Sunday, November 27, 2011

ஊழல் அதிகாரி ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியதற்கு கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 25.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

சுனாமி வீடு கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் சந்திராவிற்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கியதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் ஊழலுக்கு வெளிப்படையாக துணைப்போய் இருப்பதை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

2009-ல் சுனாமி மறுவாழ்வு திட்ட அதிகாரியாக இருந்த போது ராகேஷ் சந்திரா 1440 வீடுகள் கட்டியதில் ஊழல், முறைகேடுகள் நடந்ததாக கூறி சி.பி.ஐ. அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அப்போது அவரை கலெக்டர் பதவியில் இருந்து விடுவித்த அரசு அவரை காத்திருப்போர் பட்டியல் வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 20ந் தேதியன்று அவருக்கு கூட்டுறவு, குடிமைப் பொருள் வழங்கல், கலைப் பண்பாடு ஆகிய முக்கிய துறைகளை ஒதுக்கி அரசு ஆணைப் பிறப்பித்தது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மேத்யூ சாமுவேல், ராகேஷ் சந்திரா, தேவநீதிதாஸ், பாபு ஆகிய அதிகாரிகளை மத்திய அரசு ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. கடுமையான ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கை எதிர் கொண்டிருக்கும் ராகேஷ் சந்திராவை ஐ.ஏ.எஸ். ஆக்கியிருப்பது ஊழலுக்குத் துணைப் போவதோடு, வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல். ஊழலுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடந்து வரும் வேளையில் மத்திய, மாநில அரசுகளின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் மகாத்மா காந்தி, பாரதியார், பாரதிதாசன் போன்ற தேசத் தலைவர்களையும், தமிழ் மொழியையும் இழிவுப்படுத்தி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையை மேத்யூ சாமுவேல் எந்தவித காரணமும் இல்லாமல் ரத்து செய்தார். இதனைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த அக்டோபர் 10ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும், அவரை ஐ.ஏ.எஸ். ஆக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால், இதையெல்லாம் மீறி அவருக்கு தற்போது ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் செய்த, தேசத் தலைவர்களை இழிவுப்படுத்தியவரை காப்பாற்றிய அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்கி இருப்பது அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசு அளித்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். நேர்மையாக பணிபுரியும் அதிகாரிகள் இனி ஊழல் செய்தால்தான் பதவி உயர்வும், உயர் அந்தஸ்தும் பெற முடியும் என்ற மன நிலைக்கு தள்ளபடுவார்கள். இது ஒட்டுமொத்த நிர்வாகத்தையே சீர்குலைக்கும்.

எனவே, இந்த பிரச்சனையில் குடியரசு தலைவர் தலையிட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு ராகேஷ் சந்திரா, மேத்யூ சாமுவேல் ஆகிய அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். வழங்கி இருப்பதை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றையும் அனுப்ப உள்ளோம்.

கூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது


மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை,  பொய்யான தகவல்களை கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களை கொச்சைப்படுத்தியும் தொடர்ந்து பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, அவரது வீட்டை இன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் பல்வேறு கட்சி,  அமைப்புகள் நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்தனர்.

அதன்படி 22.11.2011 அன்று காலை 10 மணியளவில் போராட்டம் நடத்துவதற்காக மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் கூடினர்.

பின்னர் அங்கிருந்து எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணிக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு  செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் அ.மார்க்ஸ் முன்னிலை வகித்தார்.

இப்பேரணியில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, சிங்காரவேலர் முன்னேற்ற கழக தலைவர் சந்திரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் அஷ்ரப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது சலீம், மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் அபிமன்னன், தனித்தமிழ் இயக்க தலைவர் தமிழ்மல்லன், இலக்கிய பொழில் இலக்கிய மன்ற தலைவர் பராங்குசம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, மனித நேய அமைப்பு தலைவர் லோகலட்சகன், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை இணை செயலாளர் விக்டர் ஜோசப் ராஜ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அபுபக்கர், தமிழர் களம் தலைவர் பிரகாசு, அத்தியாப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் சின்னப்பா, மக்கள் விழிப்புணர்ச்சி இயக்க செயலாளர் சரவணன், முகவரி அமைப்பு தலைவர் மதிவதணன், புதுவை தமிழர் குரல் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி அண்ணா சிலை அருகில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி,  4 பெண்கள் உட்பட  100 பேரை கைது செய்தனர்.

அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் தலைமுறைகள் பாதிக்கப்படும்: எக்ஸ்.டி.செல்வராசு பேட்டி

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை எக்ஸ்.டி.செல்வராசு, மனித உரிமைக்கான மக்கள் கழக தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் 11.11.2011 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க 1988ல் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு அணுமின் நிலையம் அமைக்க 1987ம் ஆண்டில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அணு உலையும், பாதுகாப்பும் இரவும் பகலும் போன்றது. இரண்டும் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்த அணு உலை தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வரவேற்பு கொடுத்துவிட்டன.

இந்த அணுமின் நிலையம் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும் என்று கூறும் பிரதமர் ராமேஸ்வரத்தில் தினம், தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டதாக கூறுகின்றனர். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் 1.70 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளது. இவைகளை கணக்கில் கொண்டு 21 ஆயிரம் கோடி ரூபாய் முக்கியமா? 30 லட்சம் மக்களின் வாழ்க்கை பெரிதா? என்று பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

அணு உலைக்கு எதிர்ப்பான போராட்டங்களை சாதி மற்றும் மதத்தை கலந்து குலைக்க முயற்சிக்கின்றனர். அணு உலையில் மின்சாரம் தயாரிப்பது ஒரு யூனிட்டிற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு அணு உலை 20 ஆண்டுகள்தான் இயங்கும். ஆனால் அந்த அணு உலையை 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஆகும் செலவையும் சேர்த்தால் மிகவும் கூடுதலாகவே ஆகும்.

அப்துல் கலாம் 6 ரிக்டர் பூகம்ப பாதிப்பு வரை கூடங்குளம் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகின்றார். ஆனால் ஜப்பானில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான அளவிற்கு பூகம்ப பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் அழிவும் கண்டிப்பாக ஏற்படும். தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்றவைகளை பாதுகாப்பாக கட்டியுள்ளதற்கு உதாரணமாக கூறுகின்றார். பூம்புகார், தனுஷ்கோடி போன்றவை இயற்கை சீற்றத்தால் அழிந்தும் உள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு அணு உலையை கொண்டு வரக்கூடாது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 1987, 1991, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டுள்ளன. அதனால்தான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பற்றவை என்று சொல்கிறோம். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க பயன்படும் மின்சாரத்தின் விலையை காட்டிலும் அணுமின் நிலையத்தின் கழிவுகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகமாகும்.

மேலும் அணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் அதனால் பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பேட்டியின்போது மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உடன் இருந்தார்.

கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கோ.செ.சந்திரன் (தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), கோ.அ.ஜெகன்நாதன் (முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம்), எம்.ஏ.அஷ்ரப் (மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), முகமது சலீம் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இர.அபிமன்னன் (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), பெ.பராங்குசம் (தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்), விக்டர் ஜோசப் ராஜ் (தேசிய இணைச்செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை), அபுபக்கர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்), கோ.லோகலட்சகன், (தலைவர், மனித நேயம் அமைப்பு), சூ.சின்னப்பா (தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம்), கோ.பிரகாசு (தலைவர், தமிழர் களம்), பா.சரவணன் (செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்), மு.நாராயணசாமி (தலைவர், பெற்றொர், ஆசிரியர், மாணவர் நலச் சங்கம்), தே.சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர், புதுவை தமிழர் குரல்), கி.கோ.மதிவதணன் (பொறுப்பாளர், முகவரி அமைப்பு) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுச்சியோடு நடந்து வரும் மக்கள் போராட்டத்தைப் பொய்யான தகவல்களைக் கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும் தொடர்ந்துப் பேசி போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து வரும் 22.11.2011 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

2. மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3.அணு உலைகள் ஆபத்து நிறைந்தவை என கற்று தேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ள நிலையிலும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதும், லட்சக்கணக்கானவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதும் கண்முன் உதாரணங்களாக இருக்கும் போது உலைகள் பாதுகாப்பானவை என தொடர்ந்து மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் இக்கூட்டம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

Thursday, November 03, 2011

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க எதிர்ப்பு

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.11.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசு செயலர் மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டு துறை செயலராக இருக்கும் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று அதிகாரிகளை ஐ.ஏ.எஸ். ஆக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை மத்திய அரசும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

பாரதியார் பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் போஸ் என்பவர் தேச தலைவர் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரை இழிவுப்படுத்தியும், தமிழ் மொழியைப் பழித்தும் பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எவ்வித காரணமும் கூறாமல் மேத்யூ சாமுவேல் ரத்து செய்துள்ளார்.

இதனைக் கண்டித்தும், மேத்யூ சாமுவேல், போஸ் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும் கடந்த 10.10.2011 அன்று அனைத்து அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மேலும், இப்படிப்பட்ட அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்க புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது தேச தலைவர்களையும், தமிழ் மொழியையும் கேவலப்படுத்தியதை ஆதரிப்பதாகும். இந்த பரிந்துரையை புதுச்சேரி அரசு உடனடியாக திருப்ப பெற வேண்டும்.

மேத்யூ சாமுவேலை ஐ.ஏ.எஸ். ஆக்க அரசின் பரிந்துரையை நிராகரிக்க வலியுறுத்தி டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.