Showing posts with label பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label பல்கலைக்கழகம். Show all posts

Saturday, October 11, 2025

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (11.10.2025) விடுத்துள்ள அறிக்கை:

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கைக் கோரி போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர்கள் இருவர் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் குற்றமிழைத்தப் பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்ற 09.10.2025 அன்று பல்கலைக்கழக மாணவ மாணவியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு அமைக்க வேண்டுமென நள்ளிரவு வரை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

அப்போது காலாப்பட்டு போலீசாரும் கமாண்டோ படையினரும் போராடிய மாணவ மாணவியர் மீது தடியடி நடத்தி உள்ளனர். ஒரு போலீஸ்காரர் மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த விடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும், 6 மாணவிகள், 18 மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர், அனைவரையும் பிணையில் வெளியே விட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைப் பாதுகாத்து வருகிறது. இதனால், மாணவ மாணவியர் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவ மாணவியர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்குப் புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும். மாணவ மாணவியர் மீது போடப்பட்டுள்ள குற்ற வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்பி உள்ளோம்.

Friday, September 18, 2020

துரோகம் தானே?

விழுப்புரத்தில் புதிதாக அமையவுள்ள பல்கலைக்கழகத்திற்குத் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்தவரும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவரும், திமுக முன்னாள் அமைச்சருமான மறைந்த ஏ.கோவிந்தசாமி பெயர் வைக்க வேண்டுமென மருத்துவர் இராமதாசு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏ.கோவிந்தசாமி முதுபெரும் திமுக தலைவர்களில் முகாமையானவர். இத்தனைக்கும் பாமக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிற கட்சி.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை.ரவிக்குமார் வள்ளலார் பெயர் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். வள்ளலார் பெயர் வைக்கக் கூடாது என்பதல்ல. ஆனால், திமுகவின் முதுபெரும் தலைவர் ஒருவர் பெயர் வைக்க வேண்டும் என பிற கட்சியிலிருந்து கோரிக்கை வரும் போது, அதை ஆதரிக்காமல் வேறொருவர் பெயர் வைக்க வேண்டுமென கோருவது சரியானதல்ல.

தலித் மக்களின் விடிவுக்கு உழைத்திட்ட, காங்கிரஸ் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் பெயர் வைக்கக் கோரி இருந்தாலும், அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், தன்னைத் தலித் அறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற அடிப்படையில் கோருகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய அளவில் தலித் மக்களின் நிலைக் குறித்து ‘இளையபெருமாள் குழு அறிக்கை’ மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சாராக இருந்த போது அவருக்குத் தமிழக அரசின் ‘அம்பேத்கர் விருது’ அளித்து சிறப்பித்தார். புதிய பல்கலைக்கழகத்திற்குப் பெயர் வைக்கும் அளவுக்குத் தகுதியான தலைவர்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற துரை.ரவிக்குமார் திமுகவிற்கும் தலித் அரசியலுக்கும் இழைக்கும் துரோகம் அல்லவா இது?

கோ.சுகுமாரன் / 18.09.2020