Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Thursday, September 11, 2014

'உலகத் தற்கொலைத் தடுப்புத் தினம்': ஒரு நினைவுக் குறிப்பு!



திருவாரூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டுப் பாதுகாப்புத் தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம் போல் பெண் வீட்டில் எதிர்ப்பு. இருவரையும் கண்டுப்பிடித்து நீதிமன்றத்தை அனுகி அப்பெண்ணைப் பிரித்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துவிட்டனர். இப்பிரச்சனையில் தலையிட்டு ஏதாவது செய்யுங்கள் என்று வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் கேட்டார். புதுச்சேரியில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால் அவருக்கு என் ஞாபகம் மட்டுமே வரும். அப்போது அவரும் புறப்பட்டு இங்கு வந்துவிட்டார்.

நான் இவ்வழக்கை நடத்திய நீதிபதி என் பள்ளித் தோழர் என்பதால், அவரை நீதிமன்றத்தில், மதிய இடைவேளியின் போது சந்தித்து உண்மை நிலையை எடுத்து விளக்கினேன். அவர் உடனே அப்பெண் யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதை விசாரித்து, அவருடன் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நான், சிவ.இராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் அப்பெண் தங்கியிருந்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள காப்பகத்திற்குச் சென்றோம். காவல்துறையினர் அப்பெண்ணை விசாரித்தனர். அப்போது அப்பெண் தான் தன் கணவருடன் செல்ல விரும்புவதாக உறுதியாக சொன்னார். அதைப் பதிவுச் செய்துக் கையெழுத்து வாங்கிய காவல்துறையினர் அப்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த அப்பெண்ணின் தந்தையார் எங்களை நோக்கி மண்ணை அள்ளி வீசி 'உங்களுக்குக் கேரளா போய் சூனியம் வைக்கிறேன்' என்று ஆவேசமாக கத்தினார். காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அந்தப் பையன் ஒருமுறை என்னிடம் செல்லில் பேசினார். தான் நன்றாக இருப்பதாகவும், ஒருமுறை வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டுச் செல்லுங்கள் என அன்போடு கேட்டுக் கொண்டார். அது ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம். அவர் கிறிஸ்துவர் என்பதால் விருந்துக்கு அழைத்தார் என நினைக்கிறேன். என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சென்ற ஆண்டு இன்னொரு காதல் ஜோடி பிரச்சனைத் தொடர்பாக சிவ.இராஜேந்திரன் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது ஊரக எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் இதுபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்தியவர்.  அதுகுறித்து பிறகு எழுதுகிறேன். அப்போது அங்கு அந்தப் பையன் வந்திருந்தார். சற்று சதைப் பிடித்திருந்தது. என்னுடன் ஒரு சில மணிநேரம் இருந்திருப்பார். அப்போதும் என்னை விருந்துக்கு வீட்டிற்கு அழைத்தார். நான் வழக்கம் போல் மெல்லிய சிரிப்புடன் சரி என்றேன். நான் இதுபோன்ற விருந்து, கொண்டாட்ங்களில் இருந்து விலகி இருப்பவன் என்பதை என்னுடன் மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மட்டுமே அறிவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் அவர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு. நான் கொஞ்சம் வேலையாக இருந்ததால், அவரது அழைப்பை ஏற்காமல், பிறகுப் பேசலாம் என்று இருந்தேன். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். அவசரமாக அழைக்கிறார் என்பதை உணர்ந்து செல்போனை எடுத்தேன். ‘சுகு, நம்ம ஜேம்ஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு செத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் சென்னையிலிருந்து அங்கு வந்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஐ.யிடம் பேசினேன். வீட்டுக் கதவுப் பூட்டி இருப்பதால் நான் வந்தப் பிறகு திறக்கவும் என்று சொல்லிவிட்டேன். நீங்களும் தயாராக இருங்கள்’ என்று கூறி முடித்தார்.

எனக்குப் பழைய நினைவுகள் எல்லாம் ஓடின. அவர் ஒன்றும் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. என்ன நடந்தது என்ற குழப்பம் ஒருபுறம். மறுபுறம் நம்மை அறியாமலேயே நம்மில் புகுந்திருக்கும் சந்தேகம், விசாரணை என்ற அனுகுமுறை. நானும் எஸ்.ஐ.யிடம் குடும்பத்தினரும், வழக்கறிஞரும் வந்தப் பின்னர் வீட்டின் கதவைத் திறக்கவும் என்று சொன்னேன். அவர் நீங்கள் யாரும் வராமல் எதையும் செய்யமாட்டேன் என்று உறுதிக் கூறினார்.

நான், சிவ.இராஜேந்திரன், இறந்தவரின் குடும்பத்தினர், அவரது மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் ஊரார் முன்னிலையில் கதவை உடைத்துப் பார்த்தோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் பெண்ணின் வீட்டார் கொலை செய்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டினர். அவ்வீட்டின் முன்னரே இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை எழுத்தது. அப்பெண்ணின் தந்தையார் மிகவும் பரிதாபமாக செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தார். நான் தான் சூனியம் வைக்க வேண்டிய நபர் என்பது அப்போது அவர் நினைவில் இல்லை. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தூக்கு மாட்டி உடல் தொங்கிக் கொண்டுடிருந்த படுக்கை அறைக்குள் சென்றோம். பிணம் அழுகிய துர்நாற்றம் மெல்லியதாக வீசியது. அந்த அறையின் மின்விளக்கு எரியவில்லை. பெரிய அளவிலான ‘டார்ச் லைட்’ முலம் உடலைப் பார்த்தோம். காவல்துறையினருடன் நாங்களும் புலன் விசாரணை மேற்கொண்டோம். தூக்கு மாட்டிக் கொண்டால் என்னென்ன தடயங்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தன. கழுத்தில் கயிறு இறுகி லேசாக கழுத்து எலும்பு உடைந்து தலைச் சாய்ந்திருந்தது. நாக்கு வெளியே தள்ளிக் கொண்டு பல் இறுகக் காணப்பட்டது. இரண்டு கை விரல்கள் இறுகி மூடிக் கொண்டிருந்தன. ஆண்குறியில் இருந்து விந்தும், மல வாயில் இருந்து மலமும் வெளியேறி இருந்தது. நானும், சிவ.இராஜேந்திரன் அவர்களும் தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தோம். காவல்துறையினரும் தற்கொலைதான் என முடிவுக்கு வந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடல் அரசுப் பொது மருத்துவமனை சவக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

காவல்துறையினர் என்னைப் புகார் எழுதச் சொல்லி முழு விசாரணைக்கும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். என்னை வைத்தே எல்லா வேலையும் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அல்லவா? அங்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது. பிணத்தை எந்த ஊரில் அடக்கும் செய்வது என்று இருதரப்பினரிடையே மீண்டும் சிக்கல். இறந்தவரின் மனைவியும், அவரது தந்தையாரும் இங்கேயே அடக்கம் செய்யலாம் என்கின்றனர். இறந்தவரின் குடும்பத்தினர் கிறிஸ்துவ முறைப்படி திருவாரூரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர். மறுநாள் ஒருவழியாக பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினேன். இருதரப்பினரும் தங்களுக்குள் நிலவிய பகமை உணர்வை மறந்து அந்த அமரர் ஊர்தியிலேயே திருவாரூர் பயணமாயினர்.

நான் கடமையை செய்யும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால், பிணவரையில் நாறிப் போய் அழுகிய பிணங்களைத் தூய்மைச் செய்து, சதைகளை அறுத்து, வயிற்றைப் பிளந்து, மண்டை ஓட்டை உடைத்து, பிரேதப் பரிசோதனை செய்ய தடய அறிவியல் மருத்துவர்களுக்கு உதவிச் செய்யும் ஊழியர்களுக்கு எதாவது பணம் கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் மது அருந்தாமல் இத்தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களது நிலைமைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வரமாட்டேன். பலர் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்ததும் உண்டு. அன்றைக்கும் இறந்தவரின் உறவினர்களிடம் சொல்லி பணம் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் வந்தேன். ஊருக்குக் கிளம்பும் முன் இறந்தவரின் தாயார் என்னிடம் தனியாக வந்து ரகசியமாக ‘தங்களுக்குப்  பணம் தருகிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். நான் அப்போதிருந்த மனநிலையில் பதில் ஏதும் கூறாமல் செய்கையிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தேன். நான் என் நேர்மையைப் பறைசாற்றும் நேரம் அதுவல்ல என்பதால் அமைதியாக இருந்தேன்.

கதவை உடைத்துப் பிணத்தை இறக்கிய கனம்முதல் பிரேதப் பரிசோதனை முடித்து உடல் வண்டியில் ஏற்றும் வரையில் அனைத்தையும் ஒருவிதப் பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தையார் ஊருக்குக் கிளம்பும் போது ‘நீங்கள் யார் என்று தெரிகிறது. நடந்தது நடந்துப் போச்சு, உங்க உதவியை மறக்கமாட்டேன்’ என்று கண் கலங்கக் கூறினார். அவர் சூனியம் வைக்க விட்ட சாபம் அத்தருணத்தில் நினைவில் நிழலாடியது. அன்று தூற்றிய வாய் இன்று நன்றி சொல்கிறது என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்துப் புறப்பட்டேன். மனித மனம் பற்றிய புரிதல் அறிய கால இடைவேளி தேவைப்படுவதை உணர்ந்தேன்.

காவல்துறையினரும், நாங்களும் தேடிய தற்கொலைக் குறிப்பு எதுவும் அங்குக் கிடைக்கவில்லை. தற்கொலையின் காரணம் முழுமையாக அறிய முடியவில்லை. தன் காதல் மனைவி சண்டைப் போட்டுக் கொண்டு ஊருக்குச் சென்றதுதான் காரணம் எனச் சொன்னார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களின் மனநிலைப் பற்றி நிறைய கற்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு வழக்கு என்ற  அனுகும் மனநிலையும், சக மனிதனின் மரணம் என்ற அவல மனநிலையும் மாறி மாறி உணர்த்தும் நிலை யாருக்கும் வரக் கூடாதது. என்ன செய்வது, நான் தேர்வுச் செய்துக் கொண்ட வாழ்க்கை இதுபோன்ற துயரத்தைச் சுமந்தே வாழப் பழக்கப்படுத்திவிட்டது.

Friday, September 17, 2010

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 புதுச்சேரி ஞானப்பிரகாசம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் விஜயகுமார் என்பவர் பெத்துச்செட்டிப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜின் மகள் சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுகுறித்து நேற்று (16.09.2010) லாஸ்பேட்டை போலீசார் இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்துள்ளனர்.

அப்போது தன் மகன் விஜயகுமாரின் மீது கோபம் கொண்ட பானுமதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மகனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். அதன்பின்னர் அவர் அந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு காவல்நிலையத்திற்கு உள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைக்கும் விதமாக பானுமதி காவல்நிலையத்திற்கு வெளியே சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். எங்களது விசாரணையில் பானுமதி காவல்நிலையத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது உறுதியாகிறது. சம்பவம் நடந்த பின்னர் உயர்அதிகாரிகளின் நேரடி ஆலோசனைப்படி காவல்நிலையத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகளைப் கழுவி போலீசார் தடயங்களை அழித்துள்ளனர். இதனைப் பொதுமக்களும், சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.

 காவல்நிலையத்தின் உள்ளே நடந்த சம்பவம் என்பதால் இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல்நிலைய மரணம் தான். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிகாட்டியுள்ளது போல் காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பின்னால் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்குப் போலீசார்தான் முழுப் பொறுப்பு. ஆனால், பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைப்பது தவறிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகும்.


 திருமணம் போன்ற பெண்கள் தொடர்புடைய விவாகரங்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கும்போது லாஸ்பேட்டை போலீசார் இந்த காதல் திருமணப் பிரச்சனையை விசாரித்ததே அடிப்படையில் தவறானது.

 நடந்த உண்மைச் சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள இறந்தவரின் குடும்பத்தினரையும், பெண் வீட்டுக் குடுமபத்தினரையும் போலீசார் மிரட்டுள்ளதாகவும் தெரிகிறது.         

எனவே, இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் எனப் போடப்பட்டுள்ள வழக்கைப் பிரிவு 176 (1-A)-ன் படி காவல்நிலைய மரணம் என மாற்றி பதிவு செய்ய வேண்டும். மேலும், மேற்சொன்ன சட்டப் பிரிவில் கூறியுள்ளது போல் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமும், வீடியோவில் பதிவுச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இதுகுறித்து, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்–ஒழுங்கு) உள்ளிட்டவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Saturday, July 03, 2010

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமாரின் மரணம் அவரை அறிந்த எல்லொருக்கும் மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. மாணவர் போரட்டம் குறித்த உண்மையறியும் குழுவில் பங்கேற்ற வகையில் அவரை இரண்டு முறை பார்த்துள்ளேன். போராடுகிற மாணவர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்தபொழுது அவர் இல்லை. அடுத்த நாள் நான் மற்றும் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன், கவிஞர் குட்டி ரேவதி, அயன்புரம் ராசேந்திரன், வழகுரைஞர் முருகன், பிரேமா, ரேவதி முதலானோர் கல்லூரி வளாகத்திற்குச் சென்ற போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அடுத்தநாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் வந்திருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் கண்களில் ஒரு பதற்றத்தையும் உடலில் ஒரு படபடப்பையும் கண்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தான் காரணமாகிப் போனோமோ என்கிற குற்ற உணர்வும், உலகச் செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தும் தன் லட்சியம் கைகூடாமலேயே போய்விடுமோ என்கிற பரிதவிப்பும் கூடவே அவர் முகத்தில் அப்பட்டமாக வெளளிப்பட்டது.

 ”உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத்தான் திரும்பப் பெற முடியாது என்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள்” என்றேன். “ இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான வழக்கு. எளிதாகச் சமாளித்து விடலாம். ஒண்ணும் அலட்டிக்காதீங்க.” என்று சுகுமாரனும் ஆறுதல் சொன்னார். சசிகுமாரின் கண்களில் தெரிந்த பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம், ஒரு ஆசிரியருக்குள்ள எந்தத் தகுதியும் இல்லாத பொறுப்பு முதல்வர் மனோகரன், கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் இறையன்பு அய்.ஏ.எஸ் ஆகியோர்தான் தம் தவறுகளை ஏற்க மறுத்தார்கள், மறுக்கிறார்கள். இந்த முரணை எங்கள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருந்தோம். இத்தனைக்கும் மாணவர்கள் செய்த தவறுகள் பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் நம் பிள்ளைகள் செய்யக் கூடியவைதான். ஆனால் நிர்வாகம் செய்த தவறுகளோ அதிகாரத்துவத்தின் அத்தனை குரூரங்களையும் உள்ளடக்கியவை. பொறுப்பு முதல்வரின் கார் கண்ணாடியை சசிகுமார் உடைக்க நேர்ந்த நிகழ்வுக்கு முந்தைய சம்பவத் தொடர்ச்சியை எங்கள் அறிக்கையில் பாருங்கள். சாதனை புரியும் துடிப்புடன் இருந்த ஒரு இளம் கலைஞன்  எப்படி அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது விளங்கும்.

நான் 37 ஆண்டு காலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். இதில் கடைசிப் பத்தாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் கிராமப்புற கல்லூரிகளில்தான் ஆசிரியராக இருந்தேன். நமது கிராமப்புற கல்லூரிகள் என்பன முழுக்க முழுக்க கிராமங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். சாதி, ஊர் என கிராமங்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் அங்கிருக்கும். இதைவிடப் பெரிய கலவரங்கள், சண்டைகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். இரண்டாம் முறை நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பணி செய்தபோது ஒரு மாணவன் முதல்வரை கத்தியால் குத்திவிட்டான். ஆசிரியருடைய ’பைக்கை’ உடைப்பது, கார் கண்ணாடியை உடைப்பது எனப் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படியாகச் சேதம் விளைவிப்பது, சிறு கலவரங்கள் முதலான நிகழ்வுகளை நாங்கள் எப்படி எதிர் கொள்வோம் என்றால், அந்த மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்வோம்; பொதுவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை வைத்து ஒரு ‘என்கொயரி கமிஷன்’ அமைப்போம்; பெரிய பிரச்ச்சினையாக இருந்து கல்லூரி மூடி இருந்தால் ஒரு வாரத்தில் திறப்போம். ரொம்பப் பெரிய பிரச்சினையாக இருந்தால் படிப்படியாக ஏழெட்டு நாட்களில் திறப்போம். மாணவன் செய்த தவறின் அளவைப் பொறுத்து ஒரு சிறிய அபராதம் விதித்து, தேவையானால் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, அல்லது பெற்றோரில் ஒருவரை அழைத்து எச்சரித்து மாணவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்துவிடும். பெரிய பிரச்சினைகளின் போது கல்லூரி கவுன்சில் அல்லது ஆசிரியர் கூட்டம் போட்டு விவாதிப்போம்.

ஆனால் இங்கு என்ன நடந்தது? உடனடியாக முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்ததுடன் சம்பந்தமில்லாத இரு மாணவர்கள்மீதும் (இருவரும் தலித்துகள்) புகார் கொடுக்கப்பட்டது. முதல்வருக்கு அவ்விரு மாணவர்கள்மீது முன் விரோதம் உண்டு. சாதி உணர்வும் இதில் ஒரு பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த  மாணவர்களில் ஒருவரும் அவரது சகோதரரான இன்னொரு மாணவரும் முதல்வருக்கு வேண்டிய, அவரது சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிற ஒரு போலீஸ் அதிகாரியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். சம்பந்தமில்லாத அவ்விரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் சகோதரரிடம் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டது. சசிகுமார் உட்பட மூன்று மாணவர்களும் பிணை பெற்று வெளியே வர வேண்டியதாயிற்று. இன்னிலையில்தான் சுமார் ஒரு மாதம் கழித்து, சுற்றுலா சென்ற மாணவர்களெல்லாம் திரும்பி வந்தபின் மாணவர்கள் வேலை நிறுத்தம், உள்ளிருப்புப்போராட்டம் முதலியவற்றை தொடங்கினர்.

தமிழகத்திலுள்ள இரு நுண்கலைக் கல்லூரிகளும் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் வருகின்றன. இத்துறையின் இயக்குனர் இறையன்பு ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியான போதிலும் ஒரு எழுத்தாளர், சமூக அக்கறை உள்ளவர் என்கிற வகையில் மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி விரைவாகத் தீர்ப்பார் என்றுதான் நாங்கள் நம்பினோம். எங்கள் அறிக்கை பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் தொட்டு அமைந்தது. ஒரளவு முழுமையாகவும் இருந்தது. நண்பர் எனச் சொல்லத்ததக்க அளவிற்கு நெருக்கமில்லையாயினும் இறையன்புவை அறிவேன். பரஸ்பரம் இருவருக்கும் மற்றவர்மீது மரியாதை உண்டு. எங்கள் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்ததோடு இது தொடர்பாகக் குறைந்தது நான்கு முறையாவது அவரோடு பேச நேரிட்டது. இரண்டு விஷயங்களை நான் அவரிடம் வற்புறுத்தினேன். சசிகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்; கல்லூரியை விரைவாகத் திறவுங்கள் என்பவைதான் அவை. பொறுப்பு முதல்வர் மனோகரன் மீதான விசாரணை உள்ளிட்ட பிற பரிந்துரைகளை விரிவாக அறிக்கையில் சொல்லியிருந்தோம்.

என்னுடைய இரு வேண்டுகோளுக்கும் சாதகமான பதில் இறையன்புவிடமிருந்து வரவில்லை. வழக்குகளை திரும்பப் பெறுகிற அம்சத்தில், குறிப்பாக சசிகுமார்மீதான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய இயலாது என்கிற ரீதியில் பதில் இருந்தது. கல்லூரியைத் திறப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. கல்லூரியைத் திறந்தால் மீண்டும் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்கிற அச்சம் அவருக்கிருந்தது. ஆனால் நிலைமை அதுவல்ல. மாணவர்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்பினார்கள். கல்லூரி மூடிக்கிடப்பதை எந்த மாணவர்களும் விரும்பமாட்டார்கள். அப்படியே வேலை நிறுத்தம் செய்தால்தான் என்ன, கல்லூரியை மறுபடி சிறிது காலம் மூடினால் போச்சு. இப்படியான பிரச்சினைக்கெல்லாம் மூன்று மாத காலமெல்லாம் கல்லூரியை மூடி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப அநியாயம். என்னுடய ஆசிரிய அனுபவத்தில் இப்படி நான் அறிந்ததில்லை. கல்லூரியைப் பத்து நாளைக்குள் திறந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்கப் போவதில்லை. நிலைமை சுமுகமாகியிருந்திருக்கும். சசிக்குமாரை இப்படி அநியயமாக இழந்திருக்கமாட்டோம்.

இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக (bureaucrat), அதிகாரத்துவ அணுகல் முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப் பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் ‘பர்சனலாக’ எடுத்துக்கொண்டு கோபப்பட்டார். (மாணவர்கள் அவரது சாதி குறித்து தவறாக ஒரு அவதூறை சொன்னது உண்மைதான்.) போராட்டங்களின்போது ஒருமையில் பேசுவது, ஒழியச் சாபமிடுவது. கொடும்பாவி கொளுத்துவது எல்லாம் வழக்கம்தான். முதலமைச்சர், பிரதமர் யாரும் இதற்குத் தப்புவதில்லை. போராட்டம் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும். ஒழியச் சொன்னவர்களுக்கே சால்வை போர்த்தி நன்றி தெரிவிப்பதும் உண்டு. அரசியல்வாதிகளால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகாரி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள இயலாமற் போனதில் வியப்பில்லை.

கல்லூரிக்குள் நடக்கிற பிரச்சினைகளை குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையைப் போல் கையாளவேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒரு தந்தை எப்படி அணுகுவாரோ அப்படி நிர்வாகம் அணுக வேண்டும். எந்தத் தந்தையாவது கண்ணாடியை உடைத்ததற்காகப் போலீசில் புகார் கொடுப்பாரா? கண்ணாடியின் விலை பத்தாயிரம் ரூபாய் இருக்குமா? ஆனால் இன்று கொடுத்த விலையின் மதிப்பு…..? இரங்கல் கூட்டத்தில் சசிகுமாரின் அன்னை அன்று அழுத காட்சி இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்தத் தாயின் கண்ணீருக்கு அதிகாரம் என்ன பதிலைச் சொல்லப்போகிறது? நாம்தான் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். சசிகுமாரின் மரணத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கும் ஒரு பங்கிருக்கத்தான் செய்கிறது. அவரின் பதட்டம், கலைஞனுக்கெ உரித்தான அங்கீகார ஏக்கம், அவருக்கிருந்த குற்ற உணர்வு இவற்றை நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க தனது கனவு நனவாகப் போவதில்லை என்கிற உண்மை அவருக்கு உறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாம் அவரைத் தனியே விட்டிருக்கக் கூடாது. போராட்டம் என்பது வெறுமனே போராடுவது மட்டுமல்ல. ’சாலிடாரிட்டி’ அதன் பிரிக்க இயலாத அங்கம். போராட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாம் தனிமைப்படவில்லை என்பதை உணர்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏதோ ஒரு வகையில் சசிகுமாருக்கு நாம்  அளிக்கத் தவறினோமா?

நுண் கலைக் கல்லூரிகள் இரண்டும் ஆணி வேர் முதல் உச்சங் கொழுந்து வரை அழுகிக் கிடக்கிறது. 150 ஆண்டு காலப் பழமை மிகு இந் நிறுவனம் ஒழுங்கு செய்யப்பட்டுத் இந்திய அளவிலுள்ள இதர நுண்கலைக் கல்வி நிறுவனங்களைப் போல தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் அறிக்கையில் இந்த நோக்கிலும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.

சசிகுமாரின் நினைவாக, அவரது இறுதி லட்சியமாக இருந்த திருக்குறளைச் சுடுமண் சிற்பங்களக வடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முனைவோம்.

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!