Wednesday, December 24, 2008

அ.மார்க்ஸ் எழுதிய "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துவிட்டது!



பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்" நூல் வெளிவந்துள்ளது. பக்கம்: 136. விலை: ரூ. 65/-

ஒரிசா, கர்நாடகா கிறிஸ்தவர்கள் மீது மதவெறி சக்திகள் நடத்திய தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கைகள், நேரடியாக சென்று பார்த்த அனுபவங்கள், இந்திய கிறிஸ்துவம் அதை இந்துத்துவம் அதை எதிர்கொண்ட வரலாறு, மதமாற்ற தடைச் சட்டம் பற்றிய அலசல் என விரிவான ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

மதவாததிற்கு எதிராக சமரசமின்றி எழுதியும், போராடியும் வரும் அ.மார்க்ஸ் இந்நூலை எழுதியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை "புலம்" மிகச் சிறப்பாக தயாரித்து வடிவமைத்துக் கொடுத்துள்ளது. மேலும், "புலம்" மதவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக இந்நூலை பரவலாக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.

நூல் பெற விரும்புவோர் கீழ்காணும்
முகவரியில் தொடர்புக் கொள்ளவும்:

புலம்,
72, மதுர நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுரவாயில்,
சென்னை - 600 095.
பேசி: 97907 52332, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com.

கோ.சுகுமாரன்,
179-அ, மாடி, மகாத்மா காந்தி வீதி,
புதுச்சேரி -605 001.
பேச: 98940 54640.
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

தில்லி: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவைத் திரட்டிய புதுச்சேரி கட்சி - இயக்கத்தினர்!




இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும், எவ்வகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என அரசை வலியுறுத்தவும், அகில இந்திய கட்சிகளிடம் ஆதரவுத் திரட்டவும் புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தில்லி பயணம் மேற்கொண்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் அப்பட்டமான இனவெறி என்பதோடு கிரிமினல் குற்றமாகும்.

இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.

இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட பிரனாப் முகர்ஜி அதனை முழுமையாக படித்து பார்த்தார். பின்னர் அவர் 'இலங்கையில் மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். அரசுக்கு எல்லாம் தெரியும். இதுகுறித்து அரசு அக்கறையோடு இருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. போரை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. போரினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது அரசின் கவனத்தில் உள்ளது. தாங்கள் அளித்த மனுவில் சொல்லப்பட்டவைப் பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டாக்டர் பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் ' இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா?' என டாக்டர் பருண் முகர்ஜி கேட்டார். அதற்கு அவர் ' நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உடனுக்குடன் எதிர் நிலை எடுக்கிறது. பொறுத்திருங்கள், பார்ப்போம்' என்று கூறினார்.

பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் பி.மோகன், பெல்லார்மீன், ம.தி.மு.க. எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து தில்லி வந்த நோக்கத்தை விளக்கினர். அப்போது அவர்களோடு இருந்த அதிமுக ராஜசபா எம்.பி. ஒருவர் 'இக்குழுவில் எங்கள் கட்சியினர் வந்திருக்கிறார்களா?' என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இந்த பிரச்சனை என் துறையின் கீழ் வரவில்லை. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நாளை நேரில் பேசுகிறேன். எங்கள் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும்’ எனக் கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நீண்ட நேரம் கலந்துரையாடினார். ‘எங்கள் கட்சி நேதாஜி வழியில் வந்த புரட்சிகர கட்சி. நாங்கள் அடக்குமுறை எந்தவடிவில் இருந்தாலும் அதை எதிர்ப்போம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் போராடிய போது, மன்னருக்கு ஆதரவாக இந்திய அரசு நிலை எடுக்ககக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு தீவிரமாக ஆதரவுத் திரட்டினோம். தற்போது தேர்தல் நேரம். அரசும், கட்சிகளும் தேர்தலிலேயே கவனமாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும். தமிழர்கள் பாதிக்கப்படுவது பற்றி இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வேண்டும். மேலும் ஜனவரி மாதம் நான் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்’ என உறுதிபட கூறினார்.

புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் மேற்கொண்ட தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, 18.12.2008 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பி.மோகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில், 'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வுக் காண வேண்டும். இதற்கு இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் இராமதாஸ், எம்.பி. தலைமையில் பா.ம.க. எம்.பி.க்கள் அகில இந்தியக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Thursday, December 11, 2008

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.12.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான வருவாய்த் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி பகுதியான ஏனாமில் தனக்குச் சொந்தமான இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக, முறைகேடாக அராசாங்க நிதியை ஒதுக்கியதன் மூலம் ஊழல் புரிந்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டிற்கு ஆளானவர் புதுச்சேரி அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர் என்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாமல் போனதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டிய முதலமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பாதுகாக்கும் நோக்கோடு அனைத்து அமைச்சர்களையும் உடன் வைத்துக் கொண்டு பேட்டியளித்தது நீதிமன்ற விசாரணையை திசை திருப்புவதோடு, ஊழலை மூடிமறைக்கும் செயலாகும்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேர்மையாக, முறையாக நடைபெற வேண்டுமானால், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், அவரை பதவியை விட்டு நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, December 09, 2008

புதுச்சேரி: தமிழக தலைவர்களை இழிவுப்படுத்திய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்பு!









தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், 9-12-2008 செவ்வாயன்று, காலை 10.30 மணியளவில், ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார். போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் ப.அமுதவன், ம.தி.மு.க. அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கபிரியேல், வ.செல்வராசு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயலாளர் யூ.முத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முரசொலி மாறன் பேரவைத் தலைவர் நடராசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் 250 பேர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

1) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை கோமாளிகள் என இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

2) மத்திய அரசு உடனடியாக இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3) இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஈழத்தமிழர் துயர் துடைக்க புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி!







புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது.

கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர்.

கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர்.

ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அத்தொகையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

நீர் வண்ண ஓவியங்கள் ரூ.100 முதல் நெய் வண்ண ஓவியங்கள் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரையில் விலையுள்ள ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த விலை ஓவியங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஈழத் தமிழர் படும் துயரங்களை விளக்கிய துண்டறிக்கை அளித்தனர்.

இக்கண்காட்சி மூலம் ரூ50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வீரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி ஓவியர்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். பல்வேறு அமைப்பினர் ஓவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Thursday, December 04, 2008

திருக்கோணமலையில் கவிஞர் சு.வில்வரெத்தினம் - நினைவு நிகழ்வு!

எதிர்வரும் 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சு.வி-யின் வருகையும் வசிப்பும் திருக்கோணமலை நகரின் அக்காலகட்டத்து சமூக - வாசிப்பு - எழுத்து - நாடகத் துறையில் கணிசமானளவு பங்களிப்பினையும் அதிர்வினையும் ஏற்படுத்தியது.

அதையும் தாண்டி ஈழத்து எழுத்துத்துறையில் அன்னாரது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து, அத்துறையில் பரிச்சயம் கொண்டவர்கள் கருதுவதை கண்டும் கேட்டும் வாசித்தும் நாம் அறியக்கூடியதாயிருக்கும்.

தனிப்பட, அவரது ஆளுமையும், பழகும் முறையும், திறந்த மனதும் அதிகமதிகம் கவர, அவரது கனிவின் இசை லயத்தில் கட்டுண்டு கிடந்தவர்களாக நம்மில் சிலர் இருந்திருப்போம்.

ஆற்றலும், ஆளுமையும், கவிதையும், தமிழும், கலையும், கனிவும், ஆன்மீகமுமாய் இன்னும் பலவுமாய் வாழ்ந்து பின் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடுவழியில் பிரிந்து சென்ற அந்தக் கவிஞனை நினைத்து திருக்கோணமலை நண்பர்கள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள இணையவாசிகள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்...

மேலதிக தகவல்களுக்கு இதைச் சொடுக்கவும்

Saturday, November 29, 2008

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!


புகைப்படம்: கோ.சுகுமாரன்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’ (தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் ...மேலும்

Friday, November 28, 2008

சமூக நீதிப் போராளி வி.பி.சிங் காலமானார் - இரங்கல்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் காலஞ்சென்ற வி.பி.சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 28-11-2008 அன்று விடுத்துள்ள குறிப்பு:

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இத்தருணத்தில் அவரது பாதையில் சமூக நீதிக்குப் போராட உறுதியேற்போம்.

மன்னர் குடும்பத்தில் உயர்வகுப்பில் பிறந்தவராக இருந்தாலும் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, இந்திய வரலாற்றில் சமூக நீதிக்குப் புதிய பாதையை அமைத்தவர்.

ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை சென்ற இந்தியப் படையைத் திரும்பப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் நலன் காத்தவர். பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக சீக்கிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

பாபர் மசூதியை இடிக்கச் சென்ற மதவாத சக்திகளூக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து மதசார்பின்மைக் கொள்கையைக் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மதவாதத்திற்கு எதிராகவும் போராடியதன் விளைவாக நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர்.

இந்திய வரலாற்றில் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர். வழக்கறிஞர், கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் என்பவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான மிகச் சிறந்த அரசியல் தலைவர்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

Wednesday, November 26, 2008

சட்டக் கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் ...மேலும்

Friday, November 21, 2008

தமிழக - புதுச்சேரி மீனவர்கள் சிங்கள கடற்படையால் கடத்தப்பட்டுச் சிறை: கண்டன ஆர்ப்பாட்டம்!







கடந்த 17-11-2008 அன்று தமிழகத்தைச்சேர்ந்த ஜெகதாபட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி பகுதி காரைக்கால் மீனவர்கள் 15 பேர் உட்பட 28 மீனவர்களைச் சிங்கள கடற்படை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று (19-11-2008, வெள்ளி) காலை 10 முதல் 2.00 மணிவரையில், பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், லோகு.அய்யப்பன், தலைவர், பெரியார் தி.க., கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், அமைப்பாளர், வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் பாசறை, கஜேந்திரன், தலைவர், பசுமை பாரதம் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கணடன் உரையாற்றினர்.

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதி கிளிங்சல்மேட்டைச் சேர்ந்த திருமுருகன், தமிழ்மணி, குமார், சக்திவேல், நாகராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த பன்னீர், ராஜ், சுப்பிரமணியன், முருகவேல், காசாக்குடிமேட்டைச் சேர்ந்த சிவவடிவேல், சின்னையன், செல்வகுமார், கார்த்திக் ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு தற்போது் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.

Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, November 18, 2008

புதுச்சேரியில் நவம்பர் 25-இல் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி "முழு அடைப்பு"



ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் 18-11-2008 செவ்வாய் அன்று மாலை 4.00 மணியளவில் முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் நாரா.கலைநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் இரா.விசுவநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், வி.எஸ்.அபிஷேகம், இராமமூர்த்தி, கீதநாதன், செல்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), சிவக்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன் , வ.செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), தங்க.கலைமாறன்,(பகுஜன் சமாஜ் கட்சி), தி.சஞ்சீவி, (இராஷ்டிரிய ஜனதா தளம்), சுந்தரமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), லோகு.அய்யப்பன், விசயசங்கர், தந்தைபிரியன் (பெரியார் தி.க.), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.மங்கையர்செல்வன், வ.குப்புராசு (மீனவர் விடுதலை வேங்கைகள்), ந.மு.தமிழ்மணி,(செந்தமிழர் இயக்கம்), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), மு.அ.குப்புசாமி, (தமிழர் திராவிடர் கழகம்) ஆகிய கட்சி - இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கையில் நடைபெறும் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 25-11-2008 செவ்வாயன்று புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வையில் வரும் 23, 24 ஆகிய இரு நாட்களில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 25-இல் தமிழ்கம் முழுவதும் "முழு அடைப்பு" நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 12, 2008

தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!









மேடையில் தலைவர்கள்...


டி.இராஜா...


கோ.சுகுமாரன்...

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.

தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணி - மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000 தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி, தில்லியில் உள்ள மண்டியா இல்லம் பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது.

இப்பேரணியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஈழத் தமிழர் ஆதரவு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்தனர்.

பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்கு இராஜீவ் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆ.கலையரசன் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) தொடக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் மாணவ மாணவியர் சார்பில் பல்லவி (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை - JNUSU, பொதுச்செயலாளர்), பிரியதர்சினி (ஜனநாயக மாணவர் சங்கம் - DSU, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), கார்மேகம் (அகில இந்திய மாணவர் கழகம் - ASA, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), ஆதிகேசவன் (சட்டக் கல்லூரி, தில்லி பல்கலைகழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா, புதிய தமிழகம் கட்சி நிறுவநர் டாக்டர் கிருஷ்ணசாமி, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியை இரா.விஜயலட்சுமி, பேராசிரியை சரசுவதி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தில்லிப் ப்ல்கலைக் கழக மாணவர் குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் கையொலி எழுப்பி ஆதரித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.இராஜா பேசியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி. இலங்கைப் பிரச்சினை அரை நூற்றாண்டு காலப் பிரச்சினை. இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஆரம்பித்ததற்கு காரணம்.

1956-ஆம் ஆண்டு இலங்கை அரசு "சிங்கள ஆட்சி மொழிச் சட்டம்" இயற்றியது. இதன்படி தமிழ் மொழி இரண்டாந்தர மொழியானது. அதேபோல், 1961-இல் "சிங்கள நீதிமன்ற மொழிச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதனால், தமிழ் நீதிமன்ற மொழியிலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர், 1972-இல் இலங்கை அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. இதனை எதிர்த்துதான் தமிழர்கள் அங்குப் போராட தொடங்கினார்கள்.

ஈழத்தின் தந்தை எனக் கருதப்படும் செல்வநாயகம் தலைமையில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம்தான் இன்று தேசிய இனப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை தேசிய இனப் போராட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. அதையும் தாண்டி ஜனநாயகத்திற்கான போராட்டமாக பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கூறி நான் இங்கு ஒப்பாரி வைக்க விரும்பவில்லை. ஈழத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க அங்கு பூர்ணப் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடப்பது 'இன அழிப்புப் போர்' (Genocide) என்பதை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன், பேசி வருகிறேன்.

இந்தப் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று சொல்கிறோம். இந்தியா ஒரு சுதந்திர நாடு, இலங்கை ஒரு சுதந்திர நாடு. எனவே, இந்தியா அந்நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது என்பது தவறு. அங்கு நடக்கும் பிரச்சைனையில் இந்தியாவும் ஈடுபடுத்தப்படுகிறது. ஏனெனில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம் பேர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்தியா தலையிட்டாக வேண்டும்.

இந்தியா இராணுவ உதவி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அரசோ ஆயுத உதவி வழங்கவில்லை ராடார் கருவி போன்றவற்றை வழங்கியுள்ளதாக கூறுகிறது. எந்த உதவி வழங்கினாலும் அது தமிழருக்கு எதிரான போருக்குத்தான் பயன்படுத்தப்படும். இந்தியா எந்த உதவியும் வழங்கக்கூடாது.

இலங்கைப் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது என்பதை பல முறை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன். பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் (Ceasefire) செய்யப்பட வேண்டும். இதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

வரும் 14-ந் தேதியன்று அகில இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடக்க உள்ளது. அதில் ஈழப் பிரச்சினையையும் ஒன்றாக எழுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதியில் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிய பின், இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது நடத்தி வந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தாததால், தமிழீழ மக்கள் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும். இலங்கை விவகாரம் உள்நாட்டு பிரச்சினை இல்லை என்பதால், இந்தியா உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். போரை நிறுத்தாமல் நிவாரண பொருட்களை வழங்குவது எந்தவித பயனும் அளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 ஆயிரம் மாணவர்கள் பேரணி - இரத்தக் கைரேகையிட்டு ஆளுநரிடம் மனு!






ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 04-11-2008 அன்று, புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று இரத்தக் கைரேகையிட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு இராணுவ உதவி உள்ளிட்ட எந்த உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது, பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்குச் சென்று மாணவர்களை ஒன்று திரட்டிய புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் பிரமாண்ட பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஷ் (எ) சாமிநாதன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் தி.க. அமைப்பாளர் தந்தைபிரியன், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் முத்து, செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசுக் கல்லூரி, தவளக்குப்பம் தாகூர் இணைப்பு கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேநிலைப் பள்ளி, வ.உ.சி அரசு மேநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காலை 10 மணிக்கு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாணவர்களைத் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க 10 மாணவ, மாணவியரை ராஜ்நிவாசுக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். மனுவில் மாணவ, மாணவியர் இரத்த கைரேகையிட்டு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரிடம் அளித்தனர்.

மனுவில் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா தலையிட்டு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும், மருந்துகள், உணவு பொருட்களைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய கூடாது, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரணியில் புதுச்சேரியின் கிராம பகுதிகளிலிருந்து டெம்போ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பிரமாண்ட பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் நடத்திய பேரணியால் புதுச்சேரி குலுங்கியது.

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கட்சி, இயக்கத் தலைவர்கள் கண்டனம்!

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் ரகளை செய்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் 05-11-2008 அன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

போராடிய தமிழ் அமைப்பினர் மீது வழக்குப் போட உத்தரவிட்டதன் மூலம் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், தமிழருக்கு எதிரானப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் உள்துறை அமைச்சர் வல்சராஜ் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடந்த 1-ஆம் நாளன்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் அமைதியாகப் போராடியவர்கள் மீது இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தி, ரகளையில் ஈடுபட்டது. அங்கிருந்த போலீசாரையும் ஆபாசமாகப் பேசி தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் அனைத்தும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த வன்முறையை தட்டிக் கேட்ட கட்சி, இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உள்துறை அமைச்சர் வல்சராஜ் தொலைபேசியில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாண்டியனோடு உப்பளம் வெடிகுண்டு வழக்கிள்ள குற்றாவாளிகளும் இருந்துள்ளனர் என்பது பத்திரிகை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் மூலம் தெரிகிறது.

பாண்டியன் தலைமையிலான கும்பல் ஆளுநர் மாளிகை வாயிலிலும் தாராறு செய்துள்ளது. அப்போது பாண்டியன் புதுச்சேரியின் தலைமை நிர்வாகியான ஆளுநரை தரக்குறைவாகவும், தங்கள் தயவில் பதவிக்கு வந்தவர் என்றும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது போலீசார் அருகிலிருந்து வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய ஆளுநர் அவர்கள் போராட்ட குணம்மிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த அந்த சமூகத்தையே இழிவுப்படுத்தியதாக கருத வேண்டியுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்குமுன் பாண்டியன் உள்துறை அமைச்சர் வல்சராஜ் அறையில் இருந்துள்ளார். இதனால், இதன் பின்னணியில் அமைச்சர் வல்சராஜ் செயல்படுகிறார் என குற்றம்சாட்டுகிறோம்.

திட்டமிட்டு உண்ணாவிரத்த்தில் கலவரம் செய்த பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

அமைச்சர் வல்சராஜ் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. தமிழ் அமைப்பினர் மீது கடும் நெருக்கடியும், அடக்குமுறையும் ஏவப்படுகிறது. இது அவரது தமிழ் இன விரோதப் போக்கைக் காட்டுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாண்டியன் போன்ற சமூகத்திற்கு விரோதாமான நபர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடக்குமுறையால் தமிழ் உணர்வையும், தமிழர்களையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இந்த தமிழருக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஒன்று கூடிப் போராட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களுக்கு புதுச்சேரி தமிழர்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்:

சு.பாவாணன், அமைப்புச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
அரசு.வணங்காமுடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., இரா.வீராசாமி, துணைத் தலைவர், பெரியார் தி.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், ஆ.மு.கிருஷ்ணன், புதுச்சேரி முத்தமிழ் மன்றம்,
நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் இலக்கியப் பாசறை, இரா.சுகுமாரன், புரட்சிகர இளைஞர் முன்னணி, கலைப்புலி சங்கர், இளைஞர் அணித் தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

Tuesday, November 11, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கண்டனம்!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கடந்த 01-11-2008 அன்று முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையினான ரவுடிக் கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டது.

இதை தட்டிக் கேட்ட அரசியல் கட்சி, சமுதாய இயங்கங்களின் தலைவர்கள் மீது புதுச்சேரி போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.தி.மு.க. பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைதான தோழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், ம.தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.செல்வராஜ், கபரியேல், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வேட் பிளாக் தலைவர் முத்து, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், புரட்சிக் குயில் இலக்கியப் பாசறை ஆனந்தகுமார் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி தமிழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புத் தொண்டர்கள் 80 பேர் தாங்களும் கைதாகிறோம் என்று கூறி கைதானர்கள்.

இந்நிலையில், இதுகுறித்து 03-11-2008 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காந்தீய வழியில் அமைதியாக நடந்த உண்ணாவிரதத்தில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் உள்ளிட்ட சட்டவிரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 1-ஆம் நாளான்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்பினர் போலீஸ் அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்க முற்பட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரை நெட்டித் தள்ளித் தகராறு செய்துள்ளனர். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் பாதியில் நின்றது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விமர்சித்துப் பேசியதாக கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், ம.தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரன் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்ணாவிரத்ததில் பங்கேற்காத, பேசாத லோகு.அய்யப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ஜனதா கட்சி சுப்பிரமணியசாமி சோனியா காந்தி பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். பாண்டியனுக்கு உண்மையில் சோனியா காந்தி மீது அக்கறை இருந்தால் சுப்பிரமணியசாமி மீதுதான் நடவடிக்கை எடுக்க கேட்க வேண்டும்.

அப்படியே சோனியாவை விமர்சித்துப் பேசியிருந்தாலும்கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டது கிரிமினல் குற்றம். ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் இது போன்ற அராஜகத்தை அரசும், போலீசும் வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல.

உண்ணாவிரத்த்தில் ரகளை செய்த இளைஞர் காங்கிரசார் மீது இதுவரையில் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குற்றவாளிகள் சுதந்தரமாக வெளியில் சுற்றித் வருகின்றனர். புதுச்சேரி போலீசின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல், அச்சுறுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

மேலும், பாண்டியன் போன்றவர்களின் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் ஏற்கனவே சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மேலும் சிதைக்கும் என்பதை காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் நலன் காக்கப் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ரகளையில் ஈடுபடும் இளைஞர் காங்கிரசார்...


காங்கிரசாரின் அராஜகத்தை எதிர்த்த ஈழத் தமிழர் ஆதரவுத்
தோழர்களைக் கைது செய்யும் போலீசார்...

Wednesday, October 29, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரியில் வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் கடந்த 17-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.

அதே போல் புதுவையிலும், புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்டதுபோல் புதுவையிலும் 31-ஆம் நாளன்று நடத்த முடிவு செய்யப் பட்டது.

அதன்படி வருகிற 31-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டத்தைத் திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டம் இன்று (29-10-2008) நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.கு.இராமன் தலைமை தாங்கினார். புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முகமது நிசாம் வரவேற்றார். சங்க ஆலோசகர் இரா.அழகிரி முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவஞானம், அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணையன், கனகராஜ், மற்றும் வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வ ராஜ், எலக்ட்ரிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், புத்தக வியாபாரிகள் சங்கத்தலைவர் இராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு வியாபாரிள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திட்டமிட்டபடி வருகிற 31-ஆம் நாளன்று புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு ஆயுத உதவி அளிப்பதை எதிர்த்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்லவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

Monday, October 20, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதி : புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டமன்றத்தில் தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தனிநபர் தீர்மானங்கள் கொடுத்திருந்தன. இதன்மீது விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தின.

இதனை ஏற்றுக் கொண்ட புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம், அரசு சார்பில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:

"இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிகைகளால் இலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தத்தையும், கவலையையும் அளிக்கிறது. அங்குள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதியை ஏற்படுத்தவும், அங்கு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் அளிக்கவும் வகை செய்ய வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவையைச் சார்ந்த மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது."

இந்த தீர்மானம் ஒருமந்தாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ., புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!

Saturday, October 18, 2008

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!


புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இரா.பாவாணன், (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன், (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு. அய்யப்பன், (பெரியார் திராவிடர் கழகம்), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.அழகிரி, (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல், (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி, (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), தி.சஞ்சீவி, இராஷ்ட்ரிய ஜனதா தளம்), ந.மு.தமிழ்மணி, (செந்தமிழர் இயக்கம்), பாவல், (வெள்ளையணுக்கள் இயக்கம்), பெ.சந்திரசேகரன், (கிராமப்புற அடிப்படை உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்வர் வி.வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் நோகத்தோடு சிங்கள அரசு இராணுவ நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் இந்த இராணுவ உதவிகள் தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் 14-10-2008 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு அவர்கள் ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் தங்கள் தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், வரும் 20-ஆம் தேதியன்று கூடவிருக்கிற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு ஏவிவரும் அடக்குமுறை புதுச்சேரி தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தமிழர்களின் உணர்வுகளைப் எதிரொலிக்கும் விதமாக இந்த மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். ஈழத் தமிழர்களைக் காக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

Wednesday, October 15, 2008

ஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானங்களை புதுச்சேரி அரசு ஆதரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகக் கடசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்பதோடு, தமிழக கட்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஈழத் தமிழர் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒரிசா – கருநாடக கிறித்துவர்கள் மீது தாக்குதல் – உண்மை அறியும் குழு அறிக்கைகள்! (ஆங்கில வடிவம்)


ஒரிசாவில் விசுவ இந்துப் பரிசத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா மாவோயிஸ்ட் இயக்கத்தினரால் கொலைச் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கிறித்துவர்கள் மீது இந்து மத வெறி அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளன. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. கன்னியஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கிறித்துவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அகதிகளாக முகாம்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருநாடகத்தில் இந்துமத வெறி ‘பஜ்ரங்தள்’ அமைப்பினர் மங்களூர், உடுப்பி, சிக்மங்களூர் ஆகிய மாவட்டங்களில் 17 தேவாலயங்கள், வழிப்பாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறித்துவர்கள், பாதிரியார்கள், கன்னியஸ்திரிகள் மீது கருநாடகப் போலீஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஆந்திராவின் மனித உரிமை அமைப்புத் தலைவர் டாக்டர் கே.பாலகோபால் தலைமையில் இந்திய அளவிலான “உண்மை அறியும் குழு” ஒரிசா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் கிறித்துவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துப் பரிசத், பஜ்ரங்தள், சிவசேனை, இராம சேனை...என பல்வேறு பெயர்களில் இந்து மதவெறி அமைப்புகள் சிறுபான்மை மக்கள் மீது கருத்து ரீதியாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பா.ஜ.க. வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கைகள் தரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளன. மனித உரிமையில் அக்கறை உடையவர்கள் யாராலும் இந்த காவிமயமான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில வடிவில் உள்ள இந்த அறிக்கைகள் “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் கூடுதல் தகவல்கள் அடங்கிய சிறு வெளியீடு “மக்கள் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் விரைவில் கொண்டு வரப்படும்.

அறிக்கையைப் படிக்க கீழேயுள்ள தொடர்பைச் சொடுக்கவும்:

ஒரிசாவில் கிறித்துவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும்!

கருநாடகத்தில் கிறித்துவர்கள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

Tuesday, September 30, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை - கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல் (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), ந.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), பார்த்திபன் (செம்படுகை நன்னீரகம்), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) ஆகியோர் 30-09-2008 அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவளித்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிப்பதின் மூலம் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளும் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பெரியார் தி.க. சார்பில் கடந்த 29-09-2008 அன்று சாரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தனர். ஆனால், இதற்கு திடீரென அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்துள்ளனர். காங்கிரஸ் அரசின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரானது.

கடந்த 28-11-2007 அன்று பெரியார் தி.க. சார்பில் அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பொதுக்கூட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், 28-07-2008 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்படக் கூடாது எனக் கூறி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் பின்னரும் மீண்டும் தற்போது ஆர்பாட்டத்தைத் தடை செய்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள அரசுத் திட்டமிட்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களை அழித்து வருகிறது. இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதோடு, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி வெளிப்படையாக உதவுகிறது.

இந்திய அரசின் ஈழத் தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழர்களிடம் இருந்து பெறப்படும் வரிப் பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களைத் தமிழர்களை அழிக்கப் பயன்படுத்துவது, தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனக் குற்றசாட்டி வருகின்றன.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் செல்வாக்கு இழந்து வரும் புதுச்சேரி காங்கிரஸ் இது போன்ற தமிழர் விரோத நடவடிக்கையினால் வரும் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், வரும் 06-10-2008 திங்களன்று, காலை 10 மணிக்கு, சாரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் - முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Tuesday, September 23, 2008

அத்தியூர் விஜயா வழக்கில் புதுச்சேரி போலீசார் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!


பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைபாளார் பேராசிரியர் பிரபா.கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் 22-09-2008 அன்று பகல் 12.00 மணியளவில், புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் புதுச்சேரி போலீசார் ஆறு பேர் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

விழுப்புரம் வட்டம், செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயா. இவர் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு (29.7.1993) ஒரு திருட்டு வழக்கில் வெள்ளையன் என்பவரைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார் ஆறு பேர், வெள்ளையனின் உறவினரான விஜயாவை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக புகார் எழுந்தது. அப்போது விஜயாவுக்கு வயது 17.

இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய அப்போதைய திண்டிவனம் சார் ஆட்சியர் ஜவகர் இ.ஆ.ப. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்படி புகாரில் முகாந்திரம் உள்ளது எனக் கண்டறிந்தனர். இதனையடுத்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் புதுச்சேரி போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கா.நி.கு. எண். 276/1993.

செஞ்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இரா.செல்வராஜ் தலைமையில், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த வ.சு.சம்பந்தம், பேராசிரியர் பிரபா.கல்விமணி, சகோதரி லூசினா உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தது. மேற்படி பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை உறுதிசெய்து 29.9.1993 அன்று புதுச்சேரியில் அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.ஜெகதீசன் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் விரிவான விசாரணை மேற்கொண்டு 7.2.1994 அன்று தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதை உறுதி செய்ததோடு, விஜயாவுக்கு கருணைத் தொகை வழங்கவும் சிபாரிசு செய்தார்.

இவ்விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 31.8.94 அன்று அத்தியூர் விஜயா வழக்கை சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணைக்கு மாற்றியும், விஜயாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25000/- கருணைத் தொகையும் வழங்கிட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.

பாதிக்கப்பட்ட விஜயாவுக்கு நீதிக் கிடைக்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் குற்றமிழைத்த போலீசாரை கைது செய்யக் கோரி 4.1.1995-இல் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற மாபெரும் பேரணி, மறியல் நடைபெற்றது.

இவ்வழக்கினை புலன் விசாரணை செய்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் கோ.அரிகிருஷ்ணன், புதுச்சேரி போலீசாரான நல்லாம் கிருஷ்ணராய பாபு (அப்போது உதவி ஆய்வாளர்), கே.சசிகுமார் நாயர், வி.இராஜாராம் (இருவரும் அப்போது தலைமைக் காவலர்கள்), ஜெ.பத்மநாபன், கே.முனுசாமி, ஜீ.சுப்புராயன் (அப்போது காவலர்கள்) ஆகிய ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்ச்சி), 333 (கடத்தல்) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் 19.4.1999 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி வழக்கில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விஜயாவுக்கு புதுச்சேரி அரசு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது.

மேலும், தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை மேற்கொண்டு விஜயா பாலியல் வன்புணர்ச்சியை உறுதி செய்து 6.5.1999 அன்று அறிக்கை தாக்கல் செய்தது.

விஜயாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் எம்.ஆர். ஷெரீப்-பை அரசு சிறப்பு வழக்கறிஞராக 21.1.2002-இல் நியமித்தார்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6.7.2004 முதல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விஜயா, விஜயாவின் உறவினார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என 42 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

இவ்வழக்கு விசாரணை முடிந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.இரத்தினராஜ், 11.8.2006 அன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால், புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பினை தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது இந்திய அளவில் மனித உரிமை அமைப்பினர் வரவேற்றனர்.

இத்தீர்ப்பானை எதிர்த்து புதுச்சேரி போலீசார் ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆயுள் தண்டனை பெற்ற புதுச்சேரி போலீசார் 6.11.2006 அன்று, அதாவது தண்டனைப் பெற்று மூன்றே மாதத்திற்குள் பிணை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். பிணையில் வெளிவந்த காவலர் முனுசாமி விபத்தில் இறந்து போனார்.

புதுச்சேரி போலீசாரின் மேல் முறையீட்டு மனுவின் மீது இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் முன்பு 19.9.2008 அன்று நடந்தது. புதுச்சேரி போலீசாருக்காக தமிழக அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞர்களான சண்முகசுந்தரம், ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள். விஜயாவுக்காக அரசு தரப்பில் தமிழக அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பாதிக்கப்பட்ட விஜயா தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆகியோர் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கற்றுத் தேர்ந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட விஜயாவிற்கு நீதிக் கிடைக்க போதிய அக்கறை செலுத்தவில்லை.

இவ்வழக்கை 19.9.2008 அன்று முற்பகல் விசாரணை செய்து முடித்த நீதிபதி சொக்கலிங்கம், நீதிபதி வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை அன்று மாலையே வழங்கியது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஆறு புதுச்சேரி போலீசாரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு நாடெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது.

திண்டிவனம் சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி, சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர், தேசிய மனித உரிமை ஆணையம் என அனைவரும் விஜயா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட்தை உறுதி செய்துள்ள போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

இன்று இந்தியா முழுவதும், குறிப்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 26 நீதிபதிகள், மேற்குவங்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் என பல நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், நீதித்துறையின் கண்ணியத்தை குறைத்து வருகிற வேளையில், அடித்தட்டிலுள்ள பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த அத்தியூர் விஜயாவிற்கு நீதிக் கிடைக்காதது மக்களிடையே மேலும் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்.

எனவே, இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட விஜயா சார்பிலும் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் அனுபவம் நிறைந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து மேல் முறையீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

அப்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் உடன் இருந்தனர்.

Friday, August 29, 2008

கோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்!


பதாகை...


திரளான முசுலீம் பெண்கள்...


அரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...



அரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...


மேடையில் தலைவர்கள்...


கோ.சுகுமாரன்...


மனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.

இது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:

“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.

இந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.

கருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

மனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?


புகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.

மேலும் புகைப்படங்கள் பார்க்க

Thursday, August 14, 2008

புதுச்சேரியில் தீ விபத்து - 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின - வீடியோ காட்சிகள் - உதவிட வேண்டுகோள்!



புதுச்சேரியின் நகரத்திற்கு அருகேயுள்ள மீனவர் கிராமமான வைத்திக்குப்பத்தில் இன்று (14-08-08) இரவு 9.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 40 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான தகவல் ஏதுமில்லை. உடைமைகள் முற்றிலும் எரிந்து மக்கள் கட்டிய துணியுடன் நின்றது துயரமான காட்சி.

அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. லட்சுமிநாராயணன், அப்பகுதி கவுன்சிலர் திருமதி பிரேமலதா, தேங்காய்த்திட்டு கவுன்சிலர் திரு.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

புதுச்சேரி அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மீனவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பலகாலமாக மின்சாரம் இல்லாத அப்பகுதிக்கு தற்போதுதான் அரசிடம் போராடி மின் இணைப்பு வாங்கித் தந்ததாக புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் திரு. இராம்குமார் கூறினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் தீ விபத்து நடந்த உடனேயே அப்பகுதிக்குச் சென்று தீயை அணைக்க உதவினர்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய அவலக் குரல் அனைவரையும் கலங்கச் செய்தன.

நிர்கதியாக நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுட முன்வர அனைவரையும் வேண்டுகிறோம்.

உதிவி செய்திட முன்வருவோர் தொடர்புக் கொள்ள:

திருமதி பிரேமலதா,
நகராட்சி கவுன்சிலர், குருசுக்குப்பம்.

கைபேசி எண்: 9789545437.

Wednesday, August 13, 2008

தலித் மக்கள் சுதந்தரத்தை மீட்டெடுப்போம் - கருத்துப் பட்டறை

அழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க படத்தைச் சொடுக்கவும்.



Thursday, July 31, 2008

ஜார்க்கண்ட் சிறைகளின் நிலைமைகளை ஆராய்ந்த அகில இந்திய உண்மை அறியும் குழு!

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சிறைகளின் நிலைமைகளைப் பற்றி நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் இக்குழுவினர் தமது அறிக்கையை வெளியிட உள்ளனர்.

கடந்த ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல்வேறு சிறைகளைப் பார்வையிட்டனர். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

இக்குழுவில் புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், இக்குழுவில் எம்.கே.அசன் (முன்னாள் துணைவேந்தர், ராஞ்சி பல்கலைக்கழகம்), டாக்டர் சசி பூஷன் பதக் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), பிரபாட் குமார் தெகதி (முன்னாள் நலவழித் துறை அமைச்சர், ஜார்க்கண்ட்), பேராசிரியர் மனாஸ் ஜோர்தார், தபன் தாஸ் (அரசியல் கைதிகள் விடுதலைக் குழு, மேற்குவங்கம்), டாக்டர் மிதிலேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரோனா வில்சன் (ஜே.என்.யூ, தில்லி), ஷிவ் நந்தன் (காஷ்மீர்), மேதாப் அலாம் (ஜாமியா மில்லியா, தில்லி) உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி, அசாரிபாக், கிரிதி, லதேகர், டால்டன்கஞ்ச், கார்வா உள்ளிட்ட சிறைகளைப் பார்வையிட்டனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஜார்க்கண்ட் அரசு பல அப்பாவி மக்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது. ஏறக்குறைய 1000 பேர் அரசியல் கைதிகளாக ஜார்க்கண்ட் சிறையில் வாடி வருகின்றனர். அண்மையில் கூட 170 பேர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைச் சட்டமான குற்றவியல் திருத்த சட்டம் பிரிவு 17-ன் படி எந்தவித விசாரணையும் இல்லாமல் மாவோயிஸ்ட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் சிறைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், அங்கு சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனிச் சிறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கிடையே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

போதிய மருத்துவ வசதியின்றி சிறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகள் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவும், நன்கு தயாரிக்கப்பட்ட உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
கார்வா சிறையில் மூன்று கைதிகள் கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த குழுவினர் சிறைக் கண்காணிபாளரிடம் இந்த மனித உரிமை மீறலை அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஜார்க்கணட் மாநிலத்தில் தனி “சிறைக் கையேடு” கிடையாது. பிகார் மாநிலத்தின் சிறைக் கையேட்டையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் சிறைகளைப் பார்வையிட்ட உண்மை அறியும் குழுவினர் தமது முழு அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும், சிறை மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

உண்மை அறியும் குழு அறிக்கை இந்திய சிறைகளின் அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

Wednesday, July 16, 2008

புதுச்சேரி அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 11-07-2008 அன்று வெளியிட்ட அறிக்கை:

தனியார் பங்கேற்புடன் விளையாட்டுத் திடல் அமைக்க முடிவு செய்திருப்பதன் மூலம் பாரம்பரியம் மிக்க அண்ணா திடலைத் தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரியின் மையப் பகுதியில் உள்ள அண்ணா திடலில் விளையாட்டுத் திடல் அமைக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அந்த தொண்டு நிறுவனத்தோடு விரைவில் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

நகரத்திற்கு அருகேயே பல நவீன வசதிகள் கொண்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் ஒன்று இருக்கும் போது, பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்புடைய அண்ணா திடலில் இன்னொரு விளையாட்டுத் திடல் தேவையா?

வ.உ.சி., வீரமாமுனிவர், திரு.வி.க. அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் வேறு நிகழ்ச்சிகள் இல்லாத போது அண்ணா திடலில் விளயாடலாம் என கடந்த 02.09.2006 அன்று புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மாணவர்கள் அத்திடலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் செலவு செய்து விளையாட்டுத் திடல் அமைத்தால் பிற்காலத்தில் இத்திடலைப் பயன்படுத்தும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க நேரிடும். இதனால், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.

நகராட்சியில் ஒரு திட்ட்த்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் முதலில் அத்திட்ட வரைவை நகரமன்ற கூட்டத்தில் வைத்து உறுப்பினர்களின் கருத்தறிந்து முடிவு செய்ய வேண்டும். அதைவிடுத்து, முடிவு செய்து அறிவித்துவிட்டு, நகரமன்ற ஒப்புதலுக்கு வைப்பதாக கூறுவது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.

புதுச்சேரி நகராட்சி சட்டம் மற்றும் விதிகளின்படி அரசு அதிகாரிகள் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியாது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் மத்திய அரசு உள்துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவது கண்டனத்திற்குரியது. இது குறித்து அரசு விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விதிமுறைகளுக்கு எதிராக, மாணவர்களின் நலன் பாதிக்கும் வகையில் தேவையில்லாமல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, June 29, 2008

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் புகார்: தகவல் தர மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 24-06-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களைத் தர மறுத்த தலைமைச் செயலக பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனாமில் தனியார் கேஸ் நிறுவனம் ஒன்றுக்கு சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அனுமதி பெற்றுத் தந்துள்ளார். இது குறித்து எதிர்க்கட்சிகள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ளன. மத்திய அரசுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி உரிய விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுமென தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஊழல் குற்ற்ச்சாட்டுகளை மூடிமறைக்க தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது.

ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியது குறித்த தகவல்களைத் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005’-ன் படி, தலைமைச் செயலக பொது தகவல் அதிகாரிக்கு (Public Information Officer) கடந்த 17-ந் தேதியன்று பதிவு அஞ்சல் மூலம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம்.

ஆனால், மேற்சொன்ன அதிகாரி விண்ணப்ப உறையை பிரித்துப் பார்த்துவிட்டு அந்த உறையை கடந்த 22-ந் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். இது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்திற்குப் புறம்பான இந்த செயல் குறித்து தலைமைச் செயலரிடம் எழுத்து மூலம் புகார் செய்துள்ளோம். அதில், தகவல் தர மறுத்த பொதுத் தகவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளோம்.

மேலும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல், முறைகேடுகள் குறித்தும், புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகள் அதனை மூடிமறைப்பது பற்றியும் விரைவில் தில்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் மனு அளிக்க உள்ளோம்.

Friday, June 06, 2008

நேபாள தேர்தல்: ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்!

ஆனந்த விகடனில் "நேபாள தேர்தல்" குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.

நேர்காணல் கண்டவர்: மு.வி.நந்தினி.






தெளிவாக படிக்க படத்தைக் "கிளிக்" செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.

Monday, April 21, 2008

நேபாள தேர்தல்: தி இந்து நாளேட்டில் கோ.சுகுமாரன் நேர்காணல்!


The Hindu - 21-04-2008.

Maoists’ win triggers debate over strategies

S. Dorairaj

PUDUCHERRY: “Having proved their ability to come to power through ballot, the Communist Party of Nepal (Maoist) now enters the crucial and difficult phase of consolidating their April 10 electoral victory and defending their strategy of joining the political mainstream to achieve their immediate goal of ending monarchy and feudalism,” human rights activist and poll observer to Nepal G. Sugumaran has said.

Mr. Sugumaran, the lone International Election Observer from Puducherry, told The Hindu here on Sunday that the success of the CPN (Maoist) had triggered a debate among the Maoists in India over the efficacy of the strategy. The performance of the CPN (Maoist) would also generate a crisis among groups such as the Liberation Tigers of Tamil Eelam that had been engaged in a protracted civil war.

Describing the successful conduct of the election as a major victory for the peace process, he said the tremendous enthusiasm witnessed in Nepal showed that the nation craved peace and wanted to ensure that the democratic peace process was not derailed, as the people were aware that the decade-long civil war had claimed 12,000 lives, Mr. Sugumaran said.

Recalling his role as election observer at Janakpur in the Terai plains which, according to the Hindu mythology, is the birthplace of Sita, he said the assignment was exciting in view of the Madhesis’ threat to boycott the polls on the ground of identity and exclusion over a long period. However, they changed their decision later.

Along with Pawankumar Patil, a scholar of the Jawaharlal Nehru University, Mr. Sugumaran took care of 90 polling booths at Janakpur which had more than 200 temples with beautiful ponds. According to him, the campaign style of the parties and candidates was quite interesting.

As in other parts of Nepal, big hoardings, digital signboards and cut-outs were absent. The maximum size of posters was “A-3,” he said. Though mike-fitted jeeps and mini-vans were crisscrossing some areas, the popular vehicle used for campaigning was the cycle.

Significantly political differences did not hamper smooth polling, Mr. Sugumaran said. As there was no rigidity in enforcing the model code, voters responded spontaneously. Offering ‘tilak’ and tiny garlands to the candidates was another common phenomenon; even leaders of the CPN (Maoist) received it without hesitation as the practice was inseparably intertwined with the culture of the locals.

Though the Election Commission had announced that polling would take place from 7 a.m. to 5 p.m., several people started queuing up at polling booths much earlier. However, polling was 50 per cent in the plains against the national average of 60 per cent. He put it down to migration of people to other countries, includiong Korea and India, for jobs.

Since elections were not held regularly in Nepal, several voters did not kmow how to fold the ballot. In several booths, many voters were seen rolling the ballots and dropping them in the box.

Despite all their differences, people and leaders of different parties asserted that they considered India and China friendly neighbours who could contribute to the progress of Nepal, Mr. Sugumaran said.

The Hindu - 21-04-2008.