Saturday, January 30, 2010

சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் கருத்தரங்கம் தொடங்கி நடக்கிறது - படங்கள்!


சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் பன் மாநில கருத்தரங்கம், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் அமர்வுக்கு கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்கிப் பேசினார். மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ.மார்க்ஸ் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கியும், அனைவரையும் வரவேற்றும் பேசினார்.

பின்னர் தமிழகத்தின் மூத்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்கைத் தொடக்கி வைத்து கருத்துரை ஆற்றினார். இந்திய - தமிழக மனித உரிமை இயக்க வரலாற்றையும், மனித உரிமை இயக்கம் சுயேட்சையாக செயல்படுவது குறித்தும் விரிவாக அவர் பேசினார்.

பின்னர், தில்லிப் பத்திரிகையாளர் சந்தியா சிவராமன், ஐதராபத்திலிருந்து வந்திருந்த மனித உரிமை மன்றத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.கிருஷ்ணா ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர் உணவு இடைவேளைக்குப் பின்னர் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மதிய அமர்வில் தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அபூர்வானந்த் உரையாற்றினார். தற்போது மக்கள் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பேராசிரியர் பாபையா உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

கருத்தரங்கில் பேசிய அனைவரும் மனித உரிமை அமைப்புகள் சுயேட்சையாக செயல்படுவது பற்றியும், எந்த ஒரு கட்சியையோ, அமைப்பினரையோ சார்ந்து இருக்கக் கூடாது என்பதை விளக்கிப் பேசினர். ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் பற்றி பேசுவது மனித உரிமைக்கு எதிரானது என்றும், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் எதிர்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் மதிய அமர்வில் பேச பேராசிரியர் பிரபா கல்விமணி, வழக்கறிஞர்கள் ரஜினி, கே.கேசவன், பா.புகழேந்தி ஆகியோர் காத்திருக்கின்றனர். மாலையில் விவாத அரங்கம் நடக்கிறது.

கருத்தரங்கம் பற்றி இன்னும் விரிவாக பதிவு இடவுள்ளேன்.

Friday, January 29, 2010

சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் - பன் மாநிலக் கருத்தரங்கம்!


Drawing Courtesy: Brydie Cromarty.

மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR) - மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி (FPR) ஆகியவை சார்பில் 30.01.2010 சனியன்று காலை 10 முதல் மாலை 6 மணி வரை, சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்சா மையத்தில் "சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் - பன் மாநிலக் கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

முதல் அமர்வு காலை 10 முதல் 2 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வுக்கு கோ. சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்குகிறார். மூத்த மனித உரிமை ஆர்வலர், எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்க திறப்புரை ஆற்றுகிறார்.

பல மாநிலங்களில் இருந்து வருகை தரும் மனித உரிமைத் தளாங்களில் பணியாற்றிவரும் ஆர்வலர்கள் கருத்துரை வழங்குகின்றனர். கவிதா ஸ்ரீவத்சவா (மக்கள் சிவில் உரிமைக் கழகம், ராஜஸ்தான்), வி.எஸ்.கிருஷ்ணா (மனித உரிமை மன்றம்), டாக்டர் அபுர்வானந்த் (தில்லிப் பல்கலைக்கழகம், புதுதில்லி), சத்தியா சிவராமன் (பத்திரிகையாளர், புதுதில்லி), பேராசிரியர் நகரி பாபையா (மக்கள் ஜனநாயக மன்றம், பெங்களூரு) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

இரண்டாவது அமர்வு மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரையில் நடக்கிறது. வழக்கறிஞ்ர் ரஜினி (மனித உரிமைக்கான மக்கள் கழகம்) தலைமைத் தாங்குகிறார். பேராசிரியர் பிரபா.கல்விமணி தொடக்க உரையாற்றுகிறார். வழக்கறிஞர் கே.கேசவன் (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), ஏ.எஸ்.அப்துல் காதர் (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு), வழக்கறிஞர் பா.புகழேந்தி (தமிழக மக்கள் உரிமைக் கழகம்) ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மூன்றாவது அமர்வு மாலை 4.30 முதல் 6 மணி வரையில் நடக்கிறது. இந்த அமர்வு விவாத அரங்காக நடக்கிறது. விவாதத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு தேனீர் மர்றும் உணவு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள அழைக்கின்றோம்!

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ் - 9444120582.
மின்னஞ்சல்: professormarx@gmail.com

கோ.சுகுமாரன் - 9894054640.  
மின்னஞ்சல்: peoples_rights@hotmail.com

Saturday, January 23, 2010

புதுச்சேரியில் - தமிழக் கணினியும் இணையப் பயன்பாடும் - கருத்தரங்கம்!

Tamil Bloggers Meeting

கருத்தரங்கம் குறித்த செய்தியைப் படிக்க படத்தை "அழுத்தவும்"