Thursday, January 27, 2011

புதுச்சேரி கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: நீதிவிசாரணைக்கு உத்திரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கெம்பாப் அல்கலீஸ் தொழிற்சாலையில் நேற்றைய தினம் விஷவாயு கசிந்து அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத் திணறியும், வாந்தி எடுத்தும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கெம்பாப் ஆலை மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். மேலும், அதிக நிலத்தடி நீரை உறிஞ்சியும், கழிவுகளை நிலத்திற்கு கீழே பெரிய குழாய்கள் மூலம் அனுப்புவதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மாசுப்பட்ட குடிநீரை பல ஆண்டுகளாக குடித்து வருவதால் அவர்களது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு சாஷன் டிரக்ஸ் தொழிற்சாலையில் இதேபோன்று விஷவாயு தாக்கி 5 பேர் பலியானதைத் தொடர்ந்து சாஷன் டிரக்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்சாலைகளை மூட வெண்டுமென அப்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தினோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம்.

அப்போது நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அருகிலிருக்கும் நவோதயா பள்ளி, புதுவைப் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி மாணாவர்கள் மூச்சுத் தொடர்பான நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே, புதுச்சேரி அரசு இந்த ஆபத்தான தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

Wednesday, January 26, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரபா.கல்விமணி உட்பட 10 பேர் கைது: கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்தியவர்களையும், அதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்விமணி உட்பட தலைவர்களையும் கைது செய்துள்ள தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் கடலூரில் இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்திய அவ்வமைப்பின் தலைவர் பாலகுரு, பேராசிரியர் பிரபா.கல்விமணி, நகைமுகன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இக்கூட்டம் நடந்து முடிந்தவுடன் போலீசார் அரங்கத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கூட்ட விளம்பர தட்டிகளையும், பதாகைகளையும் கிழித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அனுமதி பெற்று நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தோரை அச்சுறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை ஒடுக்கும் வகையில் போலீசார் நடந்துள்ளனர்.

போலீசாரின் அடக்குமுறையும், தமிழக அரசின் தமிழர் விரோத போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையேல், அனைத்து கட்சி, அமைப்புகளையும் ஒன்றுகூட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியில் நடந்த நிதிமோசடி குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.01.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில், வணிக அவையில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினர். இதில் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனம் மூலம், முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக தருகிறோம் என்ற பெயரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ள சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். மேலும், இந்த நிதி மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

2.மேற்சொன்ன நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 600 பேர் என்பதாலும், ரூபாய் 13 கோடிக்கு மேல் மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாலும் இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, உரிய நடவடிக்கை எடுத்திட சி.ஐ.டி. போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

3.நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மக்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, அதனை விற்று அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

4.இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என தீர்மானித்துள்ளோம்.

5.நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கவும், இவ்வழக்கில் நீதிக் கிடைத்திட தொடர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் போராட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பகுதி வாரியாக பிரதிநிதிகள் பங்கேற்பர். இதன் ஒருங்கிணப்பாளராக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இருப்பார் எனவும் முடிவு செய்துள்ளோம்.

Saturday, January 22, 2011

இலங்கை இராணுவம் கைது செய்துள்ள மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்ய கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய முறைப்படி அனுமதி பெற்று அங்கு சென்ற தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியையும், அவரது உதவியாளரையும் இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போர் முடிவுற்ற நிலையில் அங்குள்ள தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைப்பட்டு வருகின்றனர். இதனை மனித நேயத்தில் அக்கறையுள்ள அனைவரும் கண்டித்து வருகின்றனர். இதில் ஐ.நா. சபை தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி, அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் முறைப்படி விசா பெற்று இலங்கை சென்றுள்ளனர். அங்குள்ள முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டுள்ளனர். அப்போது ஓமந்தை என்னுமிடத்தில் அவர்கள் இருவரையும் இலங்கை இராணுவம் கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்தும் பலர் இலங்கை சென்று, அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும் நிலையில், இவர்களை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்க மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் கயல்விழி மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி என்பதும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதோடு, மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தந்தி அனுப்பி உள்ளோம்.

Sunday, January 02, 2011

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் - அரங்குக் கூட்ட தீர்மானங்கள்!

சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்
புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும் நீதிமன்றங்களின் போக்கும் என்ற தலைப்பில் அரங்குக்கூட்டம் வணிக அவையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்  நாரா.கலைநாதன்  தொடக்க உரையாற்றினார். புதுச்சேரி பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் கோ.செ.சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஐ.முகம்மது சலீம், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை தேசிய இணைச் செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரயாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உலகப் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலரும், சட்டிஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காகவும், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருபவருமான டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோக வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவாடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2. பொய்யான ஒரு வழக்கில், விசாரணையின் போது எந்தவொரு சாட்சியும் எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில் டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருப்பது என்பது நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

3. டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

4. சர்வதேச பிரகடனங்களில் மனித உரிமைப் பாதுகாவலர்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக மனித உரிமைப் பாதுகாவலர்களை இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்துப் பாதுகாக்க அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை தொடங்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

5. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மனித உரிமைப் பணிகளுக்காக செலவிட்டவரும், ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது இழப்பு மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பேரிழப்பு என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Saturday, January 01, 2011

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் - அரங்குக் கூட்டம்!



அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் அவருக்கு தேச துரோக குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தங்களுக்கு வழங்கப்பட்டதாக கருதி மனித உரிமை ஆர்வலர்கள் அவரை விடுதலை செய்ய கோரி போராடி வருகின்றனர்.

58 வயது நிரம்பிய டாக்டர் பினாயக் சென் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் பயின்றவர். உலக அளவில் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர். மிகவும் பின்தங்கிய பகுதியான சட்டிஸ்கரில் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். நக்சலைட்டுகளை ஒடுக்க அரசு உருவாக்கிய “சல்வார் ஜீடும்” என்ற தனியார் படைக்கு எதிராகவும், வளம் மிக்க காட்டு நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியையும் எதிர்த்தும் போராடி வருபவர். அவர் “சல்வார் ஜீடும்” படைக்கு எதிராக போராடியதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.

வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாத அவர் மீது சட்டிஸ்கர் காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி 2007-இல் அவரை கைது செய்தது. நீண்ட போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் 2009-இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை ராய்பூர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து, சென்ற டிசம்பர் 24 அன்று, டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோகம் (124-ஏ), கூட்டுச் சதி (120-பி), சட்டிஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (8 (1)) ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண சன்யால், பியூஷ் குகா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.
இவ்வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பினாயக் சென்னிற்கு எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில், சட்டிஸ்கர் காவல்துறையின் புனைவு நிறைந்த குற்ற அறிக்கையை ஏற்றும், சட்டத்தைச் சாராமலும் ராய்பூர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு நீதி வழங்கும் முறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

பினாயக் சென் மற்றவர்கள் போல் நகரத்தில் தொழில் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமல், பழங்குடியின மக்களின் நலனுக்காக கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து வருபவர். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பெருமைகள் நிறைந்த பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எவராலும் ஏற்றுக் கோள்ள முடியாது என்பதோடு கண்டனத்திற்குரியது.

மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேசதுரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பினாயக் சென்னுக்கு தண்டனை வழங்கியுள்ளது அவருக்கு பெருமை குறைவு இல்லை என்றாலும், சட்டத்தை மதித்து நடக்கும் ஒருவரை ‘தேசதுரோகி’ என நீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையதல்ல. அவரது மனைவி லீனா கூறியது போல் “இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும்”.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ தேசதுரோக பிரிவு வெள்ளையர்களை எதிர்த்து சுதந்தரத்திற்காக போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவ 1898-இல் கொண்டு வரப்பட்ட்து. இச்சட்டத்தை நேரு பிரதமராக இருந்த போது “மிகவும் ஆட்சேபகரமானது, ஏற்புடையதல்ல” என பாராளுமன்றத்தில் எதிர்த்துக் கூறியது கவனிக்கத்தக்கது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” முதல் உள்ளூர் மனித உரிமை அமைப்பு வரை அனைவரும் இத்தீர்ப்பை எதிர்த்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி, வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர், முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் உள்ளிட்டவர்களும் இத்தண்டனையை எதிர்த்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து தற்போது காங்கிரசும் இத்தீர்ப்பை நிராகரித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில், நீதி வேண்டி மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதிமன்றமும் அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பது மனித உரிமையை குழிதோண்டி புதைத்துவிடும் ஆபத்துள்ளது.

எனவே, மனித உரிமையில் அக்கறையுள்ள நாம் அனைவரும் டாக்டர் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்ப்போம். அவரை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய கோருவோம். நீதித்துறையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நீதி வழங்கும் முறையை ஒழுங்குப்படுத்துவோம்.

நாள்: 2.1.2011 ஞாயிறு. நேரம்: காலை 10 மணி.
இடம்: வணிக அவை, புதுச்சேரி.


பங்கேற்போர்:

தலைமை: திரு.கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

தொடக்கவுரை: திரு. நாரா.கலைநாதன், சட்டமன்ற உறுப்பினர், மாநிலச் செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.

முன்னிலை: திரு.கே.இராம்குமார், தலைவர், புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு.

சிறப்புரை: பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான் மக்கள் கழகம், பேராசிரியர் பிரா.கல்விமணி, ஒருங்கிணைப்பாளர், இருளர் பழங்குடி பாதுகாப்புச் சங்கம்.

உரை: திரு.இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், திரு.கொ.செ.சந்திரன், தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ.அ.ஜெகன்நாதன், துணை அமைப்பாளர், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, திரு.சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அமபேத்கர் மக்கள் படை, திரு.எம்.ஏ.அஷரப், மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐ.முகம்மது சலீம், மாவட்ட செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, திரு.ஜோசப் விக்டர் ராஜ், தேசிய இணைச் செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை, திரு.கு.மோகனசுந்தரம், தலைவர், குடிசை வாழ்வோர் பெருமன்றம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.