Showing posts with label மலரஞ்சலி. Show all posts
Showing posts with label மலரஞ்சலி. Show all posts

Sunday, February 04, 2024

நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் - மலரஞ்சலி நிகழ்ச்சி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் இன்று (04.02.2024) காலை 10 மணியளவில், மக்கள் தலைவர் வ.சுப்பையா நினைவு இல்லத்தில் சென்னை  உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கோ.இராஜசூர்யா நினைவேந்தல் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். 

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு. தேனீ க.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.நேரு (எ) குப்புசாமி மலரஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 

மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், திராவிடர் கழக மண்டலத் தலைவர் வே.அன்பரசன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தமிழர் தேசிய முன்னணி தலைவர் ந.மு.தமிழ்மணி, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவுநர் சீ.சு.சுவாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் ஆ.பாவாடைராயன்,  தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் இராஜா, புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் இரா.வேல்சாமி, இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர.அபிமன்னன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி நகரத் தலைவர் பலுலுல்லா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் அ.ச.தீனா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தலைவர் இரா.சுகுமாரன், இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, ஆதிதிராவிடர் உரிமை இயக்கத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய மக்கள் சக்தி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அர.அரிகிருஷ்ணன், அண்ணல் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் வேணு.ஞானமூர்த்தி, மக்கள் உரிமைக் கட்சித் தலைவர் எம்.மணிமாறன், ஓவியர்கள் இரா.இராஜராஜன், மார்கண்டன், சட்டக் கல்லூரி மாணவி இரா.சுகன்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி காவலர் புகார் ஆணையம் (Police Complaints Authority) நீதிபதி கோ.இராஜசூர்யா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உதவியது. ஆனால், இந்த ஆணையத்திற்கு புதிய நீதிபதியைத் தலைவராக நியமிக்காமல் ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு உடனடியாக தகுதியான, நேர்மையான உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி தலைமையில் உறுப்பினர்களை நியமித்து காவலர் புகார் ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.

Saturday, July 03, 2021

மதுரை மேலவளவு தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலி!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (03.07.2021) விடுத்துள்ள அறிக்கை:

மதுரை மேலூர் அருகேயுள்ள மேலவளவில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித்துகளின் நினைவிடத்தில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேர் சாதி வெறியர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இப்படுகொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்தி குற்றவாளிகள் 17 பேருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்க காரணமாக இருந்தது.

வழக்கறிஞர் பொ.இரத்தினம் வழிகாட்டுதலில் செயல்படும் பெளத்த பொதுவுடைமை இயக்கம் சார்பில் மேலவளவு முருகேசன் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட நினைவு நாளான ஜூன் 30 அன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மேலூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், வட்டாட்சியர் பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு அனுமதி அளித்தும் இந்த இயக்கத்தினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், வழக்கறிஞர் பொ.இரத்தினம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஜெயசேகர் மூலம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலவளவு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்து வெங்கடேஷ் கடந்த 01.07.2021 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் அஞ்சலி செலுத்த பெளத்த பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு அனுமதி அளிக்குமாறு மேலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்களம் ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரியில் இருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், புதுவைத் தமிழ்நெஞ்சன், இரா.சுகன்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலவளவு தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.