Showing posts with label மாவோயிஸ்ட். Show all posts
Showing posts with label மாவோயிஸ்ட். Show all posts

Monday, October 15, 2012

சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் இனி “அரசியல் கைதிகள்” - கோ.சுகுமாரன்


ஆயுதம் தயாரித்த வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் இருக்கும் 9 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் என வரையறுத்து, அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்த எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 8 அன்று வழங்கிய தீர்ப்பொன்றில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்திரதார் மகதோ மற்றும் 7 மாவோயிஸ்டுகளை அரசியல் கைதிகள் எனக் கூறியுள்ளதை அமர்வு நீதிமன்றம் சுட்டிக்காட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

இதன்படி சிறையில் அரசியல் கைதிகளுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படும். அதாவது தனி அறை, வீட்டுச் சாப்பாடு, செய்தித்தாள்கள், புத்தகங்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை முன்பைவிட சுதந்திரமாக சந்தித்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். 

West Bengal Correctional Services Act 1992 என்ற சட்டப்படி அரசியல் கைதிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் குற்றங்கள் செய்தவர்கள் குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட அரசியல் கைதிகள் என இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகள் தங்களை அரசியல் கைதிகளாக கருத வேண்டி நீண்ட காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மனித உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, கொல்கத்தா நீதிமன்ற தீர்ப்பால் நடைமுறைக்கு வந்துள்ளது. 

மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என முத்திரை குத்தும் போக்கிற்கு இந்த தீர்ப்பு பெருத்த அடியாக அமைந்துள்ளது எனக் கூறி மாவோயிஸ்டுகள் தங்களுக்குக் கிடைத்த வெற்றி என இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர். 

இத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்தியாவெங்கும் மாவோயிஸ்டுகள் சலுகைகளை கேட்பார்கள் என இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தேசிய புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

Thursday, July 31, 2008

ஜார்க்கண்ட் சிறைகளின் நிலைமைகளை ஆராய்ந்த அகில இந்திய உண்மை அறியும் குழு!

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சிறைகளின் நிலைமைகளைப் பற்றி நேரில் ஆய்வு செய்துள்ளனர். விரைவில் இக்குழுவினர் தமது அறிக்கையை வெளியிட உள்ளனர்.

கடந்த ஜூலை 19, 20, 21 ஆகிய நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பல்வேறு சிறைகளைப் பார்வையிட்டனர். சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

இக்குழுவில் புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் கேசவன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், இக்குழுவில் எம்.கே.அசன் (முன்னாள் துணைவேந்தர், ராஞ்சி பல்கலைக்கழகம்), டாக்டர் சசி பூஷன் பதக் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), பிரபாட் குமார் தெகதி (முன்னாள் நலவழித் துறை அமைச்சர், ஜார்க்கண்ட்), பேராசிரியர் மனாஸ் ஜோர்தார், தபன் தாஸ் (அரசியல் கைதிகள் விடுதலைக் குழு, மேற்குவங்கம்), டாக்டர் மிதிலேஷ் (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஞ்சி), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவைச் சேர்ந்த ரோனா வில்சன் (ஜே.என்.யூ, தில்லி), ஷிவ் நந்தன் (காஷ்மீர்), மேதாப் அலாம் (ஜாமியா மில்லியா, தில்லி) உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இக்குழுவினர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி, அசாரிபாக், கிரிதி, லதேகர், டால்டன்கஞ்ச், கார்வா உள்ளிட்ட சிறைகளைப் பார்வையிட்டனர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஜார்க்கண்ட் அரசு பல அப்பாவி மக்களைப் பிடித்துச் சிறையில் அடைத்து வருகிறது. ஏறக்குறைய 1000 பேர் அரசியல் கைதிகளாக ஜார்க்கண்ட் சிறையில் வாடி வருகின்றனர். அண்மையில் கூட 170 பேர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடக்குமுறைச் சட்டமான குற்றவியல் திருத்த சட்டம் பிரிவு 17-ன் படி எந்தவித விசாரணையும் இல்லாமல் மாவோயிஸ்ட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றனர்.

ஜார்க்கண்டில் சிறைகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், அங்கு சிறை விதிகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனிச் சிறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கிடையே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.

போதிய மருத்துவ வசதியின்றி சிறைகள் உள்ளன. விசாரணைக் கைதிகள் எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக அளவில் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தேவையான அளவும், நன்கு தயாரிக்கப்பட்ட உணவும் கைதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
கார்வா சிறையில் மூன்று கைதிகள் கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டு கைகளையும், கால்களையும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த குழுவினர் சிறைக் கண்காணிபாளரிடம் இந்த மனித உரிமை மீறலை அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

ஜார்க்கணட் மாநிலத்தில் தனி “சிறைக் கையேடு” கிடையாது. பிகார் மாநிலத்தின் சிறைக் கையேட்டையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் சிறைகளைப் பார்வையிட்ட உண்மை அறியும் குழுவினர் தமது முழு அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும், சிறை மேம்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

உண்மை அறியும் குழு அறிக்கை இந்திய சிறைகளின் அவலத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.

Friday, June 06, 2008

நேபாள தேர்தல்: ஆனந்த விகடனில் கோ.சுகுமாரன் நேர்காணல்!

ஆனந்த விகடனில் "நேபாள தேர்தல்" குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நேர்காணல் வெளிவந்துள்ளது.

நேர்காணல் கண்டவர்: மு.வி.நந்தினி.






தெளிவாக படிக்க படத்தைக் "கிளிக்" செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.