Sunday, November 27, 2011

ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியதற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கியதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஊழலுக்கு வெளிப்படையாக துணைப்போய் இருப்பதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

2009-ல் சுனாமி மறுவாழ்வு திட்ட அதிகாரியாக இருந்த போது ராகேஷ் சந்திரா 1440 வீடுகள் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்ததாக கூறி சி.பி.ஐ. அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அப்போது அவரை கலெக்டர் பதவியில் இருந்து விடுவித்த அரசு அவரை காத்திருப்போர் பட்டியல் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந் தேதியன்று அவருக்கு கூட்டுறவு, குடிமைப் பொருள் வழங்கல், கலைப் பண்பாடு ஆகிய முக்கிய துறைகளை ஒதுக்கி அரசு ஆணைப் பிறப்பித்தது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மேத்யூ சாமுவேல், ராகேஷ் சந்திரா, தேவநீதிதாஸ், பாபு ஆகிய அதிகாரிகளை மத்திய அரசு ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. கடுமையான ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை எதிர் கொண்டிருக்கும் ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியிருப்பது ஊழலுக்குத் துணைப் போவதோடு, வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல். ஊழலுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற தேசத் தலைவர்களையும், தமிழ் மொழியையும் இழிவுப்படுத்தி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை மேத்யூ சாமுவேல் எந்தவித காரணமும் இல்லாமல் ரத்து செய்தார். இதனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 10ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும், அவரை ஐ.ஏ.எஸ். ஆக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால், இதையெல்லாம் மீறி அவருக்கு தற்போது ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்த, தேசத் தலைவர்களை இழிவுப்படுத்தியவரை காப்பாற்றிய அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்கி இருப்பது அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகள் இனி ஊழல் செய்தால்தான் பதவி உயர்வும், உயர் அந்தஸ்தும் பெற முடியும் என்ற மன நிலைக்கு தள்ளபடுவார்கள். இது ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும்.

எனவே, இந்த பிரச்சனையில் குடியரசு தலைவர் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு ராகேஷ் சந்திரா, மேத்யூ சாமுவேல் ஆகிய அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். வழங்கி இருப்பதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றையும் அனுப்ப உள்ளோம்.

கூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது


மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை,  பொய்யான தகவல்களை கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களை கொச்சைப்படுத்தியும் தொடர்ந்து பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, அவரது வீட்டை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் பல்வேறு கட்சி,  அமைப்புகள் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்தனர்.

அதன்படி 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் போராட்டம் நடத்துவதற்காக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் கூடினர்.

பின்னர் அங்கிருந்து எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு  செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் அ.மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

இப்பேரணியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் சந்திரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது சலீம், மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் அபிமன்னன், தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழ்மல்லன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மனித நேய அமைப்பு தலைவர் லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை இணை செயலாளர் விக்டர் ஜோசப் ராஜ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அபுபக்கர், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியாப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் சின்னப்பா, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், முகவரி அமைப்பு தலைவர் மதிவதணன், புதுவை தமிழர் குரல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி அண்ணா சிலை அருகில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி,  4 பெண்கள் உட்பட  100 பேரை கைது செய்தனர்.

அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் தலைமுறைகள் பாதிக்கப்படும்: எக்ஸ்.டி.செல்வராசு பேட்டி

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை எக்ஸ்.டி.செல்வராசு, மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் 11.11.2011 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க 1988ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு அணுமின் நிலையம் அமைக்க 1987ம் ஆண்டில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அணு உலையும், பாதுகாப்பும் இரவும் பகலும் போன்றது. இரண்டும் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த அணு உலை தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வரவேற்பு கொடுத்துவிட்டன.

இந்த அணுமின் நிலையம் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறும் பிரதமர் ராமேஸ்வரத்தில் தினம், தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டதாக கூறுகின்றனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் 1.70 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளது. இவைகளை கணக்கில் கொண்டு 21 ஆயிரம் கோடி ரூபாய் முக்கியமா? 30 லட்சம் மக்களின் வாழ்க்கை பெரிதா? என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

அணு உலைக்கு எதிர்ப்பான போராட்டங்களை சாதி மற்றும் மதத்தை கலந்து குலைக்க முயற்சிக்கின்றனர். அணு உலையில் மின்சாரம் தயாரிப்பது ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு அணு உலை 20 ஆண்டுகள்தான் இயங்கும். ஆனால் அந்த அணு உலையை 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஆகும் செலவையும் சேர்த்தால் மிகவும் கூடுதலாகவே ஆகும்.

அப்துல் கலாம் 6 ரிக்டர் பூகம்ப பாதிப்பு வரை கூடங்குளம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றார். ஆனால் ஜப்பானில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான அளவிற்கு பூகம்ப பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் அழிவும் கண்டிப்பாக ஏற்படும். தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவைகளை பாதுகாப்பாக கட்டியுள்ளதற்கு உதாரணமாக கூறுகின்றார். பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை இயற்கை சீற்றத்தால் அழிந்தும் உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அணு உலையை கொண்டு வரக்கூடாது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 1987, 1991, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டுள்ளன. அதனால்தான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்கிறோம். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க பயன்படும் மின்சாரத்தின் விலையை காட்டிலும் அணுமின் நிலையத்தின் கழிவுகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகமாகும்.

மேலும் அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் அதனால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பேட்டியின்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உடன் இருந்தார்.

கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கோ.செ.சந்திரன் (தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), கோ.அ.ஜெகன்நாதன் (முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம்), எம்.ஏ.அஷ்ரப் (மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), முகமது சலீம் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இர.அபிமன்னன் (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), பெ.பராங்குசம் (தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்), விக்டர் ஜோசப் ராஜ் (தேசிய இணைச்செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை), அபுபக்கர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்), கோ.லோகலட்சகன், (தலைவர், மனித நேயம் அமைப்பு), சூ.சின்னப்பா (தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம்), கோ.பிரகாசு (தலைவர், தமிழர் களம்), பா.சரவணன் (செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்), மு.நாராயணசாமி (தலைவர், பெற்றொர், ஆசிரியர், மாணவர் நலச் சங்கம்), தே.சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர், புதுவை தமிழர் குரல்), கி.கோ.மதிவதணன் (பொறுப்பாளர், முகவரி அமைப்பு) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுச்சியோடு நடந்து வரும் மக்கள் போராட்டத்தைப் பொய்யான தகவல்களைக் கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும் தொடர்ந்துப் பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து வரும் 22.11.2011 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

2. மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3.அணு உலைகள் ஆபத்து நிறைந்தவை என கற்று தேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ள நிலையிலும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதும், லட்சக்கணக்கானவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதும் கண்முன் உதாரணங்களாக இருக்கும் போது உலைகள் பாதுகாப்பானவை என தொடர்ந்து மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் இக்கூட்டம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Thursday, November 03, 2011

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க எதிர்ப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டு துறை செயலராக இருக்கும் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் தேச தலைவர் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியைப் பழித்தும் பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் மேத்யூ சாமுவேல் ரத்து செய்துள்ளார்.

இதனைக் கண்டித்தும், மேத்யூ சாமுவேல், போஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் கடந்த 10.10.2011 அன்று அனைத்து அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மேலும், இப்படிப்பட்ட அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது தேச தலைவர்களையும், தமிழ் மொழியையும் கேவலப்படுத்தியதை ஆதரிப்பதாகும். இந்த பரிந்துரையை புதுச்சேரி அரசு உடனடியாக திருப்ப பெற வேண்டும்.

மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வலியுறுத்தி டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

Friday, October 21, 2011

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 21.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் மக்களின் தொடர் போராட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் நிலையம் ஒன்றை மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் அபாயகரமானது என்றும், இது செயல்பட தொடங்கினால் ஏற்படும் கதிர்வீச்சால் மக்களுக்கு பேராபத்து உண்டாகும் என அறிவியல் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18ந் தேதியன்று மூன்றாவது கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, மத்திய அரசு இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 15 பேர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் யாரும் சேர்க்கப்படவில்லை எனக் கூறி போராட்டக் குழுவினர் நிபுணர் குழுவை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தமிழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் ரஜினி, பழனிச்சாமி ஆகியோர் நாளை (22.10.2011) இடிந்தகரைக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.

மேலும், அம்மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர்.

Friday, October 14, 2011

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தாக்குதல்: இந்துத்துவ சக்திகளுக்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 13.10.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் இந்து மதவாத சக்திகளால் தாக்கப்பட்டதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

நேற்றைய தினம் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த இந்து மதவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காஷ்மீர் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும். காஷ்மீர் பிரச்சனையை பேசுவது ஒன்றும் தேச விரோத செயல் அல்ல.

பிரசாந்த் பூஷன் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் மட்டுமல்ல, சமூக தளங்களில் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர். குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடி வருபவர்.

பிரசாந்த் பூஷனை தாக்கிய அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்வதோடு, இத்தாக்குதல் குறித்த பின்னணியை கண்டறிந்து அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு ஆர்ப்பாட்டம்

தமிழையும், தலைவர்களையும் இழிவுப்படுத்திய பேராசிரியரை காப்பாற்றிய கலைப் பண்பாட்டுத் துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கேட்டு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியை பழித்தும் பேசிய பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்த கலைப் பண்பாட்டுத்துறை செயலர் மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை கோரி 10.10.2011 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம் முன்னிலை வகித்தார்.

சாகித்ய அகாடமி விருதாளர் ம.இலெ.தங்கப்பா தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அகில இந்திய பாரவட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் முத்து, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் அபிமன்னன், தமிழ்நாடு முன்ஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சலீம், பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தலைவர் சீனு.தமிழ்மணி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கச் செயலாளர் பா.சரவணன், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் பல்வேறு அமைப்பு, இயக்கத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் கி.த.பச்சையப்பன் நிறைவுரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

Monday, October 03, 2011

தமிழைப் பழித்து பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை: கட்சி, இயக்கங்கள் கோரிக்கை

புதுச்சேரி ஆக. 2: பாரதியார் பல்கலைக்கூடத்தில் தமிழை பழித்துப் பேசிய பேராசிரியரை காப்பாற்ற முயற்சிக்கும் அதிகாரி மேத்யூ சாமுவேல் மீது நடவடிக்கை எடுக்க கட்சி, இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வணிக அவையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா. அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், கோ. செ. சந்திரன், தலைவர், ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ. அ. ஜெகன்நாதன், முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம், முனைவர் க. தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், சி. மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை, உ. முத்து, பொதுச்செயலாளர், அகில இந்திய பார்வட் பிளாக், எம். ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்ட தலைவர், கமால் பாஷா, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இர.அபிமன்னன், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், கு.இராம்மூர்த்தி, தலைவர், செம்படுகை நன்னீரகம், பெ. பராங்குசம், தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், சீனு.தமிழ்மணி, தலைவர், பூவுலகின் நண்பர்கள், சி. எம். புரட்சிவேந்தன், தலைவர், மக்கள் ஜனசக்தி இயக்கம், புதுவை தமிழ்நெஞ்சன், செயலாளர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், சூ.சின்னப்பா, தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம், சாது.அரிமாவளவன், பொறுப்பாளர், அட்லஸ் அமைப்பு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.  பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பி.வி.போஸ் என்பவர் மகாத்மா காந்தி பாடல்களைப் பாடுவது நேரத்தை வீணாக்குவது என்றும், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு முன்பு பாடல்கள் பாடுபவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாக்களில் பாடுவதற்கு தகுதியற்றது என்றும் பல்கலைக்கூடத்தில் இசைத்துறை தலைவர் அறையில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார். மேலும், செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் நடக்கும் தலைவர்களின் விழாக்களுக்குப் பாடல்கள் பாட மாணவர்களை அனுப்ப மறுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தமிழில் பாடம் நடத்தாமலும், தமிழ் மொழியைப் பழித்தும் எதிராகவும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 29.11.2010 அன்று அவர் மீது துறை ரீதியான விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் கண்ணாஜி தலைமையில் நடந்த விசாரணையில் தமிழறிஞர் மன்னர் மன்னன் உட்பட பல்கலைக்கூட பேராசிரியர்கள் 8 பேர் வாக்குமூலம் அளித்து சாட்சியம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 07.02.2010 அன்று செயலர் கண்ணாஜி ‘எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்’ என எழுத்து மூலம் அவருக்கு எச்சரிக்கை மெமோ (Warning Memo) விடுத்துள்ளார். இந்நிலையில், கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற மேத்யூ சாமுவேல் தலைவர்களை இழிவுப்படுத்திய போஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மெமோவை ரத்து செய்து கடந்த 06.05.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த போஸ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திரத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும், மொழி உரிமைக்காவும் அர்ப்பணிப்போடு பணியாற்றிய தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்தி பேசிய பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததன் மூலம் செயலர் மேத்யூ சாமுவேல் வெளிப்படையாகவே தவறுக்கு துணைப் போனதோடு, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார். மேலும், போஸ் தன் சொந்த மாநிலமான கேரளவை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை காப்பாற்ற மேத்யூ சாமுவேல் முயற்சித்துள்ளார் எனத் தெரிகிறது.
மேத்யூ சாமுவேலின் இந்த போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே, புதுச்சேரி அரசு இதுகுறித்து உடனடியாக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. குற்றமிழைத்த பேராசிரியர் போஸ் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தி அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், தவறுக்கு துணைப் போன செயலர் மேத்யூ சாமுவேல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

2. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசைத்துறையில் பணியாற்றும் பேராசிரியர்  அன்னபூர்னா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வகுப்பு எடுக்கும் வீணை பிரிவில் மாணவர்கள் சேராததால், அவர் வேலையே செய்யாமல் சம்பளம் பெற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் தண்டமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கூடத்தில் இருந்து பேராசிரியர்களை பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்யலாம் என்ற ஆட்சிமன்ற குழுவின் முடிவின்படி பேராசிரியர் அன்னபூர்னாவை உடனடியாக பாலர் பவனுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.

3. பாரதியார் பல்கலைக்கூடத்தில் உறுப்பினர் செயலாராக இருக்கும் குப்புசாமி என்பவர் தொடர்ந்து தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி பல்கலைக்கூட ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து லஞ்சமாக பணத்தைக் கறப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் அரசு உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரும்கூட குப்புசாமி தன் போக்கை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. இவர் ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிய போது செய்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக குப்புசாமி மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. மேற்சொன்ன கோரிக்கைகளை முன் வைத்து வரும் 10.10.2011 திங்களன்று காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகம் அருகில், அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, September 17, 2011

மனித நேயத்திற்கு எதிராக காங்கிரசார் போராட்டம் நடத்துவதா? மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் எதிராக அரசியல் லாபத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய காங்கிரசாரின் போக்கை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கோரி காங்கிரசார் இன்று புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரசாரின் இப்போராட்டம் மனித நேயமுடைய அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ராஜீவ் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதிகள் ஜெயின், வர்மா ஆகியோரின் தலைமையிலான விசாரணை கமிஷன்கள் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு பல்நோக்கு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவும் ராஜீவ் கொலையின் பின்னணி பற்றி விசாரணை செய்து வருகிறது.

இவ்விசாரணை முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மூவரையும் தூக்கிலிடுவது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை இந்த விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்ப வருமா?
காங்கிரசாருக்கு உண்மையில் ராஜீவ்காந்தி மீது அன்பிருந்தால் இந்த விசாரணையை வேகப்படுத்தி, இக்கொலைக்கு பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்த கோருவதுதான் சரியான வழி முறையாக இருக்கும். அதைவிடுத்து மூவரையும் தூக்கிலிட உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல.

மூவரின் உயிரோடு தொடர்புடைய மனித உரிமைப் பிரச்சனையை காங்கிரசார் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதைப் பொதுமக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று சோனியா காந்தி நாடு திரும்பிய பின்னர்தான் இதுபோன்ற போராட்டங்கள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி படுகொலையும்  பதிலளிக்கப்படாத கேள்விகளும், கேட்கப்படாத கேள்விகளும் (The Assassination of Rajiv Gandhi – Unansered Questions and Unasked Queries)  என்ற தலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலையில் தற்போதைய காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பு உள்ளது என கூறியுள்ளதற்கு காங்கிரசார் யாரும் இதுவரையில் பதில் அளிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? ராஜீவ் கொலையில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் பல உள்ள நிலையில் குற்றவாளிகள் எனக் கூறி மூவரையும் தூக்கிலிடுவது சரியா? என்பது பற்றி காங்கிரசார் விளக்க வேண்டும்.

இன்று உலக அளவில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கணக்குப்படி 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகம் தழுவிய பிரச்சாரமும் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மரண தண்டனைக்கு ஆதரவாக காங்கிரசார் போராடுவது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தும்.

“சிறைத் தண்டனையை திரும்பப் பெற முடியும். உடலுக்கு ஊறு செய்யும் தண்டனைக்கு ஆளானவருக்கும் கூட இழப்பீடு செய்ய முடியும். ஆனால், ஒருவரை சாகடித்து விட்டால், அந்த தண்டனையை திரும்பப் பெற முடியாது. இழப்பீடு செய்யவும் முடியாது” என மகாத்மா காந்தி கூறியதை மரண தண்டனைக்கு ஆதரவாக போராடும் காங்கிரசாருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

இந்நிலையில், அரசியல் லாபத்திற்காக காங்கிரசார் நடத்தும் போராட்டத்தை பொது மக்கள் புறந்தள்ளி மனித உரிமைகளைக் காக்க உறுதியேற்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 31: மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 31) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், பாராளுமன்றம் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள தூக்கு தண்டனை சிறைவாசிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், நாகரீக சமூகத்திற்கு ஏற்படையதல்லாத, மனித உரிமைகளுக்கு எதிரான மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தொடக்க உரையாற்றினார். மனித உரிமை கழக தலைவர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் உ.முத்து, மதிமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேணுகோபால், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சலீம், கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பாளர் முனுசாமி, செம்படுகை நன்னீரகம் தலைவர் ராம்மூர்த்தி, மக்கள் ஜனசக்தி இயக்க தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் அபிமன்னன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், கலைமாமணி வேல்முருகன், புதுவை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் தமிழ்நெஞ்சன், ஹோப் நிறுவன் பொறுப்பாளர் விக்டர், ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் பாலசுந்தரம், கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம், தமிழர் களம் பிரகாசு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சின்னப்பா, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், மரண தண்டனைக்கு எதிரான இளைஞர் மாணவர் இயக்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, August 22, 2011

ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தல்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 21.08.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவே சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம. சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் உ.முத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழக இணைச் செயலாளர் ஜா.பாஸ்கரன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பெ.பராங்குசம், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அபுபக்கர், பூவுலகின் நண்பர்கள் தலைவர் சீனு. தமிழ்மணி, மக்கள் ஜன்சக்தி இயக்கத் தலைவர் புரட்சிவேந்தன், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா, கிராமப்புற கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேபாட்டுக் கழகத் தலைவர் மு.மஞ்சினி, தமிழர் களம் பொறுப்பாளர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்துவிட்ட நிலையில் தூக்குத் தண்டனயை எதிர்நொக்கி உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையிலுள்ள அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை இன்னமும் முற்றுப் பெறாத நிலையில் அவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிடுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதோடு, ஒருவேளை இவ்விசாரணையில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் தூக்கிலிடப்பட்டவர்களின் உயிர்கள் திரும்பவும் வராது என்பதாலும் மரண தண்டனையை ரத்து செய்வது அவசியம் என்பதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட பின்னரும் கூட 1957-ல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சி.ஏ. பாலன், தமிழகத்தில் 1974-ல் நக்சலைட் தலைவர் புலவர் கலியபெருமாள் ஆகியோரது மரண தண்டனை கேரள மற்றும் தமிழக அரசுகளின் முயற்சியால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இவற்றை முன்னுதாரணமாக கொண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக அது நிறைவேற்றப்படாததால் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜியான்சிங் எதிர் பஞ்சாப், டி.வி. வேதீஸ்வரன் எதிர் தமிழ்நாடு, தாயாசிங் எதிர் இந்திய அரசு போன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும் அது நிறைவேற்றப்படாததால் அத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோர் 20 ஆண்டு காலம் சிறையில் உள்ளதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதில் சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்பதை இக்கூட்டம் சுட்டிக்கட்டுகிறது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” கணக்குப்படி உலக அளவில் 139 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளன. எனவே, இந்திய அரசு மனித உரிமைக்கு எதிரான மரண தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27.08.2011 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Wednesday, May 18, 2011

ஐ.நா. அறிக்கைப்படி இலங்கையில் நடந்த போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 18.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் நடந்த போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. சபை அறிக்கையை ஏற்று, அங்கு நடந்த போர்க் குற்றம் பற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபை 3 பேர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இக்குழு அங்கு ஆய்வு செய்து கடந்த மார்ச் 31 அன்று தனது 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் 26 அன்று அதனை முறைப்படி வெளியிட்டது.

இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் இந்த அறிக்கை அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை அரசு மீது 5 குற்றச்சாட்டுகளும், போராடிய இயக்கத்தின் மீது 6 குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இலங்கை அரசு போரில் சிக்கியுள்ள பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் செயல்படுவோம் என உறுதி கூறியதை மீறி அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களையும், சட்டங்களையும் வெளிப்படையாக மீறியுள்ளது.

செப்டம்பர் 2008 முதல் 19 மே 2009 வரையில் நடந்த போரில் வன்னிப் பகுதியில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் போரில் சிக்கித் தவித்துள்ளனர் என்றும், 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டு வீசி தாக்குதல், மருத்துவமனை மீது குண்டு வீசி தாக்குதல், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மறுப்பு, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுவோர் மீது மனித உரிமை மீறல்கள், போர் நடந்த பகுதிக்கு வெளியே ஊடகத் துறையினர், அரசை விமர்சித்தவர்கள் மீது நடந்த மனித உரிமை மீறல்கள் என 5 குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐ.நா. சபை சுமத்தியுள்ளது.

மேலும், இந்த கொடிய போர்க் குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், போரில் உயிரிழந்தோர் உடல்களைக் கண்டுபிடித்து இறுதி சடங்கு செய்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், போரினால் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும், முகாம்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கையில் நிலவும் அவசர கால உத்தரவை திரும்ப பெற்று, அங்கு அமலிலுள்ள அடக்குமுறை சட்டங்களை சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு உட்பட்டு திருத்த வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு கூறியுள்ளது.

ஆனால், ஐ.நா. சபையின் அறிக்கையை குப்பையில் போட்ட இலங்கை அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நிறைவேற்ற இதுநாள்வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களைக் கவலை அடைய செய்துள்ளது. இலங்கை அரசின் இந்த போக்கை மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றம் பற்றியும், அதற்கு முழுப் பொறுப்பான இலங்கை அதிபர் ராஜபட்சே மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படவும் சர்வதேச சமுகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Monday, May 16, 2011

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை: கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 05.05.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி இந்த கல்வி ஆண்டின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு பொறுப்பேற்பதுடன், இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உடனே வெளியிட வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலர், புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இணைச் செயலாளர் டாக்டர் தவீந்தர் குமார் 11.04.2011 தேதியிட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிப்பதற்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா மற்றும் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா என்பது குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மதிப்பீட்டுக் குழு கடந்த 2011, பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது.

இக்குழு தாக்கல் செய்த மதிப்பீட்டு அறிக்கையை ஏற்று மருத்துவ கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், மருத்துவ கருவிகள் போதுமான அளவு இல்லாத காரணங்களாலும், மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிற குறைபாடுகள், கருத்துக்கள் அடிப்படையிலும் 2011 – 2012 கல்வி ஆண்டிற்கான இரண்டாவது அணி எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவால் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டிற்கான 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. இதனால், அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராவோம் என மாணவர்கள் கண்ட கனவு நிறைவேறாமல் தகர்ந்துள்ளது. 

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புதுச்சேரி அரசு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் நியமனம் போன்ற மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு ஒதுக்கீடான 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களைக்கூட வழங்காமல் மாணவர்களை ஏமாற்றி வருகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளை நிர்பந்தித்து 50 சதவீத இடங்களைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், ஏழை, எளிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க புதுச்சேரி அரசே வழிவகுத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசு மருத்துவ கல்லூரியை வளர்ச்சி அடைய செய்யாமல் முடக்கி, ஒரு கட்டத்தில் மூடிவிட புதுச்சேரி அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மேம்படுத்தவே முடியாத இவர்கள் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்குவோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக அரசு மருத்துவ கல்லுரியில் இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் மாணவர்கள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி அரசை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டி அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

காவல் மரணம்: மேட்டுப்பாளையம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஐ.ஜி.யிடம் மனு

மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் தாமோதரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும், கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெகன்நாதன் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு வரும் தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் சார்பில் இன்று (2.5.2011) ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் துணைத் தலைவர் உத்தராடம், செயலாளர் மனோஜ், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செயலாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ.மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் சு.காளிதாஸ் ஆகியோர் இன்று காலையில் ஐ.ஜி (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி, சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கின் முக்கிய சாட்சிகளை குற்றமிழைத்த போலீசார் மிரட்டி வருகின்றனர். எனவே, இந்த காவல் நிலைய கொலையோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்நாதன், அவரது குடும்பத்தினர் மீது தெற்குப் பகுதி எஸ்.பி. நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் இதுவரையில் 6 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். மேலும், கடந்த ஏப்ரல் 12ந் தேதியன்று இரவு, தேர்தலுக்கு முந்தைய நாள் எஸ்.பி. நந்தகோபால் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்நாதன் வீட்டை சுற்றி வளைத்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்தனர். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் எஸ்.பி. நந்தகோபால் வெளிப்படையாக ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட எஸ்.பி. நந்தகோபால் மற்றும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி. (பொறுப்பு) சுக்லா, டி.ஐ.ஜி. அதுல் கத்தார் ஆகியோர் அதன்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கட்சி, இயக்கத் தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், வரும் 4ந் தேதியன்று கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, April 29, 2011

புதுச்சேரியில் போலீஸ் அத்துமீறல்: கட்சி, இயக்கங்கள் சார்பில் மே 4-ல் ஊர்வலம் - ஐ.ஜி. அலுவலகம் முற்றுகை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 28.04.2011 வியாழனன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள உணவுக் களஞ்சியத்தில் பல்வேறு கட்சி, இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இக்கூட்டத்தில், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தேசிய கவுன்சில் உறுப்பினர் இர.அபிமன்னன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி பொதுச்செயலாளர் உ.முத்து, கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை செய்தித் தொடர்பாளர் கஸ்பர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ. அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது சலீம், முற்போக்கு ஜனசக்தி இயக்கத் தலைவர் சி.எம்.புரட்சிவேந்தன், மனிதநேய அமைப்புத் தலைவர் கோ.லோகலட்சகன், வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் மு.மதுரை, ஆதிதிராவிடர் உரிமைக் கழகத் தலைவர் ச.பாலசுந்தரம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ், மதிகிருஷ்ணாபுரம் கவுன்சிலர் கோ.சத்தியமூர்த்தி, அட்லஸ் அமைப்புத் தலைவர் சா.து.அரிமாவளவன், கல்வி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மேம்பாட்டு கழகத் தலைவர் அ.மஞ்சினி, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா.சரவணன், மக்கள் மன்ற தலைவர் மு.நாராயணசாமி, ஈழத் தமிழர் ஆதரவு கூட்டமைப்பு பொறுப்பாளர் கலைப்புலி சங்கர், சதுப்புநில காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் செல்வ மணிகண்டன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர்கள் சு.காளிதாஸ், பா.மார்கண்டன். கலைவாணான், பா.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜெயசங்கர் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருக்கோவிலூர் டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலையங்களில் வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். போலீசாரின் இந்த கொடுமைத் தாங்க முடியாமல் தாமோதரன் மரணமடைந்துள்ளார். இந்த வழக்கை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல் நிலைய மரணம் என்பதால் இவ்வழக்கை உடனடியாக காவலில் நடந்த கொலை வழக்காக மாற்றி, வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும்.

2. இந்த காவல்நிலைய கொலை சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

3. இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளான திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோர் போலீசாருக்கு எதிராக தாசில்தார் விசாரணையில் சாட்சி சொன்னதால், அவர்களை ஜெயசங்கர் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். எனவே, காவல் நிலைய கொலை வழக்கு சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

4. கணவனை இழந்து மூன்று சிறிய குழந்தைகளோடு தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

5. கடந்த 12.04.2011 அன்று அதாவது தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரை தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை சுற்றி வளைத்து மிரட்டி அச்சுறுத்தி, அவர்களை விடியும் வரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அதோடு ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் பொதுமக்கள் பலர் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடுநிலையோடு, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து, ஜெகன்நாதனின் மனைவி தேர்தல் ஆணையத்திற்கும், புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் உள்ளிட்ட உரிமைகள் கேட்டு தொடர்ந்து போராடி வரும் ஜெகன்நாதன் மற்றும் அவரது மகன் மீதும் காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர். அரசின் இந்த திட்டமிட்ட அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக ஜெகன்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

7. மேற்சொன்ன கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் வரும் மே 4 புதனன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 27, 2011

காவல்நிலைய மரணத்திற்கு காரணமான போலீசார் அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாமோதரன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.கே. மண்டபத்தை சேர்ந்தவர் தாமோதரன். வயது 35. இவர் மேட்டுப்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வந்தார். திருக்கோவிலூரை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் கடந்த 24ந் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணைக்காக தாமோதரனை கடந்த 25-ந் தேதி மதியம் 2 மணியளவில் மேட்டுப்பாளையம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோடு திருக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் மேற்சொன்ன அனைவரையும் முதலியார்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மேட்டுப்பாளையம் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் மேற்சொன்ன அனைவரையும் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். அப்போது அங்கு இரவு சுமார் 7 மணியளவில் போலீசாரின் சித்திரவதையை தாங்க முடியாமல் தாமோதரன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரையும், அவருடன் ராஜேந்திரன், பாலு, சந்தோஷ் ஆகிய மூவரையும் ஒரு போலீஸ்காரர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தாமோதரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் காவலில் வைத்திருக்கும் போது அந்த நபருக்கு என்ன நேர்ந்தாலும் தொடர்புடைய காவல்துறையினர் தான் முழுப் பொறுப்பு என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்படி பார்த்தால் தாமோதரன் போலீஸ் காவலில் இறந்தது மட்டுமல்லாமல், இது காவல் மரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ள தெளிவாகிறது.

இதுகுறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் 176 (1 ஏ) பிரிவின்படி நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடவும், பிரேத பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் செய்யவும், வீடியோவில் பதிவு செய்திடவும் வலியுறுத்தி அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு நேற்று தந்தி அனுப்பியிருந்தோம். இதனை தொடர்ந்து தற்போது நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ் காவலில் நடந்த மரணத்தை நேரில் பார்த்த சாட்சிகளான ராஜேந்திரன், சந்தோஷ், பாலு, ராமு, தட்சணாமூர்த்தி ஆகியோரை போலீசார் மிரட்டி வருவதாக அறிகிறோம். இந்த வழக்கின் கண்ணால் கண்ட முக்கிய சாட்சிகளான இவர்களுக்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

புதுச்சேரி அரசு உடனடியாக இந்த சம்பவம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு விசாரணையை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்ற வேண்டும். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Monday, April 25, 2011

பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான கவர்னர் இக்பால் சிங்கை உடனடியாக பதவி நீக்க வேண்டும்!

இக்பால் சிங்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பல்வேறு குற்றச்சாட்டிற்கு ஆளான புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் வரி ஏய்ப்பு செய்து சிறையிலுள்ள அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவிய விவகாரம் குறித்து மத்திய அமலாக்கப் பிரிவினர் அவரை கடந்த 20ந் தேதியன்று விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மீண்டும் நாளை விசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், கவர்னரின் மகன்கள், உறவினர்கள் பெயரில் துவங்கப்பட்ட “தி சவுத் எஜீகேஷன் டிரஸ்ட்” என்ற அறக்கட்டளைக்கு காரைக்காலில் மருத்துவ கல்லூரி துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரிக்கு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்ன மருத்துவ கல்லூரிக்காக காரைக்காலில் 32 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் பயன்பாட்டிற்கு அரசு கையகப்படுத்த இருந்த நிலத்தை சுகாதார துறை அதிகாரிகள் இடைத்தரகர்களாக இருந்து மருத்துவ கல்லூரி துவங்க அந்த இடத்தை வாங்கித் தந்துள்ளனர்.

அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கேட்டு புதுவை பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்துள்ளனர். எந்தவித அடிப்படை கட்டுமானமும், வசதியும் இல்லாததை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக அதிகாரிகள் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளனர். ஆனால், மருத்துவ கல்லூரி துவங்க வங்கியில் கடன் பெற வசதியாக கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.

மருத்துவ கல்லூரி விவகாரத்தில் கவர்னருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் கவர்னரின் சிறப்பு அதிகாரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பல்கலைக்கழகம் கடன் பெற அளித்த கடிதத்தை கவர்னர் மாளிகையின் உயரதிகாரி ஒருவர் கையெழுத்துப் போட்டு பெற்றது ஏன் என்று விளக்க வேண்டும்.

இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்த தலைமைச் செயலர், சுகாதார துறை அதிகாரிகள் உட்பட பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் கவர்னரை
சந்தித்துவிட்டு வந்து அவர் குற்றம் செய்யவில்லை என பேட்டி அளித்துள்ளனர். இது கவர்னரை காப்பாற்றும் நோகத்தோடு குற்றத்தை மூடிமறைக்கும் முயற்சி ஆகும். மேலும், இது திட்டமிட்டே அமலாக்கப் பிரிவினரின் விசாராணைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு, அதை மீறி குற்றமிழைத்த கவர்னருக்கு வெளிப்படையாக ஆதரவாக செயல்பட்டுள்ள முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவரை வலியுறுத்துகிறோம். இதுகுறித்து ஆதரங்களுடன் குடியரசுத் தலைவருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.

கவர்னர் இக்பால் சிங் தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதும், அசன் அலிக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவியதும் அப்பட்டமாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகும். எனவே, கவர்னர் இக்பால் சிங்கை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு இந்திய அரசியல் சட்டப்படியும், யூனியன் பிரதேச சட்டப்படியும் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று கவர்னருக்கு அதிகாரம் உள்ளதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிர்பந்தித்து சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு பயன்களைப் அடைந்து வருகின்றனர். எனவே, கவர்னருக்கு உள்ள அதிகாரத்தைக் குறைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கவர்னரை நியமிக்கும் போது தொடர்புடைய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசிப்பது கிடையாது. இதனால், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வேறு எந்த உயர் பதவியும் அளிக்க முடியாத நிலையில் கவர்னராக நியமிக்கப்படுகிறார்கள். இதனால், தவறிழைத்த கவர்னர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களை காப்பாற்ற அனைத்து வகையிலும் முயற்சிக்கிறது.

எனவே, கவர்னரை நியமிக்கும் போது அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கலந்தாலோசித்த பிறகே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Saturday, April 16, 2011

டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை: மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 16.04.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை வரவேற்பதோடு, இது மனித உரிமை அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடித்தட்டு மக்களுக்காக சேவை புரிந்து வந்த டாக்டர் பினாயக் சென் மீது சட்டிஸ்கர் மாநில காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி தேசதுரோக குற்றச்சாட்டில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் மீதான வழக்கு விசாரணை ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து அவருக்கு கடந்த டிசம்பர் 24ந் தேதியன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வன்முறையிலும், சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளின் மீதும் நம்பிக்கையற்ற பினாயக் சென்னிற்கு அயுள் தண்டனை விதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா முழுவதும் இத்தீர்ப்பை எதிர்த்து கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரியிலும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 2ந் தேதியன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், மவோயிஸ்டுகளை ஆதாரிப்பது குற்றமல்ல எனவும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து பினாயக் சென் சட்டிஸ்கர் மாநில காவல்துறையால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடந்தாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் தேசதுரோக சட்டப் பிரிவான (Sedition) இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவை பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளையர்களை எதிர்த்து சுதந்திரத்திற்கு போராடியவர்கள் மீது ஏவப்பட்ட இந்த சட்டப் பிரிவு இன்றைக்கும் தேவையா என்ற விவாதம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேசதுரோக சட்டப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனவே, தேசதுரோக சட்டப் பிரிவை உடனடியாக நீக்கவும், இந்தியா முழுவதும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறைகளில் உள்ளவர்களின் மீதான வழக்குகளை மறுபரீசிலனை செய்து, அவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Friday, March 04, 2011

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 13 பேரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது விதிகளுக்கு மாறாக பொதுப்பணித்துறை இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை இடமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டி ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராகேஷ் சந்திராவிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பதாவது:

பொதுப்பணித்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளர்கள் 13 பேரை கடந்த பிப்ரவரி 28-ந் தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில் தலைமைப் பொறியாளர் இடமாற்றம் செய்துள்ளார். இந்த இடமாற்ற உத்தரவை மார்ச் 2-ந் தேதியன்று பெற்றுக் கொள்ளுமாறு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி உள்ளார்.

மேலும், இடமாற்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து மார்ச் 1-ந் தேதியன்றே விடுவிக்கப்பட்டதாக எழுதிக் கையெழுத்துப் போடுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காமல் இளநிலைப் பொறியாளர்கள் இடமாற்ற உத்தரவை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள போது இதுபோன்ற இடமாற்றம் செய்வது சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பானது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

எனவே, தாங்கள் இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும், சட்ட விதிகளுக்கு மாறான இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்து அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 02, 2011

அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி: நீதி விசாரணைக்கு கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 02.03.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

பணி நிரந்தரம் செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்திய அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தன்வந்தரி நகர் போலீசார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஏராளமான பெண்கள் உட்பட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும், பெண் ஊழியர்களை ஆண் போலீஸ் அதிகாரிகள் மானபங்கப்படுத்தும் நோக்கத்தோடு தொடக் கூடாத இடத்தில் தொட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். பெண் போலீசார் இருந்தும் இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் நடந்துள்ளது தவறானது. இந்த போலீஸ் அத்துமீறலுக்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள புகைப்படங்களே சாட்சியமாக அமைந்துள்ளன.

அண்மைக் காலமாக புதுச்சேரி போலீசார் தேவையில்லாமல் 144 தடை உத்தரவு போட்டு வருகின்றனர். மக்களிடம் செல்வாக்கு குறைந்து வரும் காங்கிரஸ் அரசு மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை பயன்படுத்துவது தவறான போக்காகும். இதற்கு காவல்துறை உடன்படுவது சட்டப்படி குற்றமாகும்.

காவல்துறை அரசியல் குறுக்கீடு இல்லாமல் சுயேட்சையாக செயல்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்பளித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2010 மார்ச் 3-ந் தேதியன்று மாநில பாதுகாப்பு ஆணையம் (State Security Commission) ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இதில் புதுச்சேரி சார்பில் தலைமைச் செயலர் உறுப்பினராக உள்ளார். இந்த ஆணையம் இதுகுறித்து விசாரித்து தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம், மகளிர் ஆணையம், மாநில பாதுகாப்பு ஆணையம் மற்றும் புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு விரிவான புகார் மனு அனுப்ப உள்ளோம். மேலும், புதுச்சேரி அரசு இதுகுறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Monday, February 07, 2011

திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, 05.02.2011 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில்,புதுச்சேரி, நேதாஜி நகர்-2, ரங்கநாதன் வீதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இதற்கு கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினர் ஒவியர். இரா.இராஜராஜன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவநர் சீ.சு.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தொடக்கவுரை ஆற்றினார்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி படத்தைத் திறப்பு வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

இதில், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத் தலைவர் கோ.செ.சந்திரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா. அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ.அஷ்ரப் (எ) ரகமத்துல்லா, மாவட்டச் செயலர் ஐ.முகம்மது சலீம், புதுவை கிறிஸ்துவர் கூட்டமைப்பின் தலைவர் சாமி ஆரோக்கியசாமி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், பெற்றோர், ஆசிரியர்,மாணவர் நலச் சங்கத் தலைவர் மு.நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் பா. சரவணன் செயலாளர் பா.சரவணன், ஆகியோர் கலந்துக் கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

முடிவில் தம்பு. சுப்ரமணியின் மகனும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழு உறுப்பினருமான சு. காளிதாஸ் நன்றி கூற நிகழ்வு முடிவு பெற்றது.;


தம்பு.சுப்ரமணி ( 20-11-1933 - 13-01-2011 )

புதுச்சேரி உப்பளம் நேத்தாஜி நகர் 2-ல் வாழ்ந்து வந்த திராவிட இயக்க சுயமரியாதை வீரர் திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் சென்ற 13-01-2011 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார். இவர் உப்பளம் பகுதி மக்களால் குரு என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

இளம் பருவத்தில் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் மீது பற்றுக் கொண்டு இறுதிநாள் வரையில் கொள்கை மாறாமல் வாழ்ந்தவர்.

அப்போதைய திராவிடர் கழகத் தலைவர்களான பாரதிதாசன், ம. நோயேல், புதுவைச் சிவம், ஏத்துவால் ரங்கசாமி, ப. கனகலிங்கம், அவுக்கா பெருமாள், சாமிநாதன் ஆகியோரோடு நெருங்கிப் பழகி பகுத்தறிவுப் பணியாற்றியவர். அப்போதைய புதுச்சேரி திராவிடர் கழகம் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய வரலாறு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டம், மாதா கோயிலில் நடுக்கட்டை உடைப்புப் போராட்டம் போன்றவை ஒடுக்கப்பட்ட மக்கçள எழுச்சிப் பெற செய்தது.

உப்பளத்தில் உருவாக்கப்பட்ட தன்மதிப்புக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். 1955-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள அழைத்து வந்து, எத்துவால் துய் மெர்த்தேன் திடலில் (தற்போது பெரியார் போக்குவரத்து கழகப் பணிமனை) தன்மதிப்புக் கழகம் திருவள்ளுவர் விழாவை நடத்தியது. அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்த விடுதியில் தங்கியிருந்த தந்தை பெரியாரை சந்தித்து உரையாடிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர் பகுத்தறிவு ஏடு, விடுதலை நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்தார்.

தன்மதிப்புக் கழகத் தோழர்கள் எத்துவால் ரங்கசாமி, தூய்ழான் தர்மசிவம், இராமகிருட்டிணன், எழிலன், பெரம்புக்கடை பெருமாள், தொல்காப்பியர், மாணிக்கவேல் சகேர் போன்றவர்களோடு இணைந்து பகுத்தறிவு கருத்துக்களைப் பரப்பியவர்.

மூலிகை மருத்துவத்திலும் புலமைப் பெற்று விளங்கியவர். நாய் கடிக்கு இவர் கொடுத்த மருந்தால் பலர் உயிர் பிழைத்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர்.

இவருக்கு மனைவி அஞ்சலை, காளிதாஸ், கார்த்திகேயன் ஆகிய மகன்களும், விமலா, விஜயா, வினோலியா ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் காளிதாஸ் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர். திரு. தம்பு. சுப்ரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் ஆற்றிய பணிகள் என்றும் மறக்கக்கூடியவை அல்ல. காலத்தால் நிலைத்து நிற்கும் அவரது கொள்கைப் பணிகளைப் போற்றுவோம். பின்பற்றுவோம்.

Thursday, February 03, 2011

முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

குடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.

மேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.

Thursday, January 27, 2011

புதுச்சேரி கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: நீதிவிசாரணைக்கு உத்திரவிட கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 27.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள கெம்பாப் அல்கலீஸ் தொழிற்சாலையில் நேற்றைய தினம் விஷவாயு கசிந்து அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத் திணறியும், வாந்தி எடுத்தும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கெம்பாப் ஆலை மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். மேலும், அதிக நிலத்தடி நீரை உறிஞ்சியும், கழிவுகளை நிலத்திற்கு கீழே பெரிய குழாய்கள் மூலம் அனுப்புவதாலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மாசுப்பட்ட குடிநீரை பல ஆண்டுகளாக குடித்து வருவதால் அவர்களது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு சாஷன் டிரக்ஸ் தொழிற்சாலையில் இதேபோன்று விஷவாயு தாக்கி 5 பேர் பலியானதைத் தொடர்ந்து சாஷன் டிரக்ஸ் மற்றும் கெம்பாப் தொழிற்சாலைகளை மூட வெண்டுமென அப்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தினோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம்.

அப்போது நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி இந்த இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அருகிலிருக்கும் நவோதயா பள்ளி, புதுவைப் பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி மாணாவர்கள் மூச்சுத் தொடர்பான நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

எனவே, புதுச்சேரி அரசு இந்த ஆபத்தான தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

Wednesday, January 26, 2011

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரபா.கல்விமணி உட்பட 10 பேர் கைது: கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 23.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்தியவர்களையும், அதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்விமணி உட்பட தலைவர்களையும் கைது செய்துள்ள தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்புகள் சார்பில் நேற்றைய தினம் கடலூரில் இலங்கைத் தமிழர்களுக்காக கூட்டம் நடத்திய அவ்வமைப்பின் தலைவர் பாலகுரு, பேராசிரியர் பிரபா.கல்விமணி, நகைமுகன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இக்கூட்டம் நடந்து முடிந்தவுடன் போலீசார் அரங்கத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கூட்ட விளம்பர தட்டிகளையும், பதாகைகளையும் கிழித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அனுமதி பெற்று நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தோரை அச்சுறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை ஒடுக்கும் வகையில் போலீசார் நடந்துள்ளனர்.

போலீசாரின் அடக்குமுறையும், தமிழக அரசின் தமிழர் விரோத போக்கையும் வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இல்லையேல், அனைத்து கட்சி, அமைப்புகளையும் ஒன்றுகூட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியில் நடந்த நிதிமோசடி குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 22.01.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில், வணிக அவையில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினர். இதில் கூட்டமைப்பின் அமைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனம் மூலம், முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக தருகிறோம் என்ற பெயரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ள சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். மேலும், இந்த நிதி மோசடியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறோம்.

2.மேற்சொன்ன நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 600 பேர் என்பதாலும், ரூபாய் 13 கோடிக்கு மேல் மக்களின் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாலும் இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, உரிய நடவடிக்கை எடுத்திட சி.ஐ.டி. போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அரசை வற்புறுத்துகிறோம்.

3.நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மக்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, அதனை விற்று அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

4.இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிப்பது என தீர்மானித்துள்ளோம்.

5.நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கவும், இவ்வழக்கில் நீதிக் கிடைத்திட தொடர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் போராட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் பகுதி வாரியாக பிரதிநிதிகள் பங்கேற்பர். இதன் ஒருங்கிணப்பாளராக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இருப்பார் எனவும் முடிவு செய்துள்ளோம்.

Saturday, January 22, 2011

இலங்கை இராணுவம் கைது செய்துள்ள மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்ய கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 22.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய முறைப்படி அனுமதி பெற்று அங்கு சென்ற தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியையும், அவரது உதவியாளரையும் இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிகிறோம்.

விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போர் முடிவுற்ற நிலையில் அங்குள்ள தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வதைப்பட்டு வருகின்றனர். இதனை மனித நேயத்தில் அக்கறையுள்ள அனைவரும் கண்டித்து வருகின்றனர். இதில் ஐ.நா. சபை தலையிட்டு இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி, அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் முறைப்படி விசா பெற்று இலங்கை சென்றுள்ளனர். அங்குள்ள முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டுள்ளனர். அப்போது ஓமந்தை என்னுமிடத்தில் அவர்கள் இருவரையும் இலங்கை இராணுவம் கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

உலகம் முழுவதும் இருந்தும் பலர் இலங்கை சென்று, அங்குள்ள நிலைமைகளை அறிந்து வரும் நிலையில், இவர்களை இலங்கை இராணுவம் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்களை இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்க மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் கயல்விழி மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி என்பதும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதோடு, மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் தந்தி அனுப்பி உள்ளோம்.

Sunday, January 02, 2011

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் - அரங்குக் கூட்ட தீர்மானங்கள்!

சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்
புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும் நீதிமன்றங்களின் போக்கும் என்ற தலைப்பில் அரங்குக்கூட்டம் வணிக அவையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்  நாரா.கலைநாதன்  தொடக்க உரையாற்றினார். புதுச்சேரி பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் கோ.செ.சந்திரன், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் எம்.ஏ.அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஐ.முகம்மது சலீம், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை தேசிய இணைச் செயலாளர் ஜோசப் விக்டர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரயாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. உலகப் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலரும், சட்டிஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காகவும், அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருபவருமான டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோக வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு உரிய நடவாடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2. பொய்யான ஒரு வழக்கில், விசாரணையின் போது எந்தவொரு சாட்சியும் எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில் டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருப்பது என்பது நீதித்துறையின் நீதி வழங்கும் முறையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

3. டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கைத் திரும்பப் பெறவும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தி அனைவரும் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு மனு அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

4. சர்வதேச பிரகடனங்களில் மனித உரிமைப் பாதுகாவலர்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக மனித உரிமைப் பாதுகாவலர்களை இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்துப் பாதுகாக்க அதிகாரம் கொண்ட சுயேட்சையான அமைப்பு ஒன்றை தொடங்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

5. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மனித உரிமைப் பணிகளுக்காக செலவிட்டவரும், ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது இழப்பு மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பேரிழப்பு என்பதை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், திரு. கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் மறைவுக்கு கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Saturday, January 01, 2011

டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் - அரங்குக் கூட்டம்!



அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின், டாக்டர் பினாயக் சென் மீதான வழக்கில் ராய்பூர் நீதிமன்றம் அவருக்கு தேச துரோக குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தங்களுக்கு வழங்கப்பட்டதாக கருதி மனித உரிமை ஆர்வலர்கள் அவரை விடுதலை செய்ய கோரி போராடி வருகின்றனர்.

58 வயது நிரம்பிய டாக்டர் பினாயக் சென் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் பயின்றவர். உலக அளவில் புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர். மிகவும் பின்தங்கிய பகுதியான சட்டிஸ்கரில் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவர். நக்சலைட்டுகளை ஒடுக்க அரசு உருவாக்கிய “சல்வார் ஜீடும்” என்ற தனியார் படைக்கு எதிராகவும், வளம் மிக்க காட்டு நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியையும் எதிர்த்தும் போராடி வருபவர். அவர் “சல்வார் ஜீடும்” படைக்கு எதிராக போராடியதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது.

வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாத அவர் மீது சட்டிஸ்கர் காவல்துறை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனக் கூறி 2007-இல் அவரை கைது செய்தது. நீண்ட போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் 2009-இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை ராய்பூர் நீதிமன்றத்தில் நடந்து முடிந்து, சென்ற டிசம்பர் 24 அன்று, டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோகம் (124-ஏ), கூட்டுச் சதி (120-பி), சட்டிஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (8 (1)) ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண சன்யால், பியூஷ் குகா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.
இவ்வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பினாயக் சென்னிற்கு எதிராக சாட்சியம் அளிக்காத நிலையில், சட்டிஸ்கர் காவல்துறையின் புனைவு நிறைந்த குற்ற அறிக்கையை ஏற்றும், சட்டத்தைச் சாராமலும் ராய்பூர் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு நீதி வழங்கும் முறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

பினாயக் சென் மற்றவர்கள் போல் நகரத்தில் தொழில் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமல், பழங்குடியின மக்களின் நலனுக்காக கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து வருபவர். அவரது மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பெருமைகள் நிறைந்த பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எவராலும் ஏற்றுக் கோள்ள முடியாது என்பதோடு கண்டனத்திற்குரியது.

மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் தேசதுரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பினாயக் சென்னுக்கு தண்டனை வழங்கியுள்ளது அவருக்கு பெருமை குறைவு இல்லை என்றாலும், சட்டத்தை மதித்து நடக்கும் ஒருவரை ‘தேசதுரோகி’ என நீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையதல்ல. அவரது மனைவி லீனா கூறியது போல் “இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள சவாலாகும்”.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ தேசதுரோக பிரிவு வெள்ளையர்களை எதிர்த்து சுதந்தரத்திற்காக போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவ 1898-இல் கொண்டு வரப்பட்ட்து. இச்சட்டத்தை நேரு பிரதமராக இருந்த போது “மிகவும் ஆட்சேபகரமானது, ஏற்புடையதல்ல” என பாராளுமன்றத்தில் எதிர்த்துக் கூறியது கவனிக்கத்தக்கது.

சர்வ தேச மனித உரிமை அமைப்பான “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்” முதல் உள்ளூர் மனித உரிமை அமைப்பு வரை அனைவரும் இத்தீர்ப்பை எதிர்த்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி, வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர், முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் உள்ளிட்டவர்களும் இத்தண்டனையை எதிர்த்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து தற்போது காங்கிரசும் இத்தீர்ப்பை நிராகரித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில், நீதி வேண்டி மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதிமன்றமும் அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பது மனித உரிமையை குழிதோண்டி புதைத்துவிடும் ஆபத்துள்ளது.

எனவே, மனித உரிமையில் அக்கறையுள்ள நாம் அனைவரும் டாக்டர் பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்ப்போம். அவரை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய கோருவோம். நீதித்துறையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நீதி வழங்கும் முறையை ஒழுங்குப்படுத்துவோம்.

நாள்: 2.1.2011 ஞாயிறு. நேரம்: காலை 10 மணி.
இடம்: வணிக அவை, புதுச்சேரி.


பங்கேற்போர்:

தலைமை: திரு.கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

தொடக்கவுரை: திரு. நாரா.கலைநாதன், சட்டமன்ற உறுப்பினர், மாநிலச் செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.

முன்னிலை: திரு.கே.இராம்குமார், தலைவர், புதுவை மாநில பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு.

சிறப்புரை: பேராசிரியர் அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான் மக்கள் கழகம், பேராசிரியர் பிரா.கல்விமணி, ஒருங்கிணைப்பாளர், இருளர் பழங்குடி பாதுகாப்புச் சங்கம்.

உரை: திரு.இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், திரு.கொ.செ.சந்திரன், தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம், கோ.அ.ஜெகன்நாதன், துணை அமைப்பாளர், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, திரு.சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அமபேத்கர் மக்கள் படை, திரு.எம்.ஏ.அஷரப், மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஐ.முகம்மது சலீம், மாவட்ட செயலாளர், மனித நேய மக்கள் கட்சி, திரு.ஜோசப் விக்டர் ராஜ், தேசிய இணைச் செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை, திரு.கு.மோகனசுந்தரம், தலைவர், குடிசை வாழ்வோர் பெருமன்றம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.