்த சி.பி.ஐ. காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.டி.நந்தகுமார் ஆகியோர் வழக்கைக் கெடுக்கச் செய்த குளறுபடிகள் ஏராளம்.

சி.பி.ஐ. முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவின் உடன்பிறந்த தம்பி அய்யாசாமி (இரண்டாவது படத்தில் இருப்பவர்), மற்றொரு உறவினர் குணசேகரன் ஆகியோரை வழக்கில் சேர்த்து குற்றவாளியாக்கியது. கண் முன்னே நடந்த இக்கொடூரத்தின் நினைவுகள் ஒருபுறம், மறுபுறம் எந்தக் குற்றமும் செய்யாமல் இரு தலித்துகள் மிகுந்த மன உளைச்சல், துயரத்துடன் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளைக் குற்றவாளிகளாக்கிப் பின் “அப்ரூவர்” ஆக்கும் சி.பி.ஐ. முயற்சிக்கு வழக்கறிஞர் இரத்தினம் ஒப்புக் கொள்ளவில்லை. இது காலத்திற்கும் தீராப் பழியாகிவிடும் என்பதால் யார்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.

வழக்கறிஞர் திலகேஸ்வரன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரின் நிலைக் குறித்து விரிவாக எடுத்துக்கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கும் குற்றம்சாட்டப்பட்ட இரு தலித்துகளுக்கும் நிவாரணம் அளிக்கவில்லை. சி.பி.ஐ. செய்தக் குளறுபடிகளைப் பட்டியலிட்டு கூடுதல் விசாரணை (Further Investigation) நடத்தவும், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கவும் கோரப்பட்டதைத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு ஏற்கவில்லை. மாறாக விசாரணை நீதிமன்றத்தில் தீர்வுக் காணுங்கள் என்று உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில் இரு தலித்துகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சவால் நிறைந்தப் பணியை வழக்கறிஞர் இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உடன் இருந்து பணியாற்றுவதால் இதன் துயரங்களை நானும் சுமந்து கொண்டிருக்கிறேன்.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் குற்றவாளிகளின் மிரட்டலால் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகள் ஆயினர். முருகேசனின் உறவினர்கள் சிலரும் பிறழ் சாட்சி ஆயினர். குற்றவாளிகளின் நேரடி மிரட்டலுக்கு அஞ்சி அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற சாட்சி மறுநாள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். சி.பி.ஐ., தமிழகக் காவல்துறை இந்த உயிரிழப்பு பற்றித் துளியும் கவலைப்படவில்லை. இதில் உயர்நீதிமன்றமும் சேரும்.

கண்ணுற்ற சாட்சிகளாக ஆக்க வேண்டிய இரு தலித்துகளைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த சி.பி.ஐ., சம்பவத்தைக் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்திருந்து பார்த்த முருகேசனின் அம்மா சின்னப்பிள்ளையை (சாமிக்கண்ணுவின் இரண்டாவது மனைவி) விசாரித்து கு.ந.ச. 161-இன்படி வாக்குமூலம் பெறவில்லை. அரசுத் சாட்சிகளின் படியலிலும் சேர்க்கவில்லை.

வழக்கு விசாரணையின் போதுதான் சி.பி.ஐ. சின்னப்பிள்ளையிடம் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் முன் நிறுத்தி கு.ந.ச. 164-இன்படி வாக்குமூலம் பெற்றுள்ளது தெரிய வந்தது. அவ்வாக்குமூலத்தைப் பார்த்தால் சின்னப்பிள்ளை மிகத் தெளிவாக குற்றவாளிகளின் பெயர்கள் அனைத்தையும் கூறியதோடு, சம்பவத்தில் ஈடுபட்டு, வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதப் பலரது பெயரையும் கூறியுள்ளார். இவரது இந்த வாக்குமூலம் ஒன்றே குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத் தரப் போதுமானது. அதனால்தான், சி.பி.ஐ. இவரை விசாரித்து சாட்சியாகச் சேர்க்கவில்லை.

சின்னப்பிள்ளையை நீதிமன்ற சாட்சியாக (Court Witness) விசாரிக்க வழக்கறிஞர் இரத்தினம் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருந்த நிலையில், சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் அவசரம் அவசரமாக முந்திக் கொண்டு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சின்னப்பிள்ளை சாட்சியம் அளித்தார். நீதிமன்றத்தில் சின்னப்பிள்ளை சாட்சியம் அளிக்கும்போது குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் செய்த ரகளை நிதித்துறையின் மாண்பையே கேலிக்கூத்தாக்கியது.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 7(2)-இன்படி குற்றவாளிகளின் சொத்துக்களைப் பற்றுகைச் (Property attachment) செய்ய கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சி.பி.ஐ. சொத்துப் பட்டியலைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இவற்றை எல்லாம் பட்டியலிட்டு, இவ்வழக்கில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட விதிகள் 5(1)-இன்படி பாதிக்கப்பட்டோர் தேர்வின்படி மூத்த வழக்கறிஞர் ஒருவரை அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கவும், சாட்சி செல்வராஜ் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், பிறழ் சாட்சிகளாக மாறிய முருகேசன் உறவினர்களை மீண்டும் விசாரிக்கவும், பணம் கொடுத்து சாட்சிகளைக் களைத்தக் குற்றவாளிகள் மீது குற்ற நடவடிக்கைக் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.கே.இளவரசன், முத்துகுமரன் பெயரில் தொடரப்பட்ட இரண்டு பொதுநல வழக்குகளிலும் நியாயம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவ்வழக்குகளை விசாரித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் அமர்வில் மூத்த நீதிபதி மணிக்குமார் ஆவார்.

சம்பவம் நடந்த போது விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்குத் துணைப் போயினர். நக்கீரன் இதழில் செய்தி வந்தபின் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் பெற்று கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உட்பட வன்னியர் நால்வர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உட்பட தலித்துகள் நால்வர் முருகேசனுக்கு விஷம் கொடுத்து கொன்று எரித்ததாகவும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், எட்டுப் பேரையும் கைது செய்து கடலூர் நடுவண் சிறையிலும் அடைத்தனர். பின்னர் அனைவரும் பிணையில் வெளியே வந்தனர். பின்னர் இந்த வழக்கில் எட்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இப்பொய் வழக்கில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த விருத்தாசலம் காவல்நிலைய அப்போதைய காவல் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரையும் சி.பி.ஐ. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்தது. இதில் செல்லமுத்து காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். தமிழ்மாறன் உளுந்தூர்பேட்டையில் காவல் ஆய்வாளராக இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுப் பிணையில் உள்ளார்.

இந்நிலையில், தலித்துகள் நால்வர் மீது பொய் வழக்குப் போட்ட மேற்சொன்ன இரு காவல் அதிகாரிகள் மீது இ.த.ச. 201-இன்படி மட்டுமே குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி குறைந்தப்பட்ச தண்டனை மட்டுமே கிடைக்கும். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றசாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கிடைக்கும். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 2(1)-இன்படி குற்றச்சாட்டுப் பதிவு செய்ய தற்போது வழக்கை விசாரிக்கும் கடலூர் தனி நீதிமன்றத்தில் (Special Court for SC and ST Cases) மனுத் தாக்கல் செய்து வாதாடினார் வழக்கறிஞர் இரத்தினம். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இரு காவல் அதிகாரிகள் மீதும் மேற்சொன்ன சட்டப் பிரிவின்கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

குற்றவாளிகள் தரப்பில் விடப்படும் கடும் அச்சுறுத்தல்களுக்கு இடையே முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு குடும்பத்தினர் உறுதியாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமி, அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, வேப்பூர் காவல் நிலையத்தில் அய்யாசாமி மீது கொலை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். அவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைப் படித்தாலே இக்கொலை வழக்கில் அவர் பொய்யாகச் சேர்க்கப்பட்டது விளங்கும்.

அய்யாசாமியின் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். ஊருக்குப் பல நன்மைகள் செய்து வருகிறார். இதனால், தேர்தலில் போடியிட்டுத் தோல்வி அடைந்த தரப்பினர் அய்யாசாமி குடும்பம் மீது கோபத்தில் உள்ளனர். அண்மையில் இதுகுறித்து நடந்த மோதல் ஒன்றில் அய்யாசாமி, அவரது மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈட்டியை கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றதாவும் விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்தப் புகார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டு அய்யாசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அய்யாசாமியைக் கைது செய்த விருத்தாசலம் காவல்துறையினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால், அவர் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைக் காவல் அடைப்பு செய்த விருத்தாசலம் நீதித்துறை நடுவர் ’62 வயதாகும் இவரா ஈட்டிக் கொண்டுக் காவல்துறையினரைக் கொல்ல முயன்றார்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது மேற்சொன்ன பொய் வழக்குகளைப் பட்டியலிட்டு அய்யாசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. விருத்தாசலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் இரு காவல் அதிகாரிகளுக்குத் தண்டனைக் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து சாமிக்கண்ணு, அய்யாசாமி குடும்பத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுகின்றனர் விருத்தாசலம் காவல்துறையினர். இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்குக் குற்றவாளிகளின் தூண்டுதலும் உள்ளது.

அய்யாசாமி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும், குருதி அழுத்தம், சிறுநீரகக் கோளாறும் உள்ளது. இதனால், சிறையில் உடல்நிலை மோசமடைந்து தற்போது கடலூர் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்வளவு துயரங்களையும் சுமந்து கொண்டுக் கொலையுண்ட முருகேசனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

வழக்கு ஆவணங்கள், கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் எரிந்த உயிர்களின் அலறல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தனியே கதறி அழலாம். ஆறுதல் அடையலாம். ஆனால், நீதிமன்றத்தில் அளிக்கப்படும் சாட்சியங்கள் காதில் விழும்போது விழியோரம் கண்ணீர் கசிவதைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

கண்ணகி முருகேசன் – இருவருக்கும் என் நினைவஞ்சலி!

கோ.சுகுமாரன்

08.07.2020