Showing posts with label முசுலீம். Show all posts
Showing posts with label முசுலீம். Show all posts

Saturday, October 02, 2010

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்!


வீரபாண்டியன்...


ஆரூண்...


பேராசிரியர் ஜவாகிருல்லா...



கோ. சுகுமாரன்...


அருணன்...


சுதர்சன நாச்சியப்பன்...



தேவநேயன்...


பங்கேற்றோர்...
----------------------------------------------------------------------------------------------------

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.

‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.

“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.

கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் அவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.

‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.

‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.

நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.

Tuesday, April 13, 2010

பழங்குடியின மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு அரசாணை: புதுச்சேரி அரசுக்கு நன்றி!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.04.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பழங்குடியின மக்களை ‘பிற்படுத்தப்பட்ட பழங்குடி’ என வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டுள்ள புதுச்சேரி அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திய பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு ‘அட்டவணை பழங்குடி’ (Scheduled Tribe - ST) என அங்கீகாரம் பெறுவதற்கு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி அம்மக்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட 1989-ம் ஆண்டு முதல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கப் தொடர்ந்துப் போராடியதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

 பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணிப்போடு தொடர் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டுள்ள பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் திரு. ராம்குமார் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இதேபோல், புதுச்சேரி அரசு முஸ்லிம்களுக்கும், மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்து அரசாணையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என் வலியுறுத்துகிறோம். 

Tuesday, March 09, 2010

புதுச்சேரியில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில்  மனித நேய மக்கள் கட்சி சார்பில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில்  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.எ.அஷ்ரப் தலைமை வகித்தார்.

புதிதாக 90 மதுக்கடைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்க அளவில் மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் அங்கமாக் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் இ.முகமது சலீம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.அப்துல்ராஜாகான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் சு.பாவாணன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோ.செ.சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மது ஒழிப்பை வலியுறுத்தி பேசினர்.

சிறப்பு அழைப்பளராக  கலந்துக் கொண்ட மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் முத்துப்பேட்டை அப்துல் மாலிக் கணடன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துக் கொண்டனர்.

Friday, August 29, 2008

கோவை : சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்!


பதாகை...


திரளான முசுலீம் பெண்கள்...


அரங்கத்திற்குள் திரண்டிருந்த முசுலீம் மக்கள்...



அரங்கத்திற்கு வெளியே முசுலீம் மக்கள்...


மேடையில் தலைவர்கள்...


கோ.சுகுமாரன்...


மனித நீதிப் பாசறை (MNP) சார்பில் தமிழகத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என வலியுறுத்தி கோவையில் 24-08-2008 ஞாயிறன்று மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக சிறைகளில் பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறைவாசிகள் பலர் 10 முதல் 21 ஆண்டு வரையில் விடுதலைச் செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தலைவர்கள் பிறந்த நாளன்று இவ்வாறு சிறையில் உள்ள ஆயுள் தண்டனைச் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா நூற்றாண்டு வருவதையொட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைப் பெற்று 7 ஆண்டுகள் சிறையில் தண்டனை கழித்தவர்களை விடுதலைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் இரண்டு சுற்ற்றிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆயுத மற்றும் வெடி மருந்துச் சட்டப்படி தண்டனை அடைந்தவர்கள், மதக் கலவரத்தில் தண்டனை அடைந்தவர்கள், கீழ்நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று உயர்நீதிமன்றத்தாலோ, உச்சநீதிமன்றத்தாலோ ஆயுள் தணடனையாக குறைக்கப்பட்டவர்கள் என இந்த மூன்று வகையினருக்கு அண்ணா நூற்றாண்டில் தண்டனை குறைத்து விடுதலை செய்வது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச் செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பல்வேறு வழக்குகளிலுள்ள முசூலீம்கள் 72 பேரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்த நளினி உட்பட நால்வரும், 21 ஆண்டுகள் கழித்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட தமிழக சிறைகளிலுள்ள ஆயுள் தணடனைச் சிறைவாசிகள் மொத்தம் 77 பேர் விடுதலை ஆகமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 72, 161 ஆகியவை தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கும், அந்தந்த மாநில ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது. இதில் பாகுபாடு காட்டுவது பிரிவு 14-க்கு முரணானது.

இது குறித்து அரியாணா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது:

“கைதிகள் தணடனைக் குறைப்பைக் கோருவது அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தணடனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்ட பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும், இவ்வாறு மேற்கொள்ளாப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 14-க்கு முரணாக அமையக் கூடாது” என ஆணித்தரமாக கூறியுள்ளது.

இந்நிலையில், மனித நீதிப் பாசறை சார்பில் 24-08-2008 ஞாயிறன்று, கோவையில், சங்கமம் திருமண மண்டபத்தில், மாலை 5.45 முதல் இரவு 9.30 மணி வரையில் “சிறைக் கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும் – கருத்தரங்கம்” நடைபெற்றது.

கருத்தரங்கில் மனித நீதிப் பாசறை மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.முகமது ஷாஜகான் வரவேற்றார். மாநிலத் தலைவர் எம்.முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக மனித உரிமைக் கழக வழக்கறிஞர் பாவேந்தன், தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (NCHRO) செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நவ்பல், மாநில செயலர் எம்.ரகமத்துல்லா, மறுமலர்ச்சி முசுலீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், தலித் இசுலாமிய கிறித்துவ கூட்டமைப்பு பொதுச்செயலர் ஏ.கே.முகமது அனீபா, சமூக ஆர்வலர் கோவை தங்கப்பா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலர் இ.எம்.அப்துர் ரகுமான், (அவரது பேச்சை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் மொழிபெயர்த்தார்), அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் உரையாற்றினர்.

மனித நீதிப் பாசறை மாவட்ட தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலர் எம்.ஒய்.அப்பாஸ் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட மூசுலீம்கள் கலந்துக் கொண்ட்து எழுச்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சியை அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த “மனித நீதிப் பாசறை” அமைப்பை அனைவரும் பாராட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு’ சார்பில் சென்னையில் நடந்த அதன் தொடக்க விழாவில் பாகுபாடின்றி ஆயுள் சிறைவாசிகள அனைவரையும் விடுவிக்க கோரிக்கை எழுப்பப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

சிறைவாசிகளின் உரிமைக் குரல் முசுலீம்களின் வாக்கு வங்கியை நம்பியிருக்கும் தி.மு.க. அரசுக்கு எட்டுமா?


புகைப்படங்கள்: மனித நீதிப் பாசறை, கோவை.

மேலும் புகைப்படங்கள் பார்க்க