Showing posts with label சுற்றுச் சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச் சூழல். Show all posts

Friday, March 09, 2007

10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 01-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.

கரூர்-கோயம்புத்தூர் இடையே நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் போது மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக கிராம விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் ஏ.பி.ஷா, கே.சந்துரு ஆகியோர் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக அந்த இடத்தில் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டு வரும் இக்காலத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

மரங்கள் வெட்டப்படுவதுதான் போதிய மழை இல்லாமல் போனதற்குக் காரணம். மேலும், நச்சு ரசாயன தொழிற்சாலைகளாலும், நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் மாசுப்படுதல் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.


புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு நகலைப் பெற்று அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். புதுச்சேரியில் மரங்கள் நிறைய வெட்டப்படுவதால் இத்தீர்ப்பை செயல்படுவத்துவது சுற்றுச்சூழலை ஓரளவாவது பாதுகாக்க உதவும்.

இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டக்கூடாது. தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வோடு அரசு செயல்பட வேண்டும்.

Tuesday, February 20, 2007

புதுவை அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் : ஆர்ப்பாட்டம்

உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயம் போன்ற மக்கள் விரோதக் கொள்கையினால் புதுச்சேரியின் மண்ணின் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியிலுள்ள தேங்காய்திட்டு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால், சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் கேடு ஏற்படவுள்ளது. தேங்காய்திட்டு மக்களும், கடலோர மீனவ மக்களும் ஊரைவிட்டே அப்புறப்படுத்தப்பட உள்ளனர். கடல் நீர் உப்பு நீராகும், சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நேரும் போது புதுச்சேரி மற்றும் தமிழக மீனவ கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே, துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

துணை நகரம் அமைக்க 700 ஏக்கர் விளைநிலத்தினைக் கையகப்படுத்தி, அரசே ரியல் எஸ்டேட் தொழில் செய்வதையும், பசுமையான விளைநிலங்கள் அழிக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

சுண்ணாம்பாற்றுக் கரையிலுள்ள அலுத்தவேலியில் 5 நட்சத்திர விடுதி கட்டவும், பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கவும் 100 ஏக்கர் பசுமையான நிலம் அழிக்கப்பட்டு, அப்பகுதி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தென்னந் தோப்புகளாக உள்ள விளைநிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் விடுதிகள் கட்டுவதற்கு 40% மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

வீராம்பட்டினத்தில் கடலோரக் காவல் படையின் தலைமையகம் அமைக்கப்படவுள்ளது. இதற்குக் கடற்கரைப் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. வீராம்பட்டினம் மீனவ மக்களின் வாழ்விடத்தைப் பறிக்கும் கடலோரக் காவல் படையின் தலைமையகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரில் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமைக்கு எதிராக புதுச்சேரி அரசு செயல்படுவதைக் கண்டித்தும், மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் 19-02-2007 அன்று, பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரா.வீராசாமி வரவேற்றார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், இராசுட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, தனித் தமிழ்க் கழகத் தலைவர் சீனு. அரிமாப்பாண்டியன், தமிழினத் தொண்டியக்கத் தலைவர் குணத்தொகையன், சமூக நீதிப் போராட்டக் குழு, பாகூர் பொறுப்பாளர் அ.மஞ்சினி, பூவுலகின் நண்பர்கள் சீனு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், விடுதலை வீரர் சீனுவாசனார் இயக்கப் பொறுப்பாளர் புதுவை தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டனவுரை ஆற்றினர்.

தேங்காய்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் காளியப்பன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கலந்துக் கொண்டு, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சுற்றுச் சூழலைக் காக்கவும், வாழ்விடங்கள் பறிபோவதைத் தடுக்கவும் அனைவரும் முழக்கமிட்டு உறுதியை வெளிப்படுத்தினர்.