Showing posts with label காலமானார். Show all posts
Showing posts with label காலமானார். Show all posts

Thursday, May 27, 2021

மூத்த ஓவியர் தேசிய விருதாளர் பெ.மாணிக்கம் காலமானார்!

புதுச்சேரியின் மூத்த ஓவியரும், தேசிய விருது பெற்றவருமான ஓவியர் பெ.மாணிக்கம் இன்று காலமானார்.

புதுச்சேரி பால்பவனில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார்.

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சில ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி தற்கால ஓவியக் கலைத்தளத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.

1942-இல் பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் பிறந்தார். 1960களில் சென்னை ஓவியக் கல்லூரியில், புகழ்பெற்ற கே.சி.எஸ்.பணிக்கரின் கீழ் மாணவராகப் பயிற்சிப் பெற்றார்.

ஓவியரும் நடிகருமான சிவக்குமார், ஓவியர் ஆதிமூலம், சிற்பி தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் இணைந்து ஓவியக் கலையின் பல்வேறு பரிணாமங்களைப் பயிற்சியாக பெற்றறிந்தார். ஆறு ஆண்டுகள் சென்னையில் ஓவியப் பட்டயம் பெற்றபின், புதுச்சேரி அரசின் பால்பவனில் ஓவிய ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

இந்திய அளவில் பல்வேறு ஓவியக் கண்காட்சிகள், கலை முகாம்களில் பங்கேற்று தனது ஓவியத்திறனைக் கூர்மைப்படுத்திக்கொண்டார். பாரம்பரியக் கலைகளான தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, ஆடல் கலைகள் உள்ளிட்ட தொண்மைக் கலைகளை நவீன ஓவியங்களாக்கி தனித்தன்மையோடு விளங்கினார்.

டெல்லி லலித்கலா அகாடமியின் புதுச்சேரி பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள், இளம் கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு ஓவிய முகாம்களிலும், கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார்.

ஓவியம் தவிர இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட பலரோடு தொடர்பிலும், புதுச்சேரி கலைத்தளத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றினார். இவரது கலைத்திறனைப் பாராட்டி புதுச்சேரி அரசு கலைமாமணி விருதும், டெல்லி லலித்கலா அகாடமியின் தேசிய விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

‘ஓவியக்கலை நுட்பங்கள்’ எனும் நூலும், எண்ணற்ற கட்டுரைகளும், பாரதியார் பல்கலைக்கூடத்தில் 2002ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஓவியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை சிறு நூலாகவும் எழுதியுள்ளார்.

அவருடைய துணைவியாரின் இறப்புக்குப் பிறகு தூத்துக்குடியில் மகள் வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில், இன்று 26.05.2021 காலை காலமானார்.

ஓவியர் பெ.மாணிக்கம் அவர்களின் இழப்பு புதுச்சேரிக்குப் பேரிழப்பு என்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஓவியர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.