Thursday, August 27, 2009

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட அதிகாரி மாற்றம் - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 26.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட காரணத்தினால், துணை ஆட்சியர் விஜயகுமார் பித்ரியை மிசோரோம் மாநிலத்திற்கு மாற்றம் செய்து, உடனடியாக அவரை பணியிலிருந்து விடுவிக்க கட்டாயப்படுத்தும் அரசின் பழிவாங்கும் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரி வடக்குப் பகுதியின் துணை ஆட்சியராக இருப்பவர் விஜயகுமார் பித்ரி. கடந்த 2 ஆண்டு காலமாக இவர் புதுச்சேரியில் நேர்மையாகவும், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தும் பணியாற்றி வந்துள்ளார்.

1973-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களில் 125 ஏக்கர் நிலத்தை 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது துணிச்சலான, உறுதியான நடவடிக்கையால் கையகப்படுத்தியுள்ளார். இவரின் முயற்சியால் டி.என்.பாளையம், கிருமாம்பாக்கம், தவளகுப்பம், மணவெளி, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள 82 இடங்கள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுவதை கைவிட வேண்டும் என ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் சட்டப்படி செயல்பட்ட காரணத்தினால் இப்போது அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விஜயகுமார் பித்ரி பதவியேற்ற 2 ஆண்டு காலத்திற்குள் கடந்த 1977-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள சட்டம்–ஒழுங்கு சம்பந்தப்பட்ட சுமார் 700 வழக்குகளை விசாரித்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் ரூ. 5000 மதிப்பீட்டில் பல்வேறு கிராமங்களுக்கு சுமார் 419 வீடுகளுக்கு கழிவறைகள் கட்டித் தந்துள்ளார்.

இவ்வாறு மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தி செயல்பட்ட விஜயகுமார் பித்ரியின் மாற்றல் உத்தரவை ரத்து செய்து அவரை புதுச்சேரியிலேயே பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் நலன் கருதி அரசை வலியுறுத்துகிறோம்.

Saturday, August 15, 2009

அரசு கட்டணத்தை ஏற்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 13.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதற்கு அரசுதான் பொறுப்பு என ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகள், 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் ஆகும். இந்த கல்வி ஆண்டில் 7 தனியார் மருத்துவ கல்லுரிகளும் அரசு ஒதுக்கீடாக மொத்தம் 261 இடங்கள் கொடுத்துள்ளன.

இதன்படி சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எவ்வளவு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை. இருந்தாலும் அரசு வாய் வழியாக ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறியுள்ளது.

இதன்படி மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சென்று சேரும் போது குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் அரசு கூறிய கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மாணவர்களை சேர்க்க மறுத்துள்ளனர். மேலும், அரசு கூறியுள்ள கட்டணத்தை ஏற்காமல் கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரி கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி சம்பத்குமார் தலைமையில் அரசு அமைத்த குழுவும் இரண்டு முறை கூடியுள்ளது. ஆனால், இந்த குழுவும் இதுவரையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை.

இந்நிலையில், நேற்று அறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடு கிடைத்து சேர சென்ற மாணவர் ஒருவரிடம் ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால் அந்த மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கு அரசின் மெத்தன போக்குதான் காரணம்.

தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயம் செய்து அதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னும் தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டணத்தை ஏற்கவில்லை என்றால் அக்கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த அரசு நடந்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஒரு சட்டம் இயற்றி அதை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, August 07, 2009

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 07.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை ஏற்படுத்தி, அம்மக்களை ஏமாற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டில் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1.5 சதமும் எடுத்து அளிக்கப் போவதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மூஸ்லீம்களை கண்டறிந்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

தமிழக அரசும் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முஸ்லீம்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் குளறுபடிகளை செய்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லீம் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள போது அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 1.5 சதவீதம் எடுத்து இடஒதுக்கீடு அளிப்பது சட்டவிரோதமானது. சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முஸ்லீகளுக்கு சட்டரீதியாக முறைப்படி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படையும் அறியாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கோஷ்டிக்கு ஒருவர் என உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களாக சமூக நீதியில் அக்கறையுள்ள, தெளிவு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், அதனை சட்ட ரீதியாகவும், சமூக நீதி அடிப்படையிலும் செய்ய வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும்.

பிந்தங்கியுள்ள முஸ்லீம் மக்களுக்கு நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும், பிரதமர் அறிவித்துள்ள 15 அம்ச திட்டங்களையும் நிறைவேற்ற புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.