இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் வணிகர் சங்க பேரவை சார்பில் கடந்த 17-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
அதே போல் புதுவையிலும், புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்டதுபோல் புதுவையிலும் 31-ஆம் நாளன்று நடத்த முடிவு செய்யப் பட்டது.
அதன்படி வருகிற 31-ஆம் நாளன்று கடை அடைப்பு போராட்டத்தைத் திட்ட மிட்டபடி நடத்துவது குறித்து புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டம் இன்று (29-10-2008) நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.கு.இராமன் தலைமை தாங்கினார். புதுவை மாநில வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முகமது நிசாம் வரவேற்றார். சங்க ஆலோசகர் இரா.அழகிரி முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவஞானம், அரியாங்குப்பம் வியாபாரிகள் சங்கத் தலைவர் கண்ணையன், கனகராஜ், மற்றும் வியாபாரிகள் சங்கத்தலைவர் செல்வ ராஜ், எலக்ட்ரிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், புத்தக வியாபாரிகள் சங்கத்தலைவர் இராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு வியாபாரிள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திட்டமிட்டபடி வருகிற 31-ஆம் நாளன்று புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு ஆயுத உதவி அளிப்பதை எதிர்த்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக் கொல்லவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.