Thursday, September 11, 2014

'உலகத் தற்கொலைத் தடுப்புத் தினம்': ஒரு நினைவுக் குறிப்பு!



திருவாரூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துக் கொண்டுப் பாதுகாப்புத் தேடி புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம் போல் பெண் வீட்டில் எதிர்ப்பு. இருவரையும் கண்டுப்பிடித்து நீதிமன்றத்தை அனுகி அப்பெண்ணைப் பிரித்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துவிட்டனர். இப்பிரச்சனையில் தலையிட்டு ஏதாவது செய்யுங்கள் என்று வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் கேட்டார். புதுச்சேரியில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால் அவருக்கு என் ஞாபகம் மட்டுமே வரும். அப்போது அவரும் புறப்பட்டு இங்கு வந்துவிட்டார்.

நான் இவ்வழக்கை நடத்திய நீதிபதி என் பள்ளித் தோழர் என்பதால், அவரை நீதிமன்றத்தில், மதிய இடைவேளியின் போது சந்தித்து உண்மை நிலையை எடுத்து விளக்கினேன். அவர் உடனே அப்பெண் யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதை விசாரித்து, அவருடன் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நான், சிவ.இராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் அப்பெண் தங்கியிருந்த ரெட்டியார்பாளையத்தில் உள்ள காப்பகத்திற்குச் சென்றோம். காவல்துறையினர் அப்பெண்ணை விசாரித்தனர். அப்போது அப்பெண் தான் தன் கணவருடன் செல்ல விரும்புவதாக உறுதியாக சொன்னார். அதைப் பதிவுச் செய்துக் கையெழுத்து வாங்கிய காவல்துறையினர் அப்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த அப்பெண்ணின் தந்தையார் எங்களை நோக்கி மண்ணை அள்ளி வீசி 'உங்களுக்குக் கேரளா போய் சூனியம் வைக்கிறேன்' என்று ஆவேசமாக கத்தினார். காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அந்தப் பையன் ஒருமுறை என்னிடம் செல்லில் பேசினார். தான் நன்றாக இருப்பதாகவும், ஒருமுறை வீட்டிற்கு வந்து உணவு உண்டுவிட்டுச் செல்லுங்கள் என அன்போடு கேட்டுக் கொண்டார். அது ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம். அவர் கிறிஸ்துவர் என்பதால் விருந்துக்கு அழைத்தார் என நினைக்கிறேன். என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சென்ற ஆண்டு இன்னொரு காதல் ஜோடி பிரச்சனைத் தொடர்பாக சிவ.இராஜேந்திரன் புதுச்சேரிக்கு வந்தார். அப்போது ஊரக எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அப்பிரச்சனைக்குத் தீர்வுக் கண்டோம். வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் இதுபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் திருமணங்களை நடத்தியவர்.  அதுகுறித்து பிறகு எழுதுகிறேன். அப்போது அங்கு அந்தப் பையன் வந்திருந்தார். சற்று சதைப் பிடித்திருந்தது. என்னுடன் ஒரு சில மணிநேரம் இருந்திருப்பார். அப்போதும் என்னை விருந்துக்கு வீட்டிற்கு அழைத்தார். நான் வழக்கம் போல் மெல்லிய சிரிப்புடன் சரி என்றேன். நான் இதுபோன்ற விருந்து, கொண்டாட்ங்களில் இருந்து விலகி இருப்பவன் என்பதை என்னுடன் மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் மட்டுமே அறிவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வழக்கறிஞர் சிவ.இராஜேந்திரன் அவர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு. நான் கொஞ்சம் வேலையாக இருந்ததால், அவரது அழைப்பை ஏற்காமல், பிறகுப் பேசலாம் என்று இருந்தேன். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். அவசரமாக அழைக்கிறார் என்பதை உணர்ந்து செல்போனை எடுத்தேன். ‘சுகு, நம்ம ஜேம்ஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டிக் கொண்டு செத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் சென்னையிலிருந்து அங்கு வந்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஐ.யிடம் பேசினேன். வீட்டுக் கதவுப் பூட்டி இருப்பதால் நான் வந்தப் பிறகு திறக்கவும் என்று சொல்லிவிட்டேன். நீங்களும் தயாராக இருங்கள்’ என்று கூறி முடித்தார்.

எனக்குப் பழைய நினைவுகள் எல்லாம் ஓடின. அவர் ஒன்றும் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. என்ன நடந்தது என்ற குழப்பம் ஒருபுறம். மறுபுறம் நம்மை அறியாமலேயே நம்மில் புகுந்திருக்கும் சந்தேகம், விசாரணை என்ற அனுகுமுறை. நானும் எஸ்.ஐ.யிடம் குடும்பத்தினரும், வழக்கறிஞரும் வந்தப் பின்னர் வீட்டின் கதவைத் திறக்கவும் என்று சொன்னேன். அவர் நீங்கள் யாரும் வராமல் எதையும் செய்யமாட்டேன் என்று உறுதிக் கூறினார்.

நான், சிவ.இராஜேந்திரன், இறந்தவரின் குடும்பத்தினர், அவரது மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் ஊரார் முன்னிலையில் கதவை உடைத்துப் பார்த்தோம். இறந்தவர்களின் குடும்பத்தினர் பெண்ணின் வீட்டார் கொலை செய்துவிட்டனர் என்று குற்றஞ்சாட்டினர். அவ்வீட்டின் முன்னரே இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை எழுத்தது. அப்பெண்ணின் தந்தையார் மிகவும் பரிதாபமாக செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தார். நான் தான் சூனியம் வைக்க வேண்டிய நபர் என்பது அப்போது அவர் நினைவில் இல்லை. நிலைமையை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தூக்கு மாட்டி உடல் தொங்கிக் கொண்டுடிருந்த படுக்கை அறைக்குள் சென்றோம். பிணம் அழுகிய துர்நாற்றம் மெல்லியதாக வீசியது. அந்த அறையின் மின்விளக்கு எரியவில்லை. பெரிய அளவிலான ‘டார்ச் லைட்’ முலம் உடலைப் பார்த்தோம். காவல்துறையினருடன் நாங்களும் புலன் விசாரணை மேற்கொண்டோம். தூக்கு மாட்டிக் கொண்டால் என்னென்ன தடயங்கள் இருக்குமோ அத்தனையும் இருந்தன. கழுத்தில் கயிறு இறுகி லேசாக கழுத்து எலும்பு உடைந்து தலைச் சாய்ந்திருந்தது. நாக்கு வெளியே தள்ளிக் கொண்டு பல் இறுகக் காணப்பட்டது. இரண்டு கை விரல்கள் இறுகி மூடிக் கொண்டிருந்தன. ஆண்குறியில் இருந்து விந்தும், மல வாயில் இருந்து மலமும் வெளியேறி இருந்தது. நானும், சிவ.இராஜேந்திரன் அவர்களும் தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தோம். காவல்துறையினரும் தற்கொலைதான் என முடிவுக்கு வந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடல் அரசுப் பொது மருத்துவமனை சவக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

காவல்துறையினர் என்னைப் புகார் எழுதச் சொல்லி முழு விசாரணைக்கும் என்னைப் பயன்படுத்திக் கொண்டனர். என்னை வைத்தே எல்லா வேலையும் முடித்துக் கொண்டால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அல்லவா? அங்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது. பிணத்தை எந்த ஊரில் அடக்கும் செய்வது என்று இருதரப்பினரிடையே மீண்டும் சிக்கல். இறந்தவரின் மனைவியும், அவரது தந்தையாரும் இங்கேயே அடக்கம் செய்யலாம் என்கின்றனர். இறந்தவரின் குடும்பத்தினர் கிறிஸ்துவ முறைப்படி திருவாரூரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றனர். மறுநாள் ஒருவழியாக பிரேதப் பரிசோதனை முடித்து உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினேன். இருதரப்பினரும் தங்களுக்குள் நிலவிய பகமை உணர்வை மறந்து அந்த அமரர் ஊர்தியிலேயே திருவாரூர் பயணமாயினர்.

நான் கடமையை செய்யும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாதவன். ஆனால், பிணவரையில் நாறிப் போய் அழுகிய பிணங்களைத் தூய்மைச் செய்து, சதைகளை அறுத்து, வயிற்றைப் பிளந்து, மண்டை ஓட்டை உடைத்து, பிரேதப் பரிசோதனை செய்ய தடய அறிவியல் மருத்துவர்களுக்கு உதவிச் செய்யும் ஊழியர்களுக்கு எதாவது பணம் கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் மது அருந்தாமல் இத்தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களது நிலைமைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், அவர்களுக்குப் பணம் கொடுக்காமல் வரமாட்டேன். பலர் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்ததும் உண்டு. அன்றைக்கும் இறந்தவரின் உறவினர்களிடம் சொல்லி பணம் வாங்கிக் கொடுத்துவிட்டுதான் வந்தேன். ஊருக்குக் கிளம்பும் முன் இறந்தவரின் தாயார் என்னிடம் தனியாக வந்து ரகசியமாக ‘தங்களுக்குப்  பணம் தருகிறேன், பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார். நான் அப்போதிருந்த மனநிலையில் பதில் ஏதும் கூறாமல் செய்கையிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தேன். நான் என் நேர்மையைப் பறைசாற்றும் நேரம் அதுவல்ல என்பதால் அமைதியாக இருந்தேன்.

கதவை உடைத்துப் பிணத்தை இறக்கிய கனம்முதல் பிரேதப் பரிசோதனை முடித்து உடல் வண்டியில் ஏற்றும் வரையில் அனைத்தையும் ஒருவிதப் பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் தந்தையார் ஊருக்குக் கிளம்பும் போது ‘நீங்கள் யார் என்று தெரிகிறது. நடந்தது நடந்துப் போச்சு, உங்க உதவியை மறக்கமாட்டேன்’ என்று கண் கலங்கக் கூறினார். அவர் சூனியம் வைக்க விட்ட சாபம் அத்தருணத்தில் நினைவில் நிழலாடியது. அன்று தூற்றிய வாய் இன்று நன்றி சொல்கிறது என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்துப் புறப்பட்டேன். மனித மனம் பற்றிய புரிதல் அறிய கால இடைவேளி தேவைப்படுவதை உணர்ந்தேன்.

காவல்துறையினரும், நாங்களும் தேடிய தற்கொலைக் குறிப்பு எதுவும் அங்குக் கிடைக்கவில்லை. தற்கொலையின் காரணம் முழுமையாக அறிய முடியவில்லை. தன் காதல் மனைவி சண்டைப் போட்டுக் கொண்டு ஊருக்குச் சென்றதுதான் காரணம் எனச் சொன்னார்கள். தற்கொலை செய்துக் கொள்பவர்களின் மனநிலைப் பற்றி நிறைய கற்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு வழக்கு என்ற  அனுகும் மனநிலையும், சக மனிதனின் மரணம் என்ற அவல மனநிலையும் மாறி மாறி உணர்த்தும் நிலை யாருக்கும் வரக் கூடாதது. என்ன செய்வது, நான் தேர்வுச் செய்துக் கொண்ட வாழ்க்கை இதுபோன்ற துயரத்தைச் சுமந்தே வாழப் பழக்கப்படுத்திவிட்டது.