Saturday, November 29, 2008

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!


புகைப்படம்: கோ.சுகுமாரன்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’ (தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் ...மேலும்

Friday, November 28, 2008

சமூக நீதிப் போராளி வி.பி.சிங் காலமானார் - இரங்கல்!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் காலஞ்சென்ற வி.பி.சிங் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 28-11-2008 அன்று விடுத்துள்ள குறிப்பு:

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சமூக நீதிப் போராளி முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு, இத்தருணத்தில் அவரது பாதையில் சமூக நீதிக்குப் போராட உறுதியேற்போம்.

மன்னர் குடும்பத்தில் உயர்வகுப்பில் பிறந்தவராக இருந்தாலும் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, இந்திய வரலாற்றில் சமூக நீதிக்குப் புதிய பாதையை அமைத்தவர்.

ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை சென்ற இந்தியப் படையைத் திரும்பப் பெற்றதன் மூலம் ஈழத் தமிழர் நலன் காத்தவர். பொற்கோவிலுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக சீக்கிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

பாபர் மசூதியை இடிக்கச் சென்ற மதவாத சக்திகளூக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து மதசார்பின்மைக் கொள்கையைக் கடைபிடித்தவர். சமூக நீதிக்காகவும், மதவாதத்திற்கு எதிராகவும் போராடியதன் விளைவாக நாட்டின் உயர் பதவியான பிரதமர் பதவியையும் ஆட்சியையும் இழந்தவர்.

இந்திய வரலாற்றில் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர். வழக்கறிஞர், கவிஞர், ஓவியர், புகைப்படக் கலைஞர் என்பவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான மிகச் சிறந்த அரசியல் தலைவர்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

Wednesday, November 26, 2008

சட்டக் கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை!

கல்வியாளர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் ...மேலும்

Friday, November 21, 2008

தமிழக - புதுச்சேரி மீனவர்கள் சிங்கள கடற்படையால் கடத்தப்பட்டுச் சிறை: கண்டன ஆர்ப்பாட்டம்!







கடந்த 17-11-2008 அன்று தமிழகத்தைச்சேர்ந்த ஜெகதாபட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்ற புதுச்சேரி பகுதி காரைக்கால் மீனவர்கள் 15 பேர் உட்பட 28 மீனவர்களைச் சிங்கள கடற்படை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரியிலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் இன்று (19-11-2008, வெள்ளி) காலை 10 முதல் 2.00 மணிவரையில், பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், லோகு.அய்யப்பன், தலைவர், பெரியார் தி.க., கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன், அமைப்பாளர், வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
இரா.அழகிரி, தலைவர், தமிழர் தேசிய இயக்கம், எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் பாசறை, கஜேந்திரன், தலைவர், பசுமை பாரதம் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொண்டு கணடன் உரையாற்றினர்.

இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காரைக்கால் பகுதி கிளிங்சல்மேட்டைச் சேர்ந்த திருமுருகன், தமிழ்மணி, குமார், சக்திவேல், நாகராஜ், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த பன்னீர், ராஜ், சுப்பிரமணியன், முருகவேல், காசாக்குடிமேட்டைச் சேர்ந்த சிவவடிவேல், சின்னையன், செல்வகுமார், கார்த்திக் ஆகியோர் இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு தற்போது் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர்.

Wednesday, November 19, 2008

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது!



மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 19-11-2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் தற்போது மாநில அளவில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும் என்பதால், மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவக் கல்லூரியை தங்களுக்குள் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் அரசு மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் அனைத்து அரசியல் கட்சியினர், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 13 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கல்வியில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் 27 சதவித இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த இடஒதுக்கீடு தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், மத்திய அரசில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இடஒதுக்கீடு கிடையாது.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைத்தால் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள சமூக ரீதியான இடஒதுக்கீடு பறிபோகும். இது மக்கள் தொகையில் 70 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தற்போது புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியுள்ளன. இதனால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து தற்போது புதுச்சேரி மாணவர்களுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்களுக்கு இடம் கேட்டு புதுச்சேரி அரசு கெஞ்சும் நிலைதான் உள்ளது.

கல்வி வணிகமாகிவிட்டதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையாக குறைந்தது 25 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்வி கிடைக்கும் சூழல் உள்ளது. ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி என்றால் புதுச்சேரிக்கு 150 இடங்கள் கிடைக்கும். இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி மருத்துவம் பயில முடியும்.

எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களைச் சேர்த்து கல்லூரியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், புதுச்சேரி மாணவர்களையும், பொதுமக்களையும் திரட்டி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அரசை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, November 18, 2008

புதுச்சேரியில் நவம்பர் 25-இல் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி "முழு அடைப்பு"



ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் 18-11-2008 செவ்வாய் அன்று மாலை 4.00 மணியளவில் முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் நாரா.கலைநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் இரா.விசுவநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், வி.எஸ்.அபிஷேகம், இராமமூர்த்தி, கீதநாதன், செல்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), சிவக்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன் , வ.செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), தங்க.கலைமாறன்,(பகுஜன் சமாஜ் கட்சி), தி.சஞ்சீவி, (இராஷ்டிரிய ஜனதா தளம்), சுந்தரமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), லோகு.அய்யப்பன், விசயசங்கர், தந்தைபிரியன் (பெரியார் தி.க.), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.மங்கையர்செல்வன், வ.குப்புராசு (மீனவர் விடுதலை வேங்கைகள்), ந.மு.தமிழ்மணி,(செந்தமிழர் இயக்கம்), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), மு.அ.குப்புசாமி, (தமிழர் திராவிடர் கழகம்) ஆகிய கட்சி - இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கையில் நடைபெறும் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 25-11-2008 செவ்வாயன்று புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வையில் வரும் 23, 24 ஆகிய இரு நாட்களில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 25-இல் தமிழ்கம் முழுவதும் "முழு அடைப்பு" நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 12, 2008

தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!









மேடையில் தலைவர்கள்...


டி.இராஜா...


கோ.சுகுமாரன்...

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.

தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணி - மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000 தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி, தில்லியில் உள்ள மண்டியா இல்லம் பகுதியில் இருந்து தொடங்கி சுமார் 2 கி.மீ. தூரம் சென்று ஜந்தர் மந்தரில் முடிவடைந்தது.

இப்பேரணியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஈழத் தமிழர் ஆதரவு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி வந்தனர்.

பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்கு இராஜீவ் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆ.கலையரசன் (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) தொடக்கவுரை ஆற்றினார். மாநாட்டில் மாணவ மாணவியர் சார்பில் பல்லவி (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை - JNUSU, பொதுச்செயலாளர்), பிரியதர்சினி (ஜனநாயக மாணவர் சங்கம் - DSU, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), கார்மேகம் (அகில இந்திய மாணவர் கழகம் - ASA, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்), ஆதிகேசவன் (சட்டக் கல்லூரி, தில்லி பல்கலைகழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை தமிழர் தேசிய கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.இராஜா, புதிய தமிழகம் கட்சி நிறுவநர் டாக்டர் கிருஷ்ணசாமி, தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியை இரா.விஜயலட்சுமி, பேராசிரியை சரசுவதி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தில்லிப் ப்ல்கலைக் கழக மாணவர் குணசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் கையொலி எழுப்பி ஆதரித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.இராஜா பேசியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி. இலங்கைப் பிரச்சினை அரை நூற்றாண்டு காலப் பிரச்சினை. இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஆரம்பித்ததற்கு காரணம்.

1956-ஆம் ஆண்டு இலங்கை அரசு "சிங்கள ஆட்சி மொழிச் சட்டம்" இயற்றியது. இதன்படி தமிழ் மொழி இரண்டாந்தர மொழியானது. அதேபோல், 1961-இல் "சிங்கள நீதிமன்ற மொழிச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதனால், தமிழ் நீதிமன்ற மொழியிலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர், 1972-இல் இலங்கை அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. இதனை எதிர்த்துதான் தமிழர்கள் அங்குப் போராட தொடங்கினார்கள்.

ஈழத்தின் தந்தை எனக் கருதப்படும் செல்வநாயகம் தலைமையில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம்தான் இன்று தேசிய இனப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை தேசிய இனப் போராட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. அதையும் தாண்டி ஜனநாயகத்திற்கான போராட்டமாக பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.

இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கூறி நான் இங்கு ஒப்பாரி வைக்க விரும்பவில்லை. ஈழத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க அங்கு பூர்ணப் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடப்பது 'இன அழிப்புப் போர்' (Genocide) என்பதை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன், பேசி வருகிறேன்.

இந்தப் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று சொல்கிறோம். இந்தியா ஒரு சுதந்திர நாடு, இலங்கை ஒரு சுதந்திர நாடு. எனவே, இந்தியா அந்நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது என்பது தவறு. அங்கு நடக்கும் பிரச்சைனையில் இந்தியாவும் ஈடுபடுத்தப்படுகிறது. ஏனெனில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம் பேர் அகதிகளாக இங்கு வந்துள்ளனர். அவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் இந்தியா தலையிட்டாக வேண்டும்.

இந்தியா இராணுவ உதவி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அரசோ ஆயுத உதவி வழங்கவில்லை ராடார் கருவி போன்றவற்றை வழங்கியுள்ளதாக கூறுகிறது. எந்த உதவி வழங்கினாலும் அது தமிழருக்கு எதிரான போருக்குத்தான் பயன்படுத்தப்படும். இந்தியா எந்த உதவியும் வழங்கக்கூடாது.

இலங்கைப் பிரச்சினையை இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது என்பதை பல முறை பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பேசியுள்ளேன். பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அங்கு அமைதி ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். உடனடியாக போர் நிறுத்தம் (Ceasefire) செய்யப்பட வேண்டும். இதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

வரும் 14-ந் தேதியன்று அகில இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடக்க உள்ளது. அதில் ஈழப் பிரச்சினையையும் ஒன்றாக எழுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் யுத்தம் நடைபெறும் வன்னிப் பகுதியில் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றிய பின், இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது நடத்தி வந்த தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தாததால், தமிழீழ மக்கள் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவிக்க இந்தியா உடனடியாக வலியுறுத்த வேண்டும். இலங்கை விவகாரம் உள்நாட்டு பிரச்சினை இல்லை என்பதால், இந்தியா உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். போரை நிறுத்தாமல் நிவாரண பொருட்களை வழங்குவது எந்தவித பயனும் அளிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 ஆயிரம் மாணவர்கள் பேரணி - இரத்தக் கைரேகையிட்டு ஆளுநரிடம் மனு!






ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த 04-11-2008 அன்று, புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று இரத்தக் கைரேகையிட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தனர். புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டனர்.

ஈழத் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு இராணுவ உதவி உள்ளிட்ட எந்த உதவிகளையும் இந்தியா வழங்கக் கூடாது, பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைச் சிங்கள கடற்படை சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்குச் சென்று மாணவர்களை ஒன்று திரட்டிய புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் பிரமாண்ட பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர்.

புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சதீஷ் (எ) சாமிநாதன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் தி.க. அமைப்பாளர் தந்தைபிரியன், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் முத்து, செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், கிருத்துவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் சாமி ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, சமுதாய கல்லூரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசுக் கல்லூரி, தவளக்குப்பம் தாகூர் இணைப்பு கல்லூரி, பாரதியார் பல்கலைக் கூடம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேநிலைப் பள்ளி, ஜீவானந்தம் அரசு மேநிலைப் பள்ளி, வ.உ.சி அரசு மேநிலைப் பள்ளி, கலவைக் கல்லூரி, வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புதுச்சேரியின் அனைத்து அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி காலை 10 மணிக்கு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். மாணவர்களைத் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க 10 மாணவ, மாணவியரை ராஜ்நிவாசுக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். மனுவில் மாணவ, மாணவியர் இரத்த கைரேகையிட்டு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரிடம் அளித்தனர்.

மனுவில் ஈழத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா தலையிட்டு அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும், மருந்துகள், உணவு பொருட்களைப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய கூடாது, தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரணியில் புதுச்சேரியின் கிராம பகுதிகளிலிருந்து டெம்போ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பிரமாண்ட பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதராவாக உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் நடத்திய பேரணியால் புதுச்சேரி குலுங்கியது.

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கட்சி, இயக்கத் தலைவர்கள் கண்டனம்!

ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் ரகளை செய்து கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கத் தலைவர்கள் 05-11-2008 அன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

போராடிய தமிழ் அமைப்பினர் மீது வழக்குப் போட உத்தரவிட்டதன் மூலம் தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், தமிழருக்கு எதிரானப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் உள்துறை அமைச்சர் வல்சராஜ் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடந்த 1-ஆம் நாளன்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் அமைதியாகப் போராடியவர்கள் மீது இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தி, ரகளையில் ஈடுபட்டது. அங்கிருந்த போலீசாரையும் ஆபாசமாகப் பேசி தாக்க முற்பட்டது. இந்த சம்பவம் அனைத்தும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த வன்முறையை தட்டிக் கேட்ட கட்சி, இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தவர்களை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உள்துறை அமைச்சர் வல்சராஜ் தொலைபேசியில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாண்டியனோடு உப்பளம் வெடிகுண்டு வழக்கிள்ள குற்றாவாளிகளும் இருந்துள்ளனர் என்பது பத்திரிகை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் மூலம் தெரிகிறது.

பாண்டியன் தலைமையிலான கும்பல் ஆளுநர் மாளிகை வாயிலிலும் தாராறு செய்துள்ளது. அப்போது பாண்டியன் புதுச்சேரியின் தலைமை நிர்வாகியான ஆளுநரை தரக்குறைவாகவும், தங்கள் தயவில் பதவிக்கு வந்தவர் என்றும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது போலீசார் அருகிலிருந்து வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய ஆளுநர் அவர்கள் போராட்ட குணம்மிக்க ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை இழிவுபடுத்தியது ஒட்டுமொத்த அந்த சமூகத்தையே இழிவுப்படுத்தியதாக கருத வேண்டியுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்குமுன் பாண்டியன் உள்துறை அமைச்சர் வல்சராஜ் அறையில் இருந்துள்ளார். இதனால், இதன் பின்னணியில் அமைச்சர் வல்சராஜ் செயல்படுகிறார் என குற்றம்சாட்டுகிறோம்.

திட்டமிட்டு உண்ணாவிரத்த்தில் கலவரம் செய்த பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையேல், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

அமைச்சர் வல்சராஜ் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. தமிழ் அமைப்பினர் மீது கடும் நெருக்கடியும், அடக்குமுறையும் ஏவப்படுகிறது. இது அவரது தமிழ் இன விரோதப் போக்கைக் காட்டுகிறது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாண்டியன் போன்ற சமூகத்திற்கு விரோதாமான நபர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடக்குமுறையால் தமிழ் உணர்வையும், தமிழர்களையும் ஒடுக்கிவிட முடியாது என்பதை புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம். இந்த தமிழருக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஒன்று கூடிப் போராட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களுக்கு புதுச்சேரி தமிழர்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்.

செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்:

சு.பாவாணன், அமைப்புச் செயலர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
அரசு.வணங்காமுடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரா.மங்கையர்செல்வன், அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள், கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தங்க.கலைமாறன், தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி, வ.செல்வராஜ், பொறுப்புக் குழு உறுப்பினர், ம.தி.மு.க., இரா.வீராசாமி, துணைத் தலைவர், பெரியார் தி.க., சி.மூர்த்தி, அமைப்பாளர், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, ந.மு.தமிழ்மணி, அமைப்பளர், செந்தமிழர் இயக்கம்,
எஸ்.யூ.முத்து, தலைவர், பார்வர்டு பிளாக் கட்சி, தி.சஞ்சீவி, தலைவர், இராஷ்டிரிய ஜனதா தளம், ஆ.மு.கிருஷ்ணன், புதுச்சேரி முத்தமிழ் மன்றம்,
நடராசன், முரசொலி பேரவை, ச.ஆனந்தகுமார், புதுவைக் குயில் இலக்கியப் பாசறை, இரா.சுகுமாரன், புரட்சிகர இளைஞர் முன்னணி, கலைப்புலி சங்கர், இளைஞர் அணித் தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

Tuesday, November 11, 2008

புதுச்சேரியில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரசார் ரகளை: கண்டனம்!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கடந்த 01-11-2008 அன்று முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையினான ரவுடிக் கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டது.

இதை தட்டிக் கேட்ட அரசியல் கட்சி, சமுதாய இயங்கங்களின் தலைவர்கள் மீது புதுச்சேரி போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, ம.தி.மு.க. பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைதான தோழர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், ம.தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.செல்வராஜ், கபரியேல், அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, பார்வேட் பிளாக் தலைவர் முத்து, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, வெள்ளையணுக்கள் இயக்கத் தலைவர் பாவல், புரட்சிக் குயில் இலக்கியப் பாசறை ஆனந்தகுமார் ஆகிய கட்சி, இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி தமிழ் இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புத் தொண்டர்கள் 80 பேர் தாங்களும் கைதாகிறோம் என்று கூறி கைதானர்கள்.

இந்நிலையில், இதுகுறித்து 03-11-2008 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காந்தீய வழியில் அமைதியாக நடந்த உண்ணாவிரதத்தில் ரகளை செய்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் உள்ளிட்ட சட்டவிரோத கும்பலை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 1-ஆம் நாளான்று முருங்கப்பாக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து தமிழ் அமைப்பினர் போலீஸ் அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் பாண்டியன் தலைமையிலான கும்பல் உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்க முற்பட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்கள் பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரை நெட்டித் தள்ளித் தகராறு செய்துள்ளனர். இதனால் உண்ணாவிரதப் போராட்டம் பாதியில் நின்றது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விமர்சித்துப் பேசியதாக கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், ம.தி.மு.க. பிரமுகர் சந்திரசேகரன் ஆகியோர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்ணாவிரத்ததில் பங்கேற்காத, பேசாத லோகு.அய்யப்பன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ஜனதா கட்சி சுப்பிரமணியசாமி சோனியா காந்தி பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர். பாண்டியனுக்கு உண்மையில் சோனியா காந்தி மீது அக்கறை இருந்தால் சுப்பிரமணியசாமி மீதுதான் நடவடிக்கை எடுக்க கேட்க வேண்டும்.

அப்படியே சோனியாவை விமர்சித்துப் பேசியிருந்தாலும்கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டது கிரிமினல் குற்றம். ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் இது போன்ற அராஜகத்தை அரசும், போலீசும் வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல.

உண்ணாவிரத்த்தில் ரகளை செய்த இளைஞர் காங்கிரசார் மீது இதுவரையில் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குற்றவாளிகள் சுதந்தரமாக வெளியில் சுற்றித் வருகின்றனர். புதுச்சேரி போலீசின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக பாண்டியன் உள்ளிட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல், அச்சுறுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

மேலும், பாண்டியன் போன்றவர்களின் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் ஏற்கனவே சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மேலும் சிதைக்கும் என்பதை காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் நலன் காக்கப் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ரகளையில் ஈடுபடும் இளைஞர் காங்கிரசார்...


காங்கிரசாரின் அராஜகத்தை எதிர்த்த ஈழத் தமிழர் ஆதரவுத்
தோழர்களைக் கைது செய்யும் போலீசார்...