Thursday, November 21, 2013

சிறு சலனத்தையும் ஏற்படுத்தாத ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம்!

1988-இல் நாங்கள் எல்லாம் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டவிரோதக் காவலில் பல நாட்கள் வைக்கப்பட்டிருந்த நேரம். விசாரணை என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத, சிறிய அளவிலான, ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம். நாங்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக கண் விழித்துப் பார்த்துக் கொள்ள அறைக்குள் ஒரு காவலரும், வெளியே பல காவலர்களும் காவலுக்கு இருப்பர். அவர்களுக்கு தூக்கம் வந்து கண் அயரும் போது திடீரென விழித்துப் பார்ப்பார்கள். அந்த எரிச்சலான நேரத்தில் யாராவது நாங்கள் கண் விழித்திருப்பது தெரிந்தால் அவ்வளவுதான். கடுமையாக தாக்குவார்கள். நாங்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பிக்கவே விழித்திருப்பதாக எண்ணிக் கொண்டு அவ்வாறு செய்வார்கள். அது எப்போதாவது நடக்கும் என்பதால் அதை நாங்கள் தாங்கிக் கொள்வோம். அந்த நேரத்தில் நாங்கள் மனதிற்குள் கெட்ட வார்த்தைகளில் அவர்களைத் திட்டித் தீர்ப்போம்.

அதுபோன்ற ஒரு இரவில் ஒரு மணி இருக்கும்.  திடீரென யாரோ பதட்டமாக அறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வருவது போன்று உணர்ந்தோம். நாங்கள் காவலில் இருந்த நாட்களில் இரவு நேரங்களில் நன்றாக தூங்கியதே கிடையாது. அப்போது எதிரே, நல்ல சிவப்பு நிறத்தில், உயரமான ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய லட்சணத்துடன் டீக்காக உடை அணிந்து ஒருவர் வந்து எங்கள் அருகில் நின்றார். அவர் எங்களை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரி என்பதைப் புரிந்துக் கொண்டோம். அவர் கையில் தோட்டா நிரம்பிய நவீன வகைக் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. சினிமாவில் வருவது போல விராலால் அந்தத் துப்பாக்கியை சுற்றிக் கொண்டே இருந்தார். அவரோடு வந்த கீழ்நிலை காவலர்கள் தங்களின் காலால் படுத்துக் கொண்டு இருந்த எங்களை எட்டி உதைத்து எழுப்பினார். நாங்கள் பதட்டத்துடன் எழுந்தோம்,

“டேய்.. இந்தப் பள்ளிப் பசங்களும், பறைப் பசங்களும் சேர்ந்துக்கிட்டு தமிழ்நாட்டை விடுதலைப் பண்ணப் போறீங்களாடா” என்று தொடங்கி எழுத முடியாத சொற்களால் எங்களைத் திட்டித் தீர்த்தார் அந்த போலீஸ் அதிகாரி. அதன்பின்னர் எங்களில் ஒவ்வொருவராக அழைத்துப் பெயர் ஊரைக் கேட்டுக் கடுமையாக தாக்கிச் சித்திரவதை செய்தார். “முந்திரிக்காட்டில் வைத்து உங்களை என்கவுன்டர் செய்துவிடுவேன்” என்று மிரட்டினார். தொடர்ந்துப் பல மணி நேரம் எங்களுக்கு வித விதமாக சித்திரவதைகள் நடந்தன. கொள்கை என்று ஒன்று இல்லை என்றால் அந்தச் சித்திரவதைகளை எங்களால் தாங்கிக் கொண்டுடிருந்திருக்க முடியாது. அந்தத் தருணங்களை இன்று நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு அச்சம், பதற்றம் ஏற்படும். அன்று நாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் கூறுகிறேன்.

பின்னர் அந்த போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி என்பதைப் பின்னர் அறிந்துக் கொண்டோம். திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டரான அவர் திருச்சி, கடலூர், விழுப்புரம் என இந்த மாவட்டங்களில் தமிழரசன் தோற்றுவித்து வழிநடத்திய “தமிழ்நாடு விடுதலைப் படை” என்ற தலைமறைவு அமைப்பினரை வேட்டையாடுவதையே குறிக்கோளாக கொண்டுக் கொலை வெறியுடன் செயல்பட்டவர்களில் முக்கியமனவர் என்று தெரிந்துக் கொண்டோம். மூளையே இல்லாமல் சித்திரவதை என்ற கொடிய அனுகுமுறையை மட்டுமே அறிந்தவர் அவர். தீவிர சிந்தனையுடைய, செயல்பாடுடைய அமைப்புகளில் உள்ளவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என எம்-எல் இயக்கத்தினரை ஒடுக்கவே அவர் பணிக்கப்பட்டு, அதனை அவர் செவ்வனே செய்துக் கொண்டிருந்தார், அப்போதெல்லாம் மனித உரிமைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காலம். எத்தனையோ தோழர்கள் சித்திரவதைக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததும் உண்டு. இந்த அடக்குமுறைகளை யாரும் கேள்விக் கேட்க முடியாத சூழல் இருந்த காலம்.                    

1987, செப்டம்பர் 1-இல் தோழர் தமிழரசன் உள்ளிட்ட நான்கு பேரை, பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட போது சுட்டுக் கொன்றதன் பின்னணியில் செயல்பட்டதில் மிக முக்கியமானவர். அப்பழியை பொதுமக்கள் மீது போட்டுத் திசைத் திருப்பியதை அனைவரும் அறிவர். அப்போது தமிழரசனை கொல்ல தமிழக அரசு ஒரு கோடி செலவு செய்தது என்றால் பாருங்கள். தமிழரசனை கொன்றதில் முக்கியமானவர் தான் இந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி. அவரின் சித்திரவதைகள் எங்களுக்கு எந்தளவுக்குக் மறக்க முடியாது என்பதற்குச் சான்று, பழனிச்சாமி என்ற பெயரைக் கேட்டாலே அவர் ஞாபகம்தான் வரும்.

திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சாட்சி சொல்ல வந்த போது அவரை மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர் தோழர் பொழிலனை பேச அழைத்த போது, அவர் எங்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதை மறக்க முடியாது. அதன் பின்னர், இடைப்பட்ட காலத்தில் திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ‘கேப்மாரி” சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்துச் சென்று, இதேபோல் சித்திரவதைச் செய்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. அதன்பின்னர், சில காலம் மனநிலை பிழன்று திரிந்ததாகவும் கேள்விப்பட்டேன். பிறகு டி.எஸ்.பி. பதவி உயர்வுப் பெற்று பணியில் இருந்ததாகவும் கூறினார்கள்.

நேற்றைய தினம் காலையில் ஒரு நண்பர் கைபேசியில் அழைத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி இறந்துப் போய்விட்டார் என்றும், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனக்கு வருத்தப்படுவதா, மகிழ்ச்சி அடைவதா என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஒருவரது மரணம் நமக்கு இப்படி ஒரு ஊசலாட்டத்தைத் தந்துள்ளதை எண்ணியபடியே இருந்தேன். அதற்குக் காரணம் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற தோழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியவர் என்பதுதான். அந்த தோழர்களின் வழிமுறையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் என்பது என்றும் போற்றப்பட வேண்டியது.

சுருக்கமாகச் சொல்லப் போனால், திருச்சி – கடலூர் மாவட்ட எல்லையில் வெள்ளாற்று கரையிலுள்ள கிராமங்களிலும், முந்திரிக்காடுகளிலும் இவர் செய்த சித்திரவதையால் கதறிய கதறல்கள் இன்றுகூட கேட்கக்கூடும். அவை மார்க்சிய – லெனினிய தத்துவத்தை ஏற்றுச் செயல்பட்ட எண்ணற்ற தோழர்களின் வெளிவுலகிற்குத் தெரியாத, பதிவுச் செய்யப்படாத வரலாற்றின் கதறல்களின் எதிரொலிகள்.

இப்போது உங்களுக்குப் புரியும் இந்தக் கொடிய போலீஸ் அதிகாரியின் மரணம் ஏன் என்னுள் எந்தவித சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்று...              

Friday, October 25, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.  

அக்டோபர் 10: இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…

Saturday, October 12, 2013

ஒரு சிறைக் காவலரும், மரண தண்டனை ஒழிப்பும்!

1988-ல் நானும், நண்பர்களும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அப்போது சிறைவாசிகளுக்கு 15 நட்களுக்கு ஒருமுறை திரைப்படம் காண்பிப்பார்கள். சிறைவாசிகளின் இறுக்கம் நிறைந்த வாழ்வு சற்று இலகும் தருணம் அவை. எங்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

மிசா காலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சிட்டி பாபு போன்றவர்களை கொன்றும், எண்ணற்றவர்களைத் அடித்து உதைத்துத் துன்புறுத்தியும் புகழ்ப் பெற்ற சிறை அதிகாரி வித்யாசாகர். அவர் அப்போது சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தார். அவர் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பு. அவர் மதுரை சிறையைப் பார்வையிட வருவதாகவும், சிறைவாசிகளின் குறைகளைக் கேட்டறிவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.

நாங்கள் எப்போதுமே சிறை அதிகாரிகளின் நேரடிக் பார்வையிலுள்ள ஆறாம் பிளாக் செல்லில் அடைக்கப்படிருந்தோம். அதோடு மட்டுமல்லாமல், தீவிரவாதிகள் அல்லவா? ஆகையால், சிறை அதிகாரிகள் எங்களுக்கு முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இருந்தாலும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்குள் எழுந்து, நீண்ட விவாதம் நடந்தது. திரைப்படம் பார்க்க சிறை அதிகாரிகளிடம், அதுவும் கொடூரமான மனித உரிமை மீறலை நிகழ்த்திய அதிகாரியிடம் கேட்பதா என்ற மாபெரும் விவாதம். இதற்குப் புரட்சிகர பிம்பம் இக்கோரிக்கையை எழுப்ப பெரும் தடையாக இருந்தது. நானும், சில தோழர்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பின்னர் ஒரு வழியாக கோரிக்கையை எழுப்புவது என்று முடிவுக்கு வந்தோம். இதில் ஆர்வமாக இருந்த என்னிடமே அந்தப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது. சிறை அதிகாரிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர். சிறைவாசிகள் ஏதாவது குறை சொல்லிவிடக் கூடாது என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். சிறைவாசிகள் வரிசையாக தங்கள் பிளாக் மற்றும் செல்லின் முன் வந்து நிற்க வேண்டும். அதிகாரிகள் வரும் போது வலது கையை உயர்த்தி நீட்ட வேண்டும். அப்போது அதிகாரி நிற்பார். அச்சமயத்தில் அவரிடம் குறைகளைக் கூற வேண்டும். இதுதான் சிறை நடைமுறை. கையை நீட்டி குறை சொன்ன சிறைவாசிகளுக்கு அந்த அதிகாரி சென்றவுடன் கடும் தண்டனை விதிக்கப்படும். சிறை காவலர்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அவர்களுக்கு சிறை விதிகளை தளர்த்தி அளிக்கப்டும் பீடி, சிகரெட், இன்ன பிற நிறுத்தப்படும். அவரைப் பொருத்தவரையில் மட்டும் சிறை விதிகள் கடுமையாக பின்பற்றப்படும். இதனால், பெரும்பாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆயுள் தண்டனைச் சிறைவாசிகள் மட்டும் தங்களின் ‘ரெமிஷன்’ முன்விடுதலைக் குறித்து ஏதாவது கேட்பார்கள். மற்றபடி அந்த உயரதிகாரிகளின் வருகை ஒரு சடங்காகவே நடந்து முடியும். ஒழுங்காக ‘மாமூல்’ அளிக்காத சிறைகளுக்கே இதுபோன்ற உயரதிகாரிகள் வருகை இருக்கும் என்ற செய்தியும் உண்டு.

நாங்களும் எங்கள் செல்லின் முன்பு வரிசையாக நின்றிருந்தோம். சிறை அதிகாரிகளுக்கு எங்கள் மீது மரியாதை இருந்தாலும், ஒருபுறம் சந்தேகமும் எப்போதும் உண்டு. ஏதாவது சிக்கல் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம்தான்.

அதிகாரிகள் புடைசூழ வித்யாசாகர் தூரத்தில் வருவதைப் பார்த்தோம். மிகக் கொடூரமான அதிகாரியை சந்திக்க நாங்களும் ஆவலுடன் இருந்தோம். எங்களுக்குப் பாதுகாப்புக்காக நிற்கும் சிறைக் காவலர்கள் கஞ்சிப் போட்டு தேய்த்த உடையின் மிடுக்குடன், மிகுந்த விரைப்புடன் நின்றிருந்தனர். மிக அருகில் வித்யாசாகர் வந்து எங்களிடம் நின்றார். வரிசையில் என்னருகில் நின்றிருந்த பொழிலனிடம் நலம் விசாரித்தார். ‘அப்பா (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) நலமாக இருக்கிறார்களா’ என்று கேட்டார். அவரும் பதில் அளித்தார். மிசாவில் சென்னை நடுவண் சிறையில் இருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், எம்.ஆர்.இராதா ஆகிய இருவர் மட்டுமே வித்யாசாகரின் தடிக்குத் தப்பியவர்கள் என்பது கூடுதல் தகவல். அந்த கொடூர வரண்ட உள்ளத்திற்குள் இவர்கள் இருவர் மீதும் ஏதோ ஒரு வகையில் மரியாதையும், ஈரமும் இருந்துள்ளது. எங்கள் அருகில் நின்ற அவரின் தோற்றமும், பேச்சும் எந்த வகையிலும் அவரின் கொடூர முகத்தைப் பிரதிபலிக்கவில்லை.

அடுத்து என்னருகில் வந்தவுடன் நானும், ஈகையரசன் அண்ணனும் திடீரென எங்களது கையை உயர்த்தினோம். அன்றாடம் எங்களை நலம் விசாரித்து கவனித்துக் கொள்ளும் சிறை அதிகாரிகள் முகத்தில் அதிர்ச்சி ரேகை ஓடியது. நான் ‘சார்! எங்களுக்கும் திரைப்படம் காண்பிக்க வேண்டும்’ என்றேன். ஈகை அண்ணனும் ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் வித்யாசாகர் ‘அலோ தெம்’ என்றார். அதாவது, இவர்களை அனுமதிக்கவும் என்று கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சற்று நிம்மதி அடைந்ததைக் காண முடிந்தது. தூய தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்ட எங்களுக்குக் காவல்துறை, சிறைத்துறை அதிகாரிகளை ‘அய்யா’ என்ற அழைக்க மனம் வராது. அதில் ஏதோ அடிமைத்தனம் இருப்பதாக உணர்வோம். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரிகளை மூச்சுக்கு மூச்சு ‘அய்யா.. அய்யா’ என்று விளிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்களுக்கான திரைப்படம் பார்க்கும் நாளும் வந்தது. சிறைக்குள் பெரிய திரையரங்கம் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். சிறை நுழைவு வாயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் சிறைவாசிகளுக்கான பிரத்தியோக திரையரங்கு உள்ளது. மாலை 6 மணிக்கு அடைப்புக் கணக்கு முடிந்து அனைவரும் பிளாக், செல்லில் அடைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பிளாக், செல்லாக திறந்து அனைவரையும் எண்ணி வரிசையாக அனுப்புவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறைவாசிகள் தப்பித்துச் செல்லும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதால் கடும் பாதுகாப்பு இருக்கும். எங்களின் வரிசைக்கு அருகிலேயே சிறைக் காவலர்களும் வரிசையாக நிற்பார்கள். வரிசை நத்தைப் போல் ஊர்ந்து பொறுமையாக நகர்ந்து, நகர்ந்து திரையரங்கை அடைய ஒரு மணிநேரம்கூட ஆகும்.

திரையரங்கை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அருகில் ஒரு நீண்ட நெடிய மதில் சுவறு கொண்ட மேற்கூரை இல்லாத அறைக்குள் ஒரு சிறிய கோயில் ஒன்று தென்பட்டது. அந்த அறை பெரிய இரும்புக் கதவுப் போட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கதவு வழியாக அந்த திறந்த வெளி அறைக்கு செல்ல நிறைய படிகள் அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருந்ததினால் எனக்கு சற்று கால் வலி ஏற்பட்டது. நான் அந்தப் படிக்கட்டுகளின் ஒன்றில் சற்று அமர்ந்தேன். இதை தூரத்தில் இருந்துக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு அறிமுகமான சிறைக்காவலர் ஒருவர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தார். என்னை மிகவும் கோபமாகவும், சொல்ல முடியாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். ஒரு சமயத்தில் என்னை அடிக்கவும் முற்பட்டார். ஆனால், அடிக்கவில்லை.

சிறைவாசிகள் யாருக்கும் அந்த சிறைக் காவலரைப் பிடிக்காது. கடுமைக்குப் பெயர் பெற்றவர். சின்ன தவறுக்குக்கூட சிறைவாசிகளை அடிக்க தயங்கமாட்டார். எனக்கு சிறிய வயது என்பதாலும், எந்தத் தவறும் செய்யாத போதும் அவர் என்னிடம் நடத்துக் கொண்ட விதம் மிகவும் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சக தோழர்களுக்கும், பிற சிறைவாசிகளுக்குமே ஒன்றும் புரியவில்லை. என் கண்ணில் எவ்வளவு அடக்கியும் நீர் வழிந்து ஓடியது. என் அழுகையை நான் மறைக்க முயன்று தோல்வியுற்றேன்.

இந்த மன அழுத்தத்துடனே நான் திரையரங்கிற்குச் சென்றேன். அன்றைக்கு ‘அந்தமான் காதலி’ படம் திரையிட்டார்கள். சிவாஜி, சுஜாதா ஆகியோர் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்த படமது. எனக்குப் படம் பார்க்க மனம் ஒப்பவில்லை. எல்லோரும் ரசித்துப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நான் மட்டும் அகமும், புறமும் அழுதுக் கொண்டே இருந்தேன். அந்தக் காவலர் நடந்துக் கொண்ட விதம் என்னை திரும்பத் திரும்ப நினைவில் வந்து அழுத்தியது. எப்போது படம் முடிந்து செல்லிற்கு செல்வோம் என்ற எண்ணத்திலேயே அமர்ந்திருந்தேன்.

மற்ற சிறைவாசிகள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தனர். எங்களைத் தனிமையாக வைத்துப் பாதுக்காக்க வேண்டும் என்பதால், நாங்கள் மட்டும் பள்ளிக்கூட மர பெஞ்சு போன்ற பெஞ்சில் அமர்ந்துப் படம் பார்க்க வைக்கப்பட்டோம். டூரிங் தியேட்டரில் தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் போல. திடீரெனெ படத்தை நிறுத்திவிட்டு விளக்கைப் போட்டுப் பார்ப்பார்கள். எங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பார்கள். ஒருவழியாக படம் முடிந்தது. நாங்கள் எங்களது செல்லிற்குத் திரும்பினோம். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. சிறைக் கம்பியின் ஊடாக வெளியே மெல்லிய ‘குண்டு பல்ப்’ வெளிச்சத்தில் தெரியும் சிறைப் பகுதிகளின் நிழல் படிமங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே கிடந்தேன். அழுகையும், அரைகுறை தூக்கமும் கலந்த அந்த இரவு என் வாழ்வில் மறக்க முடியாத சூது கவ்விய இரவு எனலாம்.

வழக்கம் போல் பொழுது விடிந்தது. தினம்தோறும் காலை 6 மணிக்கு கீழ்நிலை சிறை அதிகாரிகள் வந்து எங்களை எழுப்பி, கணக்கெடுத்துச் செல்வார்கள். அதாவது, நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமா? என்று பார்த்துச் செல்வார்கள். வழக்கமாக வரும் அந்த அதிகாரியும், சிறைக் காவலர்களும் வந்து கணக்கெடுத்தார்கள். பின்னர், கதவுகளைத் திறந்து எங்களை காலைக்கடன் முடிக்கவும், குளிக்கவும் வெளியே அனுப்பினார்கள். அந்தக் குழுவில் நேற்று என்னிடம் மிக மோசமாக நடந்துக் கொண்ட சிறைக் காவலரும் இருந்தார். நான் அவசரம் அவசரமாக வெளியே வந்து நேற்று நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கம் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நான் என் கவலைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு கடுமையாக நடந்துக் கொள்ளும் அந்த சிறைக் காவலருக்குள் இப்படி ஒரு மனிதாபிமானமா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எண்ணி எண்ணிப் பெருமைப்படும் அளவுக்கு அவர் மீது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மரியாதை கூடியது. அவர் எங்களுக்குள் மிகவும் உயர்ந்து நின்றார். எளிய மனிதர்களுக்குள் நல்ல குணங்கள் குடிக் கொண்டிருக்கும் என்பதற்கு அவரும் ஒரு நிதர்சமான சாட்சி.

அவர் சொன்ன விளக்கத்தை அப்படியே இங்குத் தருகிறேன். “தம்பி, நேத்து நான் நடந்துக் கொண்ட விதத்துக்கு நீங்க வருத்தப்பட்டிப்ருப்பீக. ஏன் எல்லாருமே வருத்தப்பட்டிருப்பீக. கொஞ்சம் வயசு தம்பி உங்களுக்கு. நீங்கள் எல்லாம் இன்னும் நிறைய வருசம் வாழனும். அந்த இடத்தில் உங்க கால் படக் கூடாது. அதான் கொஞ்ச கோவமா நடந்துகிட்டேன். போய்க் கால வேலைய முடிச்சி, குளிச்சி சாப்பிடுங்க தம்பி..” என்று கூறிவிட்டு சென்றார். அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மெல்ல மெல்ல அந்த உருவம் என்னை விட்டு அகன்று மறைந்துச் சென்றது.

அவர் என் கால் படக் கூடாது என்று சொன்ன இடம், மரண தண்டனையை நிறைவேற்றும் “தூக்கு மேடை” இருக்கும் இடம் என்று தெரிந்த போது மனது கனத்தது. ஒப்புக்குகூட அந்த இடத்தில் எங்களைப் போன்றவர்களின் கால்கள் படக் கூடாது என்று நினைத்த, அந்த கடுமையான தோற்றம் கொண்ட மனதிற்குள் எத்தனை அழகானதொரு மனிதநேயம். சிறிய தப்புக்குக்கூட கடும் தண்டனை தரும் அந்த மனதிற்குள் மரண தண்டனைக்கு எதிரான உயரிய சிந்தனை. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத சம்பவம் இது. அவர் மறக்க முடியாத உயிரும் கூட.                                                                  

இன்று உலக மரண தண்டனை ஒழிப்பு நாள்…  

Saturday, September 07, 2013

நாங்கள் குதூகலமாக ரசித்து வாழ்ந்த ஜெயில்!

நண்பர் வாசுதேவன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு 'இது எந்த சிறைச்சாலை?' என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இது சிறைச்சாலைதான். ஆனால், நீங்கள் நினைக்கும் சிறைச்சாலை அல்ல. புதுச்சேரியில் என் வயதை ஒத்தவர்களுக்கு இந்த 'ஜெயில்' பற்றி தெரியும். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பெத்தி செமினார் பள்ளியின் வகுப்பறைகள் தான் இவை. அழகிய பள்ளியின் ஒரு மூளையில் இந்தக் கட்டிடம் இருக்கும். அப்படியே சிறை போன்ற வடிவமைப்புக் கொண்ட கட்டிடம் இது. இதனை 'ஜெயில்' என்றே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் விளிப்பர். அதன் நுழைவுக் கதவு சிறைக் கதவு போலவும், ஒவ்வொரு வகுப்பறையும் ஒவ்வொரு சிறை 'செல்' போன்றும் காட்சியளிக்கும். தற்போது இந்தக் கட்டிடம் முழுக்க இடிக்கப்பட்டு, புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இங்குதான் எங்களுக்கு கல்வி கற்பிக்கிறோம் என்ற பெயரில் தண்டனை அரங்கேறும். ஒன்றாம் வகுப்பு முதல் இந்தப் பள்ளியில் படித்தாலும், 6, 7, 8-ம் வகுப்புகள் இந்த 'ஜெயிலில்' படித்தேன். கண்டிப்பிற்கு பேர் போன பள்ளி இது. அப்போது இந்தப் பள்ளியில் படிப்பதையே பெருமையாக கருதுவார்கள். இப்போது இதுபோல நிறைய பள்ளிகள் வந்துவிட்டன. எங்களை அடிக்க நாங்களே பள்ளிக்கு எதிர்க்கடையில் உள்ள பிரம்புக் கடையில் இருந்து பிரம்பு வாங்கிச் செல்ல வேண்டும். அங்குப் பிரம்புகளை அழகாக சீவி பாலிஷ் போட்டு விற்பார்கள். அப்போது மாணவர்களை அடித்தால் கேட்பதற்கு நாதி இருக்காது. இப்போது சின்ன தண்டனை என்றால் பெரும் பிரச்சனையாகி விடுகிறது. போலீஸ், வழக்கு என்ற நிலை வந்துவிட்டது. வகுப்பறை தண்டனைப் பற்றி ஆசிரியர்களிடத்தில் மட்டுமல்ல பெற்றோர்கள் மத்தியிலும் கூடுதலான விழிப்புணர்வு வந்துவிட்டது.

இந்த ஜெயிலில் இடதுபுறம் அமைர்வதற்கு சிமெண்டால் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் அப்போது கிடையாது. குட்டிச்சுவர் போன்ற அந்தக் கட்டையில்தான் 'இன்டர்வெல்' நேரத்திலும், காலை, மதியம் வகுப்பு தொடங்கும் முன் கிடைக்கும் சில நிமிடங்கள் சக மாணவர்களிடம் பேசிக் கொண்டிருப்போம். அந்த விடலைப் பருவத்திற்கே உரிய விஷயங்கள் பேசுவோம். அந்தக் கட்டையில் சாய்ந்துக் கொண்டுதான் பேச முடியும். அமர்வதற்குத் தடை. அமர்ந்து இருப்பதை ஆசிரியர்களோ அல்லது முதல்வரோ பார்த்தால் தொலைந்தோம். முதல்வரைப் பார்த்தால் சினிமாவில் வரும் அன்பான பாதிரியார் போல் அல்லாமல் கொடூரமாக தோன்றும். எல்லாம் மிலிட்டரி ரெஜிமன்டேஷன் மாதிரி தான்.

அப்போது எங்களுக்கு வியாழக்கிழமை அரை நாள் விடுமுறை. மதியம் 12 மணிக்கு பள்ளி முடித்து அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்டுவிட்டு சினிமாவிற்கு கிளம்பி விடுவோம். ஆங்கிலப் பட பிரியர்களுக்கு 'ரத்னா தியேட்டர்' ஒரு வரப்பிரசாதம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படம் ரிலீசாகும்.  'என்டர் தி டிராகன், ஸ்டார் வார்ஸ், ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், பைவ் மேன் ஆர்மி..' என எண்ணற்ற படங்கள் பார்த்துள்ளோம். அப்போது இரண்டாம் உலகப் போரை முன்வைத்து நிறைய படங்கள் வெளிவந்தன. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மிகவும் பிரபலம். இப்படியாக ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, எங்கள் ஜெயில் கட்டையில் சாய்ந்துக் கொண்டு, அப்படக் கதையை மாணவர்களிடம், வாயால் பின்னணி இசை அமைத்து, அப்படியே விளக்கிக் கூறுவேன். சுற்றி நின்று சக மாணவர்கள் ரசித்தபடியே கேட்பார்கள். மனதில் அப்படியொரு குதூகலம் பிறக்கும். பள்ளிக்கூட மணி ஒலித்தவுடன் ஆங்கிலப் படத்தில் போடுவது போல 'இன்டர்வெல்', 'இன்டர்மிஷன்' என்று சத்தமாக கத்திவிட்டு வகுப்பிற்குச் சென்று விடுவோம். பிறகு தொடர்வோம். இப்படியாக முழுக் கதையையும் கூறி முடிப்பேன்.

இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லலாம் எங்கள் பள்ளியைப் பற்றி. அப்படி எங்கள் உணர்வோடு கலந்த ஜெயில் அது. அந்த ஜெயிலை ரசித்த நான், பின்னாளில் தமிழகம், புதுச்சேரி என மத்திய சிறைகளில் வதைபடுவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு ஜெயில் மகிழ்ச்சி, ஒரு சிறை துன்பம்.  

Thursday, June 27, 2013

மறைந்த மணிவண்ணன் நினைவாக...

விடியல் சிவா வீட்டில் மணிவண்ணன் அவர்களை முதன் முதலாக நேரில் சந்தித்தேன். விடியல் பதிப்பகம் மட்டுமல்ல வேறெந்த பதிப்பகம் வெளியிடும் நல்ல தமிழ்ப்  புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. அதோடு மட்டுமல்லாமல் அதுபற்றி நீண்ட நேரம் விவாதிப்பார். தீவிரமாக செயல்பட்ட மார்க்சிய-லெனினிய இயக்கம் ஒன்றில் கோவை மாவட்டப்  பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது முக்கியமான ஒன்று. திரைத்துறையில் அவர் சாதித்தவை என்பது ஒருபுறம் என்றாலும், ஈழத்தமிழர் சிக்கலில் அவர் காட்டிய ஆர்வம், அதற்காக அவர் உழைத்தவை என்றும் மறக்கக்கூடியவை அல்ல.

சீமான் புதுச்சேரி சிறையில் இருந்த போது அவரை சந்திக்க பாரதிராஜா, மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் வந்த போது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் சிறை நிர்வாகம் சீமானை சந்திக்க வருபவர்பவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த போது என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. நான் உள்ளிட்ட புதுச்சேரி இயக்க நண்பர்கள் சிறைத்துறை ஐ.ஜி.யை சந்தித்து இப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். அப்போது ராம் இன்டர்நேஷனல் தங்கும் விடுதியில் சந்தித்து மூன்று மணிநேரம் உரையாடினோம்.

பாரதிராஜாவுடன் அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் விடுபட்ட சில விஷயங்களை எடுத்துக் கூறினார். அப்போது 'காஷ்மீர் எல்லாம் சென்று வந்தீர்கள், ஏன் ஈழத்திற்குச் செல்லவில்லை' என்று கேள்வி எழுப்பினார். அவர் நாங்கள் ஈழப் பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற அர்த்தத்தில் அப்படி பேசினார். நான் அமைதியாக அவருக்கு விளக்கம் அளித்தேன்.

'இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீருக்கு சென்ற போது 3 நாட்கள் வீட்டு காவலில் இராணுவ பாதுகாப்பில் வைக்கப்பட்டோம். பின்னர் விடுவிக்கப்பட்டு காஷ்மீர் பகுதிகளுக்குச் சென்று வந்து அறிக்கை வெளியிட்டோம். ஆனால் ஈழத்தின் நிலைமை அப்படியில்லை. அங்கு சென்று வர முடியாத சூழல் உள்ளது. அங்கு சென்று வருவதில் உயிருக்கு ஆபத்துள்ளது'  என்று கூறினேன். அவர் புரிந்துக் கொண்டார். பின்னர் அவர்களுடன் மதிய உணவு உண்டேன். அவரின் திரைத்துறை பிரபலத்தைத் தாண்டி அவர் ஒரு இயக்கவாதி போன்று நடத்துக் கொண்டது என்னை மிகவும் கவர்ந்தது.

திரைத்துறையில் எடுத்துக் கொண்டால் 80களில் வெளிவந்த பாரதிராஜாவின் ''அலைகள் ஓய்வதில்லை”  போன்ற படங்கள் அப்போது விடலைப் பையன்களை உலுக்கிய படங்கள். நானும் அதிலிருந்து தப்பவில்லை. இளம் பெண்கள் தாவணி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் குட்டைப் பாவாடை, மேல் சட்டை போட்டுக் கொண்டு ராதா காட்சி அளித்ததையும்,  'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...'  பாடல் காட்சியில் தாமரைக் குளத்தில் அந்த இளசுகளின் காமம் நிறைந்த காதலையும்  அப்பருவத்தில் ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த படத்திற்கு மணிவண்ணன் வசனம் எழுதினார் என்பது இப்போதுதான் தெரிந்துக் கொண்டேன்.

அவர் திரைத்துறையில் சாதித்தவை ஏராளம். வசனகர்த்தா எனத் தொடங்கி கதையாசிரியர், இயக்குநர், குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் என வலம் வந்தவர். இயக்குநர்கள் காமெடியன்களாக வந்ததற்கு இவர் முன்னுதாரணம் எனலாம். இந்த வரிசையில் ஆர்.சுந்தரராஜன், மனோ பாலா என பலரையும் கூற முடியும். 'அமைதிப்படை'  அவரது அரசியல் நையாண்டியின் உச்சகட்டம். பலமுறை எண்ணி ரசித்த படமது. திரைத்துறையில் அரசியல் ரீதியாக செயல்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்.

58 வயதான அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். உடலைப் பேணாதது அவரைக் கொண்டு சென்றுவிட்டது. திரைத்துறையில் வேறெவருக்கும் கிடைக்காத பெருமை இவருக்குக் கிடைத்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் அமைப்பினர் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். அது அவர் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்குக் கிடைத்த அங்கீகாரம்.        

Saturday, June 22, 2013

உலக இசை தினம்: துயரங்களால் வெளிப்படும் இசை!

நேற்று 'உலக இசை தினம்' என்பதைப் புதிதாக இந்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். முகநூல் நண்பர்கள் பலரும் இதுகுறித்து பதிவிட்டிருந்தனர். எனக்கு இசைப் பற்றி ஓரளவுக்கு பரிச்சயம் இருந்தாலும் அதுபற்றி எதுவும் எழுதியதில்லை. நினைத்தாலே மனதை வருத்தப்பட வைக்கும் சிறைக் கைதிகள் பாடும் பாடல்கள் குறித்து நினைத்துக் கொண்டிருந்தேன். சிறையில் ஒவ்வொரு கணமும் துயரமாக நகரும். மாலை 6 மணி முதல் இரவுப் படுத்து உறங்கும் வரையிலான நேரம் நகர்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வெளியில் சுதந்திரமாக திரிந்த நினைவுகள் துவங்கி அனைத்தும் வந்து மனதை அழுத்தும். கதவடைப்பு முடிந்து இருட்டு படரும் நேரத்தில் ஒவ்வொரு பிளாக் மற்றும் செல்களிலிருந்தும் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும். கைதிகள் தங்களுக்குத் தெரிந்த திரைப்பட பாடல்களைப் பாடுவர். பல சந்தர்ப்பங்களில் அவர்களது துயரங்கள் வெளிப்படும் வகையில் பாடல்கள் ஒத்துப் போவதும் உண்டு. நான் மதுரை சிறையில் இருந்த போது, நாங்களும் இவ்வாறு பாடுவது வழக்கம். கொள்கைப் பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அரங்கேறும். விரைப்பான கொள்கைகளைத் தாண்டி அனைவரது மனமும் கரையும். அந்த தருணத்தில் மனித மனம் எவ்வளவு நெகிழ்வானது என்பது வெளிப்படுத்தும். அன்று சிறையில் இருந்தவர்களில் தோழர்கள் பொழிலன், இளங்கோ ஆகியோர் இன்றும் சிறையில் உள்ளனர். இவர்களது துயரங்கள் மறைய அருகிலிருந்து யார் பாடுவார்கள் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. துயரத்தில் உழலும் மனிதருக்கு இசை அருமருந்தாவது நமக்கு கிடைத்த வரம்.

Saturday, May 11, 2013

அ. மார்க்ஸ் போன்றவர்கள் மார்க்சிய - லெனினிய இயக்கத்தை ஒழித்தனரா?


அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்களால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் வளர்க்கப்பட்டதாகவும், அதனால் வட மாவட்டங்களில் மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் இல்லாமல் போனதாகவும் சிலர் எழுதி வருகின்றனர். இணையத்தில் சில பார்ப்பன நண்பர்கள் இக்கருத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர் என்பது தனிக்கதை.

ஒரு இயக்கம் (அது சாதி அடிப்படையில் இருந்தாலும்) உருவாவதற்கு சமூக காரணிகள் அவசியம். புற, அகச் சூழல் தான் ஒரு இயக்கத்தை வளர்க்கும். மார்க்சியம் படித்து இயக்கம் கண்டதாக கூறுபவர்கள் இவ்வாறு எழுதுவது அபத்தமான ஒன்று. ஒரு சிலரால் ஆழ்ந்த தத்துவ பலம் பொருந்திய ஒரு இயக்கத்தை ஒழித்துக்கட்ட முடியுமென்றால் அந்த இயக்கம் இருந்து என்ன பயன் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தார்கள்.  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த கட்சியும், அமைப்பும் முன் வரவில்லை. அந்த சமயத்தில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் கண்டு, 1987-ல் இடஒதுக்கீட்டிற்காக அரசை நிலைகுலைய செய்யும் அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தி, அதன் விளைவாக வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. அதையும் தாண்டி வன்னியர்கள் ஒரு சக்தி என்பதையும் நிரூபித்து அது அவர்களின் அரசியல் அதிகாரத்திற்கும் வழிவகுத்தது. இடஒதுக்கீடு குறித்து மார்க்சிய – லெனினிய இயக்கங்களின் நிலை அன்றைக்கு பார்ப்பனிய சக்திகளின் நிலைப்பாட்டை ஒத்தே இருந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

சாதிய, தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்ற தலித்துகளின் நியாயமான வேட்கைக்கு யாரும் சரியான தீர்வைச் சொல்லவில்லை. அதற்காக முழு மூச்சில் களம் காணவில்லை. இந்த அதிருப்தி ஒருபுறமிருந்தாலும், அம்பேத்கர் நூற்றாண்டு ஏற்படுத்திய எழுச்சியும் தலித்துகளை விழிப்படைய செய்தது. இதனால், தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணாசாமி போன்றவர்கள் தலைமையில் தலித் இயக்கம் எழுச்சி கொண்டது. தலித்துகள் குறிப்பாக அரசியல் தளத்தில் விழிப்படைந்தனர். சகல மட்டங்களும் தங்களுக்கான பங்கைக் கோரினர்.

இந்த இரு சமூகங்களும் எழுச்சி கொண்டதன் பின்னணி குறித்தோ அல்லது அதன் தேவை எழுந்த வரலாற்று காரணிகள் பற்றியோ எந்த மார்க்சிய -  லெனினிய இயக்கங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இதுவரையில் ஆய்வு செய்யவில்லை. ஆனால், இந்த எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

1984-ல் தோழர் தமிழரசன் மீன்சுருட்டியில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஒரு அறிக்கையை முன் வைத்தார். அதில் சாதி ஒழிப்புக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். வர்க்கம் – சாதி குறித்து அன்றைய அளவில் ஆழமாக ஆய்வு செய்திருந்தார். அம்பேத்கர் நூல்கள் போதிய அளவில் தமிழில் கிடைக்கப் பெறாத அந்த நாட்களிலேயே அந்த அறிக்கையில் அம்பேத்கர் மேற்கோள்களைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்று அ.மார்க்ஸ், கல்யாணி மீது பாயும் மார்க்சிய – லெனினிய தோழர்கள் அந்த அறிக்கையை நிராகரித்தோடு, தோழர் தமிழரசன் போன்றவர்களை அப்போது தூற்றினர்.

ரசிய, சீன வீழ்ச்சி, அது உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாபெரும் விவாதங்கள் நடந்தன. தமிழகத்திலும் இதுபற்றி நிறைய விவாதங்கள் நடந்தன. குறிப்பாக இன்று எளிதாக குற்றம்சுமத்தப்படும் அ.மார்க்ஸ் நிறைய எழுதினார். அவர் கருத்துக்கள் மீது சூடான விவாதங்கள் நடந்து, அவை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிடப்பட்டன. அரசைக் கைப்பற்றினால் மட்டும் போதாது சிவில் சமூகத்தின் கருத்து மிக மிக அவசியம் என்றெல்லாம் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களைத் தாண்டி சார்த்தர், கிராம்சி, அல்தூசர் ஆகியோரின் புதிய சிந்தனைப் போக்குகள் வெளிச்சம் பெற்றன. பெரியார் மீதான புதிய வாசிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தச்சூழலில் அடையாள அரசியல் உலகமெங்கும் புத்துயர்ப்பு பெற்றது. அதன் அங்கமாக தமிழகத்திலும் இதுபோன்ற தலித், வன்னியர் அமைப்புகள் முன்னிலைப் பெற்றன.

இதுபற்றி எல்லாம் எந்த தத்துவ விவாதமின்றி மிக எளிதாக ஒரு சிலரைக் குற்றம் சுமத்தி தங்கள் பொறுப்பிலிருந்து கழன்றுக் கொள்ளும் வேலையை மார்க்சிய – லெனினிய தோழர்கள் செய்வது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். எந்த வளர்சிக்கும் பயன் தராது.

உலகைக் குலுக்கிய மார்க்சிய – லெனினியம் – மாவோவியம் இன்று நிறைய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து மார்க்சிய – லெனினிய தோழர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. அரபு எழுச்சி, வால் ஸ்டிரீட் போராட்டம் ஆகியவை எந்த கட்சி, அமைப்பின் தலைமையிலும், எந்த தத்துவ பின்னணி இன்றியும் நடந்ததை நாம் எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம். தமிழகத்திலும் மூன்று தமிழர் தூக்குத் தண்டனை, முல்லை - பெரியாறு சிக்கல் துவங்கி இன்றைய மாணவர் எழுச்சி வரை தன்னெழுச்சியாக நடந்ததே? இதன் பின்னணியில் நாங்கள் இருந்தோம் என்று சிலர் சொல்லிக் கொள்ளலாம். அனால், அந்தப் போராட்டங்கள் யார் தலைமை இன்றியும், தத்துவ பின்புலமும் இல்லாமலும்தானே நடந்தது.  உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று இன்று தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் என்ற குரல்கூட ஒலிக்கவில்லையே ஏன்?

பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லாமல் இல்லை. தமிழகத்தில் பாமக சாதி வெறியை கண்டித்து இயங்குவதில் அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது உங்கள் கண்ணிற்குப்பட வில்லையா? வரலாற்றில் மார்க்சிய – லெனினிய இயக்கங்கள் கோட்டை விட்டதை மிக எளிதாக ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை.

நிலைமை இப்படியிருக்க அ.மார்க்ஸ், கல்யாணி போன்றவர்கள் ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க முடியும், ஒரு இயக்கத்தை ஒழித்துக் கட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய “ஜோக்”. "கீற்று" போன்ற இணைய தளங்கள் இதுபோன்ற ஜோக்குகளை நம்பியே இருப்பது அதைவிட ஜோக்கானது.

மார்க்சிய – லெனினிய தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணமிது.  

Thursday, February 14, 2013

வினோதினி: சில நினைவுகள்


பிப்ரவரி 14, உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தான் ஒரு ஆணின் வக்கிர புத்திக்குப் பலியான வினோதினி உடல் எரிக்கப்பட்டது. இன்றோடு அவருக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும் அவரை மறக்கக்கூடும். அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது பெற்றோர் நிலைமையை எண்ணிப் பார்த்தால் மனது பதறுகிறது. காற்றில் கலந்து கரைந்துக் கொண்டிருக்கிறது வினோதினியின் நினைவுகள்.

நவம்பர் 14, வினோதினி மீது ஆசிட் வீசப்பட்ட நாள். மறுநாள் கரைக்காலை சேர்ந்த பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர் தகவல் கூறினார். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முழுத் தகவலும் கிடைக்கவில்லை. உடனடியாக அவர் படித்த காரைக்காலிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வரை தொடர்புக் கொண்டு கேட்டேன். அவர் தகவல் அனைத்தையும் கூறிவிட்டு, ‘நல்லப் பொண்ணு, நல்லா படிச்சு, வேலைக்குப் போச்சு, அதுக்கு இந்த நிலைமை வந்திருக்க கூடாது’ என்று கூறி வருத்தப்பட்டார். பின்னர் இணைய தளம் மூலம் அவரின் குடும்பத்தினரின் தொடர்புக் கிடைத்தது. இன்று வரை அவரது தந்தையிடம் நான் பேசவில்லை. பேசுவதையும் தவிர்த்தேன். தன் மகள் பற்றிய கனவுடன் இருந்த அவரது வாழ்வில் விழுந்த பலத்த அடி இது. அவரின் துயரம் என்னையும் வாட்டுமே என்ற அச்சம் தான் காரணம். அவரின் தாய் மாமன் ரமேஷிடம் தான் பேசுவேன். அவரும் அவ்வப்போது தகவல் கூறிக் கொண்டே இருப்பார்.

ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த பெண் வினோதினி, வயது 23. அவரது தந்தையார் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றினார். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், தங்களுக்கு இருந்த ஒரே சொத்தையும் விற்று வினோதினியை பொறியியல் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளனர். அவர் படித்து முடித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் ரூ. 12 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். படிப்பு முடிந்து மூன்று மாதத்திற்குள்ளேயே வேலை கிடைத்தது அக்குடும்பத்தினருக்கு சற்று சுமை குறையுமே என்ற மகிழ்ச்சி.

அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் சுரேஷ் என்பவர் ஒருதலையாக வினோதினியை காதலித்ததாக தெரிகிறது. அவர் ஒருநாள் வினோதியின் பெற்றொரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துவிடவே, அதுவும் வினோதினி தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்று சொல்லி விட்ட பின்னர் அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக எண்ணியுள்ளனர் அக்குடும்பத்தினர். ஆனால், இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

வினோதினி தீபாவளிக்கு ஊருக்கு சென்றுவிட்டு, சென்னை செல்ல பேருந்து ஏற சென்றபோது அந்த துயரச் சம்பவம் நடந்தது. தனக்கு கிடைக்காத வினோதினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணி, ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் முழுவதும் அடர்த்தியான ஆசிட் கொண்டு வந்து வினோதினி மீது வீசியுள்ளார் சுரேஷ். உடல் முழுவதும் வெந்துப் போய், துடியாய் துடித்துள்ளார் வினோதினி. உடன் சென்ற அவரது தந்தையார் ஜெயபாலன் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் செய்வதறியாது தவித்துள்ளனர். ஆசிட் வீசப்பட்டால் எப்படி முதலுதவி அளிக்க வேண்டுமென்பது பற்றிக்கூட தெரியாத அவர்கள் உடனே காரைக்கால் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் மாறி மாறி சிகிச்சை அளித்துள்ளனர்.

இத்தாக்குதலில் அவரது இரண்டு கண்களும் முற்றிலும் வெந்துப் போய் அவற்றை மருத்துவர்கள் அகற்றினர். உடல் காயத்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். பார்வைப் பறிபோய் காயம்பட்ட வலியுடன் சிகிச்சைப் பெற்ற வினோதினி எதிர்க்கொண்ட துயரம் கொடுமையானது. அவரது எதிர்க்காலம் குறித்து அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, வினோதினியின் பால் அக்கறைக் கொண்ட அனைவரும் கவலைப்பட்டனர்.

அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கின்றனர் என்றவுடன் புதுச்சேரி அரசை அனுகுவது என்று முடிவு செய்தோம். பொது இடத்தில் அதுவும் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் என்பதாலும், காவல்துறையின் அலட்சியமும் இச்சம்பவத்திற்குக் காரணம் என்பதாலும், இதற்கு அரசாங்கம் பொறுப்பு (Liability) என்பதால் அரசை அனுகுவது சரி என்று கருதினோம். நான், அ.மார்க்ஸ் ஆகியோர் அசாம் செல்ல முடிவு செய்து, அதற்கான பணிகளில் மூழ்கியிருந்த நேரம். வினோதினி மருத்துவச் செலவை அரசு ஏற்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரி அறிக்கை ஒன்றை 10.12.2012 அன்று வெளியிட்டேன். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் சத்தியவதி ஆகியோருக்கு மனு ஒன்றையும் அளித்துவிட்டு அசாம் கிளம்பினேன்.

அசாமில் இருந்து திரும்பியவுடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அதிகாரிகளை சந்தித்து வினோதினிக்கு உதவக் கோரினேன். முதல்வர் ரங்கசாமி ‘உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். குடும்பத்தினரிடம் ஒரு கடிதம் வாங்கித் தாருங்கள்’ என்று கூறினார். இத்தகவலை அவரது மாமா ரமேஷுக்கு தெரிவித்தேன். அவரும் உடனடியாக அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால், அவர் கடிதம் அனுப்ப காலதாமதம் ஆனவுடன், அவரை சற்று கடிந்துக் கொண்டேன். அவர் நிலைமையும் பரிதாபமானது. இணைய தளத்தில் அவரது செல்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்ததால் இரவு, பகல் என்று பாராமல் அவரை அழைத்துப் பலர் பேசியதும், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டதும் எவ்வளவு சிரமமானது என்பதை எண்ணிப் பார்த்தேன். பின்னர் மறுமுறை நான், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம், ராஜ்பவன் பாலா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தோம். அவரது அறைலிருந்தே ரமேஷை அழைத்துப் பேசி ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் பெற்று முதல்வரிடம் அளித்தோம். அவர் உடனடியாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிதி அளித்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வீர்ராகவன் என்னைத் தொடர்புக் கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அவர் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு தகவல் கூறினார். மத்திய அமைச்சர் நாராயணசாமி தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கினார். பின்னர் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கினார்.

இதுமட்டுமல்லாமல் இணைய தளம் வழியாக உலகம் முழுவதும் பலரும் கணிசமான தொகை அளித்து வினோதினி மருத்துவச் செலவுக்கு உதவினர். அவ்வப்போது அவர் உடல் நிலைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பேன். ஆனால், வினோதினி இறந்துப் போவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. யாரும் நினைக்கவில்லை.

பத்திரிகை, ஊடகத் துறை நண்பர்கள் செய்தி என்பதைத் தாண்டி வினோதினி உயிர் பிழைக்கப் பல வகையிலும் முயற்சி செய்தனர். தொடர்ந்து செய்தி வெளியிட்டு அவரது மருத்துவச் செலவுக்கு நிதி சேர காரணமாக இருந்தனர். இது ஒரு மனிதாபிமான உதவி என்பதைத் தாண்டி, தங்களின் கடமை என்று எண்ணிச் செய்தனர். எப்போதும் ஏதாவது தகவல் சொன்னால், அதை ஒரு செய்திப் போல கேட்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் வினோதினி இறந்துவிட்டார் என்றதும் மிகவும் வருத்தப்பட்டனர், அதிர்ச்சி அடைந்தனர்.

வினோதினி இறக்கக் கூடாது, அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம். அது நடைபெறாமல் போய்விட்டது. இன்று குற்றவாளிக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அவரது குடும்பத்தினர் ‘வினோதினி மீது ஆசிட் வீசி அவளது மரணத்திற்கு காரணமானவனுக்கு மரண தண்டனை வேண்டாம், அவன் மீது ஆசிட் வீசி, அவள் பட்ட துயரத்தை அவன் அனுபவிக்க வேன்டும்’ என்று ஆவேமாகக் கூறியுள்ளனர். விகடன் வெளியிட்டுள்ள வினோதினியின் விடியோ பேட்டியிலும் அவரும் அதையே வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்த கோபத்தை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால். இதற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை. காரைக்கால் காவல்துறை வழக்கைச் சரியாக நடத்தி குற்றமிழைத்தவருக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவத்திற்கு நம் சமூகம் காரணம் இல்லையா? பெண்கள் போகப் பொருளாக சித்தரிக்கப்படுவதும், அச்சு மற்றும் காட்சி ஊடகம், திரைப்படம் பெண்களைச் சித்தரிக்கும் போக்கும், பெண்களுக்குப் பாலியல் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லாததும், இன்ன பிற காரணங்களும் வினோதினி போன்ற பெண்களின் பலிக்குக் காரணமில்லையா? குற்றமிழைத்த ஒரு தனி மனிதனைத் தண்டித்துவிட்டால் போதுமா?

வினோதினியின் மரணத் துயரத்தின் ஊடாக இதுபோன்ற விஷயங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் மத்தியில் பெண்களை சமமாக பாவிக்க வேண்டுமென்ற கருத்தாக்கங்களை உருவாக்குவதும், பெண்களுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி பயிற்றுவிப்பதும் அவசியம். இதுபற்றி விவாதிக்க வேண்டிய தருணமிது.

இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருந்தோமானால், மீண்டும் நாம் வேறு பல வினோதினிகள் பலியாவதைச் சந்திக்க நேரிடும்.

Tuesday, February 12, 2013

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்


நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்.
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.

தொடக்க விழா

காலை 9.30 மணிக்கு

தலைமை:

திரு. வீர. முருகையன்
தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.


வாழ்த்துரை:

திரு. இரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.


நோக்க உரை:

திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

முன்னிலை:

பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.

திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம், புதுச்சேரி.

பொறியாளர் இரா. தேவதாசு
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

முகாமைத் தொடக்கி வைப்பவர்:

மாண்புமிகு திரு. வ. சபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு.

‘தமிழா’ தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:

மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.

பெறுதல்:

திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.


அமர்வு 1: காலை 10.30 முதல் 11.15 வரை

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு, தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)

திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை

தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.

திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.

காலை 11.30 முதல் 11.45 வரை

தேநீர் இடைவேளை

அமர்வு 3: காலை 11.45 முதல் 12.30வரை

வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…

முனைவர் தி. பரமேசுவரி

அமர்வு 4: பகல் 12.30முதல் 1.15 வரை

திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி

கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…

திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.

உணவு இடைவேளை 

பகல் 1.16 முதல் 2.00 வரை

அமர்வு 5: பிற்பகல் 2.00 முதல் 2.45வரை

திரு. கோ.சுகுமாரன்

தமிழில் மின்னஞ்சல், அரட்டை,

சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு

அமர்வு 6:பிற்பகல் 2.46முதல் 3.15 வரை

பேராசிரியர் நாக. இளங்கோ

தமிழில் மின்னூல் உருவாக்குதல்

அமர்வு 7:பிற்பகல் 3.15முதல் 4.00 வரை

கட்டற்ற மென்பொருட்கள் (open source software)

த. சீனிவாசன், - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.

அமர்வு 8: பிற்பகல் 4.00முதல் 4.15 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…

திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

தேநீர் இடைவேளை

பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை

நிறைவு விழா: மாலை 4.30 மணி

தலைமை:

திரு. எல்லை. சிவக்குமார் பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்

சான்றிதழ் வழங்கல்:

பேராசிரியர் பசுபதி

முனைவர் தி. பரமேஸ்வரி
செயலர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

நிறைவுரை:

திரு. அ.கு. சலீம்,
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்

தொடர்புக்கு:

இரா. சுகுமாரன்: 94431 05825, எல்லை. சிவக்குமார்:
பேராசிரியர் நாக. இளங்கோ:9943646563, கோ.சுகுமாரன்: 9894054640

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, ellai.sivakumar@gmail.com

இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/

Tuesday, January 29, 2013

புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து  தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்ச்சி நாள்: 17-02-2013 ஞாயிறு,  காலை 9.30 மணி முதல்... (காலை 9.15 மணிக்கு பதிவு தொடங்கப்படும்).

இடம்: மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம், 66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.

இந்த நிகழ்ச்சியில் தமிழா நிறுவனத்தின் குறுந்தகடு வெளியிடப்படும், இதனைத் தொடர்ந்து  தமிழ்க் கணினி தொடர்பாக கீழ்க்கண்டவைகள் பற்றிய  பரத்தீடு (Power point Presentation) விளக்கம் அளிக்கப்படும்.
  1. தமிழில் இயங்குதளம்: விண்டோசு மற்றும் லினக்சு (Ubuntu),
  2. தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
  3. கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
  4. கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற..
  5. தமிழில்  இணைய உலவிகள் ( Web Browsers)
  6. ஒருங்குகுறி பற்றிய விளக்கம்,
  7. தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்,
  8. தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
  9. வலைப்பதிவு செய்தல்: பிளாக், மற்றும் வேர்டு பிரசு,
  10. திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி உள்ளிட்டவைகளில் இணைப்பு அதன் பயன்பாடு,
  11. சமுக வலைத்தளங்களில் பதிவு செய்தல்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
  12. தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்.
  13. தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு தமிழ் மென்பொருட்கள்  அடங்கிய குறுந்தகடு, மற்றும் குறிபேடு, எழுதுகோல், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். காலை மற்றும் பிற்பகலில் தேநீர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எத்தனைபேர் வருவார்கள் திட்டமிட வசதியாக  இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய விரும்புகிறவர்கள் இந்த  பதிவுப் படிவத்தினை கிளிக் செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவுக் கட்டணமாக மாணவர்களுக்கு ரூ 50/- பணி செய்பவர்களுக்கு ரூ 100/- செலுத்த வேண்டும். இந்த பயிலரங்கில் பங்கேற்க இந்த படிவத்தின் பதிவு நிபந்தனைக்கு உட்டது. 
பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் வருகை தரவேண்டும். 9.15 முதல் 9.30 வரை பதிவு நேரமாகும். பதிவு நேரத்திற்கு பின் வருபவர்களின் இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
 

மேலும் விவரங்களுக்கு : இரா.சுகுமாரன் 9443105825, எல்லை.சிவக்குமார்.  9843177943 என்ற  தொலை பேசியில் தொடர்பு கொள்க.

Friday, January 25, 2013

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள்

விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

இந்தியாவில் இந்து பாசிசம் தலைத் தூங்கத் துவங்கிய காலத்திலும், அதன் பின்னர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் முஸ்லிம் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தின. அப்போது இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று போன முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதப் பாதையை தேர்வு செய்தனர்.  இதற்கு சர்வதேச அரசியலும் பின்புலமாக இருந்தது. அப்போதுதான் 'முஸ்லிம் தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழகத்திற்கு வந்தது. இவற்றை அரசுகள் எதிர்க்கொண்ட விதமும், அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றியும்  பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.

1997 கோவை கலவரம் நடந்து 19 முஸ்லிம்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் அவ்வளவு வீச்சாக இல்லை. அப்போதுதான் தமுமுக போன்ற அமைப்புகள் முற்றிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களை அணி திரட்டின. அதேபோல் பல அமைப்புகள் முன்னுக்கு வந்தன. இவை மிக வெளிப்படையாகவே தீவிரவாதத்தைக் கண்டித்தன. அதோடு மட்டுமல்லாது தற்போது இந்த அமைப்புகள் தேர்தல் அரசியலில் நேரடியாகவோ அல்லது ஆதரவு என்ற நிலையிலோ பங்கேற்கின்ற சூழலைக் காண முடிகிறது. தமுமுக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் அரசியலில் வெற்றியின் முதல் படியை எட்டியுள்ளது. இவை எல்லாம் முஸ்லிம் மக்கள் தீவீரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

சென்ற 2010ல் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்டது என்பதோடு, நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது தீர்ப்பே அல்ல கட்டப் பஞ்சாயத்து என்று சொன்னவர்களும் உண்டு. இத்தீர்ப்பை முஸ்லிம் அல்லாத சட்ட மற்றும் வரலாற்று அறிஞர்கள் என அறிவுஜீவிகள் சமூகம் முற்றிலும் நிராகரித்தது. அப்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகம், நீதித்துறை என அனைத்தின் மீதும் நம்பிக்கை மீண்டும் அற்றுப் போனது. அப்போதும்கூட இந்திய முஸ்லிம்கள் ஒரு சின்ன வன்முறையிலும் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப்போனால், வெளிப்படையாக கருத்துக்கூட கூறாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மெளனத்தின் மூலமே எதிர்க் கொண்டனர்.

இன்றைய அரசியல் சூழலை சற்று உற்று நோக்குவோம். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு, பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிபணிதல், வாரிசு அரசியல் என பல்வேறு பிரச்சனைகளில் செல்வாக்கை இழந்து வருகிறது. மாற்றாக எழ வேண்டிய பா.ஜ.க. தன் இந்துத்துவ கொள்கையால் அதன் மீதான வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், ஊழல், தலைமைப் போட்டி, மக்கள் பிரச்சனைகளில் கவனம் குவிக்காமை, மோடியின் அச்சுறுத்தல்,  உட்கட்சி பூசல் என தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. இச்சூழலில், காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. ஆட்சிக்குக் கொண்டு வர சில முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு ஊடக பின்புலமும் உள்ளது. அதனால்தான், காங்கிரஸ் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவற்றை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தான் முஸ்லிம் மக்களுக்கு என்றும் துணை நிற்பதாக காட்டுவதன் மூலம் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ‘மாலேகான், மெக்கா மசூதி’ உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் உள்ளதைச் சுட்டிகாட்டி ‘இந்து தீவிரவாதம்’ பற்றிக் கூறிய கருத்துக்கள் நாடெங்கும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோரவில்லை என்றால் பாராளுமன்றத்தையே நடத்த விடமாட்டோம் என பா.ஜ.க. அறிவித்ததோடு, இந்த குற்றச்சாட்டில் தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டுள்ளது.

இதுபோன்ற சூழலில்தான் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் சர்ச்சைக்குள் சிக்கித் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, அதன் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டி, அவர்கள் சொன்ன ஆலோசனைகள் அடிப்படையில் சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. இந்தப் படிப்பினையை கமல்ஹாசன் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இத்தடையை ஆதரிக்கும் யாரும் முன்வைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இத்தடையை எதிர்க்கும் நடுநிலையாளர்கள் கூட கமல்ஹாசனின் முஸ்லிம் எதிர்ப்பு போக்கை ஆதரிக்காதது சற்று ஆறுதல் அளிக்கிறது.

திரைப்படங்களைத் தணிக்கைச் செய்து சான்றளிக்கும் அதிகாரம் மத்திய அரசுத்தான் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியும், பிரகாஷ் ஜா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழக அரசு இத்திரைப்படத்தைத் தடை செய்ததை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறியுள்ளார். இன்றைய இந்து நாளிதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் தடை தவறு என்பதற்கு வழக்கமான தன் வாதங்களை முன்வைத்தாலும், பெரும்பாலும் நீதிமன்றங்கள் வழங்கிய பல்வேறு தீர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளது. என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் இந்து போன்ற செய்தித்தாள்களில் வரும் தகவல்களையும் கட்டுரைகளையும் உற்று நோக்குபவர்கள் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

ஆனால், ‘டேம் 999’ தடை குறித்து உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் வழங்கிய தீர்ப்பு இவ்வாதங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது எனலாம். ‘ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியைப் பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது என்றாலும், மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி தடையை நீக்க மறுத்துள்ளனர். இது ‘விஸ்வரூபம்’ தடைக்கான நியாயத்தை அளிக்கிறது. ஏனெனில், இப்படத்தைப் பார்த்த முஸ்லிம் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக இப்படத்தைத் திரையிட விட மாட்டோம் என்று கூறியுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் தலைவர்கள் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த குரல் என்பதை யாரும் மறுக்கவியலாது.

சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இப்படம் தடை செய்யப்பட்டதைப் பலரும் விமர்சிக்கின்றனர். இது முற்றிலும் உண்மை என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து சென்னையில் நடந்த முஸ்லிம்களின் போராட்டம் சற்றே அரசை அச்சுறுத்தி உள்ளது.  இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் சென்னை மாநகர காவல் ஆணையர் திரிபாதி அப்பொறுப்பில் இருந்து உடனடியாக மாற்றப்பட்டதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். அதோடுமட்டுமல்லாது, இப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தவுடனேயே தமிழக அரசு நேற்றைய முன்தினம் தமிழகம் எங்கும் காவல்துறையை ‘அலர்ட்’ செய்ததும், கிராம நிர்வாக அதிகாரிகளை அந்தந்த ஊர்களில் இருக்குமாறு பணித்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், இதுபோன்ற உணர்ச்சிபூர்வமானப் பிரச்சனைகள் எளிதில் போராட்டமாகப் பற்றி எரியும் வாய்ப்புள்ளதையும் புறந்தள்ள முடியாது.

மேலும், முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படம் எடுக்க முடியாது என்றாலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கருத்து கூறுவதன் மூலம் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பது என்பது சட்டப்படி குற்றமென்றாலும், அவ்வாறான சூழலை உருவாக்குவது ஒரு கலைஞனின் நோக்கமாக இருக்கக் கூடாது. இதை சமூக அக்கறையுடைய படைப்பாளிகள் எனக்கூறிக் கொள்பவர்கள் செய்ய துணியமாட்டார்கள்.

அதையும் தாண்டி, ஜெயலலிதாவின் அரசியல் இதில் உற்று நோக்கப்பட வேண்டியது. சென்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் அதிமுகவை ஆதரித்தன. முஸ்லிம் வாக்குகள் பெரும்பான்மையாக அதிமுக கூட்டணிக்கே விழுந்தது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளது நுட்பமான தேர்தல் அரசியல் தந்திரம். ஒருபுறம் மோடி பதவியேற்பில் கலந்துக் கொள்வதன் மூலம் இந்துத்துவ முகம், மறுபுறம் முஸ்லிம்கள் பிரச்சனைகளில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினர் ஆதரவு எனும் மற்றொரு முகம் என அழகாகக் காய் நகர்த்துகிறார் என்றே சொல்லலாம்.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நான் ஏற்கனவே சொன்னது போல், எதற்கும் தடை தீர்வல்ல என்ற போதிலும், கமலஹாசனின் முந்தைய கால இந்துத்துவ அரசியல், குடியரசு தினத்திற்கு முன்நாள் வெளியிடுவதன் மூலம் இந்துத்துவத்துடன் இயைந்த தேசப்பக்தி, முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ள பொதுப்புத்தி அரசியலை அறுவடை செய்தல் என எல்லாவற்றையும் காசாக்கும் யுத்தி இம்முறை தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி மிக அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

Thursday, January 24, 2013

சற்றே நிழல் சுகம் பெற ஒரு மரம்!


புதுச்சேரி நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதியில் வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அதனுள்ளேயே அனைத்து மகளிர் காவல் நிலையமும், அருகில் போக்குவரத்துக் காவல் நிலையமும் உள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி இது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிற்படி அருகே படர்ந்து நிழல் தரும் 'சக்கரை மரம்' ஒன்று நீண்ட காலமாக இருந்தது. துயரங்கள் பல சுமந்து, விடிவு தேடி வரும் மக்களுக்கு இம்மர நிழல் சற்று இளைப்பாற உதவும். எங்களைப் போன்ற இயக்கவாதிகளைச் சொல்லத் தேவையில்லை. கூட்டம் போடவும், போராட்டம் நடத்தவும், பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கவும் பலமுறை இங்குக் கூடுவோம். அப்போது இம்மரத்தின் நிழலையும், காய்த்துக் கிடக்கும் சக்கரைப் பழத்தையும் நாங்கள் சுவைக்கத் தவறுவதில்லை. சென்ற 'தானே' புயலில் இம்மரமும் மரணத்தைத் தழுவியது. பலமுறை அங்கு நின்ற போது மரமற்ற வெறுமையும், வெயிலின் தாக்கத்தையும் உணர முடிந்தது.

அங்கு ஒரு மரம் வைக்க வேண்டுமென நண்பர்கள் அஷ்ரப், பாரதி ஆகியோர் என்னிடம் கூறினர். பாரதி தன்னிடம் மரக்கன்றை பாதுகாக்கும் வலைக் கூண்டு உள்ளதெனவும், மரக்கன்று வாங்கி வந்தால் வைத்து விடலாம் என்றும் கூறினார். சென்ற ஜனவரி 1 அன்று மரக்கன்று வைக்க முடிவு செய்தோம். விடுமுறை என்பதால் எங்கும் மரக்கன்று கிடைக்கவில்லை. ஒரு வழியாக அலைந்து தேடிக் கண்டுபிடித்து அதே சக்கரை மரக்கன்று ஒன்றை வாங்கி வந்தோம்.

மதிய வேளையில் மரம் வைக்க பள்ளத்தைத் தோண்ட துவங்கியவுடன் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராமராஜ் அவர்கள் எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்போதும் பிரச்சனைக்காகவே வருபவர்கள் இன்று திடீரென பள்ளம் தோண்டிக் கொண்டிருகிறார்களே என்று. அங்கு மரம் ஒன்று வைக்கப் போகிறோம் என்றவுடன் எங்களைப் பாராட்டினார். அருகிலிருந்த போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகளும் அங்கு குழுமினர். காவல் கண்காணிப்பாளர் கையாலேயே மரக்கன்றை நட்டோம். வந்திருந்த அனைவரும் தண்ணீர் ஊற்றினோம். இனிப்பு பொட்டலம் ஒன்றைப் பிரிந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார் காவல் கண்காணிப்பாளர். எளிதாக முடிய வேண்டிய வேலை, ஒரு சிறப்பான விழா போன்று நடந்தேறியது. அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இவ்வளவு நாள் நாம் இதை யோசிக்கவில்லையே எனப் பேசியபடியே அனைவரும் கலைந்தார்கள்.

இப்போது அந்த மரம் நன்றாக துளிர் விட்டு தழைத்தோங்க துவங்கியுள்ளது. வாக்களித்தபடி தினமும் காலை, மாலை என கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்களும், மகளிர் காவல்நிலையத்தினரும் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். ஒரு சின்ன விஷயம்தான் இது. ஆனால், மனத்திற்கு எத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது பாருங்கள். தன் நிழலே தனக்குப் பயன்படாத போது, வெயிலில் காய்ந்து மற்றவர்களுக்கு நிழலும் தரும் மரமென்ற உயிரும் நம் சொந்த பந்தம் தான்.

Saturday, January 19, 2013

மாணவர்களுக்குத் தாராளமாக உதவ வேண்டுகோள்!


அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும் இவை மாணவர்களுக்கு முழுமையானதாக இல்லை. இதனைக் கணக்கில் கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு உதவ 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் ஒரு கிராமப்புற பள்ளிக்கு முதலில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம். அந்தப் பள்ளிக்குத் தேவைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தோம். அவை: 1.) ஒரு எல்.சி.டி. புரொஜெக்டர், 2) 150 மாணவர்களுக்கு (6, 7, 8ஆம் வகுப்பு) காலணி (சேன்டக்ஸ்) 3) 800 மாணவர்களுக்கு முழுநிளச் சுவடி.

இதற்கு முகநூல் நண்பர்களின் உதவியை பெரிதும் எதிர்ப் பார்க்கின்றோம். தங்களால் முடிந்த நிதி உதவியினை காலத்தே அளித்து உதவ வேண்டுகிறோம். நிதி அளிப்பவர்களுக்கு முறையே வரவு செலவு கணக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கென தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' எங்கும் நிதியுதவி பெற்று செயல்படும் அமைப்பு அல்ல என்பதும், முழுக்க முழுக்க மக்களின் உதவிகளை மட்டுமே நம்பி செயல்படுகிற அமைப்பு என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

நிதி உதவி அளிக்க விரும்புவோர் தொடர்புக் கொள்ள:

கோ. சுகுமாரன், செயலாளர்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.

பேச: 98940 54640
மின்னஞ்சல்: sugumaran.ko@gmail.com