Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Wednesday, January 16, 2008

ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை


புகைப்படம்: கோ.சுகுமாரன்
(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)


ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், "11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில்
(சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:

1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.

5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:

இதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.

'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tuesday, January 15, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கம் - உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழ்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி இன்று (15-01-2008) உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்டு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகக் கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி காளைகளை விரட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு பல காலமாக நடைபெற்று வருகிறது.

மிருக வதை எதிர்ப்புச் சங்கம் சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 'விலங்குகளைத் துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது' எனக் கூறி கடந்த 11-01-2008 அன்று ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவாட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு, பதட்டம் ஏற்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இத்தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு உடனடியாக சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்நிலையில், முதல்வர் கருணாநிதி தடையை நீக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பொதுத்துறைச் செயலாளர் ஜோதிஜெகராஜன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், மதுரை ஆட்சியர் ஜவகர், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தில்லிக்குச் சென்றனர்.

நேற்று (14-01-2008) விடுமுறை நாள் என்பதால், உச்சநீதிமன்ற பதிவாளர் நிராஜ் பரத்வாஜை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 'தமிழகம் முழுவதும் 15-ஆம் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த பாலமேட்டிலும், அடுத்த நாளில் நடத்த அலங்காநல்லூரிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. விழாவுக்கு ஓரிரு நாளே இருப்பதால் மறுஆய்வு மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என்று பதிவாளரிடம் குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, மறு ஆய்வு மனுவை ஏற்றுக் கொண்ட பதிவாளர் அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இம்மனு மீதான விசாரணை 15-01-2008 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இன்று நண்பகலில் தொடங்கிய இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கோபாலசுப்பிரமணியம் வாதிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடப்பதை தமிழக அரசு கண்காணிக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

இதனை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கடந்த சில நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது. அலங்காநல்லூர், பாலமேடு கிராமம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.