Showing posts with label மன்மோகன்சிங். Show all posts
Showing posts with label மன்மோகன்சிங். Show all posts

Wednesday, December 24, 2008

தில்லி: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவைத் திரட்டிய புதுச்சேரி கட்சி - இயக்கத்தினர்!




இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும், எவ்வகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என அரசை வலியுறுத்தவும், அகில இந்திய கட்சிகளிடம் ஆதரவுத் திரட்டவும் புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தில்லி பயணம் மேற்கொண்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் அப்பட்டமான இனவெறி என்பதோடு கிரிமினல் குற்றமாகும்.

இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.

இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட பிரனாப் முகர்ஜி அதனை முழுமையாக படித்து பார்த்தார். பின்னர் அவர் 'இலங்கையில் மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். அரசுக்கு எல்லாம் தெரியும். இதுகுறித்து அரசு அக்கறையோடு இருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. போரை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. போரினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது அரசின் கவனத்தில் உள்ளது. தாங்கள் அளித்த மனுவில் சொல்லப்பட்டவைப் பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டாக்டர் பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் ' இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா?' என டாக்டர் பருண் முகர்ஜி கேட்டார். அதற்கு அவர் ' நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உடனுக்குடன் எதிர் நிலை எடுக்கிறது. பொறுத்திருங்கள், பார்ப்போம்' என்று கூறினார்.

பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் பி.மோகன், பெல்லார்மீன், ம.தி.மு.க. எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து தில்லி வந்த நோக்கத்தை விளக்கினர். அப்போது அவர்களோடு இருந்த அதிமுக ராஜசபா எம்.பி. ஒருவர் 'இக்குழுவில் எங்கள் கட்சியினர் வந்திருக்கிறார்களா?' என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இந்த பிரச்சனை என் துறையின் கீழ் வரவில்லை. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நாளை நேரில் பேசுகிறேன். எங்கள் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும்’ எனக் கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நீண்ட நேரம் கலந்துரையாடினார். ‘எங்கள் கட்சி நேதாஜி வழியில் வந்த புரட்சிகர கட்சி. நாங்கள் அடக்குமுறை எந்தவடிவில் இருந்தாலும் அதை எதிர்ப்போம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் போராடிய போது, மன்னருக்கு ஆதரவாக இந்திய அரசு நிலை எடுக்ககக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு தீவிரமாக ஆதரவுத் திரட்டினோம். தற்போது தேர்தல் நேரம். அரசும், கட்சிகளும் தேர்தலிலேயே கவனமாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும். தமிழர்கள் பாதிக்கப்படுவது பற்றி இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வேண்டும். மேலும் ஜனவரி மாதம் நான் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்’ என உறுதிபட கூறினார்.

புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் மேற்கொண்ட தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, 18.12.2008 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பி.மோகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில், 'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வுக் காண வேண்டும். இதற்கு இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் இராமதாஸ், எம்.பி. தலைமையில் பா.ம.க. எம்.பி.க்கள் அகில இந்தியக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Sunday, January 06, 2008

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.

Sunday, December 30, 2007

இலங்கைச் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – கி.வீரமணி

திராவிடர் கழகம் சார்பில் வரும் 31.12.2007 திங்களன்று, காலை 11 மணிக்கு, சென்னை - மெமோரியல் அரங்கம் அருகில், இலங்கையின் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர நாள் (4.2.2008) விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளவிருக்கும் நிலையில், அவ்விழாவில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இந்த அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து கி.வீரமணி 28-12-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஏதோ தமிழர்கள் அத்தீவில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல; தமிழர்களே படுகொலை செய்யப்படாமல் வேறு மக்கள் அப்படிப் படுகொலை செய்யப்பட்டாலும்கூட மனிதாபிமான அடிப்படையில் நமது எதிர்ப்பை, வெறுப்பைக் காட்டும் வகையில்தான் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈராக்கிலும், வியட்நாமிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதே - அதே கண்ணோட்டம் இதற்கும் பொருந்தும்தானே?

சொந்த நாட்டு மக்கள்மீது விமானத் தாக்குதல் என்பது உலகில் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்று! சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

படுகொலை செய்யப்பட்ட போராளிகளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது என்பது அய்.நா.வின் மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது அல்லவா? படுகொலை செய்யப்பட்ட பெண்களையே கூட இதற்குமுன் இவ்வாறு இலங்கை இராணுவம் நடத்தியதுண்டு.

ஒரு நாட்டின் எல்லைக்குள் அந்த நாட்டு குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது உலகெங்கும் உள்ள நடை முறை. இலங்கையிலோ தமிழர்கள் அந்த நாட்டில் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அதுவும் தலைநகருக்குச் செல்லவே முடியாது. கொழும்பு நகரில் தங்கி இருந்த 376 தமிழர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகத் தூக்கித் தமிழர்கள் வாழும் பகுதிக்கு விரட்டப்பட்டனர். இந்தியாவும் கண்டித்ததே! இந்த நிலையில் அந்த நாட்டுச் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் எப்படி செல்லலாம்?

தமிழர்களை மட்டுமல்ல; பன்னாட்டு உதவிக் குழுவினர் 17 பேர்களை இலங்கை இராணுவம் சுட்டுப் பொசுக்கியதே! பிரேதப் பரிசோதனையில் அந்தக் குண்டுகள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டதே!

இலங்கை அரசு இராணுவத்துக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கிய தொகை 16,600 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ.2,700 கோடி அதிகமாகும்.

இராணுவத்தை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன? இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளால் அந்நாட்டுக்குத் தொல் லையா? பிற நாட்டுப் படையெடுப்பா? இல்லையே! இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களைப் பூண்டோடு அழித்து முடிக்கத்தானே இந்த வன்மம்?

அப்படிப் படுகொலை செய்யப்படும் மக்கள் யார்? தமிழர்கள் தானே! அந்தத் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கும் உள்ளது தொப்புள்கொடி உறவு அல்லவா!

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகினால் இந்திய அரசின் முடிவு வேறு மாதிரியாகத்தானே இருக்க முடியும்!

உலகில் எந்த நாட்டிலும் உள்ள சீனக்காரரை அந்த நாடு தாக்க முடியுமா? அப்படி தாக்கினால் சீன அரசு சும்மா இருக்குமா? இலண்டனில் சீக்கியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், இந்தியா அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கிறதே - தமிழர்களுக்கு இடர்ப்பாடு என்கிறபோது மட்டும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை? இதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி.

தமிழ்நாட்டு மக்களின் இந்த உணர்வை பிரதமர் மன் மோகன்சிங் மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த நிலையிலும் இந்தியப் பிரதமர் இலங்கையில் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கக் கூடாது என்ற வேண்டுகோளை முன்னிறுத்தி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளை மறந்து தமிழர்கள், மனிதாபிமானிகள் கலந்துகொள்ள அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

நன்றி: விடுதலை.