Thursday, May 01, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வரவேற்பு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (01.05.2025) விடுத்துள்ள அறிக்கை: 

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வரவேற்கிறோம். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை அரசியல் கட்சிகளாலும், சமூக அமைப்புகளாலும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது.

மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சமூக ரீதியான இடஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என கூறியுள்ளது. 

சாதிவாரி கணகெடுப்பு நடத்தினால் மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதல் சதவீத இஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும். 

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் முன் வைத்த விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படை காரணியாக அமையும். 

மத்திய அரசின் இந்த முடிவு சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கு பெருமளவில் உதவும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறிய சமூக ரீதியான இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் வழங்கக் கூடாது என்பதை மாற்றி கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கவும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் மனதார வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு (Time line) விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

Tuesday, April 15, 2025

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கண்டனம்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.04.2025) விடுத்துள்ள அறிக்கை: 

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடிவிட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்துவது ஏமாற்று வேலை என்பதால் புதுச்சேரி அரசின் போக்கை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் கண்டிக்கிறோம். 

1986ஆம் ஆண்டு முதல் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. கலை, பண்பாட்டுத் துறை இந்நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாமலும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அந்நிறுவனத்தை மூடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தில் புதுச்சேரி மாணவர்கள் பலர் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்து எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று உயர் பதவிகளில் உள்ளனர். 

மேலும், லாஸ்பேட்டையில் இந்நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தை வேறு துறைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். இதனைக் கலை, பண்பாட்டுத் துறைச் செயலர் நெடுஞ்செழியன் ஐ.ஏ.எஸ்., தன்னிசையாக முடிவெடுத்து செய்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர் கலை, பண்பாட்டுத் துறை சீர்கெட்டுள்ளது. 

தமிழ் அமைப்பினர் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதைக் கைவிட்டு, அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென கோரியுள்ளனர். ஒருபுறம் உலகத் தமிழ் மாநாடு நடத்துகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபுறம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட இந்நிறுவனத்தை மூடுவது கடும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரி அரசின் இந்த ஏமாற்று வேலையை தமிழாய்ந்த தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். 

எனவே, புதுச்சேரி அரசு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர், பேராசிரியர்களை உடனே நியமித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Sunday, March 23, 2025

1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 1ஆம் வகுப்பு மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த பிப்ரவரி 15 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவரிடம் சென்ற தனியார் பள்ளி 1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் தொடர்ந்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுத்த தவளக்குப்பம் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றமிழைத்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 கடந்த 13.03.2025 அன்று முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை.

மாணவிக்குத் தொடர் பாலியல் வன்கொடுமை நடந்ததைத் தடுக்கத் தவறியதோடு, உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் இன்னமும் வழக்கில் சேர்த்து கைது செய்யப்படவில்லை. பள்ளி தாளாளர் ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் அரசும், காவல்துறையும் குற்றமிழைத்த இருவரையும் காப்பாற்றி வருகிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இப்பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிக் கிடைக்கக் குரல் கொடுக்கவில்லை.

 கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக கண்காணிக்க தவறியதால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அரசுதான் முழுப் பொறுப்பு (Vicariously liable) ஆகும்.

எனவே, அரசு இனியும் காலங்கடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் உடனே வழங்க வேண்டும். இல்லையேல், கட்சி, அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.


Sunday, March 16, 2025

சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாநிலத் தகுதி கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (16.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கக் கோரி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தாதது ஏன்? என்பது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 14.08.2024 அன்று புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் என அனைவரையும் டில்லி அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்துவோம்' என அறிவித்தார். ஆனால், இதுவரையில் சட்டமன்றத்தில் அறிவித்தபடி செய்யவில்லை.

ஆனால், தற்போது முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்கள் 'துணைநிலை ஆளுநர் வரும் 15ஆம் நாளன்று குஜராத் செல்கிறார். அப்போது பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மாநிலத் தகுதி, நிதிக்குழுவில் சேர்ப்பது குறித்துப் பேசுவார். மாநிலத் தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இது கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றதாகும்.

சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இதுவரையில் 15 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சார்பில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்க வலியுறுத்த முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, March 13, 2025

1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

 


முதலமைச்சரிடம் பொதுநல அமைப்புகள் மனு!!

புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று (13.03.2025) மாலையில் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், புரட்சியாளர்  அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, பி போல்ட் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவி (வயது 7) ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டப் பிரிவு 6-ன்கீழ் வழக்குப் பதிந்து,  கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற போதுதான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன்மூலம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. 

எனவே, பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோரை மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குப் பிணை கிடைக்காமல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் வைத்தே புலன்விசாரணை முடித்து, குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவிக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கவும், உளவியல் கவுன்சிலிங் வழங்கவும், ரூபாய் 25 இலட்சம் நிவாரணம் வழங்கவும் வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி, டி.ஐ.ஜி., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. உள்ளிட்டோருக்கும் அளிக்கப்பட்டது.

Saturday, February 15, 2025

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர் பாலியல் துன்புறுத்தல்: கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (15.02.2025) விடுத்துள்ள அறிக்கை:

1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமான பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

தனியார் பள்ளி 1ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அச்சிறுமியின் குடும்பத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆசிரியர் மணிகண்டன் மீது தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர், பள்ளிக்குத் தற்காலிகமாக சீல் வைக்கப்படும், புகார் கூறிய மாணவியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களைத் தாக்கிய போலீசார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், குற்றமிழைத்த ஆசிரியருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. அ.குலோத்துங்கன் உறுதியளித்த பின்னர் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆசிரியர் மணிகண்டன் மாணவிக்கு 4 மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மீதும் போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் விரைந்து குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து குற்றமிழைத்த ஆசிரியருக்குத் தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.

மூலக்குளம் தனியார் பள்ளியில் மாணவர் சக மாணவரைக் கத்தியால் குத்தினார், அம்மாணவரிடமிருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி +2 மாணவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். புதுக்குப்பம் தொடக்கப் பள்ளியில் பழைய நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர், 4ம் வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பல சம்பவங்களை மூடி மறைத்துள்ளனர். இதனால் குற்றமிழைத்த ஆசிரியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைக் கண்காணிப்பதே இல்லை. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கும் நிலைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மாணவ, மாணவியருக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் இதில் தலையிட்டுப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் (Director), இணை இயக்குநர் (Joint Director), முதன்மைக் கல்வி அதிகாரி (Chief Educational Officer) ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையேல், பொதுநல அமைப்புகள் சார்பில் கல்வித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என புதுச்சேரி அரசை எச்சரிக்கிறோம்.

Thursday, January 23, 2025

தனியார் பள்ளியில் +1 மாணவருக்குக் கத்திக்குத்து, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.01.2025) விடுத்துள்ள அறிக்கை: 

புதுச்சேரி தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக +1 மாணவருக்குக் கத்திக்குத்து, ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம் என்பதால் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பேஸ்புக் செய்தி தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் நேற்றைய தினம் +1 மாணவரை சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அம்மாணவரிடம் இருந்துப் போலீசார் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளைப்  பறிமுதல் செய்துள்ளனர்.  

மாணவர்களிடையே வன்முறைக் கலாச்சாரம் பரவுவதற்குப் பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக சீர்கேடே காரணம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தவறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக சலுகைகள் அளித்து அதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர். 

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அவர்களைச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும். அதைவிடுத்து மாணவர்களைக் குற்றம் செய்பவர்களாக ஆக்குவது இளம் தலைமுறையைப் பாதிக்கும்.  

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்புகள் (Moral classes) தற்போது நடத்தப்படுவதில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டு, கலை, இலக்கிய ஆர்வம் வளர்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் அளிக்க வேண்டும். பள்ளி மாணவர்களை வெறும் பாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக உருவாக்கக் கூடாது. 

பள்ளிக் கல்வித்துறை ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது. மாணவர்களின் நலனே முதன்மையானது என செயல்பட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். எனவே, காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு உடனே வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மாணவர் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயார் செய்ததாகவும், அரியாங்குப்பத்தில் பட்டாசு வாங்கி அதிலிருந்து வெடிமருந்துகளைப் பிரித்து வெடிகுண்டு தயாரித்ததாகவும் தெரிகிறது. மாணவனுக்குப் பட்டாசு விற்றவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிய வேண்டும். பட்டாசு விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

Sunday, January 12, 2025

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.01.2025) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 10.01.2025 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி நாராயணன் (வயது 45) நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார். சிறையில் உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்துபோன நாராயணனின் உறவினர்கள் அவருக்குச் சின்ன வயது, எவ்வித நோயும் இல்லை என்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

கடந்த 16.09.2024 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைச் சிறைவாசியான பிரதீஷ் (வயது 23) கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீஷ் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழு விவரங்களையும் அளிக்குமாறு டி.ஜி.பி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் சிறைவாசிகள் மரணம் அடிக்கடி நடக்கிறது. சிறைவாசிகளைப் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தோல்வி அடைந்துள்ளது.

சிறைவாசி நாராயணன் மரணத்திற்கு புதுச்சேரி அரசும் சிறைத்துறையும் பொறுப்பு (Vicariously liable) என்பதால், அவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோன சிறைவாசிகள் விவேகானந்தன், பிரதீஷ் குடும்பத்தினருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

 எனவே, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Friday, December 20, 2024

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் மறைவு: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.12.2024) விடுக்கும் இரங்கல் குறிப்பு:

புதுச்சேரி மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் மறைவுக்கு 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மூத்த வழக்கறிஞர் ஆர்.பலராமன் (வயது 88) நேற்று (19.12.2024) உடல்நலம்குன்றி காலமானார்.

புதுச்சேரி மூத்த  வழக்கறிஞர் ஆர்.பலராமன் அவர்கள் கற்றுத் தேர்ந்த வழக்கறிஞர் என்பதோடு பல வழக்குகளைத் திறம்பட நடத்தியவர். 

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மறைந்த எஸ்.இராஜசூர்யா அவர்கள் தலைமையில் இயங்கிய காவலர் புகார் ஆணையத்தின் (Police Complaints Authority) உறுப்பினராக இருந்து பொறுப்புடன் பணியாற்றியவர். 

காவலர் புகார் ஆணையத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு புகார்கள் அளித்த போது அதன் மீது பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க உரிய உத்திரவுகள் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 

புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திற்குக் குறிக்கோள்கள், விதிகளை உருவாக்கிப் பதிவு செய்ய காரணமாக இருந்தவர். 

அவரது மறைவு வழக்கறிஞர் சமூகத்திற்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, December 09, 2024

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டும் பணி கடந்த 11.02.2022 அன்று தொடங்கியது. ரூபாய் 60 கோடியில் 360 மீட்டர் நீளம் 18 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் கடந்த 28.10.2024 அன்று துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் புயல், மழையின் போது இப்பாலத்தின் கிழக்குப் பகுதி இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள்ளேயே விரிசல் ஏற்பட்டதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான் பொறுப்பு. பொதுமக்களின் உயிர்களுடன் விளையாடும் அரசசையும், பொதுப்பணித்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்பாலத்தைக் கட்ட பொறுப்பாக இருந்த பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் பதவி உயர்வுப் பெறவும், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுதான் வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இப்பதவியைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரியால் எப்படி இப்பாலத்தை முறையாகக் கட்டி இருக்க முடியும். இப்பாலம் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

இப்பாலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவழித்து முறையாகக் கட்டப்பட்டுள்ளதா, மக்கள் பயணம் செய்ய பாதுகாப்பானதா என்பது குறித்து வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், சங்கராபரணி ஆற்றுப் பாலம் கட்டியதில் நடந்த ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்திரவிட வேண்டும்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர், மத்திய உள்துறைச் செயலர், சி.பி.ஐ. இயக்குநர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.