Showing posts with label வே.ஆனைமுத்து. Show all posts
Showing posts with label வே.ஆனைமுத்து. Show all posts

Sunday, April 18, 2021

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை சாதித்தோம்: அய்யா ஆனைமுத்து பாராட்டினார்!

2004-இல், புதுச்சேரியில் வன்னியர், மீனவர், நாவிதர், முடிதிருத்துவோர், ஒட்டர், எருகுலா உள்ளிட்ட சாதிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென ‘சமூக நீதிப் போராட்டக் குழு’ சார்பில் வணிக அவையில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

கம்பன் கலையரங்கில் ‘சமூக நீதி மாநாடு’ நடத்தினோம். மிகவும் பிற்படுத்தப்படோர் சமூக அமைப்புத் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தோம். அய்யா ஆனைமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த உரையாற்றினார்.

அப்போழுது முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி. அவரைப் பலமுறை சந்தித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையினால் விளையும் பயன்களை எடுத்துச் சொன்னோம். அதோடு, புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதையும் சட்ட ரீதியாக விளக்கினோம்.

நாங்கள் கூட்டம் நடத்தி சரியாக மூன்று மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் மட்டும் 20% வழங்கி அரசாணைப் பிறப்பித்தார் முதல்வர் ரங்கசாமி. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தங்கமணி அரசுக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசாணை நகல் அய்யா ஆனைமுத்து பார்த்து சரியென சொன்ன பின்னால் பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த வரலாற்று சாதனைக் குறித்து ‘சிந்தனையாளன்’ இதழில் தலையங்கம் எழுதினார் அய்யா ஆனைமுத்து. இதற்காக சீனு.அரிமாப்பாண்டியன் வழியாக என்னிடமிருந்த ஆதாரங்கள், யார் யார் போராடினார்கள் போன்ற விவரங்களைப் பெற்று அவற்றை முறையாக பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கப் பாடுபட்ட அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதில் என்னைக் குறிப்பிட்டதோடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மூன்றே மாதத்தில் சாதித்த என்னைப் பெருமைப்படுத்தி எழுதியிருந்தார்.

பின்னர், 2006-இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பிலும் 20% இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார் முதல்வர் ரங்கசாமி. இந்த இடஒதுக்கீட்டினால் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த விளிம்புநிலை மக்கள் பெரிதும் பயன்பெற்றனர், பயன்பெற்று வருகின்றனர்.

நான் பெரியாரை பார்த்ததில்லை. வாழும் பெரியாராக வாழ்ந்து காலமான அய்யா ஆனைமுத்து என்னைப் பாராட்டியது உலகளவில் எந்தவொரு பெரிய விருதைக் காட்டிலும் சிறந்தது. அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்.

 

Thursday, September 03, 2020

அய்யா வே. ஆனைமுத்து அறிக்கை...

1987, செப்டம்பர் 1 அன்று பொன்பரப்பி சிற்றூரில் தோழர்கள் தமிழரசன், தருமலிங்கம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் ஆகியோரை தமிழகக் காவல்துறையினர் பொதுமக்கள் போர்வையில் அடித்துக் கொன்றனர். காயமடைந்து உயிரோடு இருந்தவர்களையும் சிகிச்சை அளிக்காமல் சாகடித்தனர். இதற்குக் காவல்துறை ரூ. 1 கோடி வரை செலவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் பொன்பரப்பி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். வங்கிக் கொள்ளை நடந்த போதும், அதைத் தொடர்ந்த தாக்குதலையும் நேரடியாக பார்த்தவர்களைச் சந்தித்துள்ளார். கிடைத்தத் தகவல்களை ஆங்கிலத்தில் 18 பக்க அறிக்கையாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்கு அனுப்பியுள்ளார். அதில் தமிழரசன் மற்றும் தோழர்கள் உயிரைப் பறித்தது தவறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். அதோடு இதுகுறித்து தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை இத்தாக்குதலில் ஈடுபட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதுபற்றி அவரிடம் கேட்க வேண்டும். இருப்பினும், தோழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவரின் அறிக்கை ஓர் வரலாற்று ஆவணம்.