Showing posts with label உயர்நீதிமன்றம். Show all posts
Showing posts with label உயர்நீதிமன்றம். Show all posts

Sunday, February 04, 2024

நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் - மலரஞ்சலி நிகழ்ச்சி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (04.02.2024) காலை 10 மணியளவில், மக்கள் தலைவர் வ.சுப்பையா நினைவு இல்லத்தில் சென்னை  உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். 

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. தேனீ க.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி மலரஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ந.மு.தமிழ்மணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன்,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இராஜா, புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நகரத் தலைவர் பலுலுல்லா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், அண்ணல் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், ஓவியர்கள் இரா.இராஜராஜன், மார்கண்டன், சட்டக் கல்லூரி மாணவி இரா.சுகன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி காவலர் புகார் ஆணையம் (Police Complaints Authority) நீதிபதி கோ.இராஜசூர்யா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது. ஆனால், இந்த ஆணையத்திற்கு புதிய நீதிபதியைத் தலைவராக நியமிக்காமல் ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக தகுதியான, நேர்மையான உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் உறுப்பினர்களை நியமித்து காவலர் புகார் ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.

Saturday, June 12, 2021

52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் உயிரற்ற உடல்..

 திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). சட்டக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். சென்ற 11.04.2021 அன்று இவர் உட்பட நான்கு பேர் மீது களக்காடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இவர்களைப் பாளையம்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சென்ற 22.04.2021 அன்று சிறையில் முத்துமனோ (27), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகியோர் மீது சிறைவாசிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் நால்வரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முத்து மனோ திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலைய போலீசார் சிறைவாசிகளான ஜேக்கப் (29), மாடசாமி (25), ராம் (எ) ராமமூர்த்தி (24), மகாராஜா (28), சந்தான மாரிமுத்து (எ) கொக்கி குமார், கந்தசாமி (22) ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கொலைக்குப் பின்னணியாக இருந்த சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்போழுது 6 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயிலர் பரசுராமன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசிகள் சாதி அடிப்படையிலேயே அடைத்து வைத்துள்ளனர். சமூகத்தில் எப்படி சாதியப் பாகுபாடும், மோதல்களும் உள்ளது போல், சிறைச்சாலைகளிலும் இந்நிலையே உள்ளது. முத்து மனோ உள்ளிட்ட நால்வரை விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைத்து வைக்காமல், தண்டனை சிறைவாசிகள் உள்ள ‘ஏ’ பிளாக்கில் அடைத்துள்ளனர். இதில் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அடைத்து வைத்துள்ளனர். இதனால்தான், முத்து மனோ உள்ளிட்ட நால்வர் மீதான தாக்குதல் எளிதாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் சாதியமும் ஒரு காரணமாக உள்ளது. இதற்குப் பின்னால் காவல்துறையினர் சிறைத்துறையினர் என பலரின் பெரும் சதித்திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், கீழ்காணும் கேள்விகள் எழுகிறது.

1) ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றியது ஏன்?

2) பாளையங்கோட்டை சிறையில் விசாரணை சிறைவாசிகள் பிளாக்கில் அடைக்காமல், தண்டனைச் சிறைவாசிகள் ‘ஏ’ பிளாக்கில் அடைத்தது ஏன்?

3) முத்து மனோ உள்ளிட்ட நால்வர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவது ‘ஏ’ பிளாக்கில் இருந்த சிறைவாசிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?

4) சிறையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யும் அளவுக்கு பெரிய கற்கள் இருந்தது எப்படி?

5) முத்து மனோ உடலில் 28 காயங்கள் உள்ளதால் கற்களால் தாக்கியதால் இறந்தாரா? அல்லது வேறு ஆயுதங்களால் தாக்கினார்களா?

இக்கொலை நடந்த நாள் முதல் வாகைக்குளம் மக்கள் நீதிக் கேட்டுப் போராடி வருகின்றனர். முத்து மனோ உடற்கூறாய்வு முடிந்து 52 நாட்கள் ஆகியும் உடலைப் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து உறுதியாக போராடி வருகின்றனர். முத்து மனோவின் தந்தையார் பாவனாசம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை வழக்கின் புலன்விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சிறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அரசுப் பணி வழங்க வேண்டும் என்பதுதான் போராடும் வாகைக்குளம் மக்கள், சமூக இயக்கங்களின் கோரிக்கைகள்.

போராடும் மக்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசும், காவல்துறையும் உடனே நிறைவேற்ற வேண்டும்.

முத்து மனோவின் உயிரற்ற உடல் 52 நாட்களாக நீதி வேண்டி பிணவறையில் காத்துக் கிடக்கிறது.

Monday, May 10, 2021

நீதிநாயகம் டி.கே.பாசு காலமானார்: ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்..

சென்ற 08.05.2021 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி.கே.பாசு காலமானார். மனித உரிமையில் ஆர்வமுள்ளவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.

காவல் மரணங்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மனுதாரர் இவர். D.K.Basu Vs State of West Bengal (AIR 1997 SC 610). புகழ்ப் பெற்ற இவ்வழக்கு “டி.கே.பாசு வழக்கு” என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

கடந்த 26.08.1986 அன்று, மேற்குவங்க சட்ட உதவிகள் அரசு சாரா அமைப்பின் செயல் தலைவர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை டி.கே.பாசு எழுதுகிறார். அதில் கொல்கத்தாவில் அதிக அளவில் காவல் மரணங்கள் நிகழ்வது குறித்து ‘தி டெலிகிராப்’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் குறிப்பிட்டு, இக்கடிதத்தையே ரிட் மனுவாக (பொதுநல வழக்கு) ஏற்று விசாரிக்க வேண்டுமெனக் கோருகிறார்.

மேலும், காவல் மரண வழக்குகள் முறையாக நடத்தப்படுவதில்லை, இவ்வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், இக்குற்றங்கள் “செழிக்கின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு காவல் மரணங்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து “custodial jurisprudence” உருவாக்கவும் கோரியிருந்தார்.

கடந்த 09.02.1987 அன்று இக்கடிதத்தை ரிட் மனுவாக ஏற்று உச்சநீதிமன்ற அபோதைய தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதேபோல், கடந்த 29.07.1987 அன்று அலிகார் வழக்கறிஞர் அசோக்குமார் ஜொகிரி பில்கானா என்ற ஊரில் காவல் நிலையத்தில் மரணமடைந்த மகேஷ் பிகாரி என்பவர் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதனையும் மேற்சொன்ன டி.கே.பாசு வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 14.08.1987 அன்று கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பிக்கிறது:

“ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது இக்குற்றச்சாட்டுகளான காவல் மரணங்கள், அதாவது செய்தித்தாள்கள் குறிப்பிடுவது போல லாக்-அப் மரணங்களின் அலைவரிசையும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுகுவதற்கு தற்போது போதிய கட்டுமானங்கள் (machinery) இல்லை. இக்கேள்வி பல்வேறு மாநிலங்கள் உள்ளடக்கிய அகில இந்திய அளவிலானது என்பதால், இதில் பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனர் என்பதையும் பார்ப்போம். அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும், அதேபோல், இந்திய சட்ட ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி, இதுகுறித்து உரிய ஆலோசனைகளை இன்றைய நாளில் இருந்து இரண்டு மாதத்திற்குள் அளிக்க வேண்டுவோம்.”

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, தமிழ்நாடு, மேகாலயா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவைத் தங்களது கருத்துக்களை உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்தன. இந்திய சட்ட ஆணையமும் தனது ஆலோசனைகளைத் தாக்கல் செய்தன. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.எம்.சிங்கி நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், கடந்த 18.12.1997 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இருநீதிபதிகள் அமர்வு வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நீதிநாயகம் ஏ.எஸ்.ஆனந்த் எழுதினார். அத்தீர்ப்பில், ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய 10 கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைகளைக் காவல்நிலையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், இக்கட்டளைகளைப் பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீது அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தண்டனைப் பெற்றுத் தரவும் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றக் கட்டளைகளில் முகாமையானவை:

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

6) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைச் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

பின்னாளில் இந்தக் கட்டளைகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டன.

இந்தத் தீர்ப்பினால் காவல் மரணங்கள் முற்றிலும் ஒழியவில்லை என்றாலும், பெருமளவில் குறைந்தன. இதற்கு வித்திட்டவர்தான் “டி.கே.பாசு வழக்குப் புகழ்” நீதிநாயகம் டி.கே.பாசு அவர்கள். நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறைவாசியின் கடித்தத்தையே வழக்காக ஏற்று சிறைவாசிகளுக்கு உரிமைகள் வழங்கி தீர்ப்பு வழங்கினார். அதே போல ஒரு நீதிபதியின் கடிதத்தை வழக்காக ஏற்றவர் உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி நீதிநாயகம் பி.என்.பகவதி.

நீதிநாயகம் டி.கே.பாசு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கொல்கத்தா மற்றும் தேசிய சட்ட உதவிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர். 2006-இல் இலங்கையில் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை நீதிமன்றத்தின் பார்வையாளராக இருந்து செயல்பட்டவர். ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ நிதியுதவியுடன் நடந்த இந்திய அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான பயிற்சித் திட்டத்தின் ஆலோசகராகவும் இருந்தார். ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைப்பின் நிறுவுநர். அனைத்துலக அளவில் பல்வேறு கருத்தரங்களில் கலந்துகொண்டு சட்டத்தின் பல்வேறு அணுகுமுறைகள் குறித்து உரையாற்றிய சட்ட வல்லநர்.

2004-இல் தில்லியில் பொடா சட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கான ‘பொது விசாரணை’ நடைபெற்றது. இதில் நீதிபதியாக (Jury) கலந்துகொள்ள வந்தார் டி.கே.பாசு. அவரை ‘தோழமை’ தேவநேயன், கோ.சுகுமாரன் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் வரவேற்று தங்குடத்திற்கு அனுப்பி வைத்தோம். அமைதியான குணமுடையவராக இருந்தார்.

ஒரு ஆளுமை நிறைந்த சட்ட வல்லுநரை இழந்துள்ளோம். என் ஆழ்ந்த அஞ்சலியும் இரங்கலும்.. 

Wednesday, April 14, 2021

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கு: அதிமுக, திமுகவும் ஒரே நிலைதான் எடுத்தன...

கர்ணன் படச் சர்ச்சைக் குறித்து பலரும் பேசி வருகின்றனர். 1995 என்பதற்குப் பதிலாக 1997 என்று கொடியன்குளம் சம்பவம் நடந்த காலத்தை மாற்றி சொல்லியுள்ளது தவறுதான். 1991 – 1996 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி. 1996 – 2001 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அதனைத் திருத்திவிடுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாக செய்தி வந்துள்ளது.

இந்தத் தவறை வைத்துக் கொண்டு ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டும்தான் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது போலவும், திமுக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் பலரும் எழுதியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் தீக்குளித்துவிடுவார் போல. ஆனால், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின என்பதுதான் உண்மை.

1996-இல் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 6 தலித்துகள் அப்பகுதியிலுள்ள ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த முருகேசன் தலையை வெட்டி வீசினர் சாதி வெறியர்கள். முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்.

இச்சம்பவம் நடந்த நாள் முதலே வழக்கறிஞர் பொ.இரத்தினம், உடன் பல்வேறு வழக்கறிஞர்கள் குழுவாகப் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்கப் பாடுபட்டனர். அம்மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் செய்தனர்.

இவ்வழக்கில் 41 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை உயர்நீதின்ற உத்தரவின் அடிப்படையில் சேலத்திற்கு மாற்றப்பட்டு நடந்தது. விசாரணை முடிந்து 27.06.2001 அன்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஏ.ஆர்.இராமலிங்கம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மீதமுள்ள 24 பேரையும் விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென அரசு வழக்கறிஞர் (அதிமுக) அரசுக்கு அறிக்கை அளித்தும், அபோதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், என்.பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு 19.04.2006 அன்று தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பில் விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மீதமுள்ளவர்களுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தும் அரசு மேல்முறையீடு செய்யாத காரணத்தால் தண்டிக்க முடியவில்லை எனத் தீர்ப்பில் நிதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“52 …. we have concluded that there is enough material to hold against all the accused. But, unfortunately, the State has not preferred appeal against the acquittal of the remaining accused”

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென அப்போதைய திமுக அரசுக்கு வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பிலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், திமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. முதல்வர் கருணாநிதி தண்டனைப் பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள், அதில் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.சிர்புர்க்கர், தீபக் வர்மா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 22.10.2009 அன்று குற்றவாளிகள் 17 பேரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. விடுதலை செயப்பட்ட 24 பேருக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாததால் உச்சநீதிமன்றமும் இவர்களுக்குத் தண்டனை வழங்கவில்லை.

அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டன. இதனால், மீதமுள்ள 24 கொடும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டனர்.

தலித்துகளின் வழக்குகளில் அதிமுக, திமுக இரண்டுமே ஆதிக்கச் சாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றை விட்டு ஒன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

மேலவளவு தலித்துகள் படுகொலை வழக்கில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.

Tuesday, October 23, 2012

குறைந்த மதிப்பெண் எடுத்ததைக் காரணம் காட்டி கல்விக் கடன் மறுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கர்நாடகா, கோலார் மாவட்டத்திலுள்ள நூரி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ரூ. 3.15 லட்சம் கல்விக் கடன் வேண்டி பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். அந்த வங்கி அவர் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதைக் காரணம் காட்டி அவருக்கு கல்விக் கடன் வழங்காமல் மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'பள்ளிக்கூடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதைக் காரணம் காட்டி வங்கி கல்விக்கடன் வழங்க மறுக்கக் கூடாது. இதுகுறித்த வங்கியின் சுற்றறிக்கையில் எங்கும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கடன் வழங்கக் கூடாது எனக் குறிப்பிடப்படவில்லை.

மத்திய அரசு பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ரூ. 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு முன்றாவது நபரின் கேரன்டி தேவையில்லை. எனவே, அந்த வங்கி கல்விக் கடனை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும்' எனத் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் 'அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் 750க்கு 287 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். அதனால்தான் அவருடைய படிப்பிற்கு பரோடா மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்' எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு!

Sunday, July 29, 2012

ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், குற்றமிழைத்தப் போலீசார் தப்பித்தலும்

நேற்றைய தினம் (28.7.2012) தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாங்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நடவடிக்கை போதாது என்பதுதான் மனித உரிமையில் அக்கறை உடையோரின் கருத்து. மேலும், இந்த அறிவிப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கமாக என்கவுன்டர் நடக்கும் போது, அதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். ஆனால், இந்த முறை வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவில் - நெல்லை நான்கு  வழிச்சாலையில் பொதுமக்கள் நான்கு மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வானமாமலை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். மேலும்,  வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வானமாமலையின் மனைவி மஞ்சுவிற்கு அரசு வேலை என நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர். வைகோ பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததோடு, அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில்தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பில் குற்றமிழைத்தப் போலீசார் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. வெறுமனே பணியிடை நீக்கம், துறை சார்ந்த விசாரணை என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம், வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.

ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். 5 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி தற்போது “போலீஸ்” ஆட்சியாகவே நடக்கிறது.

போலீஸ் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும் போது அதை மழுங்கடிக்க முதலமைச்சர் மேற்சொன்னபடி அறிவிப்புகள் மூலம் அதை திசைத் திருப்பி விடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு துணைநின்று அறிவுரை வழங்குகின்றனர்.

பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 தேவேந்திரர்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார்கள். திருக்கோவிலூர் போலீசாரால் இருளர் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது, வேறு வழியில்லாமல் பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசாரை பணியிடை நீக்கம்கூட செய்யாமல், வெறுமனே இடமாற்றம்தான் செய்துள்ளனர்.

திருக்கோவிலூரில் 4 இருளர் பெண்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நிலைமை இன்னமும் மோசம். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி அளித்து அறிவித்தார். உடனடியாக குற்றமிழைத்தப் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரையில், போலீசார் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘போலீசாரை ஏன் கைது செய்யவில்லை’ என தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் இதுவரையில் போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றமிழைத்தப் போலீசாரை கைது செய்ய உத்தரவிடாமல், அரசைக் கண்டித்துக் கொண்டே இருக்கும் உயர்நீதிமன்றத்தின் போக்குக் கொடுமையிலும் கொடுமை. அதிகாரத்தின் கரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை நீதிமன்றங்கள் அணுகும் போக்குக் குறித்துப் பிறகுப் பார்ப்போம்.

சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் எருதாட்டத்தைத் தடை செய்ததன் விளைவாக நடந்த மோதலில், கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய கொடிய தடியடித் தாக்குதல் பற்றி அறிவோம். போலீசாரை தாக்கியதாக கூறிப் போடப்பட்ட வழக்கில் தற்போது பொதுமக்கள் 79 பேர் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தை முழுவதையும் நியாயப்படுத்தி போலீஸ் உயரதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் மக்களைத் தாக்கிய போலீசார் மீது எந்தவித சிறிய நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கிருஷ்ணகிரியில் பெரியார் தி.க. பிரமுகர் பழனி என பல கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர உருப்படியான திட்டம் தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில், போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தென்படுவதாக தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்துப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உண்மை நிலைமைகளை அறிந்து வெளிப்படுத்தி வருகிறோம். வெற்று அறிவிப்புகளால் அரசு இவற்றை எதிர்க்கொண்டு வருகிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் ‘விடாது கறுப்பு’ போல செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

‘சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம்’ என்ற தந்தை பெரியாரின் வாசகத்துடன் நாட்காட்டி என் அறையில், கண்முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Wednesday, December 15, 2010

தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி, முதல் தகவல் அறிக்கைகளை இணையத்தில் வெளியிட வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் பின்பற்றி காவல் நிலையங்களில் பதியப்படும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுகொள்கிறோம்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 15.12.2010 அன்று தலைமைச் செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடந்த 06.12.2010 அன்று தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி மன்மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்படுத்தப்பட வேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுகிறோம்.

1) குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 207-ல் கூறப்பட்டுள்ள காலவரம்பிற்கு முன்னரே முதல் தகவல் அறிக்கைப் பெறலாம்.

2) குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரா அல்லது அவர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள அவரோ,அவருடைய பிரதிநிதியோ சான்றிடப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலைக் கேட்டு, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமோ அல்லது காவல் கண்காணிப்பாளரிடமோ விண்ணப்பிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று நீதிமன்றத்தில் செலுத்தக் கூடிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை நகல் அளிக்க வேண்டும்.

3) பதியப்படும் முதல் தகவல் அறிக்கைகளை அது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வழக்கினுடையது அல்லாமல் இருந்தால், அவற்றை பதிவுச் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் டில்லி காவல்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனை குற்றம்சாட்டப்பட்டவரோ அல்லது தொடர்புடைய எவரும் நகல் எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுக் காணலாம்.

4) முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி காவல்துறை பிப்ரவரி 1, 2011 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு நகலை அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Monday, December 06, 2010

டிசம்பர் 6 - பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிக்கப்ப்பட்ட டிசம்பர் 6 அன்று, புதுச்சேரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் காலை 10 மணியளவில், சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புதுமடம் அணிஸ் தலைமைத் தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ஹாபீஸ் முஹம்மது புஹாரி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் ஒய்.பலுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பளார் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்
தலைவர் கோ.செ.சந்திரன், புதுவை கிருஸ்துவர் கூட்டமைப்பு தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை உரையாற்றினர்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் கண்டன உரையாற்றினார்.

முடிவில் தமுமுக மாவட்ட பொருளாளர் ஜெ.காஜா கமால் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிகைகள் முன்வைக்கப்பட்டன:

1. பாபர் மசூதி நிலம் தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்.

2. ரெபரேலி நீதிமன்றத்தில் நடக்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்.

3. பாபர் மசூதி இடிக்கப்பது குறித்த லிபரான் ஆணையம் விசாரித்து குற்றம்சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, October 29, 2010

ரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ரீட்டா மேரி
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் அழுது கொண்டு நின்றிருந்த அவரை ஆத்தூரைச் சேர்ந்த விபச்சாரம் நடத்தி வரும் கவிதா, ஆனந்தன் என்பவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பிறகு அவர்கள் ரீட்டா மேரியிடம், உன்னை பாதுகாப்பான மகளிர் விடுதியில் சேர்த்து விடுகிறோம் என்று கூறினார்கள். இதை உண்மை என்று நம்பி அவர்களுடன் ரீட்டா மேரி புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் இருந்து பேருந்தில் ரீட்டா மேரியை அவர்கள் திண்டிவனத்துக்கு கடத்திச் சென்றனர்.

திண்டிவனத்தில் சாந்தி, ஈஸ்வரி என்ற இரண்டு பெண்கள் விபசார விடுதி நடத்தி வந்தனர். அவர்களிடம் ரீட்டா மேரியை 12 ஆயிரம் ரூபாய்க்கு கவிதாவும் ஆனந்தனும் விற்று விட்டனர். சாந்தி, ஈஸ்வரிக்கு துணையாக ஆனந்தராஜ் என்பவர் இருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரீட்டா மேரியை ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.

அங்கு ரீட்டா மேரியை சந்தித்த செஞ்சியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களுக்கு அவரது உண்மை நிலை அறிந்து இரக்கம் ஏற்பட்டது. அவர்கள் ரீட்டா மேரியை விபசார கும்பலிடம் இருந்து பிரித்து தப்ப வைத்தனர். இதை அறிந்ததும் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்திக்கும் ஈஸ்வரிக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அந்த நான்கு இளைஞர்கள் மீது சாந்தி, ஈஸ்வரி இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல ரீட்டா மேரி மீது சட்ட விரோதமாக லாட்ஜில் தங்கி இருந்து விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ரீட்டா மேரியை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். பிறகு செஞ்சியில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பலர் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்ததால், ரீட்டா மேரியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்ட பெண் நீதிபதி சந்தேகப்பட்டு, ரீட்டா மேரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனையில் ரீட்டா மேரி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்கள் மீதும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.  

இதனைத் தொடர்ந்து செஞ்சி கிளை சிறைக் காவலர்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர், முருகேசன் ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரீட்டா மேரியை விபசாரத்தில் தள்ளிய கவிதா, ஈஸ்வரி, சாந்தி, ஆனந்தன், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரீட்டா மேரியின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் பற்றி அப்போது ஐ.ஜி.யாக இருந்த திலகவதி விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய  இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்பேரில் ஐ.ஜி. திலகவதி விசாரணை மேற்கொண்டு, ரீட்டா மேரி மீது பாலியல் கொடுமை நடந்ததை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் பேரில் உயர்நீதிமன்றம் ரீட்டா மேரி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2006-ம் ஆண்டு ஜூன் மாதம் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி தயாளன் ரீட்டா மேரி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சிறை காவலர்கள் 6 பேரில் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற இரு சிறைக் காவலர்களான சேகர், முருகேசன் விடுவிக்கப்பட்டனர்.

விபச்சார கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரில் சாந்தி, ஈஸ்வரி இருவரும் ரீட்டா மேரியை கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கியது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்கள் இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்களுக்கு துணைப் புரிந்த ஆனந்தராஜ், ஆனந்தன், கவிதா மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட போது அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகளை கழித்திருந்தனர். இதனால் அவர்கள் மூவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவில் நாங்கள் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

 அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரவணன் ‘ரீட்டா மேரியை 4 சிறைக் காவலர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரீட்டா மேரி அடைக்கப்பட்டிருந்த பக்கத்து அறை கைதி சாட்சியாக உள்ளார். ரீட்டா மேரியிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி அவர் தெளிவாக கூறி உள்ளார். எனவே, நான்கு சிறைக் காவலர்களுக்கும் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறை தண்டனை சரியானது தான். அதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கில் நீதிபதி சுதந்திரம் இன்று (29.10.2010) தீர்ப்பளித்தார். அப்போது 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிறைக் காவலர்களில் லாசர் மீது மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக் காவலர்கள் ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய மூவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பு ரீட்டா மேரிக்கு நீதிக் கிடைக்கப் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Sunday, October 24, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (3)

இந்திய தலைமை நீதிபதியின் ஊழல் பற்றிப் பார்த்தோம். ஊழல் செய்யும் நீதிபதிகளை எதிர்த்துப் போராட முடியாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருந்து வருகிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் இயல்பான அச்சம். இரண்டு நீதிபதிகளை விமர்சித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக கருதப்பட்டு, தண்டனைக் கிடைக்கும் என்ற பயம். ஆனால், நீதிபதிகளின் ஊழல்களை ஆதாரத்தோடு விமர்சித்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஊழல் நீதிபதியான பி.டி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் நடந்த போராட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் அந்த நீதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிப்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலித் மக்களின் உரிமைகளுக்காக அயராது போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் 90-களில் இருந்து ஊழல் மற்றும் சாதியத்தோடு பணியாற்றிய, பணியாற்றும் நீதிபதிகள் குறித்து மிக வெளிப்படையாக துண்டறிக்கைப் போட்டு விநியோகித்தும், சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியும், கூட்டங்கள் நடத்தியும் செய்த பிரச்சார நடவடிக்கைகள் போதிய பயன் அளித்தன என்றே சொல்ல வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும், ஊழல் செய்யும் கீழ்நீதிமன்ற நீதிபதிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

ஊழல் செய்வது என்பது ஊழல் தடுப்புச் சட்டப்படி கைது செய்யப்படக் கூடிய (Cognizable Offence) குற்றமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி (Criminal Procedure Code) கைது செய்யப்படக் கூடிய குற்றம் அனைத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவுச் செய்யப்பட வேண்டும். ஆனால், நீதிபதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி 1974-ல் லஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், குற்றவியல் சட்டத்திற்குப் புறம்பாக 1991-ல் உச்சநீதிமன்றம் ‘எந்த நீதிபதி மீதும் இந்திய தலைமை நீதிபதியின் அனுமதியின்றி முதல் தகவல் அறிக்கை பதியக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கி ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்புக்குப் பின்னர் இதுநாள்வரையில் எந்தவொரு நீதிபதி மீதும் வழக்குப் பதிய எந்த தலைமை நீதிபதியும் அனுமதி அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஊழல் செய்த உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 124 (4) படியும், நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் மூலம் அதுவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். நீதிபதியின் ஊழல் குறித்த ஆதாரங்களைப் பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவில் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இக்குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் ஊழல் செய்த ஒரு நீதிபதி மீதும் சின்ன நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை.

1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி மீது பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தப்பட்டது. அவர் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்த போது அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு அளவுக்கு அதிகமாக செலவு செய்தது பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு முன் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. காங்கிரஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்காததால் அவர் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டார். அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைக் காட்டி தி.மு.க. அன்று அந்த ஊழல் நீதிபதியைக் காப்பாற்றியது. வெறும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவுத் தெரிவித்தனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் 1993-ல் ஒரு வழக்கில் 34 லட்ச ரூபாய் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டும் அவரை மேற்குவங்க ‘லாபி’ காப்பாற்றி வருவதாக செய்திகள் வருகின்றன. அவரை பணியிலிருந்து ராஜினாமா செய்யவும் அல்லது விருப்ப ஓய்வில் செல்லவும் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியும் அவர் அதனை மதிக்கக்கூட தயாராக இல்லை. அவர் மீது பாராளுமன்றத்தில் 58 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நிலுவையில் உள்ளது. பாராளுமன்றத்தில் நடவடிக்கையை எதிர்கொள்ளும் இரண்டாவது நீதிபதி சவுமித்ரா சென்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி பி.டி.தினகரன் 540 ஏக்கர் அளவுள்ள புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் அபகரித்த குற்றச்சாட்டு குறித்தும், அனுமதியின்றி அடுக்குமாடி வணிக வளாகம் கட்டியது உள்ளிட்ட ஏராளமான சட்டவிரோத நடவடிகைகள் பற்றியும் 75 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்த 12 குற்றச்சாட்டுகள் பற்றி பாராளுமன்ற குழு விசாரித்து வருகிறது. அவர் மீது ஆதாரங்கள் பல இருந்தும் அவரை பணிநீக்கம் செய்ய முடியவில்லை. அவருக்கு நீதித்துறை வழங்கியிருக்கும் மிகப் பெரிய தண்டனை, அவரை சிக்கிம் மாநிலத்திற்கு மாற்றல் செய்துள்ளதுதான். இன்றைக்கு தலித் நீதிபதி என்று கூறி பி.டி.தினகரன் செய்த ஊழல்களையும், நில அபகரிப்புகளையும் நியாயப்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் சட்ட மறுஆய்வுக் குழு, 2003 மார்ச் 31-ல் அரசுக்கு அளித்த அறிகையில் நீதிபதிகள் பணிநீக்கம் செய்வது பற்றிய 7-வது அத்தியாயத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. மேலும், நீதிபதிகள் தவறு செய்வதைக் கட்டுப்படுத்த சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதாவது இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு அதன் அறிகையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அந்த அறிகையின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைக்காக எழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் ஊழல் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது. மேலும், ஊழல் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்வதை கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட அவையில் ஊழல் நீதிபதிகள் மீதான நடவடிக்கை குறித்து அதிகம் விவாதம் நடந்ததாக தெரியவில்லை. ஏன்னென்றால் நீதிபதிகள் இந்தளவு ஊழல் செய்வார்கள் என்று அரசியல் சட்ட அவை உறுப்பினர்கள் கருதவில்லை போலும். அதனால்தான் பாராளுமன்ற குற்றச்சாட்டு மூலம் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் போன்ற சிக்கலான, சாத்தியமற்ற நடைமுறையை கொண்டு வந்தனர் அரசியல் சட்ட அவையினர்.

நீதிபதிகள் மீது பாராளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும் முறையில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. பாராளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டால்தான் ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்படுகிறது. மேலும், ஒரு சில ஊழல் நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் முறையை எளிதாக்கினால், அது நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்தும் நிலையை ஏற்படுத்திவிடும் என சில நேர்மையான நீதிபதிகள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பின் ‘நீதிபதிகள் தரம் மற்றும் பொறுப்பாதல் மோசோதா’ பரிசீலிக்கப்பட்டு சென்ற அக்டோபர் 5-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிலுள்ள பெரும்பாலான பிரிவுகள் நீதிபதிகளின் ஊழல்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கவில்லை என சட்டவல்லுநர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனைப் பிறகுப் பார்ப்போம்.

அடுத்த இதழில் முடியும்...


நன்றி: மக்கள் உரிமை.

Saturday, October 09, 2010

கறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. (1)

‘மை லாட்’ என அழைப்பதன் மூலம் கடவுளுக்குச் சமமாக கருதப்பட்ட நீதிபதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருப்பது நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது. நீதிபதிகளின் ஊழல் குறித்து வெளிப்படையாக பேசுவதையே நீதிபதிகள் குற்றம் என எண்ணுவது நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரன் புறம்போக்கு நிலங்களையும், தலித் மக்களின் நிலங்களையும் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்ததற்காகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் பெரும் ஊழலில் ஈடுபட்டதற்காகவும் இருவரையும் பணிநீக்கம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின் முன் குற்றச்சாட்டும் (Impeachment), அதன்மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. அதேபோல், காசியாபாத்தில் நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை கைடால் செய்ததும், சட்டீஸ்கரில் ஒரு நீதிபதி வீட்டின் முன்பு பையில் பல லட்சம் ரூபாய் பணம் கிடந்ததும் நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. 

நீதித்துறையின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நடந்து வரும் “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒட்டுமொத்த நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே காலியாக்கி விடும் போல் உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் 26 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர். மேலும், 1991 முதல் நீதித்துறையில் நிலவும் ஊழலுக்கு எதிராகவும், நீதிமன்ற பொறுப்புரிமைக்காகவும் (Judicial Accountability) போராடி வருபவர். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷனின் மகன் என்பதை அறிவோம்.

பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு ஏன்? கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ல் வெளிவந்த ‘டெகல்கா’ இதழில் ‘கடைசியாக இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல்வாதிகள். இதை எங்களால் நிரூபிக்க முடியாது. பூஞ்சி, ஆனந்த், சபர்வால் ஆகியோருக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அவர்களை நீக்க கோரினோம்’ என பேட்டி அளித்தது தான் காரணம்.

மேலும் அவர் ‘ஊழல் நீதிபதிகளை நீக்க பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை சத்தியமற்றது. அதற்கு 100 எம்.பி.க்களின் கையெழுத்து தேவைப்படுகிறது. ஆனால், இவற்றை பெற முடிவதில்லை. ஏனென்றால், பல எம்.பி.க்களின் தனிப்பட்ட அல்லது அவர்களது கட்சி சார்ந்த வழக்குகள் இந்த நீதிபதிகளின் முன்பு நிலுவையில் உள்ளன. நீதிபதி பல்லாவிற்கு எதிராக பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பா.ஜ.க. கையெழுத்திட மறுத்துவிட்டது. அந்த நீதிபதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானியை விடுதலை செய்தவர். அந்த நீதிபதி நொய்டாவில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தினை வெறும் 4 லட்சம் ரூபாய்க்கு பெரும் நில வணிகர் ஒருவரிடம் வாங்கியது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த நில வணிகர் சம்பந்தப்பட்ட வழக்குகள் பல அந்த நிதிபதியின் கீழுள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன.

அடுத்து ரிலையன்ஸ் பவர் தொடர்பானது. அதாவது அவரது மகன் ரிலையன்ஸ் பவரின் வழக்கறிஞராக இருந்தார். நீதிபதி பல்லா லக்னோவில் நீதிபதியாக இருந்த போது இதுகுறித்து ஒரு தனி நீதிமன்றத்தை (Special Bench) அமைத்தார். அவர் ஒரு நீதிபதி வீட்டில் இரவு 11 மணி வரை நடந்த வழக்கு விசாரணையில் அமர்ந்துக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக தடை உத்தரவு கொடுத்தார். நாங்கள் நீதிபதி பல்லா மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதி சபர்வாலிடம் கேட்டோம், அவர் மறுத்துவிட்டார்.

அதேபோல், வீஜேந்தர் ஜெயின் தன் பேத்தியை தன் வீட்டில் திருமணம் செய்துக் கொடுத்த ஒருவரது வழக்கை நடத்தி அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். இதுபற்றி மிக குறிப்பான புகார்கள் கொடுத்தும் இந்திய தலைமை நீதிபதி இதுகுறித்து உள்விசாரணை நடத்தவில்லை. அந்த நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதியானார்கள். பல்லா இன்னமும் ராஜஸ்தானின் தலைமை நீதிபதியாக உள்ளார். வீஜேந்தர் ஜெயின் பஞ்சாப் மற்றும் அரியானா தலைமை நீதிபதியானார்.

நீதிபதி கப்பாடியா ஒரிசாவிலுள்ள நியம்கிரி சுரங்க குத்தகை வழக்கை தீர்மானித்தார். வேதாந்தா நார்வே அரசால் கருப்புக் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு குத்தகை கொடுக்க முடியாது என்று கூறினார். பின்னர், வேதாந்தாவின் கீழுள்ள வெளிப்படையான பட்டியலில் (Publicly Listed) உள்ள ஸ்டெர்லைட் கம்பெனிக்கு அந்த குத்தகையைக் கொடுத்தார். அது வெளிப்படையான பட்டியலில் உள்ளது ஏன் தெரியுமா, அதில் எனக்கு பங்கு உள்ளது என  நீதிபதி கப்பாடியா கூறினார். அதனால் தான் அதற்கு ஆதரவாக அவர் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டு வழக்கு நடத்துவதற்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், அவர்கள் அதனை சுலபமாக தாண்டிவிடுகின்றனர். நீங்கள் இதற்கு எதிராக புகார் செய்ய முடியாது, ஏனென்றல் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்’ என நீதித்துறையில் நிலவும் எல்லையற்ற ஊழல் பற்றி மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் அந்த பேட்டியில் பிராசாந்த் பூஷன் கூறியிருந்தார். நீதிபதி கப்பாடியா தற்போது இந்தியாவின் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 

டெகல்காவிற்கு அளித்த இந்த பேட்டியால் பிரசாந்த் பூஷன் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இதற்காக ஒருவேளை அவர் தண்டிக்கப்படலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தனக்கு எதிராக ஒரு “பண்டோரா பாக்சை” திறந்துவிட்டது. இந்த வழக்கில், பிராசந்த் பூஷன் மற்றும் மகனைக் காப்பாற்ற அவரது தந்தையார் சாந்தி பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் ஊழல்கள் “நீதித்துறையைக் கறைபடிய” செய்துள்ளது. அவற்றைப் பிறகுப் பார்ப்போம்.

தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை 

Thursday, September 30, 2010

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புரை ஆவணங்கள் (ஆங்கிலம்)

அயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கில் இன்று (30.09.2010), மதியம் 3 மணியளவில், லக்னோவிலுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் 6000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புரைகளின் சில பகுதிகள் (ஆங்கிலம்) கீழேயுள்ள இணைப்பில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

அயோத்தி தீர்ப்பு: நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புரை ஆவணங்கள் (ஆங்கிலம்)

Ayodhya Judgment: Observations of Judges - Documents (English)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்!

அயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கில் இன்று (30.09.2010) மதியம் 3 மணியளவில், லக்னோவிலுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் 6000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது.

இதுவரையில் வெளிவந்துள்ள தீர்ப்பு விவரம்:

மூன்று நீதிபதிகளும் தனித் தனி தீர்ப்பு கூறியுள்ளனர். மூன்று நீதிபதிகளில் ஒருவர் ராமர் கோயில் கட்ட ஆதரவு. மற்றொருவர் கோயில் கட்டவும், மசூதி கட்டவும் ஆதரவு.

பெரும்பானமை நீதிபதிகள்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பங்கு ‘நிர்மோகி அகாரா’ அமைப்பிடம் தர வேண்டும். மூன்றாவது பங்கு ராமர் கோயில் அறக்கட்டளையிடம் தர வேண்டும்.

மூன்றாக பிரிக்கும் வரை அடுத்த மூன்று மாதத்திற்கு தற்போதை நிலை தொடர வேண்டும்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பாபர் மசூதி கட்ட எந்த கோயிலும் இடிக்கப்படவில்லை என நீதிபதி கான் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார்.  

சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக் கோரிய சன்னி வக்பு வாரியம்,  நிர்மோகி அகரா அமைப்பு ஆகையவற்றின் மனுக்கள் நிராகரிக்கபட்டன.

இதனிடையே தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் மேமுறையீடு செய்யப் போகிறோம் என்று பாபர் மசூதி கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

தீர்ப்பு குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் தில்லியில்  ஒன்று கூடி விவாதிக்கின்றனர்.

தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடி விவாதிக்கிறது.

Wednesday, August 11, 2010

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து: அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 11.08.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு சார்பில் உரிய ஆதாரங்களை முன் வைத்து வாதாடாததால் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி அரசு உயர் கல்வியில் காரைக்காலுக்கு 18 சதம், மாகேவிற்கு 4 சதம், யேனாமிற்கு 3 சதம் என  மொத்தம் 25 சதவீத இடஒதுக்கீட்டை பிராந்திய அளவில் வழங்கி கடந்த 2006-ல் உத்தரவிட்டது. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீதமுள்ள 75 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி பகுதிக்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கு 75 சதவீத இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், பிராந்திய இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 6.8.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தியும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன் வைக்காததாலும் தான் புதுச்சேரிக்கான பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி பகுதிக்கான 75 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வருவதற்கு புதுச்சேரி அரசுதான் முழுக் காரணம் என்பது தெளிவாகிறது.

(Judgment Para: 34. Thus, in the absence of any material placed before this court, to justify the reservation of 75% of the seats for the Puducherry region, we are inclined to hold that such reservation is bad in law. Accordingly, the reservation in respect of 75% of seats for the Puducherry region requires to be set aside.)

மேலும், இவ்வழக்கில் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகிய கூடுதல் சோலிட்டர் ஜெனரல், புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீட்டை தொடர முடியாது என்றும், வரும் 2011 – 2012 கல்வி ஆண்டில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு அறிவுரை கூறியுள்ளதாக கூறியதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் சோலிட்டர் ஜெனரல் கூறிய அறிவுரையை அடுத்து அரசு புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டை பாதுகாக்க எநதவித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கில்

கூடுதல் சோலிட்டர் ஜெனரலுக்கு அரசு சார்பில் எதாவது அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.   

(Judgment Para: 28. … It is relevant to mention at this juncture that the learned Additional Solicitor General appearing for the Government of Puducherry had submitted that he has advised the Government of Puducherry that such reservation for the Puducherry region cannot be sustained and that steps would be taken to delete such reservation from the next academic session i.e. 2011 – 2012.)

புதுச்சேரி பிராந்திய இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் 3 ஆண்டுகள் புதுச்சேரியில் தொடர்ந்துப் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற அரசின் உத்தரவும் செல்லாததாகிவிட்டது. இதனால், 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்களும் இடஒதுக்கீடு பெற முடியும் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

அரசின் இந்த உத்தரவால் 3 ஆண்டுகள் தொடர்ந்து புதுச்சேரியில் படிக்காத மாணவர்கள் சென்டாக்கிற்கு விண்ணப்பம் செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் அவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, பின்னர் சென்டாக் கவுன்சிலிங் தொடங்கப்பட வேண்டும். 

புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து புதுச்சேரி பிராந்திய இடஒதுகீட்டைப் பாதுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Thursday, October 22, 2009

மேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மதுரை, மேலூர் அருகேயுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கடந்த 30.06.1996 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். தலித் ஒருவர் தங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவராக வருவதா என்ற ஆதிக்க எண்ணத்தில் திட்டமிட்டு இந்த படுகொலையை அரங்கேற்றினர் ஆதிக்கச் சாதியினர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர் போராட்டத்தின் விளைவாக குற்றவாளிகள் 17 பேருக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, குற்றாவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம், என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கடந்த 19.04.2006 அன்று குற்றவாளிகளுக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதையும் உறுதி செய்தனர்.

குற்றவாளிகள் இத்தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இவ்வழக்கில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை கடந்த 23.09.2009 அன்று முடிவு பெற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வி.எஸ்.சிர்புக்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமையில் அக்கறையுடைய அனைவர் மத்தியிலும் இந்த தீர்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதி வெறிக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடிக் கொடுத்துள்ளது.

தொடக்கம் முதல் இந்த வழக்கில் சட்ட ரீதியாகவும், தொடர் இயக்கம் மூலம் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிக் கிடைக்க போராடிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களையும், அவரோடு துணை நின்ற அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு துணையாக இருந்து பங்களித்தமைக்கு நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இவ்வழக்கை வைத்து அரசியல் செய்த தலித் கட்சி, ஒரு கட்டத்தில் இவ்வழக்கு பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் போன நிலையிலும், வழக்கறிஞர் பொ.இரத்தினம் போன்றவர்கள் விடாது போராடி நீதியை நிலை நிறுத்தியதை மனதார பாராட்டுகிறேன்.

Saturday, July 04, 2009

குற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ம்ற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு 03.07.2009 அன்று அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், மேற்சொன்ன டாக்டர் மற்றும் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது கடந்த 30.06.2009 அன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி ஆர்.ரகுபதி அவர்கள், ‘மனுதாரர்களுக்கு சாதகமாக உத்தரவிட மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை நிர்பந்தித்தார்’ என கூறியுள்ளார். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நீதித்துறையின் செயல்பாட்டில் இந்த தலையீடு குறித்து நீதிமன்றத்தில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் தகவல் தெரிவித்த நீதிபதிக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மேற்சொன்ன நீதிபதி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட ஆவன செய்ய வேண்டுகிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பேன் என பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவரால் நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவாலுக்கு இந்திய அளவில் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சரின் இந்த செயல் தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா அவர்கள் ‘இதுபோன்ற அதிகாரம்மிக்க, உயர் பொறுப்பிலுள்ள பலமிக்கவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சிறு குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதில் பொருளில்லை’ எனக் கூறியுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும் இச்சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடியை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக தேர்வுக் கட்டுபாட்டுத் துறை ஊழியர் ஜெயராமன் கடந்த 20.05.2008 அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இறந்து போனவரின் அண்ணன் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் தம்பி கொலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சம்பத், மற்றும் கெளரிபாய் உட்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.

மேலும், மேற்சொன்ன ஜெயராமன் 18.02.2008 அன்று தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவரிடம் காலாபட்டு போலீசார் ஒரு மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். அதில், மேற்சொன்ன இருவரும் மதிப்பெண் மோசடி குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி தன்னை வற்புறுத்தியாதாக கூறுயுள்ளார். அவரின் வாக்குமூலம் இன்றைக்கும் குற்றாவாளிகளை வெளிப்படுத்தும் மரண வாக்குமூலமாக திகழ்கிறது.

எனவே, புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், இம்மோசடியை அமபலப்படுத்திய பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

Saturday, March 07, 2009

சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறை: நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்)

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19-ஆம் நாளன்று வழக்கறிஞர்கள் மீது தமிழகப் போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு விசாரணை மேற்கொண்டு கடந்த 4-ஆம் நாளன்று விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்தது. இந்நிலையில், மேற்சொன்ன வழக்கு விசாரணை 6-ஆம் நாளன்று விசாரணக்கு வந்தது. அப்போது, நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை முழு விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையை வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நிரகரித்துள்ளனர்.

நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கையைப் படிக்க கீழே கண்ட சுட்டியைச் சொடுக்கவும்.


நீதிபதி எச்.எம்.கிருஷ்ணா விசாரணை அறிக்கை (ஆங்கில வடிவம்).

Monday, March 02, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்:

1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.
4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.
7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.
8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.
9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்-எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.

இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.

பின்னணி:

ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.

அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.

தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.

இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.

பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.

தாக்குதல்

உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.

காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.
ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.

வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.

எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.

சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.

ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.

2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.

3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?

4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .
5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்

1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்

ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.

5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.

Tuesday, February 03, 2009

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!



சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செயல் அதிகாரியை அரசு நியமித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (02.02.2009) உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது.

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோத செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழக அரசு அக்கோயிலை அரசுக் கட்டுபாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிர்வாக செயலாளர் பொன் தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்த தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வரும் சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் குமார், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன், சிவனடியார் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.பானுமதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் நீதிபதி கூறி இருப்பதாவது:

'சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாக வைக்கப்படவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.

இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்கு தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.
தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாக கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் நேற்று இரவு நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள் கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏஎஸ்பி நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம், வட்டாச்சியர் தனவந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 15 நிமிடம் நடந்த ஆலோனைக்குப் பிறகு அனைவரும் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலை கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது” என்று கூறினார். தீட்சீதர்களும் வாக்குவாதம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து “நாங்கள் தீர்ப்பு நகலை வழங்கவில்லை. கடிதத்தின் நகலைத்தான் கொடுக்கிறோம்” என்று அதிகாரிகள் கையெழுத்திட்டு கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமகள் கூறுகையில், “நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் பூஜை நடைபெறும். தேவாரம், திருவாசகம் தொடர்ந்து பாடப்படும். அரசு என்ன உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எல்லாம் நடைபெறும்” என்றார்.

செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு நோட்டீசை பொது தீட்சிதர்கள் செயலக அலுவலக நோட்டீசை போர்டில் அதிகாரிகள் நேற்று இரவு ஒட்டினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!