Friday, October 21, 2011

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் மக்களின் தொடர் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் நிலையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் அபாயகரமானது என்றும், இது செயல்பட தொடங்கினால் ஏற்படும் கதிர்வீச்சால் மக்களுக்கு பேராபத்து உண்டாகும் என அறிவியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதியன்று மூன்றாவது கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 15 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை எனக் கூறி போராட்டக் குழுவினர் நிபுணர் குழுவை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ரஜினி, பழனிச்சாமி ஆகியோர் நாளை (22.10.2011) இடிந்தகரைக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

மேலும், அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.

Friday, October 14, 2011

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 13.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இந்து மதவாத சக்திகளால் தாக்கப்பட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நேற்றைய தினம் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த இந்து மதவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஷ்மீர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். காஷ்மீர் பிரச்சனையை பேசுவது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல.

பிரசாந்த் பூஷன் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மட்டுமல்ல, சமூக தளங்களில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர். குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடி வருபவர்.

பிரசாந்த் பூஷனை தாக்கிய அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்வதோடு, இத்தாக்குதல் குறித்த பின்னணியை கண்டறிந்து அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Monday, October 03, 2011

தமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை: கட்சி, இயக்கங்கள் கோரிக்கை

புதுச்சேரி ஆக. 2: பாரதியார் பல்கலைக்கூடத்தில் தமிழை பழித்துப் பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை எடுக்க கட்சி, இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வணிக அவையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா. அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கோ. செ. சந்திரன், தலைவர், ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ. அ. ஜெகன்நாதன், முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம், முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், சி. மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை, உ. முத்து, பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வட் பிளாக், எம். ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்ட தலைவர், கமால் பாஷா, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இர.அபிமன்னன், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம், பெ. பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், சீனு.தமிழ்மணி, தலைவர், பூவுலகின் நண்பர்கள், சி. எம். புரட்சிவேந்தன், தலைவர், மக்கள் ஜனசக்தி இயக்கம், புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், சூ.சின்னப்பா, தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம், சாது.அரிமாவளவன், பொறுப்பாளர், அட்லஸ் அமைப்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.  பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பி.வி.போஸ் என்பவர் மகாத்மா காந்தி பாடல்களைப் பாடுவது நேரத்தை வீணாக்குவது என்றும், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு முன்பு பாடல்கள் பாடுபவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடுவதற்கு தகுதியற்றது என்றும் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை தலைவர் அறையில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் நடக்கும் தலைவர்களின் விழாக்களுக்குப் பாடல்கள் பாட மாணவர்களை அனுப்ப மறுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தமிழில் பாடம் நடத்தாமலும், தமிழ் மொழியைப் பழித்தும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 29.11.2010 அன்று அவர் மீது துறை ரீதியான விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் கண்ணாஜி தலைமையில் நடந்த விசாரணையில் தமிழறிஞர் மன்னர் மன்னன் உட்பட பல்கலைக்கூட பேராசிரியர்கள் 8 பேர் வாக்குமூலம் அளித்து சாட்சியம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 07.02.2010 அன்று செயலர் கண்ணாஜி ‘எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்’ என எழுத்து மூலம் அவருக்கு எச்சரிக்கை மெமோ (Warning Memo) விடுத்துள்ளார். இந்நிலையில், கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற மேத்யூ சாமுவேல் தலைவர்களை இழிவுப்படுத்திய போஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மெமோவை ரத்து செய்து கடந்த 06.05.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த போஸ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும், மொழி உரிமைக்காவும் அர்ப்பணிப்போடு பணியாற்றிய தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்தி பேசிய பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததன் மூலம் செயலர் மேத்யூ சாமுவேல் வெளிப்படையாகவே தவறுக்கு துணைப் போனதோடு, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார். மேலும், போஸ் தன் சொந்த மாநிலமான கேரளவை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை காப்பாற்ற மேத்யூ சாமுவேல் முயற்சித்துள்ளார் எனத் தெரிகிறது.
மேத்யூ சாமுவேலின் இந்த போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. குற்றமிழைத்த பேராசிரியர் போஸ் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தி அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், தவறுக்கு துணைப் போன செயலர் மேத்யூ சாமுவேல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

2. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறையில் பணியாற்றும் பேராசிரியர்  அன்னபூர்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வகுப்பு எடுக்கும் வீணை பிரிவில் மாணவர்கள் சேராததால், அவர் வேலையே செய்யாமல் சம்பளம் பெற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் தண்டமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து பேராசிரியர்களை பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்யலாம் என்ற ஆட்சிமன்ற குழுவின் முடிவின்படி பேராசிரியர் அன்னபூர்னாவை உடனடியாக பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

3. பாரதியார் பல்கலைக்கூடத்தில் உறுப்பினர் செயலாராக இருக்கும் குப்புசாமி என்பவர் தொடர்ந்து தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி பல்கலைக்கூட ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லஞ்சமாக பணத்தைக் கறப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் அரசு உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரும்கூட குப்புசாமி தன் போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. இவர் ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிய போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக குப்புசாமி மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. மேற்சொன்ன கோரிக்கைகளை முன் வைத்து வரும் 10.10.2011 திங்களன்று காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகம் அருகில், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.