Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Saturday, October 11, 2025

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2025) விடுத்துள்ள அறிக்கை:

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கைக் கோரி போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர்கள் இருவர் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் குற்றமிழைத்தப் பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்ற 09.10.2025 அன்று பல்கலைக்கழக மாணவ மாணவியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்க வேண்டுமென நள்ளிரவு வரை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது காலாப்பட்டு போலீசாரும் கமாண்டோ படையினரும் போராடிய மாணவ மாணவியர் மீது தடியடி நடத்தி உள்ளனர். ஒரு போலீஸ்காரர் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த விடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும், 6 மாணவிகள், 18 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர், அனைவரையும் பிணையில் வெளியே விட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இதனால், மாணவ மாணவியர் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவ மாணவியர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்குப் புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும். மாணவ மாணவியர் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்பி உள்ளோம்.

Friday, October 22, 2010

கல்வி உதவித் தொகை கேட்டுப் போராடிய பாராமெடிக்கல் மாணவர்கள் 415 பேர் கைது!

போராட்டத்தில் பாராமெடிக்கல் மாணவர்கள்..
புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 415 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராமெடிக்கல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து, கடந்த 18.10.2010 அன்று காலை 11 மணியளவில், மாணவர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது பெரியக்கடை போலீசார் முற்றுகையிட முயன்ற 115 மாணவிகள் உள்பட 415 மாணவர்களை கைது செய்தனர்.

முன்னதாக காமராஜர் சிலை அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன் தலைமைத் தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். விடுதலை வேங்கைகள் அமைப்பின் பொருளாளர் மோகன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் அஷ்ரப், மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் வை.பாலா,பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, July 03, 2010

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமாரின் மரணம் அவரை அறிந்த எல்லொருக்கும் மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. மாணவர் போரட்டம் குறித்த உண்மையறியும் குழுவில் பங்கேற்ற வகையில் அவரை இரண்டு முறை பார்த்துள்ளேன். போராடுகிற மாணவர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்தபொழுது அவர் இல்லை. அடுத்த நாள் நான் மற்றும் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன், கவிஞர் குட்டி ரேவதி, அயன்புரம் ராசேந்திரன், வழகுரைஞர் முருகன், பிரேமா, ரேவதி முதலானோர் கல்லூரி வளாகத்திற்குச் சென்ற போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அடுத்தநாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் வந்திருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் கண்களில் ஒரு பதற்றத்தையும் உடலில் ஒரு படபடப்பையும் கண்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தான் காரணமாகிப் போனோமோ என்கிற குற்ற உணர்வும், உலகச் செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தும் தன் லட்சியம் கைகூடாமலேயே போய்விடுமோ என்கிற பரிதவிப்பும் கூடவே அவர் முகத்தில் அப்பட்டமாக வெளளிப்பட்டது.

 ”உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத்தான் திரும்பப் பெற முடியாது என்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள்” என்றேன். “ இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான வழக்கு. எளிதாகச் சமாளித்து விடலாம். ஒண்ணும் அலட்டிக்காதீங்க.” என்று சுகுமாரனும் ஆறுதல் சொன்னார். சசிகுமாரின் கண்களில் தெரிந்த பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம், ஒரு ஆசிரியருக்குள்ள எந்தத் தகுதியும் இல்லாத பொறுப்பு முதல்வர் மனோகரன், கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் இறையன்பு அய்.ஏ.எஸ் ஆகியோர்தான் தம் தவறுகளை ஏற்க மறுத்தார்கள், மறுக்கிறார்கள். இந்த முரணை எங்கள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருந்தோம். இத்தனைக்கும் மாணவர்கள் செய்த தவறுகள் பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் நம் பிள்ளைகள் செய்யக் கூடியவைதான். ஆனால் நிர்வாகம் செய்த தவறுகளோ அதிகாரத்துவத்தின் அத்தனை குரூரங்களையும் உள்ளடக்கியவை. பொறுப்பு முதல்வரின் கார் கண்ணாடியை சசிகுமார் உடைக்க நேர்ந்த நிகழ்வுக்கு முந்தைய சம்பவத் தொடர்ச்சியை எங்கள் அறிக்கையில் பாருங்கள். சாதனை புரியும் துடிப்புடன் இருந்த ஒரு இளம் கலைஞன்  எப்படி அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது விளங்கும்.

நான் 37 ஆண்டு காலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். இதில் கடைசிப் பத்தாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் கிராமப்புற கல்லூரிகளில்தான் ஆசிரியராக இருந்தேன். நமது கிராமப்புற கல்லூரிகள் என்பன முழுக்க முழுக்க கிராமங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். சாதி, ஊர் என கிராமங்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் அங்கிருக்கும். இதைவிடப் பெரிய கலவரங்கள், சண்டைகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். இரண்டாம் முறை நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பணி செய்தபோது ஒரு மாணவன் முதல்வரை கத்தியால் குத்திவிட்டான். ஆசிரியருடைய ’பைக்கை’ உடைப்பது, கார் கண்ணாடியை உடைப்பது எனப் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படியாகச் சேதம் விளைவிப்பது, சிறு கலவரங்கள் முதலான நிகழ்வுகளை நாங்கள் எப்படி எதிர் கொள்வோம் என்றால், அந்த மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்வோம்; பொதுவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை வைத்து ஒரு ‘என்கொயரி கமிஷன்’ அமைப்போம்; பெரிய பிரச்ச்சினையாக இருந்து கல்லூரி மூடி இருந்தால் ஒரு வாரத்தில் திறப்போம். ரொம்பப் பெரிய பிரச்சினையாக இருந்தால் படிப்படியாக ஏழெட்டு நாட்களில் திறப்போம். மாணவன் செய்த தவறின் அளவைப் பொறுத்து ஒரு சிறிய அபராதம் விதித்து, தேவையானால் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, அல்லது பெற்றோரில் ஒருவரை அழைத்து எச்சரித்து மாணவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்துவிடும். பெரிய பிரச்சினைகளின் போது கல்லூரி கவுன்சில் அல்லது ஆசிரியர் கூட்டம் போட்டு விவாதிப்போம்.

ஆனால் இங்கு என்ன நடந்தது? உடனடியாக முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்ததுடன் சம்பந்தமில்லாத இரு மாணவர்கள்மீதும் (இருவரும் தலித்துகள்) புகார் கொடுக்கப்பட்டது. முதல்வருக்கு அவ்விரு மாணவர்கள்மீது முன் விரோதம் உண்டு. சாதி உணர்வும் இதில் ஒரு பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த  மாணவர்களில் ஒருவரும் அவரது சகோதரரான இன்னொரு மாணவரும் முதல்வருக்கு வேண்டிய, அவரது சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிற ஒரு போலீஸ் அதிகாரியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். சம்பந்தமில்லாத அவ்விரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் சகோதரரிடம் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டது. சசிகுமார் உட்பட மூன்று மாணவர்களும் பிணை பெற்று வெளியே வர வேண்டியதாயிற்று. இன்னிலையில்தான் சுமார் ஒரு மாதம் கழித்து, சுற்றுலா சென்ற மாணவர்களெல்லாம் திரும்பி வந்தபின் மாணவர்கள் வேலை நிறுத்தம், உள்ளிருப்புப்போராட்டம் முதலியவற்றை தொடங்கினர்.

தமிழகத்திலுள்ள இரு நுண்கலைக் கல்லூரிகளும் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் வருகின்றன. இத்துறையின் இயக்குனர் இறையன்பு ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியான போதிலும் ஒரு எழுத்தாளர், சமூக அக்கறை உள்ளவர் என்கிற வகையில் மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி விரைவாகத் தீர்ப்பார் என்றுதான் நாங்கள் நம்பினோம். எங்கள் அறிக்கை பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் தொட்டு அமைந்தது. ஒரளவு முழுமையாகவும் இருந்தது. நண்பர் எனச் சொல்லத்ததக்க அளவிற்கு நெருக்கமில்லையாயினும் இறையன்புவை அறிவேன். பரஸ்பரம் இருவருக்கும் மற்றவர்மீது மரியாதை உண்டு. எங்கள் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்ததோடு இது தொடர்பாகக் குறைந்தது நான்கு முறையாவது அவரோடு பேச நேரிட்டது. இரண்டு விஷயங்களை நான் அவரிடம் வற்புறுத்தினேன். சசிகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்; கல்லூரியை விரைவாகத் திறவுங்கள் என்பவைதான் அவை. பொறுப்பு முதல்வர் மனோகரன் மீதான விசாரணை உள்ளிட்ட பிற பரிந்துரைகளை விரிவாக அறிக்கையில் சொல்லியிருந்தோம்.

என்னுடைய இரு வேண்டுகோளுக்கும் சாதகமான பதில் இறையன்புவிடமிருந்து வரவில்லை. வழக்குகளை திரும்பப் பெறுகிற அம்சத்தில், குறிப்பாக சசிகுமார்மீதான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய இயலாது என்கிற ரீதியில் பதில் இருந்தது. கல்லூரியைத் திறப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. கல்லூரியைத் திறந்தால் மீண்டும் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்கிற அச்சம் அவருக்கிருந்தது. ஆனால் நிலைமை அதுவல்ல. மாணவர்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்பினார்கள். கல்லூரி மூடிக்கிடப்பதை எந்த மாணவர்களும் விரும்பமாட்டார்கள். அப்படியே வேலை நிறுத்தம் செய்தால்தான் என்ன, கல்லூரியை மறுபடி சிறிது காலம் மூடினால் போச்சு. இப்படியான பிரச்சினைக்கெல்லாம் மூன்று மாத காலமெல்லாம் கல்லூரியை மூடி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப அநியாயம். என்னுடய ஆசிரிய அனுபவத்தில் இப்படி நான் அறிந்ததில்லை. கல்லூரியைப் பத்து நாளைக்குள் திறந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்கப் போவதில்லை. நிலைமை சுமுகமாகியிருந்திருக்கும். சசிக்குமாரை இப்படி அநியயமாக இழந்திருக்கமாட்டோம்.

இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக (bureaucrat), அதிகாரத்துவ அணுகல் முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப் பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் ‘பர்சனலாக’ எடுத்துக்கொண்டு கோபப்பட்டார். (மாணவர்கள் அவரது சாதி குறித்து தவறாக ஒரு அவதூறை சொன்னது உண்மைதான்.) போராட்டங்களின்போது ஒருமையில் பேசுவது, ஒழியச் சாபமிடுவது. கொடும்பாவி கொளுத்துவது எல்லாம் வழக்கம்தான். முதலமைச்சர், பிரதமர் யாரும் இதற்குத் தப்புவதில்லை. போராட்டம் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும். ஒழியச் சொன்னவர்களுக்கே சால்வை போர்த்தி நன்றி தெரிவிப்பதும் உண்டு. அரசியல்வாதிகளால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகாரி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள இயலாமற் போனதில் வியப்பில்லை.

கல்லூரிக்குள் நடக்கிற பிரச்சினைகளை குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையைப் போல் கையாளவேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒரு தந்தை எப்படி அணுகுவாரோ அப்படி நிர்வாகம் அணுக வேண்டும். எந்தத் தந்தையாவது கண்ணாடியை உடைத்ததற்காகப் போலீசில் புகார் கொடுப்பாரா? கண்ணாடியின் விலை பத்தாயிரம் ரூபாய் இருக்குமா? ஆனால் இன்று கொடுத்த விலையின் மதிப்பு…..? இரங்கல் கூட்டத்தில் சசிகுமாரின் அன்னை அன்று அழுத காட்சி இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்தத் தாயின் கண்ணீருக்கு அதிகாரம் என்ன பதிலைச் சொல்லப்போகிறது? நாம்தான் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். சசிகுமாரின் மரணத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கும் ஒரு பங்கிருக்கத்தான் செய்கிறது. அவரின் பதட்டம், கலைஞனுக்கெ உரித்தான அங்கீகார ஏக்கம், அவருக்கிருந்த குற்ற உணர்வு இவற்றை நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க தனது கனவு நனவாகப் போவதில்லை என்கிற உண்மை அவருக்கு உறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாம் அவரைத் தனியே விட்டிருக்கக் கூடாது. போராட்டம் என்பது வெறுமனே போராடுவது மட்டுமல்ல. ’சாலிடாரிட்டி’ அதன் பிரிக்க இயலாத அங்கம். போராட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாம் தனிமைப்படவில்லை என்பதை உணர்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏதோ ஒரு வகையில் சசிகுமாருக்கு நாம்  அளிக்கத் தவறினோமா?

நுண் கலைக் கல்லூரிகள் இரண்டும் ஆணி வேர் முதல் உச்சங் கொழுந்து வரை அழுகிக் கிடக்கிறது. 150 ஆண்டு காலப் பழமை மிகு இந் நிறுவனம் ஒழுங்கு செய்யப்பட்டுத் இந்திய அளவிலுள்ள இதர நுண்கலைக் கல்வி நிறுவனங்களைப் போல தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் அறிக்கையில் இந்த நோக்கிலும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.

சசிகுமாரின் நினைவாக, அவரது இறுதி லட்சியமாக இருந்த திருக்குறளைச் சுடுமண் சிற்பங்களக வடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முனைவோம்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!

Wednesday, November 26, 2008

சட்டக் கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் ...மேலும்

Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Wednesday, November 12, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 ஆயிரம் மாணவர்கள் பேரணி - இரத்தக் கைரேகையிட்டு ஆளுநரிடம் மனு!






ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 04-11-2008 அன்று, புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று இரத்தக் கைரேகையிட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு இராணுவ உதவி உள்ளிட்ட எந்த உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது, பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்குச் சென்று மாணவர்களை ஒன்று திரட்டிய புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் பிரமாண்ட பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஷ் (எ) சாமிநாதன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் தி.க. அமைப்பாளர் தந்தைபிரியன், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் முத்து, செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசுக் கல்லூரி, தவளக்குப்பம் தாகூர் இணைப்பு கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேநிலைப் பள்ளி, வ.உ.சி அரசு மேநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காலை 10 மணிக்கு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாணவர்களைத் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க 10 மாணவ, மாணவியரை ராஜ்நிவாசுக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். மனுவில் மாணவ, மாணவியர் இரத்த கைரேகையிட்டு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரிடம் அளித்தனர்.

மனுவில் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா தலையிட்டு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும், மருந்துகள், உணவு பொருட்களைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய கூடாது, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரணியில் புதுச்சேரியின் கிராம பகுதிகளிலிருந்து டெம்போ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பிரமாண்ட பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் நடத்திய பேரணியால் புதுச்சேரி குலுங்கியது.