Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, October 31, 2009

இலங்கையில் முகாமிற்குள் சிறைப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அமைப்புக் குழுக் கூட்டம், 27.10.2009 அன்று மாலை 7 மணியளவில், கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் சூ.சின்னப்பா, சு.சாமிநாதன், பா.மார்கண்டன், கி.கண்ணன், மு.பொன்னுசாமி, ச.கோவிந்தசாமி, சு.காளிதாஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் முள் வேளி முகாமிற்குள் 3 லட்சம் தமிழர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய - தமிழக அரசுகள் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறைப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) கிராம பஞ்சாயத்துகளுக்கு அண்டை மாநிலங்களில் உள்ளது போல் அனைத்து அதிகாரங்களையும் உடனே வழங்கி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்த ஆவன செய்ய புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறோம்.

3) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளின் போது 7 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யபடுகின்றனர். அதே போல், வரும் டிசம்பர் 8, சோனியா காந்தி பிறந்த நாளன்று, புதுச்சேரி சிறைகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால், நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் புலவர் கலியபெருமாள் மனைவி வாளாம்பாள், தனித் தமிழ்க் கழகத்தின் காப்பாளர் தேசிகன் (எ) திருநாவுக்கரசு ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, April 05, 2009

ஏப்ரல் 8, சென்னையில்: இலங்கையில் போரை நிறுத்த கோரி "கண்டன ஆர்ப்பாட்டம்"

‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் குழு’ சார்பில் வரும் 8.4.2009 புதனன்று மதியம் 3 முதல் 6 மணி வரையில், சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில், இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தக் கோரியும், தமிழ்ப் பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் "கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

இக்குழு இந்த நோக்கங்களுக்காக வரும் 8.04.2009 அன்று உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் சாத்தியமான அளவிற்கு ஆர்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்துவதற்கும், தமிழர்களைப் படுகொலை செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்தியா உள்ளிட்ட ‘உலக நாடுகள்’ இலங்கைக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கு பெறுமாறு வேண்டுகிறோம்.

ஈழப் பிரச்சனையில் அக்கறை உள்ள இயக்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கு பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெறுவீர்!

கண்டன உரைகள்:

பேரா.அ.மார்க்ஸ், ஒருங்கிணைப்பாளர், அணிதிரட்டும் குழு.

கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

பாவேந்தன், செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்.

முனைவர் ப. சிவக்குமார், முன்னாள் அரசுக் கல்லூரி முதல்வர்.

துரைசிங்கவேல், புதிய போராளி இதழ்.

அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை.

மோகன்,பொதுச்செயலாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கம்.

உதயம் மனோகரன், மக்கள் வழக்குறைஞர் சங்கம், சென்னை.

மோகன் குமார், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், கோவை.

இசையரசன், ‘தண்டோரா’ அமைப்பு.

கென்னடி, மக்கள் போராட்ட மையம்,கொள்ளிடம்.

கீதா, அமைப்பு சாரா தொழிலாளர் தேசீய இயக்கம்.

காதர் ஷெரீப், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,காஞ்சிபுரம்.

ஜெயக்குமார், வழக்குறைஞர், சென்னை.

வெங்கட், புதிய சோசலிச மாற்று.

ஜென்னி, அணி திரட்டும் குழு.

Monday, March 02, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை!

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்:

1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.
4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.
6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.
7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.
8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.
9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.
10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.

இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்-எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.

இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.

பின்னணி:

ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.

அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.

தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.

இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.

பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.

தாக்குதல்

உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.

காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.
ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.

வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.

எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.

சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.

ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.

2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.

3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?

4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .
5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்

1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்

ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.

5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.

Thursday, January 29, 2009

ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார் - படங்கள் - வீடியோ!


தற்கொலை செய்துக் கொண்டு
மாண்ட முத்துக்குமார்.



எரிந்த நிலையில் முத்துக்குமார்.


சம்பவம் நடந்த சாஸ்திரி பவன்.


மருத்துவமனையில் மருத்துவர் இராமதாசு, வைகோ,
தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர்...



முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தைப்
படிக்கிறார் வைகோ.




தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.

தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!

Wednesday, December 24, 2008

தில்லி: இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவைத் திரட்டிய புதுச்சேரி கட்சி - இயக்கத்தினர்!




இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வேண்டும், எவ்வகையிலும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என அரசை வலியுறுத்தவும், அகில இந்திய கட்சிகளிடம் ஆதரவுத் திரட்டவும் புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் தில்லி பயணம் மேற்கொண்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, 15.12.2008 திங்களன்று மதியம் 12.30 மணிக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலர் ப.அமுதவன், மறுமலர்ச்சி தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் வ.செல்வராசு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளர் உ.முத்து, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகச் செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ ஆகியோர் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இப்போராட்ட்த்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான இந்த இனவெறி போரில் இதுவரையில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடு, வாசல் இழந்து 3.5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 9 லட்சம் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனவெறி போக்கோடு போரை தொடர்ந்து வருகிறது. ஐ.நா. அவையின் இனவெறிக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசின் போர் அப்பட்டமான இனவெறி என்பதோடு கிரிமினல் குற்றமாகும்.

இந்திய அரசு இலங்கை இனப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு நடைபெறும் போரை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு எந்த வகையிலும் இராணுவ உதவி வழங்க கூடாது.

இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கு இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்தியா சார்க் நாடுகளுக்குத் தலைமை வகிப்பதால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு கால் நூற்றாண்டு இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட பிரனாப் முகர்ஜி அதனை முழுமையாக படித்து பார்த்தார். பின்னர் அவர் 'இலங்கையில் மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். அரசுக்கு எல்லாம் தெரியும். இதுகுறித்து அரசு அக்கறையோடு இருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. போரை இலங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. போரினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது அரசின் கவனத்தில் உள்ளது. தாங்கள் அளித்த மனுவில் சொல்லப்பட்டவைப் பற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களுடனான சந்திப்பிற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டாக்டர் பருண் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் ' இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா?' என டாக்டர் பருண் முகர்ஜி கேட்டார். அதற்கு அவர் ' நாம் எடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை உடனுக்குடன் எதிர் நிலை எடுக்கிறது. பொறுத்திருங்கள், பார்ப்போம்' என்று கூறினார்.

பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் பி.மோகன், பெல்லார்மீன், ம.தி.மு.க. எம்.பி. சிப்பிப்பாறை இரவிச்சந்திரன் ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்து தில்லி வந்த நோக்கத்தை விளக்கினர். அப்போது அவர்களோடு இருந்த அதிமுக ராஜசபா எம்.பி. ஒருவர் 'இக்குழுவில் எங்கள் கட்சியினர் வந்திருக்கிறார்களா?' என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், 15.12.2008 அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிஸ்வாஸ், 16.12.2008 அன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இச்சந்திப்பின் போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘இந்த பிரச்சனை என் துறையின் கீழ் வரவில்லை. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியிடம் நாளை நேரில் பேசுகிறேன். எங்கள் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும்’ எனக் கூறினார்.

லோக் ஜனசக்தி தலைவர் இராம்விலாஸ் பஸ்வான் ‘தங்கள் கட்சி இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்’ உறுதியளித்தார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் நீண்ட நேரம் கலந்துரையாடினார். ‘எங்கள் கட்சி நேதாஜி வழியில் வந்த புரட்சிகர கட்சி. நாங்கள் அடக்குமுறை எந்தவடிவில் இருந்தாலும் அதை எதிர்ப்போம். நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து மக்கள் போராடிய போது, மன்னருக்கு ஆதரவாக இந்திய அரசு நிலை எடுக்ககக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு தீவிரமாக ஆதரவுத் திரட்டினோம். தற்போது தேர்தல் நேரம். அரசும், கட்சிகளும் தேர்தலிலேயே கவனமாக இருப்பார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து எங்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும். தமிழர்கள் பாதிக்கப்படுவது பற்றி இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்ட வேண்டும். மேலும் ஜனவரி மாதம் நான் இலங்கைச் சென்று நிலைமைகளை நேரில் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்’ என உறுதிபட கூறினார்.

புதுச்சேரி கட்சி, இயக்கத்தினர் மேற்கொண்ட தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, 18.12.2008 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான சீத்தாராம் யெச்சூரி தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பி.மோகன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில், 'இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வுக் காண வேண்டும். இதற்கு இந்தியா தன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் இராமதாஸ், எம்.பி. தலைமையில் பா.ம.க. எம்.பி.க்கள் அகில இந்தியக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Tuesday, December 09, 2008

புதுச்சேரி: தமிழக தலைவர்களை இழிவுப்படுத்திய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்பு!









தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா உருவபொம்மை எரிப்புப் போராட்டம் புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், 9-12-2008 செவ்வாயன்று, காலை 10.30 மணியளவில், ஒதியஞ்சாலை, அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார். போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் ப.அமுதவன், ம.தி.மு.க. அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கபிரியேல், வ.செல்வராசு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயலாளர் யூ.முத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, லோக் ஜனசக்தி தலைவர் புரட்சிவேந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முரசொலி மாறன் பேரவைத் தலைவர் நடராசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் 250 பேர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன:

1) தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை கோமாளிகள் என இழிவுபடுத்திப் பேசிய இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வன்மையாக கண்டிக்கிறோம்.

2) மத்திய அரசு உடனடியாக இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

3) இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

ஈழத்தமிழர் துயர் துடைக்க புதுச்சேரியில் ஓவியக் கண்காட்சி!







புதுச்சேரி வி-5 குழு ஓவியர்கள் மற்றும் ஓவியக் கலைஞர்கள் சார்பில் ஈழத்தமிழர் நிவாரண நிதிக்காக வீதியோர ஓவியக் கண்காட்சி கடற்கரைச் சாலை காந்தி திடலில் இரண்டு நாட்கள் (6,7-12-2008) நடைபெற்றது.

கண்காட்சிக்கு ஓவியர் தனசேகர் தலைமைத் தாங்கினார். ஓவியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஓவியர்கள் எழிலரசன், திருநாவுக்கரசு, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் கலந்துக் கொண்டு ஆதரவுத் தெரிவித்தனர்.

கண்காட்சியில் இளம் ஓவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் காண்காட்சிக்கு வருவோர்களின் முகபாவங்களை ஓவியர்கள் உடனுக்குடன் வரைந்தும் அதன்மூலம் தொகை ஈட்டினர்.

ஓவிய விற்பனை மற்றும் ஓவியம் வரைந்ததின் மூலம் கிடைக்கும் நிதியை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அத்தொகையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

நீர் வண்ண ஓவியங்கள் ரூ.100 முதல் நெய் வண்ண ஓவியங்கள் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரையில் விலையுள்ள ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. குறைந்த விலை ஓவியங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஈழத் தமிழர் படும் துயரங்களை விளக்கிய துண்டறிக்கை அளித்தனர்.

இக்கண்காட்சி மூலம் ரூ50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வீரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி ஓவியர்களின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். பல்வேறு அமைப்பினர் ஓவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Thursday, December 04, 2008

திருக்கோணமலையில் கவிஞர் சு.வில்வரெத்தினம் - நினைவு நிகழ்வு!

எதிர்வரும் 09-12-2008 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சு.வி-யின் வருகையும் வசிப்பும் திருக்கோணமலை நகரின் அக்காலகட்டத்து சமூக - வாசிப்பு - எழுத்து - நாடகத் துறையில் கணிசமானளவு பங்களிப்பினையும் அதிர்வினையும் ஏற்படுத்தியது.

அதையும் தாண்டி ஈழத்து எழுத்துத்துறையில் அன்னாரது பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து, அத்துறையில் பரிச்சயம் கொண்டவர்கள் கருதுவதை கண்டும் கேட்டும் வாசித்தும் நாம் அறியக்கூடியதாயிருக்கும்.

தனிப்பட, அவரது ஆளுமையும், பழகும் முறையும், திறந்த மனதும் அதிகமதிகம் கவர, அவரது கனிவின் இசை லயத்தில் கட்டுண்டு கிடந்தவர்களாக நம்மில் சிலர் இருந்திருப்போம்.

ஆற்றலும், ஆளுமையும், கவிதையும், தமிழும், கலையும், கனிவும், ஆன்மீகமுமாய் இன்னும் பலவுமாய் வாழ்ந்து பின் நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கி நடுவழியில் பிரிந்து சென்ற அந்தக் கவிஞனை நினைத்து திருக்கோணமலை நண்பர்கள் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள இணையவாசிகள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்...

மேலதிக தகவல்களுக்கு இதைச் சொடுக்கவும்

Friday, November 21, 2008

தமிழக - புதுச்சேரி மீனவர்கள் சிங்கள கடற்படையால் கடத்தப்பட்டுச் சிறை: கண்டன ஆர்ப்பாட்டம்!







கடந்த 17-11-2008 அன்று தமிழகத்தைச்சேர்ந்த ஜெகதாபட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி பகுதி காரைக்கால் மீனவர்கள் 15 பேர் உட்பட 28 மீனவர்களைச் சிங்கள கடற்படை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று (19-11-2008, வெள்ளி) காலை 10 முதல் 2.00 மணிவரையில், பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், லோகு.அய்யப்பன், தலைவர், பெரியார் தி.க., கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், அமைப்பாளர், வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் பாசறை, கஜேந்திரன், தலைவர், பசுமை பாரதம் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கணடன் உரையாற்றினர்.

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதி கிளிங்சல்மேட்டைச் சேர்ந்த திருமுருகன், தமிழ்மணி, குமார், சக்திவேல், நாகராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த பன்னீர், ராஜ், சுப்பிரமணியன், முருகவேல், காசாக்குடிமேட்டைச் சேர்ந்த சிவவடிவேல், சின்னையன், செல்வகுமார், கார்த்திக் ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு தற்போது் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.

Tuesday, November 18, 2008

புதுச்சேரியில் நவம்பர் 25-இல் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி "முழு அடைப்பு"



ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் 18-11-2008 செவ்வாய் அன்று மாலை 4.00 மணியளவில் முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் நாரா.கலைநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் இரா.விசுவநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், வி.எஸ்.அபிஷேகம், இராமமூர்த்தி, கீதநாதன், செல்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), சிவக்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன் , வ.செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), தங்க.கலைமாறன்,(பகுஜன் சமாஜ் கட்சி), தி.சஞ்சீவி, (இராஷ்டிரிய ஜனதா தளம்), சுந்தரமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), லோகு.அய்யப்பன், விசயசங்கர், தந்தைபிரியன் (பெரியார் தி.க.), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.மங்கையர்செல்வன், வ.குப்புராசு (மீனவர் விடுதலை வேங்கைகள்), ந.மு.தமிழ்மணி,(செந்தமிழர் இயக்கம்), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), மு.அ.குப்புசாமி, (தமிழர் திராவிடர் கழகம்) ஆகிய கட்சி - இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கையில் நடைபெறும் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 25-11-2008 செவ்வாயன்று புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வையில் வரும் 23, 24 ஆகிய இரு நாட்களில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 25-இல் தமிழ்கம் முழுவதும் "முழு அடைப்பு" நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 12, 2008

தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!









மேடையில் தலைவர்கள்...


டி.இராஜா...


கோ.சுகுமாரன்...

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.

தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணி - மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000 தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி, தில்லியில் உள்ள மண்டியா இல்லம் பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது.

இப்பேரணியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஈழத் தமிழர் ஆதரவு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்தனர்.

பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்கு இராஜீவ் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆ.கலையரசன் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) தொடக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் மாணவ மாணவியர் சார்பில் பல்லவி (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை - JNUSU, பொதுச்செயலாளர்), பிரியதர்சினி (ஜனநாயக மாணவர் சங்கம் - DSU, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), கார்மேகம் (அகில இந்திய மாணவர் கழகம் - ASA, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), ஆதிகேசவன் (சட்டக் கல்லூரி, தில்லி பல்கலைகழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா, புதிய தமிழகம் கட்சி நிறுவநர் டாக்டர் கிருஷ்ணசாமி, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியை இரா.விஜயலட்சுமி, பேராசிரியை சரசுவதி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தில்லிப் ப்ல்கலைக் கழக மாணவர் குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் கையொலி எழுப்பி ஆதரித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.இராஜா பேசியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி. இலங்கைப் பிரச்சினை அரை நூற்றாண்டு காலப் பிரச்சினை. இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஆரம்பித்ததற்கு காரணம்.

1956-ஆம் ஆண்டு இலங்கை அரசு "சிங்கள ஆட்சி மொழிச் சட்டம்" இயற்றியது. இதன்படி தமிழ் மொழி இரண்டாந்தர மொழியானது. அதேபோல், 1961-இல் "சிங்கள நீதிமன்ற மொழிச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதனால், தமிழ் நீதிமன்ற மொழியிலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர், 1972-இல் இலங்கை அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. இதனை எதிர்த்துதான் தமிழர்கள் அங்குப் போராட தொடங்கினார்கள்.

ஈழத்தின் தந்தை எனக் கருதப்படும் செல்வநாயகம் தலைமையில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம்தான் இன்று தேசிய இனப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை தேசிய இனப் போராட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. அதையும் தாண்டி ஜனநாயகத்திற்கான போராட்டமாக பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கூறி நான் இங்கு ஒப்பாரி வைக்க விரும்பவில்லை. ஈழத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க அங்கு பூர்ணப் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடப்பது 'இன அழிப்புப் போர்' (Genocide) என்பதை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன், பேசி வருகிறேன்.

இந்தப் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று சொல்கிறோம். இந்தியா ஒரு சுதந்திர நாடு, இலங்கை ஒரு சுதந்திர நாடு. எனவே, இந்தியா அந்நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது என்பது தவறு. அங்கு நடக்கும் பிரச்சைனையில் இந்தியாவும் ஈடுபடுத்தப்படுகிறது. ஏனெனில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம் பேர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்தியா தலையிட்டாக வேண்டும்.

இந்தியா இராணுவ உதவி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அரசோ ஆயுத உதவி வழங்கவில்லை ராடார் கருவி போன்றவற்றை வழங்கியுள்ளதாக கூறுகிறது. எந்த உதவி வழங்கினாலும் அது தமிழருக்கு எதிரான போருக்குத்தான் பயன்படுத்தப்படும். இந்தியா எந்த உதவியும் வழங்கக்கூடாது.

இலங்கைப் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது என்பதை பல முறை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன். பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் (Ceasefire) செய்யப்பட வேண்டும். இதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

வரும் 14-ந் தேதியன்று அகில இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடக்க உள்ளது. அதில் ஈழப் பிரச்சினையையும் ஒன்றாக எழுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதியில் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிய பின், இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது நடத்தி வந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தாததால், தமிழீழ மக்கள் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும். இலங்கை விவகாரம் உள்நாட்டு பிரச்சினை இல்லை என்பதால், இந்தியா உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். போரை நிறுத்தாமல் நிவாரண பொருட்களை வழங்குவது எந்தவித பயனும் அளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 ஆயிரம் மாணவர்கள் பேரணி - இரத்தக் கைரேகையிட்டு ஆளுநரிடம் மனு!






ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 04-11-2008 அன்று, புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று இரத்தக் கைரேகையிட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு இராணுவ உதவி உள்ளிட்ட எந்த உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது, பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்குச் சென்று மாணவர்களை ஒன்று திரட்டிய புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் பிரமாண்ட பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஷ் (எ) சாமிநாதன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் தி.க. அமைப்பாளர் தந்தைபிரியன், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் முத்து, செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசுக் கல்லூரி, தவளக்குப்பம் தாகூர் இணைப்பு கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேநிலைப் பள்ளி, வ.உ.சி அரசு மேநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காலை 10 மணிக்கு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாணவர்களைத் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க 10 மாணவ, மாணவியரை ராஜ்நிவாசுக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். மனுவில் மாணவ, மாணவியர் இரத்த கைரேகையிட்டு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரிடம் அளித்தனர்.

மனுவில் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா தலையிட்டு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும், மருந்துகள், உணவு பொருட்களைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய கூடாது, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரணியில் புதுச்சேரியின் கிராம பகுதிகளிலிருந்து டெம்போ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பிரமாண்ட பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் நடத்திய பேரணியால் புதுச்சேரி குலுங்கியது.

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கட்சி, இயக்கத் தலைவர்கள் கண்டனம்!

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் ரகளை செய்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் 05-11-2008 அன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

போராடிய தமிழ் அமைப்பினர் மீது வழக்குப் போட உத்தரவிட்டதன் மூலம் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், தமிழருக்கு எதிரானப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் உள்துறை அமைச்சர் வல்சராஜ் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடந்த 1-ஆம் நாளன்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் அமைதியாகப் போராடியவர்கள் மீது இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தி, ரகளையில் ஈடுபட்டது. அங்கிருந்த போலீசாரையும் ஆபாசமாகப் பேசி தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் அனைத்தும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த வன்முறையை தட்டிக் கேட்ட கட்சி, இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உள்துறை அமைச்சர் வல்சராஜ் தொலைபேசியில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாண்டியனோடு உப்பளம் வெடிகுண்டு வழக்கிள்ள குற்றாவாளிகளும் இருந்துள்ளனர் என்பது பத்திரிகை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் மூலம் தெரிகிறது.

பாண்டியன் தலைமையிலான கும்பல் ஆளுநர் மாளிகை வாயிலிலும் தாராறு செய்துள்ளது. அப்போது பாண்டியன் புதுச்சேரியின் தலைமை நிர்வாகியான ஆளுநரை தரக்குறைவாகவும், தங்கள் தயவில் பதவிக்கு வந்தவர் என்றும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது போலீசார் அருகிலிருந்து வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய ஆளுநர் அவர்கள் போராட்ட குணம்மிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த அந்த சமூகத்தையே இழிவுப்படுத்தியதாக கருத வேண்டியுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்குமுன் பாண்டியன் உள்துறை அமைச்சர் வல்சராஜ் அறையில் இருந்துள்ளார். இதனால், இதன் பின்னணியில் அமைச்சர் வல்சராஜ் செயல்படுகிறார் என குற்றம்சாட்டுகிறோம்.

திட்டமிட்டு உண்ணாவிரத்த்தில் கலவரம் செய்த பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

அமைச்சர் வல்சராஜ் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. தமிழ் அமைப்பினர் மீது கடும் நெருக்கடியும், அடக்குமுறையும் ஏவப்படுகிறது. இது அவரது தமிழ் இன விரோதப் போக்கைக் காட்டுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாண்டியன் போன்ற சமூகத்திற்கு விரோதாமான நபர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடக்குமுறையால் தமிழ் உணர்வையும், தமிழர்களையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இந்த தமிழருக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஒன்று கூடிப் போராட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களுக்கு புதுச்சேரி தமிழர்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்:

சு.பாவாணன், அமைப்புச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
அரசு.வணங்காமுடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., இரா.வீராசாமி, துணைத் தலைவர், பெரியார் தி.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், ஆ.மு.கிருஷ்ணன், புதுச்சேரி முத்தமிழ் மன்றம்,
நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் இலக்கியப் பாசறை, இரா.சுகுமாரன், புரட்சிகர இளைஞர் முன்னணி, கலைப்புலி சங்கர், இளைஞர் அணித் தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

Tuesday, November 11, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கண்டனம்!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கடந்த 01-11-2008 அன்று முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையினான ரவுடிக் கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டது.

இதை தட்டிக் கேட்ட அரசியல் கட்சி, சமுதாய இயங்கங்களின் தலைவர்கள் மீது புதுச்சேரி போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.தி.மு.க. பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைதான தோழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், ம.தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.செல்வராஜ், கபரியேல், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வேட் பிளாக் தலைவர் முத்து, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், புரட்சிக் குயில் இலக்கியப் பாசறை ஆனந்தகுமார் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி தமிழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புத் தொண்டர்கள் 80 பேர் தாங்களும் கைதாகிறோம் என்று கூறி கைதானர்கள்.

இந்நிலையில், இதுகுறித்து 03-11-2008 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காந்தீய வழியில் அமைதியாக நடந்த உண்ணாவிரதத்தில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் உள்ளிட்ட சட்டவிரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 1-ஆம் நாளான்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்பினர் போலீஸ் அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்க முற்பட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரை நெட்டித் தள்ளித் தகராறு செய்துள்ளனர். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் பாதியில் நின்றது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விமர்சித்துப் பேசியதாக கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், ம.தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரன் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்ணாவிரத்ததில் பங்கேற்காத, பேசாத லோகு.அய்யப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ஜனதா கட்சி சுப்பிரமணியசாமி சோனியா காந்தி பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். பாண்டியனுக்கு உண்மையில் சோனியா காந்தி மீது அக்கறை இருந்தால் சுப்பிரமணியசாமி மீதுதான் நடவடிக்கை எடுக்க கேட்க வேண்டும்.

அப்படியே சோனியாவை விமர்சித்துப் பேசியிருந்தாலும்கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டது கிரிமினல் குற்றம். ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் இது போன்ற அராஜகத்தை அரசும், போலீசும் வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல.

உண்ணாவிரத்த்தில் ரகளை செய்த இளைஞர் காங்கிரசார் மீது இதுவரையில் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குற்றவாளிகள் சுதந்தரமாக வெளியில் சுற்றித் வருகின்றனர். புதுச்சேரி போலீசின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல், அச்சுறுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

மேலும், பாண்டியன் போன்றவர்களின் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் ஏற்கனவே சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மேலும் சிதைக்கும் என்பதை காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் நலன் காக்கப் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ரகளையில் ஈடுபடும் இளைஞர் காங்கிரசார்...


காங்கிரசாரின் அராஜகத்தை எதிர்த்த ஈழத் தமிழர் ஆதரவுத்
தோழர்களைக் கைது செய்யும் போலீசார்...

Wednesday, October 29, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி புதுச்சேரியில் வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு!

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் கடந்த 17-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.

அதே போல் புதுவையிலும், புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்டதுபோல் புதுவையிலும் 31-ஆம் நாளன்று நடத்த முடிவு செய்யப் பட்டது.

அதன்படி வருகிற 31-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டத்தைத் திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டம் இன்று (29-10-2008) நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.கு.இராமன் தலைமை தாங்கினார். புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முகமது நிசாம் வரவேற்றார். சங்க ஆலோசகர் இரா.அழகிரி முன்னிலை வகித்தார்

கூட்டத்தில் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவஞானம், அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணையன், கனகராஜ், மற்றும் வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வ ராஜ், எலக்ட்ரிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், புத்தக வியாபாரிகள் சங்கத்தலைவர் இராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு வியாபாரிள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திட்டமிட்டபடி வருகிற 31-ஆம் நாளன்று புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு ஆயுத உதவி அளிப்பதை எதிர்த்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்லவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

Monday, October 20, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதி : புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டமன்றத்தில் தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தனிநபர் தீர்மானங்கள் கொடுத்திருந்தன. இதன்மீது விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தின.

இதனை ஏற்றுக் கொண்ட புதுச்சேரி முதல்வர் வி.வைத்தியலிங்கம், அரசு சார்பில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:

"இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிகைகளால் இலங்கை வாழ் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுவது வருத்தத்தையும், கவலையையும் அளிக்கிறது. அங்குள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு மூலம் அமைதியை ஏற்படுத்தவும், அங்கு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் அளிக்கவும் வகை செய்ய வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவையைச் சார்ந்த மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது."

இந்த தீர்மானம் ஒருமந்தாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென தி.மு.க., பா.ம.க., சி.பி.ஐ., புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!

Saturday, October 18, 2008

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: முதல்வரிடம் மனு!


புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இரா.பாவாணன், (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன், (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு. அய்யப்பன், (பெரியார் திராவிடர் கழகம்), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.அழகிரி, (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல், (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி, (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), தி.சஞ்சீவி, இராஷ்ட்ரிய ஜனதா தளம்), ந.மு.தமிழ்மணி, (செந்தமிழர் இயக்கம்), பாவல், (வெள்ளையணுக்கள் இயக்கம்), பெ.சந்திரசேகரன், (கிராமப்புற அடிப்படை உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்வர் வி.வைத்திலிங்கத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் நோகத்தோடு சிங்கள அரசு இராணுவ நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் இந்த இராணுவ உதவிகள் தமிழர்களைக் கொன்று குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் தலைமையில் 14-10-2008 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.வி.தங்கபாலு அவர்கள் ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் தங்கள் தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், வரும் 20-ஆம் தேதியன்று கூடவிருக்கிற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு ஏவிவரும் அடக்குமுறை புதுச்சேரி தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தமிழர்களின் உணர்வுகளைப் எதிரொலிக்கும் விதமாக இந்த மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம். ஈழத் தமிழர்களைக் காக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

Wednesday, October 15, 2008

ஈழத் தமிழர் நலன் காக்க தமிழக கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானங்களை புதுச்சேரி அரசு ஆதரிக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 15-10-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் வகையில் சிங்கள அரசு இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிங்கள அரசின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கண்டித்துள்ளனர்.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட இராணுவ உதவிகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகக் கடசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரை இரண்டு வாரத்திற்குள் நிறுத்த மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.களும் பதவி விலக நேரிடும்’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்பதோடு, தமிழக கட்சிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழக கட்சிகள் நிறைவேறியுள்ள தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

அனைத்துக் கட்சித் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு ‘இந்த தீர்மானங்களை முழு மனதோடு ஆதரிக்கின்றோம், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவோம்‘ எனக் கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஈழத் தமிழர் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, September 30, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த தடை - கண்டனம்!

புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் அரசு.வணங்காமுடி (விடுதலைச் சிறுத்தைகள்), இரா.மங்கையர்செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள்), லோகு.அய்யப்பன் (பெரியார் தி.க), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), தங்க.கலைமாறன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), பா.சக்திவேல் (மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம்), சி.மூர்த்தி (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை), ந.மு.தமிழ்மணி (செந்தமிழர் இயக்கம்), பார்த்திபன் (செம்படுகை நன்னீரகம்), பாவல் (வெள்ளையணுக்கள் இயக்கம்) ஆகியோர் 30-09-2008 அன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவளித்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிப்பதின் மூலம் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளும் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பெரியார் தி.க. சார்பில் கடந்த 29-09-2008 அன்று சாரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தனர். ஆனால், இதற்கு திடீரென அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் அளித்துள்ளனர். காங்கிரஸ் அரசின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரானது.

கடந்த 28-11-2007 அன்று பெரியார் தி.க. சார்பில் அரியாங்குப்பத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பொதுக்கூட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில், 28-07-2008 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்படக் கூடாது எனக் கூறி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் பின்னரும் மீண்டும் தற்போது ஆர்பாட்டத்தைத் தடை செய்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள அரசுத் திட்டமிட்டு இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களை அழித்து வருகிறது. இந்த தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதோடு, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி வெளிப்படையாக உதவுகிறது.

இந்திய அரசின் ஈழத் தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. தமிழர்களிடம் இருந்து பெறப்படும் வரிப் பணத்தில் வாங்கப்படும் ஆயுதங்களைத் தமிழர்களை அழிக்கப் பயன்படுத்துவது, தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனக் குற்றசாட்டி வருகின்றன.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் செல்வாக்கு இழந்து வரும் புதுச்சேரி காங்கிரஸ் இது போன்ற தமிழர் விரோத நடவடிக்கையினால் வரும் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான போக்கைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் சார்பில், வரும் 06-10-2008 திங்களன்று, காலை 10 மணிக்கு, சாரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் - முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Sunday, January 06, 2008

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து

1948 பிப்ரவரி 4 அன்று இலங்கை விடுதலை அடைந்தது. வரும் பிப்ரவரி 4-ஆம் நாளன்று இலங்கையின் 60-ஆவது விடுதலை நாள் விழா கொழும்பில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் இலங்கைச் செல்வதற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைச் செல்வதைக் கைவிட வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியில், இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன. கடந்த 31-12-2007 அன்று சென்னையில் தி.க. சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், திராவிடத் தமிழர் கழகத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (06-01-2008) செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்றைய தினம் முக்கிய பணி இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளமாட்டார் என்று தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு, தமிழகக் கட்சிகள் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெற உள்ள 'சார்க்' மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்வார் என்று தெரிய வருகிறது.