Showing posts with label கி.வீரமணி. Show all posts
Showing posts with label கி.வீரமணி. Show all posts

Sunday, December 30, 2007

இலங்கைச் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – கி.வீரமணி

திராவிடர் கழகம் சார்பில் வரும் 31.12.2007 திங்களன்று, காலை 11 மணிக்கு, சென்னை - மெமோரியல் அரங்கம் அருகில், இலங்கையின் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர நாள் (4.2.2008) விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளவிருக்கும் நிலையில், அவ்விழாவில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து இந்த அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து கி.வீரமணி 28-12-2007 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஏதோ தமிழர்கள் அத்தீவில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல; தமிழர்களே படுகொலை செய்யப்படாமல் வேறு மக்கள் அப்படிப் படுகொலை செய்யப்பட்டாலும்கூட மனிதாபிமான அடிப்படையில் நமது எதிர்ப்பை, வெறுப்பைக் காட்டும் வகையில்தான் இத்தகைய ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈராக்கிலும், வியட்நாமிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதே - அதே கண்ணோட்டம் இதற்கும் பொருந்தும்தானே?

சொந்த நாட்டு மக்கள்மீது விமானத் தாக்குதல் என்பது உலகில் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்று! சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

படுகொலை செய்யப்பட்ட போராளிகளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது என்பது அய்.நா.வின் மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது அல்லவா? படுகொலை செய்யப்பட்ட பெண்களையே கூட இதற்குமுன் இவ்வாறு இலங்கை இராணுவம் நடத்தியதுண்டு.

ஒரு நாட்டின் எல்லைக்குள் அந்த நாட்டு குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்பது உலகெங்கும் உள்ள நடை முறை. இலங்கையிலோ தமிழர்கள் அந்த நாட்டில் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியாது. அதுவும் தலைநகருக்குச் செல்லவே முடியாது. கொழும்பு நகரில் தங்கி இருந்த 376 தமிழர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகத் தூக்கித் தமிழர்கள் வாழும் பகுதிக்கு விரட்டப்பட்டனர். இந்தியாவும் கண்டித்ததே! இந்த நிலையில் அந்த நாட்டுச் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் எப்படி செல்லலாம்?

தமிழர்களை மட்டுமல்ல; பன்னாட்டு உதவிக் குழுவினர் 17 பேர்களை இலங்கை இராணுவம் சுட்டுப் பொசுக்கியதே! பிரேதப் பரிசோதனையில் அந்தக் குண்டுகள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டதே!

இலங்கை அரசு இராணுவத்துக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கிய தொகை 16,600 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட ரூ.2,700 கோடி அதிகமாகும்.

இராணுவத்தை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்ன? இலங்கையைச் சுற்றியுள்ள நாடுகளால் அந்நாட்டுக்குத் தொல் லையா? பிற நாட்டுப் படையெடுப்பா? இல்லையே! இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களைப் பூண்டோடு அழித்து முடிக்கத்தானே இந்த வன்மம்?

அப்படிப் படுகொலை செய்யப்படும் மக்கள் யார்? தமிழர்கள் தானே! அந்தத் தமிழர்களுக்கும், இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கும் உள்ளது தொப்புள்கொடி உறவு அல்லவா!

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகினால் இந்திய அரசின் முடிவு வேறு மாதிரியாகத்தானே இருக்க முடியும்!

உலகில் எந்த நாட்டிலும் உள்ள சீனக்காரரை அந்த நாடு தாக்க முடியுமா? அப்படி தாக்கினால் சீன அரசு சும்மா இருக்குமா? இலண்டனில் சீக்கியர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், இந்தியா அப்பொழுது மட்டும் குரல் கொடுக்கிறதே - தமிழர்களுக்கு இடர்ப்பாடு என்கிறபோது மட்டும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை? இதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி.

தமிழ்நாட்டு மக்களின் இந்த உணர்வை பிரதமர் மன் மோகன்சிங் மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த நிலையிலும் இந்தியப் பிரதமர் இலங்கையில் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கக் கூடாது என்ற வேண்டுகோளை முன்னிறுத்தி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சிகளை மறந்து தமிழர்கள், மனிதாபிமானிகள் கலந்துகொள்ள அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

நன்றி: விடுதலை.