Sunday, December 17, 2006

பெரியார் சிலை சேதம் : கண்டனம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 08-12-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:

தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் காட்டுமிராண்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி கிடைத்திட வழிவகுத்தவர் பெரியார். இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட போதெல்லாம் வடஇந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில் ஒருசிறு சலனம்கூட ஏற்படவில்லை. இது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் என இந்தியாவே வியந்தது. தற்போது வடஇந்தியா முழுவதும் பெரியாரின் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

மதவெறியைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் போனதற்குக் காரணம் பெரியார். இந்துத்துவ சக்திகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே தலைவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாத்திகரான பெரியார் ஆத்திகர்களை மதிக்கத் தவறியதில்லை. குன்றக்குடி அடிகளாரோடு அவர் கொண்டிருந்த நட்பே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்று உண்மைகளை அறியாமல் இந்துத்துவ சக்திகள் இக்கொடூர செயலைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்துத்துவ சத்திகளின் தாக்குதல் பெரியார் கொள்கையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெரியாரின் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதே இதற்குப் பதிலடியாக அமையும். மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று பெரியார் கூறியுள்ளதை இந்துத்துவ சக்திகளுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Saturday, November 18, 2006

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி வருகின்றனர். இதற்குச் சான்றாக “மக்கள் கண்காணிப்பகம்“ சார்பில் வெளிவரும் “மனித உரிமைக் கங்காணி“ இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் 1975-ஆம் ஆண்டு வரை மரண தண்டனை முறை இருந்தது. ஆனால், அப்போது 1 லட்சம் பேர்களுக்கு 3.09 நபர்கள் வீதம் கொலை மரணங்கள் இருந்தன. அதற்கு அடுத்த ஆண்டு அந்நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர், 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கொலை மரணங்கள் 1.73 ஆகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

2000-ஆவது ஆண்டு “நியூயார்க் டைம்ஸ்“ நடத்திய கணிப்பின்படி மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பகுதிகளைவிட மரண தண்டனை செயலிலிருக்கும் பகுதிகளில் 48 முதல் 101 விழுக்காடுவரை கொலை மரணங்கள் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவில் நடக்கும் கொலை மரணங்களின் எண்ணிக்கை மரண தண்டனை ஒழிக்கப்பட்ட ஐரோப்பாவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளன.

1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. அவையால் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.

இந்தியாவில் இதுவரையில்...

சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் : 55 பேர்.

முதன்முதலில் தூக்கிலிடப்பட்டவர் : நாதுராம் கோட்சே (காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்).

கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் : தனஞ்சய் சாட்டர்ஜி (மேற்கு வங்கம்).

மரண தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருப்பவர்கள் : 21 பேர்.

2003-ஆம் ஆண்டு சிறைத்துறைப் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர்.

நவம்பர் 2006 கணக்குப்படி கடந்த 9 மாதங்களில் 32 வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள் : 56 பேர்.

Thursday, November 16, 2006

புதுச்சேரியில் மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 15-11-2006 அன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில், மரண தண்டனை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன் தொடக்கவுரை ஆற்றினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் கு.இராம்மூர்த்தி, அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கச் செயலாளர் ம.சந்திரகுமார், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.ஜோதிபிரகாசம், அ.மஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன. நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளும் ஊடகங்களும் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்ட செய்தியை வெளிப்படுத்தியுள்ளன.


• பாராளுமன்ற தாக்குதல் வழக்கில், முறையற்ற விசாரணையின் முடிவில், காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ள்ள மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• அமெரிக்க வல்லரசின் “பொம்மை நீதிமன்றம்“ ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு வழங்கியுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
• இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி வாடும் 300-க்கும் மேற்பட்டவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• உலக அளவில் இதுவரையில் 128 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. இதனைப் பின்பற்றி இந்திய அரசும் மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

முகமது அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமெனப் போராட்டம் நடத்தி வரும் இந்துத்துவ அமைப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் விளங்கியது. காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-இல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தற்செயலான ஒன்று.

Tuesday, November 14, 2006

மரண தண்டனையைக் கண்டித்துப் போராட்டம்

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சல் குரு, பாக்தாத் நீதிமன்றத்தால் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என மனித உரிமை மக்கள் இயக்க அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

8-11-2006 அன்று புதுச்சேரியில் செய்தியாளர் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

மரண தண்டனை ஜனநாயகத்திற்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மரண தண்டனையை ஒழிக்க இந்தியா முழுவதும் குரல் எழும்பி வருகிறது. தொடர்ச்சியானப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட போது தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2001-இல் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முகமது அப்சலுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும், இந்த தண்டனை அநீதி என்றும் மிகப் பெரிய இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதேபோல், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்படவில்லை என உலக நாடுகள் கூறியுள்ளன. இறையாண்மை உள்ள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆக்கிரமித்துக் கொண்டு, பொம்மை நீதிமன்றத்தை வைத்து, சதாம் உசேனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களைக் கொலை செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7-ஆம் நாளன்று அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலையொட்டி புஷ்சுக்கு ஆதரவாக அவசர அவசரமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க வேண்டுமெனப் போராடிய போது, அதற்கு எதிராக யாரும் போராடவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன்பேரில் நளினியின் மரண தண்டனைக் குறைக்கப்பட்டது.

இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும், வகுப்புவாதத்தை உருவாக்கி வாக்குகள் சேகரிக்கும் கட்சியினர், அப்சல் முசுலீம் என்பதால் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். இதன்மூலம் முசுலீம் சமுதாயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோன்ற செயல் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.

நாடாளுமன்றத்தைத் தாக்கியது கடும் குற்றச்சாட்டு. அதை முறையாக விசாரிக்க வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் கூற்றுபடி சதித் திட்டம் தீட்டிய மூன்று பேர் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக உள்ளனர். யாரையாவது பிடித்து தூக்கிலிட வேண்டும் என்பதற்காக நான்கு பேரைச் சிக்க வைத்தனர். இவர்களுக்கு கீழ்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றம் அப்சலுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. மற்றவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது. உச்சநீதிமன்றமே இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை என்றும், இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டியுள்ளது எனக் கூறி தூக்குத் தண்டனை வழங்கலாம் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற தாக்குதல் மத்திய அரசும், உளவுத் துறையும் சேர்ந்து நடத்திய நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்சல் பழைய தீவிரவாதி. அதிலிருந்து விலகி போலீசிடம் சரணடைந்தவர். போலீசார் அவரைக் கையாளாகப் பயன்படுத்திக் கொண்டனர். அப்சல் போலீசின் கட்டளைப்படி, இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு வீடுபிடித்துக் கொடுத்துள்ளார். மேலும், போலீசின் வற்புறுத்தலின் பேரில் அந்த குற்றவாளிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த கார்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அப்சலின் வழக்கைப் பார்க்க வேண்டும்.

எனவே, அப்சல் குரு, சதாம் உசேன் ஆகியோரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள அனைவரின் மரண தண்டனையைக் குறைக்க வேண்டும். உலக அளவில் 128 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் மரண தண்டனையைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியிலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

பேட்டியின் போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday, November 13, 2006

மரண தண்டனை ஒழிப்புக்கு வலுசேர்க்கும் நூல்

அப்சலின் மரண தண்டனையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தில்லியைச் சேர்ந்த “Society for Protection of Detenues and Prisoners Rights (SPDPR)“ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள “முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“ என்ற புத்தகத்தைத் தமிழில் பேராசிரியர் அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் முக்கிய பல நூல்களை வெளியிட்டுள்ள “கருப்புப் பிரதிகள்“ பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

8-11-2006 அன்று புதுச்சேரி செய்தியாளர்கள் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இப்புத்தகத்தை செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி வெளியிட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி பெற்றுக் கொண்டார். பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் துணைத் தலைவர் இர.அபிமன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் போலீஸ் திட்டமிட்டுப் புனைந்த குற்றச்சாட்டுகள், விசாரணையில் நடைபெற்ற குளறுபடிகள், வழக்கறிஞர்கள் செய்த துரோகம், ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பானப் பொய்க் கதைகள், குற்றஞ்சாட்டப்பட்டவரின் நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்காத நீதிமன்றங்கள்...என இழைக்கப்பட்ட “தொடர் அநீதி“யின் விளைவுதான் அப்சலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை என்பதை ஆதாரத்துடன் முன் வைக்கிறது இந்நூல்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்நூல் மேலும் வலுசேர்க்கும் என்பதில் அய்யமில்லை.

“முகமது அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?“

முன்னுரையும் மொழிபெயர்ப்பும் : அ.மார்க்ஸ்
முதற் பதிப்பு : நவம்பர் 2006.
பக்கம் : 64. விலை : ரூ.25.00.
முகவரி : 45-அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை – 600 005.
செல் : 94442 72500.
மின்னஞ்சல் : karuppu2004@rediff.com.

Tuesday, November 07, 2006

சிங்கள அரசின் பிடிவாதம்

"சிங்கள அரசின் பிடிவாதம்
அமைதிப் பேச்சு வார்த்தையை சீர்குலைக்கும்"

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் மீண்டும் போர் வெடித்துள்ளது. யாழ்ப்பாணத்தை மற்ற பகுதிகளோடு இணைக்கும் “ஏ-9“ நெடுஞ்சாலையை திறக்க முடியாது என சிங்கள அரசு மறுத்துவிட்ட காரணத்தால் பேச்சுவார்த்தைத் தோல்வி அடைந்தது.

செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது சிங்கள இராணுவம் குண்டு வீசியதால் 61 இளஞ்சிறார்கள் கொல்லப்பட்டனர். இந்த துயரத்தால் உலகம் வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள், கிளிநொச்சியிலுள்ள மருத்துவமனை மீது சிங்கள விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

2-11-2006 அன்று நடந்த இந்த தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் நடந்தபோது 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் இருந்துள்ளனர். சிகிச்சைப் பெற்றுவந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள வெளியே ஓடியுள்ளனர். தள்ளாத வயது முதிர்ந்தவர்கள் ஓட முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியுற்ற நோயாளிகள் பலர் மயக்கி விழுந்துள்ளனர்.

போர்வெறியின் தாகம் அடங்காமல் மேலும் தமிழர்களின் ரத்தத்தைக் குடிக்க, அங்குள்ள பள்ளிக் கூடம், கல்லூரி ஆகியவற்றின் மீதும் சிங்கள விமானப்படை குண்டு வீசி தாக்கியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் மாணவ மாணவிகளும் அடங்குவர். பதினெட்டு வயதே நிரம்பிய சண்முகரத்தினம், கிருசாந்த் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தவொரு சூழலிலும் மருத்துவமனைகள், பள்ளிகள் -கல்லூரிகள், நீர்நிலைகள், வழிபாட்டுத் தளங்கள் என மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பது போரில் பின்பற்றப்படும் மரபு. ஆனால், இதுபோன்ற எந்த மரபுகளையும் மதிக்காமல் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுவதையும் தமிழர்களைக் கொன்றுக் குவிப்பதையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளன சிங்கள அரசும் அதன் இராணுவமும்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜப்பான், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்தியா வழக்கம்போல் தனது நடுநிலை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

நிலை இப்படியிருக்க, “வடக்கு-கிழக்கு ஆகிய தமிழர் பகுதிகளில் இன்னமும் இராணுவம் முழு அளவில் போரைத் தொடங்கவில்லை. இனி நீண்ட காலத்திற்குப் பொறுமையாக இருக்க முடியாது. தமிழர் பகுதிகளில் கடல்-வான்-தரை வழியாக பெரிய அளவில் முப்படைத் தாக்குதலை விரைவில் தொடங்குவோம்“ என இலங்கைப் பிரதமர் விக்கிரநாயகே மிரட்டல் விடுத்துள்ளார்.

கொழும்பு நகரில் நடைபெற்ற சிங்கள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் பேசியுள்ளார். 80-களில் வெளிப்படத் தொடங்கி இன்றுவரையில் “சிங்கள இனவெறி“ போக்கோடு தமிழர்களை வேட்டையாடி வரும் இராணுவத்தினர் மத்தியில் பிரதமர் விக்கிரநாயகே இவ்வாறு பேசியுள்ளது, தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவத்தினரைத் திட்டமிட்டுத் தூண்டிவிடும் சதியாகும்.

யாழ்ப்பாண நெடுஞ்சாலையை சிங்கள இராணுவம் மூடி வைத்துள்ளதால், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


தற்போது அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி ருபாய் முன்னூறுக்கும், ஓரு கிலோ உருளைக்கிழங்கு ரூபாய் முன்னூறுக்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கும் விற்பனை செய்யப் படுகிறது ரூபாய் இரண்டுக்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டி ஒன்றின் விலை ரூபாய் இருபதாக ஆக உயர்ந்துள்ளது இதனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர்.


“நம் கண் முன்னே நடக்கும் இக்கொடுமையை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் வசிக்கும் 6 லட்சம் ஈழத் தமிழர்களைப் பட்டினிச் சாவிலிருந்துக் காப்பாற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை கப்பல் வழியாக இந்தியா உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இராணுவம் மூடி வைத்துள்ள யாழ்ப்பாண நெடுஞ்சாலையைத் திறந்துவிடும்படி சிங்கள அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்“ என, இந்திய அரசில் பங்கு வகிக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவநர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.


“பசிப் பட்டினியால் வாடிப் பரிதவிக்கும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் உடனடி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடியாக் தமிழ்மக்களுக்கு அவை கிடைக்க செய்யவேண்டும்“. என ம தி.மு.க பொதுச்செயலர் வை.கோ வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட அனைவரின் கோரிக்கையும் இதுதான். ஈழத் தமிழர்களின் சிக்கலைப் பொறுத்தவரையில், உறங்குவது போல் பாசாங்கு செய்யும் இந்திய அரசு, ஈழத் தமிழர்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வெண்டும். தமிழக அரசியல் கட்சிகள் இதனை இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். சிங்கள அரசின் பிடிவாதம் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியை சீர்குலைக்கவே செய்யும்.

Wednesday, October 25, 2006

இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் அத்துமீறல்கள்

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐ.ஐ.எம்.), இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்லூரிகள் போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவே காலம் கடந்த முயற்சி என்றும், இந்த கல்வியாண்டு முதலே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டுமெனப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனிடையே, பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இடைக்கால உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதாவது, “நாடாளுமன்ற நிலைக்குழு அளிக்கும் அறிக்கையின் நகலை, மூடி முத்திரையிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்“ என்று கூறியது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்தன. இடஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதித்து, ஏற்றுக் கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் நடைமுறைக்கு வரும். இதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் தலையிடுவது, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பில் உச்சநீதிமன்றம் அத்துமீறி தலையிடுவதாக“ சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வெளிப்படையாகவே கண்டித்தார்.

இதன் பின்னர், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதும்“ என உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மாற்றியது.

இடஒதுக்கீடு குறித்த அரசியல் சட்ட 77,81,82,85-ஆவது சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது. வசதி வாய்ப்புடன் வாழும் எஸ்.சி.,எஸ்.டி. உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது“ என அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

“உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்கானது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது. இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற நோக்கத்தையே இது தகர்த்துவிடும். இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் அதன் செயலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி நுழைந்துள்ளது.

இடஒதுக்கீடு எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை, வேறுபாடற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்சநீதிமன்றம் அல்ல“ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கடுமையாக சாடியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு “இத்தகைய முக்கிய பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கருத்தைக் கூறுவதற்கு முன் சமூக எதார்த்தத்தைக் கவனத்தில் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது“ என்று கூறியுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு (நாயுடு) “எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

“ஒன்பதாவது அட்டவணையில் கடந்த 12 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதே அரசியல் சட்ட விரோதம்“ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.

இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றங்களின் நிலை எப்போதும் பிற்போக்கானதாகவே இருந்து வருகிறது. மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில், உச்சநீதிமன்ற 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், 1993-இல் வழங்கிய தீர்ப்பிலேயே சமூக நீதிக்கு வேட்டு வைக்கப்பட்டது. மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது, “கிரிமி லேயர்“ எனும் பொருளாதார அளவுகோல் பின்பற்றப்பட வேண்டும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் சமூக நீதிக்கு எதிராகவே உள்ளன. இதனால், பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைகள் சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைத்துவிடும். கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு எதிரான கருத்து வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் “உயர் வகுப்பைச்“ சேர்ந்தவர்களாக இருப்பதே.

அடித்தள மக்களிலிருந்து சமூக நீதியில் அக்கறைக் கொண்ட நீதிபதிகள், கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ள பின்னடைவை சீர்செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டித் தீர்வு காணப்பட வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு வழிகாட்டியாகத் திகழும் தமிழகம் விழித்தெழ வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த அநீதியை எதிர்த்துப் போராட வேண்டியது உடனடி அவசியம். தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் ஏற்றிய சமூக நீதித் தீயை அணையாமல் காத்திடும் பொறுப்பு நமக்குள்ளது. இல்லையேல், வரலாறு நம்மை மன்னிக்காது.

Tuesday, October 24, 2006

ரவீந்தரநாத் தாகூரைக் கொன்ற அரசு அதிகாரி

பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அரசு, கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் “A Glimpse of Our Own Pondicherry“ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதில், தாகூர் எழுதிய “Where the Mind is Without Fear“ என்ற தலைப்பிலான கவிதையைத் திருத்தி, சிதைத்து வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், 23-10-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:

கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் கவிதையைத் திருத்தி, சிதைத்து வெளியிட்ட புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் பி.வி.செல்வராஜ் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

நோபல் பரிசு பெற்ற தாகூரின் “கீதாஞ்சலி“ தொகுப்பிலுள்ள கவிதையைத் திருத்தி, சிதைத்து, “புதுச்சேரி பற்றித் தாகூர்“ எனத் தலைப்பிட்டு, அவருடைய புகைப்படத்துடன் அவரே எழுதியது போல், ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் புதுச்சேரி அரசு சார்பில் வெளியிட்டிருப்பது வரலாற்று மோசடி.

எந்தவொரு படைப்பையும் தழுவி எழுதும்போது, படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டு, “தழுவி எழுதியது“ எனக் குறிப்பிடுவது காலம் காலமாக இருந்து வரும் மரபு. ஆனால், ஒரு படைப்பைத் திருத்தி, சிதைத்து வெளியிடுவது என்பது சட்டப்படி குற்றம்.

உலக அளவில் புகழ்பெற்ற தாகூர், மேற்குவங்க மக்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்பவர். அவரது படைப்பைச் சிதைத்திருப்பது ஒட்டுமொத்த மெற்குவங்க மக்களையும் அவமதித்தது போன்றதாகும். மேலும், இச்செயல் புதைக்கப்பட்ட தாகூரின் உடலைத் தோண்டி எடுத்து சிதைப்பதற்குச் சமமானது.

தாகூர் எழுதிய இசைப்பாடல்கள் அனைத்தையும் “ரவீந்தர சங்கீத்“ என்ற பெயரில் அவரே இசையமைத்து வைத்துள்ளார். இன்றும் அவரது பாடல்கள் மேற்குவங்க மக்களால் ராகம் மாறாமல் பாடப்பட்டு வருகின்றன. 90-களில் அவரது பாடல்களின் ராகத்தை மாற்றி இசையமைத்துப் பாடிய இசைக் குழு ஒன்றின்மீது, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. படைப்பாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இப்போக்கை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேற்குவங்க முதல்வர் புத்தாதேவ் பட்டாச்சாரியா, புதுச்சேரி முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளதுபோல், தவறிழைத்த அதிகாரி பி.வி.செல்வராஜ் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தாதேவ் கோரிக்கையின் பின்னால் அரசியல் இருப்பதாக சிலர் அறிக்கை வெளியிட்டிருப்பது தவறு. புத்தாதேவ் அரசியல்வாதி என்பதைத் தாண்டி அவர் மிகச் சிறந்த இலக்கியவாதி. உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் நாவலாசிரியர் காப்காவின் நாடகங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தவர். உலகம் போற்றக்கூடிய நாடகங்கள் பலவற்றை மொழிபெயர்த்து அரங்கேற்றியவர். ஒரு இலக்கியவாதிக்குத்தான் இலக்கியப் படுகொலையின் தீவிரம் புரியும்.

தவறு செய்த அதிகாரியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு சிலர், தமிழர் – வங்காளி எனப் பிரச்சினயைத் திசை திருப்புவது கண்டனத்திற்குரியது.

ஒரு அரசு அதிகாரி செய்த தவறு புதுச்சேரி அரசுக்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் விடுவாரானால், இதுவரையில் அவர் கட்டிக் காத்துவரும் நற்பெயருக்கு உலக அரங்கில் களங்கம் ஏற்படும்.

இதுபற்றி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம்.

Tuesday, October 17, 2006

அப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன்,13.10.2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

உலக அளவில் இதுவரையில் 127 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. அண்மையில்கூட பிலிப்பைன்ஸ் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளது. இந்தியா மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் பலகாலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது. மரண தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானது.

இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாக அறிகிறோம். நிலுவையில் உள்ள அனைவரின் கருணை மனுக்களையும் ஏற்று, மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.10.2006 அன்று தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அகிம்சையை வலியுறுத்திய காந்தி பிறந்த மண்ணில், மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

Sunday, October 15, 2006

அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்

தமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை

தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத்தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளார்.

மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்திவரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும்கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமகும்.

மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

கையெழுத்திட்டோர்:

பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், டாக்டர்.ப.சிவகுமார், பொ.இரத்தினம், சி.நீலகண்டன், சுகிர்தராணி, வெளி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, சுகுணா திவாகர், ஆ.இரமேசு, வசுமித்ரா, புனித பாண்டியன், வீராசாமி, கே.எம்.வேணுகோபால், ஜெ.ஹாஜா கனி, இன்குலாப், கவிக்கோ அப்துர் ரகுமான், வ.கீதா, சே.கோச்சடை, கோணங்கி, குட்டி ரேவதி, மதிவண்ணன், ச.பாலமுருகன், கடற்கரய், இரத்தின கரிகாலன், சு.தமிழ்ச்செல்வி, அழகிய பெரியவன், விடியல் சிவா, லட்சுமி மணிவண்ணன், தளவாய் சுந்தரம், கவிதாசரண், ஜெயந்தன், யூமா வாசுகி, சி.மோகன், கண்மணி, ஓடை துரைஅரசன், சுதாகர் கத்தக், கண்ணன்.எம்., சிவகுமார், வெ.கோவிந்தசாமி, பெரம்பூர் கந்தன்.

அகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை



இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. ஜனவரி 12, 2006 தொடங்கி ஜுலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 தேதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52,332 பேர் வாழ்கின்றனர் (பார்க்க : வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களின் நிலைமை எப்படி உள்ளது, போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அறிய தமிழகத்திலுள்ள முக்கிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த முன்னோடி மனித உரிமை ஆர்வலர்கள் 19 பேர் அடங்கிய குழு ஒன்று அரசு அனுமதி பெற்று சென்ற ஜுலை 8ந் தேதி அன்று இராமேஸ்வரம் மண்டபம் முகாமைப் பார்வையிட்டது. தொடர்ந்து இக்குழுவினர் பிரிந்து சென்று தமிழகமெங்குமுள்ள கீழ்க்கண்ட முகாம்களையும் பார்வையிட்டனர்.

கீழ்ப்புத்துப்பட்டு, பெரியசெவலை (விழும்புரம் மாவட்டம்) திருவாதவூர் (மதுரை மாவட்டம்) குள்ளஞ்சாவடி, விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திகாட்டானூர் (சேலம் மாவட்டம்) பரமத்தி வேலூர், கரூர் (நாமக்கல் மாவட்டம்) பவானி சாகர் அணைக்கட்டு (ஈரோடு மாவட்டம்)

குழு உறுப்பினர்கள்:

  1. பொ.இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்.
  2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
  3. அ.மார்க்ஸ், பேராசிரியர், மனித உரிமைக்கான மக்கள் கழகம்(PUHR).
  4. ச.பாலமுருகன்,வழக்கறிஞர், பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.
  5. சே.கோச்சடை, பேராசிரியர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.
  6. கண.குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம், ஈரோடு.
  7. தமயந்தி, வழக்கறிஞர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).
  8. கேசவன், வழக்கறிஞர், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் (CPCL).
  9. பகத்சிங், வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம், மதுரை.
  10. இராபர்ட், வழக்கறிஞர், மதுரை.
  11. மேகவண்ணன், எழுத்தாளார், மனித உரிமைக்கான மக்கள் கழகம்(PUHR).
  12. மு.முத்துக்கண்ணு, இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை (INSAF), புதுச்சேரி.
  13. ம.இளங்கோ, பெரியார் திராவிடர் கழகம்,புதுச்சேரி.
  14. வீரமோகன், பெரியார் திராவிடர் கழகம்,புதுச்சேரி.
  15. இரா.முருகப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, திண்டிவனம்.
  16. பாவேந்தன், வழக்கறிஞர், தமிழ்த் தேச வழக்கறிஞர்கள் நடுவம்.
  17. எஸ்.சங்கரலிங்கம், பேராசிரியர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், மதுரை.
  18. எஸ்.சண்முகநாதன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.
  19. அ.சுப்பிரமணியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சிவகங்கை.

முகாம்களின் நிலைமை:



இராமேஸ்வரம் பகுதியில் வந்திறங்கும் அகதிகள் அனைவரும் மண்டபம் முகாமுக்குக் கொண்ட வரப்படுகின்றனர். இது ஒரு இடைக்கால முகாம் எனச் சொல்லப்படுகிறது. எனினும் நாங்கள் சென்றபோது சென்ற ஜனவரிக்குப் பின் புதிதாக வந்திருந்த 4343 பேர்கள் தவிர பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கு 220 குடும்பங்களைச் சேர்ந்த 756 பேர்கள் வசிப்பதையும் கண்டோம். ஜுலை 8ந் தேதி அன்று 28 பேர் வந்திறங்கியுள்ளனர். அரிச்சல் முனை என்னுமிடத்தில் இறக்கிவிடப்பட்ட இவர்கள் இலங்கைப் பணம் ரூ.1000/- கொடுத்து 9 கி.மீ. தொலைவிலிருந்த முகந்தராயசத்திரத்திற்கு வந்திருந்தனர். உளவுத்துறை அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தது. அரிச்சல்முனை தவிர பாம்பனிலும் அகதிகள் வந்திறங்குகின்றனர். தலைமன்னார், பேசாலை, கிளிநொச்சி எனப் பல பகுதி களிலிருந்தும் இங்கு வருகின்றனர். அன்று வந்திறங்கி யிருந்தவர்களில் பெரும்பாலோர் மீன் பிடித்தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள். அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவரின் குடும்பமும், டிரைவர் ஒருவரின் குடும்பமும் கூட அதிலிருந்தது. போர்ச் சூழலால் மீன் பிடித்தொழில் முழுவதுமாய் நின்று போயுள்ளது. இலங்கை ராணுவத்தால் இளைஞர்கள், பெண்களின் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்துள்ளது. வந்திருந்தவர்கள் 3 நாட்கள் மன்னார் காட்டில் காத்திருந்து ஒவ்வொருவரும் சுமார் 7000 முதல் 10,000 இலங்கை ரூபாய்கள் வரை படகுக் காரர்களுக்குத் தந்து வந்திருந்தனர். மேலும் 10,000 பேர் இங்கு வருவதற்காக மன்னார் காடுகளில் காத்திருப்ப தாகவும் கூறினர். படகில் வரும்போது இலங்கைக் கடற்படையோ, விடுதலைப் புலிகளோ பார்த்தால் பிடித்துச் சென்றுவிடும் ஆபத்து அவர்களுக்கு உள்ளது.

இந்தியாவில் தரை இறங்கியவுடன் முதலில் இந்தியக் கடற்படைச் சோதனை, பின் முகந்தராய சத்திரத்தில் க்யூ பிரிவு மற்றும் °பெஷல் பிராஞ்ச் போலீசார் விசாரணை. பின்னர் தனுஷ்கோடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு மீண்டும் விசாரணையும் பதிவும் செய்யப்படுகிறது. பின்பு மாலையில் மண்டபம் முகாமிற்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். தொண்டு நிறுவனத்தினர் அளிக்கும் உணவு இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மண்டபம் முகாமில் புதிதாய் வந்தவர்கள் போலீஸ்பாதுகாப்பில் குவாரன்டைனில் வைக்கப்படுகின்றனர். இது ஒரு சிறைக் கொட்டடி. நாங்கள் சென்றபோது ஆண்களுக்கான குவாரன்டைனில் (சுமார் 20க்கு 20அடி) 39 பேர் அடைக்கப் பட்டிருந்தனர். இரண்டே இரண்டு கழிப்பறைகள் மட்டுமே அதில் இருந்தன. இவர்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) ஜுன் 17 முதலும், மன்னாரைச் சேர்ந்த முருகையன் (42) ஜுன் 27 முதலும் அங்கு அடைக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு உணவு வெளியிலிருந்து தருவித்துத் தரப்படுகிறது. ஒருவருக்கு ஒருநாள் உணவுச் செலவு ரூ.35/- விசாரணையின்போது இயக்கங்களுடன் தொடர்புடைய தாகச் சந்தேகத்திற் குள்ளாகிறவர்கள் சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 30 நாட்கள் வரை இத்தகைய குவாரன்டைனில் வைக்கவேண்டுமென்பது இந்திய அரசின் ஆணை என்றார் முகாம் அதிகாரி.

மண்டபத்திலும் சரி பிற முகாம்களிலும் சரி பிரச்சினைகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. எங்குமே அகதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வீடுகள் வசிக்கத் தகுதியான வையாக இல்லை. எல்லாம் 80களின் இறுதியில் கட்டப்பட்டவை. அதற்குப்பின் அவை புதுப்பிக்கப்படாம லேயே உள்ளன. பெரும்பாலும் ஓடு மற்றும் தார் அட்டைகளால் வேயப்பட்ட 10க்கு 10அடி அளவுடைய வீடுகளே இவை. பவளத்தானூர், குறுக்கப்பட்டி (சேலம் மாவட்டம்) முகாம்களில் இரண்டு வகை வீடுகளும் உண்டு. இவை `ஓட்டுக் காம்ப்', `அட்டைக் காம்ப்' என அழைக்கப் படுகின்றன. அட்டை வீடுகளில் பகல் வேலைகளில் யாரும் இருக்க முடியாது. ஓட்டு வீடுகள் உடைந்து மழைக் காலங்களில் ஒழுகுகின்றன.

அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகளும் கூட எல்லோருக்கும் தரப்படவில்லை. எடுத்துக்காட்டாக பவளத்தானூர் முகாமில் 123 குடும்பங்கள் (482 பேர்) உள்ளன. அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் 60 மட்டுமே. பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழ்வோர் திருமணமாகித் தனிக்குடித்தனம் அமைக்கும்போது அவர்களே சொந்தப் பொறுப்பில் வீட்டைக் கட்டிக் கொள்ளும் நிலையே எங்கும் உள்ளது. அதற்கும்கூட சில முகாம்களில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அத்திகாட்டானூர் முகாமில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

எந்த முகாமிலும் கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை. மிகச் சில கழிப்பறைகள். அவற்றிலும் தண்ணீர் வசதி இல்லை. ஆண்களும், பெண்களும் அருகிலுள்ள காடுகளுக்குச் சென்றே உடற்கடன்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை. இலங்கைப் பண்பாட்டில் இத்தகைய நிலை இல்லை என்பதால் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதற்கெனப் பெண்கள் வெளியே செல்லும்போது சில இடங்களில் `ஈவ் டீசிங்' பிரச்சினை. அடுத்துள்ள கொல்லைக் காரர்கள் கல்லால் அடிக்கும் நிலையும் உள்ளது. மண்டபம் முகாமில், காட்டுப் பகுதியில் பாம்புத் தொல்லைகளும் உள்ளன. இங்கு செல்வநாயகி (64) என்கிற வயதான பெண்மணி மலம் கழிக்க வெளியே செல்ல இயலாததால் சாப்பிடாமலேயே உள்ளார். குளிப்பதற்கு அறைகள் கிடையாது. பெண்கள் உட்பட பொதுக் கிணறு களிலேயே குளிக்க வேண்டியுள்ளது. எந்த முகாமிலும் போதுமான குடிநீர் வசதி இல்லை. விருத்தாசலம் முகாமில் ஒரே ஒரு குழாய் மட்டுமே உள்ளது. அதிலும் தொட்டி இல்லை. காலை. மாலை குறைந்த நேரம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. சில கல் தொலைவிற்குச் சென்று சைக்கிளில் தண்ணீர் கொண்டுவந்தே தம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

இராமேஸ்வரம் முகாமில் கிணறுகள் இருந்த போதிலும் தூர் வாராமல் கிடக்கின்றன. எல்லா முகாமிகளிலும் ஒற்றை பல்பு முறையில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. சில முகாமிகளில் மட்டும் தனி மீட்டர் வைக்க அனுமதி உள்ளது. ஒற்றை பல்புக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மின்சாரம் அளிக்கப்படுகிறது. சார்ப்பு இறக்கி இவர்கள் தாங்களாகவே அமைத்துள்ள சமையல் அறை, திண்ணை ஆகியவற்றிற்கு மின்சார வசதி கிடையாது. குள்ளஞ்சாவடி முகாமில் ஒரு பகுதிக்கு மின்சாரமே இல்லை. கொக்கிப் போட்டு சட்டபூர்வமற்ற முறையில் மின்சாரம் எடுக்க வேண்டிய நிலை இங்குள்ளது. பவானிசாகர் முகாமில் 16 ஆண்டுகளாக மின்சார வசதி செய்யப்படாத வீடுகள் உள்ளன. பின்னர் கட்டப்பட்ட 30 வீடுகளுக்கு ஒரு பல்பு வசதி செய்து கொடுக்கப்பட்டாலும், எல்லா விளக்குகளும் ஒரே சர்வீசில் இருந்து எடுக்கப்படுவதால் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க கட்டண விகிதம் அதிகரிக்கும் நிலை உள்ளது.

முகாம்களில் இருப்போருக்கு உடனடியாகப் பதிவு செய்து அட்டைகள் வழங்கப்பட்டபோதும் பல முகாம்களில் பதிவு இல்லாமல் பலர் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 100 குடும்பங் களைச் சேர்ந்த 949 பேர் இன்னும் அகதிப் பதிவில்லாமல் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கும் எந்தச் சலுகையும் கிடைப்பதில்லை. முகாமுக்கு வெளியே உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அகதிப் பதிவுகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. எடுத்துக்காட்டு : பவானிசாகர் முகாம்.

எங்கும் குப்பை வண்டி வருவதில்லை. தூய்மைப் பணி நடைபெறுவதில்லை. முகாமிலுள்ளவர்களே அதைச் செய்ய வேண்டிய நிலை.
பல முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. சிலவற்றில் தொண்டு நிறுவனங்கள் பயிற்சியாளர்களைக் கொண்டு மருந்துகள் கொடுக்கின்றனர். மண்டபம் முகாமில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை இருந்தபோதிலும் கடந்த 15 ஆண்டுகளாகப் படுக்கைகள் அதிகரிக்கப்பட வில்லை. சுற்று வட்டார மக்களும் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

முகாம்களுக்குள் செயல்படும் குழந்தை காப்பகங்கள் தொண்டு நிறுவனங்களாலேயே நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்குக் கடலை முதலிய சத்துணவு வழங்குவது சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்குத் தடை இல்லாத போதும் கட்டணச் சலுகை இல்லை. தொண்டு நிறுவனங்கள் சில ஓரளவு உதவி செய்கின்றன. முழுமையான உதவி இல்லை. உயர்கல்வியில் இருந்து வந்த 2 சத இடஒதுக்கீடு முந்தைய ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் உள்ள சகுந்தலாதேவி என்பவரின் மகள் உஷா நந்தினிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வில் 807 மதிப்பெண்கள் பெற்றும் பி.எஸ்.சி., தாதிமார் பட்டைய படிப்பிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை 16 வருட காலம் சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டு 2005 இல் நீதிமன்றத் தலையீட்டில் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப் பட்டுள்ளார்.

அகதியாகப் பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசு வழங்கும் உதவிப் பணம் போதுமானதாக இல்லை. குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ.200ம், 12 வயதுக்கு மேற்பட்ட மற்றவர்களுக்கு ரூ.144ம், 12 வயதுக்குட்பட்ட முதல் குழந்தைக்கு ரூ.90ம், அடுத்த குழந்தைக்கு ரூ.45ம் கொடுக்கப்படுகிறது. வயது வந்தவர்களுக்கு 12 கிலோவும் குழந்தைகளுக்கு 6 கிலோவும் அரிசி மாதந்தோறும் கிலோ 0.57 பைசா என்கிற மான்ய விலையில் தரப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையிலிருந்தே இவற்றையும் பிற தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இது சாத்தியமில்லை என்பதால் ஆண்களும், பெண்களும் கட்டிட வேலை, சித்தாள், தச்சுத் தொழில், கொத்தனார் வேலை, பெயிண்டிங் என சாத்தியமான எல்லா வேலைகளையும் செய்கின்றனர். அகதிகள் என்பதால் இவர்கள் பணிக்குச் செல்லுமிடங்களில் பணிப் பாதுகாப்பு இல்லை. மண்டபம் முகாமில் இருக்கும் யாழ்ப்பாணம் கமலேந்திரவதி (43)யின் கணவர் கண்ணதாசன் (44) இவ்வாறு கட்டிட வேலைக்குச் சென்றபோது ஜுன் 6ந்தேதி அன்று மின்சாரம் பாய்ந்து இறந்து போயுள்ளார். எந்த இழப்புத் தொகையும் வழங்கப்படவில்லை. முகாம் அதிகாரிகளுக்கும் விவரம் தெரியவில்லை. பரமத்திவேலூர் முகாமில் ஆனந்தகுமார் (36), கதிர்காமத்தம்பி (36) ஆகியோர் மீது வேலைக்குச் சென்ற இடத்தில் மரம் விழுந்து முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடுக்கப்படும் ரேஷன் அரிசி சில இடங்களில் தரம் குறைவாகவும், எடை குறைவுடனும் இருப்பதாகவும் புகார்கள் சொல்லப்பட்டன.

மண்டபம் முகாமிலுள்ள பலரின் நெருங்கிய உறவினர்கள் தமிழகத்திலுள்ள வேறு பல முகாம்களில் உள்ளனர். எனவே இங்குள்ள பலர் முகாம் மாற்றம் கோரியுள்ளனர். நாங்கள் சென்ற அன்று 1600 பேர்களுக்கு மாற்றல் ஆணை பிறப்பித்துள்ளதாக முகாம் அதிகாரி கூறினார்.

கரூர் முகாமில் 1990இல் இருந்து சுமார் 40 குடும்பங்கள் ஒரு அரிசி குடோனில் குடியமர்த்தப்பட்டுள் ளனர். சாக்கு, படுதா, சேலை முதலியவற்றைப் பயன்படுத்தி மறைப்புக் கட்டி இக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

முகாமுக்குள் எங்கும் தெரு விளக்கு, சாலை வசதிகள் இல்லை.
படிப்பகங்கள் என்கிற பெயரில் வெறும் கீற்றுக் கொட்டகைகள் சில முகாம்களில் உள்ளன. குழந்தை காப்பகங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கான எந்த விளையாட்டுப் பொருட்களும் இல்லை.

ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் குறைந்தபட்ச உடைகள் (கைலி, பனியன், சேலை) இரண்டாண்டுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் பாத்திரங்கள் முதலியன போதுமானவையாக இல்லை.

மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியற்ற சூழலில் பல்வேறு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர்.

முகாம்களிலுள்ள பெண்கள், சுயஉதவிக் குழுக்களை அமைத்துச் செயற்படுகின்றனர். ஆனால் அவற்றிற்கு அரசு அங்கீகாரம் இல்லை. சுயஉதவிக் குழுக்களின் பெயரில் வங்கிகளில் கணக்குத் தொடங்கவும் மறுக்கப்படுகிறது.

எமது பரிந்துரைகள் :

1. முகாம்களில் உள்ள எல்லோரும் பதிவு செய்யப்பட்டு அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இங்கே பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் விரும்பினால் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இல்லையேல் அகதி எனப் பதிவு செய்து அட்டை வழங்க வேண்டும்.

2. பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கு அகதிகளாகப் பதிவு செய்துள்ளவர்களுக்கும் இந்திய குடிமக்களைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் விரும்பினால் இந்தியக் குடியுரிமை அளிக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

3. கொடுக்கப்படும் உதவித் தொகை அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்யப் போதாது. குவாரன்டைனில் இருப்பவர்களுக்கு சாப்பாட்டிற்கு மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.35 செலவு செய்யப் படுகிறது. இதே தொகை முகாம்களில் உள்ளவர்க ளுக்கும் கொடுக்கப்படுதல் வேண்டும். 30ஒ35=1050 ரூபாய் மாதம் ஒன்றிற்கு ஒவ்வொரு பெரியவருக்கும் வழங்கப்படவேண்டும். குடும்பத் தலைவர், மற்றவர், ஆண், பெண் போன்ற பேதங்கள் கூடாது. 12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு ரூ.600/- வழங்கப் படுதல் அவசியம். முதற்குழந்தை, இரண்டாம் குழந்தை என்கிற வேறுபாடுகள் கூடாது.

4. ஒவ்வொருவருக்கும் 12 கிலோ அரிசி கிலோ 0.57 பைசா விலையில் கொடுப்பது பாராட்டுக்குரியது. தரமான அரிசியாகவும் எடை குறையாமலும் கொடுத்தல் அவசியம். இதை கண்காணிக்க அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

5. ஆண்டுக்கு ஒரு முறை அளிக்கப்படும் உடைகள், இருமுறையாக மாற்றப்படுதலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் பாத்திரங்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் அளிக்கப்பட வேண்டும்.

6. சர்க்கரை, கெரசின் ஆகியவற்றின் அளவுகள் உயர்த்தப்படுதல் வேண்டும். குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு 10லி. கெரசின் கொடுக்கப்படுதல் அவசியம். இந்தியக் குடிமக்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிற `ரேஷன்'கள் அனைத்தும் அதே அளவில் ஈழ அகதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

7. பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிகள் (இலவச `கேஸ்' தொலைக்காட்சி பெட்டி முதலியன) நிறைவேற்றப்படுகையில் ஈழ அகதிகளுக்கும் அவை நீட்டிக்கப்பட வேண்டும்.

8. 16 ஆண்டுகளாகப் பராமரிப்பில்லாத வீடுகள் உடனடியாக போர்க்காலத் துரிதத்தில் சீரமைக்கப் படவேண்டும். தார் அட்டை கூரைகள் மாற்றப்பட வேண்டும். நிரந்தர வீடுகள் கட்டும் பணி தொடங்க வேண்டும். குடோனில் குடியமர்த்தப்பட்டுள்ளவர் களுக்கு தனித்தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

9. அகதிக் குடியிருப்புகளை அருகிலுள்ள பஞ்சாயத்து/முனிசிபாலிட்டி/ நகராட்சி ஆகியவற்றுடன் இணைத்து குடிநீர் வசதி, துப்புரவு வசதி முதலியன செய்யப்பட வேண்டும். கிணறுகள் தூர்வாரப்பட வேண்டும்.

10. முகாம்களில் போதிய அளவில் கழிப்பறைகள் கட்டுவது உடனடித் தேவை, இருக்கிற கழிப்பறைகளுக்கு கதவுகள் போடுதல், நீர் வசதி செய்தல், செப்டிக் டாங்குகளைச் சுத்தம் செய்தல் முதலிய பணிகளைச் செய்ய வேண்டும்.

11. முகாம்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சாலைகள் இடுதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்.

12. முகாம்களில் எல்லா வீடுகளுக்கும் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று விளக்குகளும், பிளக் பாயிண்ட் வசதியும் செய்து தரப்பட வேண்டும்.

13. மருத்துவ வசதிகள் அதிகப்படுத்துதல் வேண்டும். மாதம் ஒருமுறை முகாம்களில் `மெடிக்கல் காம்ப்''கள் நடத்தப்படவேண்டும். மண்டபம் முகாமில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி விரிவாக்க வேண்டும்.

14. மாணவர்களின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். உயர் கல்வியிலும், தொழிற் கல்வியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல அகதிகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாடநூற்கள், ப° பா° முதலியன இலவச மாய் வழங்கப்பட வேண்டும். முகாம்களுக்கு அருகிலுள்ள தரமான கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் முகாம் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென அரசு வற்புறுத்த வேண்டும்.

15. குழந்தைகள் காப்பகம், படிப்பகம் முதலிய குறைந்த பட்ச வசதிகள் உடையதாக மாற்றப்படுதல் அவசியம். குழந்தைகளுக்கு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சத்துணவு அளிக்கும் முறை தொடர வேண்டும்.

16. முகாம்களில் செயல்படுகிற சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு உடனடியாக ஏற்பு வழங்க வேண்டும். வெளியி லுள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும் எல்லா உதவிகளும் இவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். வங்கிகளில் இச்சுயஉதவிக் குழுக்களின் பெயரில் கணக்குகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.

17. முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். வெளியில் சென்று வேலை செய்ய உரிய அனுமதியை எளிதில் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் உரிய ஊதியம் கொடுக்கப் படுகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும். பணியிடங்களில் அவர்களின் பாதுகாப்பிற் கும் அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதற்கு உரிய நடைமுறைகளை ஒவ்வொரு முகாமிலும் அரசு உருவாக்க வேண்டும்.

18. திருமண வயதிலுள்ள பெண்களுக்கு அரசு உதவித் தொகையும், கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவக் கண்காணிப்பும் அளிக்க வேண்டும்.

19. முகாம்களில் உள்ளவர்கள் சிறுதொழில் செய்ய அரசு ஊக்குவிக்கவும், உதவி செய்யவும் வேண்டும். வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.

20. முகாம்களில் உள்ளவர்களைக் கந்து வட்டிக் கொடுமையி லிருந்து தப்புவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

21. மண்டபம் முகாமிலுள்ள `குவாரண்டைன்கள்'' ஒழிக்கப் பட வேண்டும். அகதிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

22. முகாம்களில் உள்ளவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு உள்ள தடைகளை நீக்கி எளிதாக்க வேண்டும்.

23. இராமேஸ்வரத்தை ஒட்டி கரையிறங்குகிற அகதிகளை உடனடியாக உரிய வாகன வசதிகள் செய்து முகாம்களுக்கு அழைத்துவர வேண்டும். தேவையான விசாரணைகள் எளிமைப்படுத்தப்பட்டு சுருக்கமாக செய்யப்படுதல் அவசியம். வந்திறங்குகிறவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதியும், உணவும் அளித்து முகாம்களுக்கு அழைத்து வரும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். இதற்குரிய வாகன வசதிகள் முகாம்களில் செய்யப்பட வேண்டும்.

24. முகாம்களில் உள்ளவர்கள் நியாயமான காரணங்களுக்காக முகாம்களை மாற்றிக்கொள்ள விரும்பினால் உடனடியாக அதற்கான ஆணை வழங்க வேண்டும். புதிய இடத்திற்குச் செல்வதற்கு உரிய பஸ்/ரயில் வாரன்ட்கள் வழங்கப்பட வேண்டும்.

25. தமிழகத்திலுள்ள இரு சிறப்பு முகாம்கள் என்பன சிறையைக் காட்டிலும் மோசமாக உள்ளன என அறிகிறோம். இம்முகாம்களில் உள்ளவர்கள் குறித்த விவரம், எவ்வளவு நாட்களாக இவர்கள் இங்கே உள்ளனர், யாரேனும் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டனரா முதலிய விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டும்.

26. முகாம் நிலைமைகளை ஆராய்வதற்கு பணியில் உள்ள உயர்நிதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

27. உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்டுள்ள நாடுகள் கையெழுத்திட்டுள்ள (1951 Convention Relating to the Refugees) 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை குறித்த உடன்பாட்டில் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை தொடர்பாக உடன் பாட்டிலும் இது தொடர்பான 1967 ஆம் ஆண்டு ஒப்பந்தத் திலும் (1967 Protocol on the status of Refugees) இந்திய அரசு உடனடியாக கையெழுத்திட வேண்டும்.

28. 1951 ஆம் ஆண்டு அகதிகள் நிலை குறித்த உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடாத போதும் வந்திறங்கும் அகதிகளைத் திருப்பி அனுப்பாத கொள்கைளை (The Principle of non-refoulment) அரசு கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. எனினும் சிறப்பு முகாம்களில் விசாரணையும் வழக்குமின்றிப் பல ஆண்டுகள் அடைத்து வைத்திருப்பது நிறுத்தப் படுதல் வேண்டும். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மொழி, நாடு, இனம் ஆகியவற்றால் வேறுபட்ட அகதிகளையும் வெவ்வேறு நிலைகளில் இந்திய அரசு நடத்தக்கூடாது. அகதிகள் நிலை தொடர்பாக தேசிய அளவில் கொள்கை ஒன்றை இந்திய அரசு உருவாக்க வேண்டும்.

29. தொண்டுள்ளம் கொண்ட தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அகதி முகாம்களைத் தத்து எடுத்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும்.

30. தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழ் அகதிகள் நிலை குறித்துக் கவனம் கொண்டு அவர்களின் உரிமைகளுக்காக கோரிக்கைகள் முன்வைப்பதும் போராடுவதும் அவசியம்.

31. முகாம்களில் உள்ளவர்கள் எம்மிடம் குறைகளைச் சொல்வதற்குத் தயங்கினர். அச்சப்பட்டனர். ஒவ்வொரு முகாமிலும் புகார்ப் பெட்டிகள் அமைத்து மாதந்தோறும் உதவி இயக்குநர் மட்டத்திலுள்ள அதிகாரிகளால் அவை திறந்து வாசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

32. ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவை முகாம் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் முகாம்களுக்குச் சென்று குறைகள் அறிய வேண்டும்.

குறிப்பு :



1. மண்டபம் முகாமைப் பார்வையிடுவதில் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைத்தனர். மறுவாழ்வுத் துறை உதவி இயக்குநர் திரு. வி. ஜெயக்குமார் அவர்கள் முழுமையான விவரங்களைக் கொடுத்து உதவினார். ஆனால், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தாசில்தார் அனுமதி பெற்றுச் சென்றும்கூட வருவாய்த் துறை ஆய்வாளர் திரு. தனசேகரன் என்பவர் அனுமதிக்க மறுத்துள்ளார்.

2. இது ஒரு இடைக்கால அறிக்கையே. முழுமையான இன்னும் விரிவான அறிக்கை புகைப்பட ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.




CONDITION OF EELAM TAMIL REFUGEES
IN TAMILNADU: A FACT FINDING REPORT


In the wake of the renewed armed conflict between Sri Lankan forces and the Liberation Tigers of Tamil Eelam, the influx of Eelam Tamil refugees into India is on the increase. Between 12th January-7th July 2006, 1,363 families, comprising 4,343 refugees, landed in Rameswaram. The data supplied by the Tamil Nadu Government, 31.01.2005, shows that there are 14,031 families overall living in 103 refugee camps spread across the state and thus a total of 58,000 refugees in the camps. If the current figures are included the complete count may be 58,000 refugees, with an approximate average of 50 a day arriving in the coastal areas around Rameswaram.

Given these conditions, some of the most prominent of the leading activists belonging to Human Rights organizations in Tamil Nadu and Pondicherry have organized a fact finding committee which, after obtaining permission, visited the Mandapam refugee camp in Rameswaram on 8th July 2006 and subsequently other camps as indicated below:

Refugee Camps:

1.Keezhputhupattu, (Villupuram District)

2.Peria Sevalai ”

3.Thiruvadhavur (Madurai District)

4.Kullanchavady (Cuddalore District)

5.Virudhachalam ”

6.Pavalathanur (Salem District)

7.Kurukapatti ”

8.Athikaattanur ”

9.Paramathi Vellore ”

10.Karur

11.Bhavani Sagar (Erode District)

12.Anacut ”

Committee Members:

1. P. Rathinam, Senior Advocate, Lawyers for Social Justice, Chennai.

2. G. Sugumaran, Federation for People’s Rights, Puducherry.

3. A.Marx, Professor, People’s Union for Human Rights (PUHR).

4. S. Balamurugan, General Secretary, P.U.C.L., Tamil Nadu.

5. S. Kochadai, Professor, P.U.C.L., Sivagangai.

6. Kana. Kurunchi, Professor, P.U.C.L., Erode.

7. Damayandhi, Advocate, Centre for Protection of Civil Liberties (CPCL).

8. Kesavan, Advocate, Centre for Protection of Civil Liberties (CPCL).

9. Bhagatsingh, Advocate, Lawyers for Social Justice, Madurai.

10.Robert, Advocate, Madurai.

11.Megavannan, Writer, People’s Union for Human Rights, (PUHR).

12.M. Muthukannu,Indian Social Action Forum (INSAF),Puducherry Chapter.

13.M. Ilango, Periyar Dravidar Kazhagam, Puducherry.

14.Veeramohan, Periyar Dravidar Kazhagam, Puducherry.

15.Ira. Murugappan, Federation for People’s Rights, Tindivanam.

16.G. Paventhan, Advocate, Forum for Advocates of Tamildesam.

17.S. Sankaralingam, Professor, P.U.C.L. Madurai.

18.S. Shanmuganathan, P.U.C.L., Sivagangai.

19.H. Subramanian, P.U.C.L., Sivagangai.

Conditions in the Refugee Camps:

All refugees landing on the shores of Rameswaram are initially taken to the Mandapam Refugee Camp which serves as a transit camp but, when we visited the camp, apart from the 4,343 refugees who arrived after January 2006, we found 220 families, comprising 756 refugees who have already been living there for more than a decade. Upon first arriving at Arichalmunai, they paid Sri Lankan rupees 1000/- to a private carrier who took them by van to Mughandharayar Chatiram, 9 kms from the landing point. The Department of Intelligence were found to be carrying out investigations there.

As well as at Arichalmunai, refugees are landing at Pampan and people from Talaimannar, Pesalai, Kilinochi and other places in Sri Lanka continue to pour in, the majority of them Christian fisher people on the day we visited; amongst them too was the family of a nurse employed by the government and the family of a driver. Fishing has completely ceased due to the armed conflict. The lives of the young men and the modesty of women are at constant risk.

These refugees hid in the forest of Mannar for three days in a state of fear and paid Rs 700-1000 to the boat owners. They say that 10,000 people are sheltering in the forest prior to crossing to safety, a crossing fraught with danger from the Sri Lankan Navy and the L.T.T.E.

The refugees are subject to checks, first by the Indian Navy followed by a Special Branch interrogation at Mugandharayar Chatiram; the Danushkodi police also investigate and register the refugees. In the evening they are taken to the Mandapam camp, their catering needs being met by N.G.Os operating locally.

Young men arriving at the Mandapam camp are initially put into quarantine under conditions worse than those of a prison cell. When we visited we saw 39 male refugees lodged in a 20’x20’ space with only two toilets between them. Mohanraj from Kilinochi, aged 27 had then been there since 17th June 2006 and another detainee, Murugaiyan, from Mannar, aged 42, from 27th June 2006.

Food is brought into the camp from outside at a cost of Rs 35 per day per head.

Those suspected of having links with the movement are referred to Special camps where, as the officer informed us, a suspected person may be detained in quarantine for up to 30 days as per the stipulation of the Government of India.

The problems encountered by refugees in Mandapam and in other places are similar: the houses allotted to them are 10’x10’ and not fit to be lived in. They were built at the end of the 1980s and no renovation has been done since then. Most are covered with Mangalore tiles and tar light-roofing. In Pavalathanur, Kurukapatti (Salem District) camps there are two such types of roof house, popularly known as “ottu camp” (tiled roof camp) and “attai camp” (tar light-roof camp). During the day it is impossible to stay in these hovels due to the scorching heat whereas in the rainy season the water pours through the damaged roofs and the houses become pools of water.

Even though these houses were constructed, and are provided, by the government they are not available to all. For example, in Pavalathanur camp there are 123 families, that is: 428 refugees but only 60 houses have been allotted. Refugees who have been living there for more than 10 years set up separate families after marriage, making their own arrangements for building a dwelling place but, as we found out at the Athikattanur camp, even for this officers have to be bribed. Toilet facilities are inadequate in all camps and so is the provision of water. Men and women in the camps have to walk long distances to relieve themselves and this is particularly difficult for women there being nothing in Sri Lankan culture to help them to accustom themselves to such conditions. They are teased and insulted when on their way to these distant areas and local landowners throw things at them. The Mandapam camp is in a forest area so refugees are also in danger from snakes. Mrs. Selvanayaki, aged 64 has been fasting for many days in protest against these conditions.

Another sore point is the lack of bathroom facilities, which means that women as well as men have to wash at a communal well. Drinking water is scarce in all the camps and in the Virudhachalam Refugee Camp there is only one tap and no sump. Drinking water is provided for the minimum amount of time once in the morning and once in the evening. Male members of families go a few kms. on bicycles to fetch drinking water in small quantities. The wells in the Mandapam camp need to be de-silted and cleaned.

As for electricity, there is one-bulb service in all the camps from 6pm to 6am only and there is no electricity for the thatched kitchen partition and raised mud platform for visitors that have been set up by the refugees. Part of the Kullanchavady camp has no electricity so it has to be taken illicitly from overhead lines. In Bhavanisagar camp there are houses that have had no electricity at all for 16 years. Houses put up later have one-bulb service which has increased the power demand on the single service and, as a result, the cost of electricity is high.

Though the refugees in the camps have been registered and were issued with refugee identity cards immediately upon arrival, there are unregistered people living in most of the camps. In Keezhputhupattu camp, 100 families consisting of 949 individuals live without any registration. The government does not provide relief or facilities for these people. Rather, if the, usually unregistered, children of registered refugees marry outside the camp their “Refugee Identity Card” is cancelled, for example at Bhavanisagar camp. There is no garbage collection arrangement and scavenging work is not undertaken at the camps so the refugees themselves are constrained to carry out this work. Medical facilities are not available in most of the camps. There are a few N.G.Os who, with practitioners, provide medicines. Hospital beds are available in the Mandapam camp but their number has not increased in the last 15 years; the hospital also serves as a peripheral facility for the nearby villages.

Homes for children inside the camp are run by N.G.Os. The nutritional diet supplement that was being given to children has now been cut off. There are no restrictions on students from the camps being admitted into neighbouring schools and colleges but no fee concession is available to the refugees. N.G.Os give financial assistance to students where possible but this is nothing like sufficient. The 2% higher education reservation provided for the wards of refugees was cancelled by the previous Tamil Nadu government. Mrs. Shakuntala Devi, a refugee living in Keezhputhupattu camp, stated that her daughter, Ushanandini, with a total of 807 marks in her Higher Secondary Exam, applied for B.Sc., Nursing but was refused admission; she added that her husband had been incarcerated in a “Special Camp” for 16 years; he was released in 2005 as a result of judicial intervention and returned to Sri Lanka.

The monthly dole paid by the government to the registered refugees is not enough: the male head of the family receives Rs.200 and each individual over 12 years, Rs. 144; the first child under 12 years receives Rs. 90 and the next Rs.45. Essential commodities such as rice, kerosene and sugar, are distributed by fair price shops once a month. Adult members of families receive 12 kgs and children 6 kgs of rice at the subsidized rate of 0.57 paise per kg. Each cardholder gets 5 litres of kerosene and a ration of sugar at fair-price-shop rates. Cooking vessels, distributed once every two years, are not sufficient. The Tamil Eelam refugees, their basic needs unfulfilled and their living conditions woefully inadequate, simply huddle in the camps.

Women in the camps organize self-help groups but the government does not recognize them nor provide any active support and banks even refuse to open accounts in the names of such groups.

The refugees are supposed to pay for their rations and meet their domestic needs out of their monthly financial allowance, which is not possible. They are forced to take menial jobs such as construction work, carpentry, shop work, painting and etc. and then have no protection in the work place. The case of Mrs. Kamalendhravathi from Jaffna, aged 43, is an example: her husband, Mr. Kannadassan, 44, died of electrocution while working as a construction helper at Ramanathapuram. The family received no compensation and the authrorities at the camp were not in possession of any details of the accident. Similarly, in the Paramathi camp, Mr. Chandrakumar, and Mr. Kathirkamathambi, both 36, severely injured their spinal cords when trees fell on them during their work and are now paralysed and bedridden.

We received complaints from the refugees that the rations in some camps were underweight and of poor quality.

Most of the close relatives of the refugees are understood to have been accommodated in other camps and hence there have been requests for transfers. On the day of our visit to Mandapam Camp 1600 transfer orders were stated and issued.

In Karur camp, there are 40 refugee families who have been given shelter in a rice godown. They use gunny sacks, rags and worn out saris as partitions. They have been living there like that since 1990.

There are no properly laid out streets in the camps, nor any street lighting.

A few thatched sheds have been put up in some camps in the name of “Reading Rooms”. In the “Home for Children” there are no recreational facilities such as toys or games.

As regards clothing: lungi, banian and sari (the minimum clothes requirement) are supplied once a year and utensils once every two years.

Recommendations:

1. All inmates in the refugee camps must be registered and issued with identity cards. Children born here must be granted Indian citizenship if their parents are willing or, otherwise, registered as refugees and issued with identity cards.

2. Registered refugees who have lived here for more than a decade and those who have married Indian citizens should be accorded Indian citizenship if they so choose.

3. The monthly dole is not sufficient to meet basic needs. Rs 35/- per day is spent on food for those segregated and kept in quarantine. This amount should be increased to Rs. 1050/- (35x30=1050) per month and given to inmates as dole. There should be no discrimination based on whether someone is head of the family, male, female. Children under 12 should receive Rs.600/- and, further, there should be no discrimination regarding first and second children etc.

4. 12 kgs of rice at the subsidized rate of 0.57 paise per kg. is laudable but the quality should be ensured and monitored by the authorities.

5. Clothes should be provided twice a year rather than once and utensils once a year instead of once every two years.

6. The ration of items such as kerosene, rice and etc. should be increased with 10 litres of kerosene being supplied per month. All ration items supplied to BPL families of Indian citizens should be supplied to the refugees as well.

7. Promises made to the electorate during elections, that the assembly would provide free gas, television sets etc., should, when implemented, be extended to the refugees.

8. The houses in the camp have not been repaired or maintained for the last 16 years. They need to be renovated on an emergency basis, especially the roofs which must be replaced. Construction of permanent housing should be undertaken and those now sheltered in go-downs allotted separate houses in the camps.

9. Camps need to be integrated with the local Panchayat/Municipality/Corporation. Drinking water must be provided and the wells inside the camps de-silted and cleaned. Scavenging facilities must be provided.

10. The most immediate task is the construction of sufficient numbers of toilet blocks. Further, the existing toilets must be provided with doors and with water facilities. The septic tanks must be periodically emptied.

11. Priority should be given to the laying out of streets in the camps and the provision of street lighting.

12. 24 hour electricity must be provided for all the houses and every house must have a minimum of three lights and plug point facilities.

13. Medical facilities are in great need of improvement and there should be monthly medical camps. More beds should be provided in the Mandapam camp hospital, which needs to be improved and brought up to date.

14. The Government must undertake the total expense of educating the young people. The reservations that existed under the previous D.M.K. government for higher and professional education should also be extended proportionate to the refugee population. Free textbooks and bus passes should be given too. Educational institutions of quality situated in the vicinity of the camps should be required to adopt a certain number of children and to offer them free education as a social responsibility.

15. “Homes for Children”: “Reading rooms” in the camps should have at least minimal facilities. The supply of nutritious meals to children, now withheld, should also be commenced with new enthusiasm and drive.

16. The government must accord recognition immediately to the self-help groups functioning in the camps and extend them every facility that is available to outside self-help groups. Banks must be prevailed upon to open bank accounts in the names of the SHGs.

17. The government should also arrange employment opportunities for the refugees in the camps and give permission for refugees to go job hunting. It is the Government’s job to see that proper wages are paid to the refugees and the state must guarantee and safeguard the workplace. Proper procedures must be formulated and initiated in this regard in every one of the camps.

18. Women refugees of marriageable age should receive government assistance; regular medical check-ups for pregnant women have to be arranged.

19. The government must encourage the refugees to start small-scale industries and render them assistance with this; the banks must come forward and arrange loans for this purpose.

20. Steps must be taken by the government to save the refugees from falling into the clutches of ruthless moneylenders.

21. Quarantine as it exists now in the camps must be abolished and the refugees treated with proper dignity.

22. The obstacles that are preventing N.G.Os from assisting refugees in the camps must be removed.

23. Proper facilities for transporting the refugees who land at Rameswaram should be arranged by the camps. Required investigations, inquiries and other formalities need to be simplified and carried out expeditiously. The Government must be responsible for providing immediate food and medical care for the refugees as soon as they land on the shores of Rameswaram.

24. When inmates request transfers on reasonable grounds decisions should be positive and bus/train warrants issued.

25. Two of the “Special Camps’ in Tamil Nadu are worse than jails. A “white paper’ must be issued by the Government giving details of detainees and the duration of their detention; this paper should also state whether any of them have been deported against their will to Sri Lanka.

26. The Government must appoint an Inquiry Commission under the chairmanship of a sitting High Court Judge to examine conditions in the camps.

27. The attitude of the Government of India in not signing the 1951 Convention Relating to Refugees, signed by more than a hundred governments of the world, is to be condemned. We urge the government to sign the 1951 and 1967 Protocol on the Status of Refugees immediately.

28. Even though India has not signed the Protocol on the Status of Refugees, the extent to which the principle of non-refoulment is being put into practice is appreciable. Nevertheless, the practice of keeping refugees in special camps without investigation and without their cases being filed should be discontinued. Refugees belonging to different races, nations and language groups and living in various states should not be discriminated against.

29. The Government of India must formulate a national policy on the condition of refugees. Service minded individuals, N.G.Os, and corporations should adopt the refugee camps and help them in every possible way.

30. Political parties need to focus their activities on the plight of the refugees and initiate efforts to help them achieve their demands and amelioration of their living conditions.

31. As camp inmates are hesitant, even scared, to talk openly about their problems, complaint boxes should be set up in the camps and opened monthly at the level of Deputy Director and complaints disposed conscientiously.

32. In each District, a committee consisting of M.L.As, M.Ps, and Human Rights activists and officers must be constituted to monitor closely the activities of the camps and to pay visits to the camps at least once every three months to receive complaints and firsthand information from the refugees.

Note:

1. The officers at all levels cooperated to the full in helping us to visit Mandapam Refugee Camp. Mr. V.Jayakumar, Deputy Director, Commissionarate of Rehabilitation supplied us with all necessary information. Though the Tahsildar at Paramathivelur, Namakkal District, gave permission, Mr. Dhansekaran, the Revenue Inspector refused us entry into the camp.

2. This is only an interim report. A comprehensive report with photographs on the status of Tamil Eelam refugees and the conditions, in which they are living, will be released soon.

Friday, September 08, 2006

செஞ்சோலை படுகொலை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்து போராட்டம்

ஈழத்திலுள்ள செஞ்சோலை காப்ப்கத்தின் மீது சிங்களப்படை குண்டுவீசி 61 சிறுமிகளை படுகொலையை கண்டித்து, தந்தைப் பெரியார் தி.க சார்பில் 21-08-2006 அன்று புதுச்சேரியில் "இலங்கை அதிபர் இராசபக்சே கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடந்தது".

பெரியார் தி. க தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தினர்.

"இந்திய அரசே!

  • விடுதலைப்புலிகள் மீதான தளையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு எவ்வித உதவிகளும் செய்யாதே!

போன்ற முழக்கங்கள் இப்போராட்டத்தில் எழுப்பபட்டன.

கீழே.......

போராட்டப் புகைப்ப்டங்கள்.














அரச பயங்கரவாதம் தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்

1984இல் சீக்கியர்களான தனது பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இதற்கு ஒட்டுமொத்த சீக்கிய சமூகமே காரணம் என்ற வெறியுடன் காங்கிரஸ்காரர்கள் டில்லியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தனர். கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள உடைமைகளைச் சூறையாடினர். இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையம், தனது விசாரணை அறிக்கையை அண்மையில் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் இணைத்து தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த சீக்கிய சமூகம் நானாவதி ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்தது. சீக்கிய அமைப்புகள் பல டில்லியிலும் பஞ்சாப் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரின. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு இப்பிரச்சினையை மூடி மறைக்க அனைத்து வகையிலும் முயல்கின்றது. டில்லியில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து மட்டுமே நானாவதி அறிக்கை கூறுகிறது. அதைப் பற்றிதான் விவாதம் நடத்து கொண்டிருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, தமிழ் நாட்டிலும் கோவை, சென்னை போன்ற நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளும், அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டதும் நடந்தன.

ஆனால், அவை குறித்து எந்த முறையான விசாரணையும் நடத்தப்படவும் இல்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித இழப்பீடும் கொடுக்கப்படவும் இல்லை. இப்படி எத்தனையோ கொடுமைகள், பாதிக்கப்பட்டோருக்கு எந்த நீதியும் நிவாரணம் கிடைக்காமலேயே மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. 1984 முதல் 1997 வரை பஞ்சாபில் நடைபெற்ற அப்படியானதொரு கொடூரம், இன்னம் வெளியுலகிற்குத் தெரியாமலேயே இருக்கிறது.



பஞ்சாப் தனி நாடாக வேண்டுமென்று மிகப் பெரிய அளவில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலகட்டமான எண்பதுகளில், சீக்கியர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். காலிஸ்தான் கேட்டுப் போராடியவர்களை அடக்குகிறோம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய கொடூர படுகொலைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்களும் கூட, கடும் அடக்குமுறையை சந்திக்க வேண்டி இருந்தது. இருந்தாலும், பஞ்சாபில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் முன்முயற்சியால் 18 மனித உரிமை அமைப்புகளை ஒன்றிணைத்து "பஞ்சாபில் காணாமல் போனவர்கள் விசாரணைக் குழு' ஒன்றை ஏற்படுத்தி, பல்வேறு இடர்ப்பாடுகளையும் கடந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

அறிக்கையின் முதல் பகுதி முழுவதும் இவ்விசாரணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னணியையும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் விவரிக்கிறது. சனவரி 1995இல் அகாலிதளம் கட்சியின் மனித உரிமைப் பிரிவின் பொதுச் செயலாளர் ஜஸ்வந்த்சிங் கல்ரா, பஞ்சாபில் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று அவர்களது உடல்களை ரகசியமாக எரித்தது குறித்துப் பத்திரிகையாளர்கள் மத்தியில் சில ஆவணங்களை வெளியிட்டார். இது, பஞ்சாபில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஜஸ்வந்த்சிங் கல்ரா திடீரென காணாமல் போனார். அவர் அமிர்தசரசில் உள்ள அவரது வீட்டிலிருந்து பஞ்சாப் காவல் துறையினரால் கடத்திக் கொல்லப்பட்டார்.

இதனிடையே பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஜித்சிங் சாந்து, 24.5.1997 அன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். இவர், ஜஸ்வந்த் சிங் கல்ரா, பகத்சிங்கின் உறவினரான குல்ஜித்சிங் தாட் உள்ளிட்ட பலரையும் சட்ட விரோதமாகக் கடத்தி, துன்புறுத்தி காவல் துறை காவலில் கொன்றதற்காக சிறை தண்டனை பெற்றவர். இவர், சீக்கியர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளுக்கு தலைமை தாங்கிய பஞ்சாப் டி.ஜி.பி. கே.பி.எஸ். கில்லின் தன்மை சீடராகக் கருதப்பட்டவர். இவரால் நடந்த பல மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்தது. அப்பொழுது பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த கே.பி.எஸ். கில், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு மனித உரிமைகளுக்கு எதிராக மிகப் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த கொடூரச் செயல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், காவல் துறையினருக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேலை நிறுத்தம் செய்யப் போவதாக காவல் துறையினர் மிரட்டி வந்தனர். பா.ஜ.க. வெளிப்படையாக காவல் துறைக்கு ஆதரவாக செயல்பட்டது. தாவ்லின் சிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் கூட, அஜித்சிங் சாந்துவை கொன்றது மனித உரிமைக்காரர்கள்தான் என்று எழுதினர்.

1984 சூனில் பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்து பெரும் தாக்குதல் நடத்தியது. 1985 இல் அடக்குறைச் சட்டமான "தடா' பஞ்சாபில் நடைமுறைப்படுத்தப்பட்டது. "தடா'வில் 31.7.1994 வரை பஞ்சாபில் மட்டுமே 17,529 வழக்குகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 1988 மார்ச்சில் நாடாளுமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில், 51 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, பஞ்சாபில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், பஞ்சாபில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டது.

பல வகையிலும் நெருக்கடி நிறைந்த இப்படியான காலகட்டத்தில்தான் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து, பஞ்சாபில் நடந்த சட்ட விரோதக் கடத்தல், கொலை, உடல்களை எரித்தல் போன்றவை குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தனர். இக்குழுவின் சார்பில் முதல் மாநாடு, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் 10.12.1997 அன்று சண்டிகரில் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டோர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் புகார் அளித்தனர். இந்தப் புகார்களை விசாரிக்க, பஞ்சாப் அரசு ஓர் உண்மை அறியும் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென இம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அரசாங்கம் செவி சாய்க்காததால், கொல்கத்தா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தேவாத்தியா தலைமையில், மும்பை மற்றும் டில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான எச். சுரேஷ், ஜஸ்பால் சிங் ஆகியோர் அடங்கிய மக்கள் ஆணையம் ஒன்றை அமைத்தனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணை, போதிய பலன் அளிக்கவில்லை. இதனால் மக்கள் ஆணையத்திற்குக் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டது. இதனிடையே பஞ்சாப் டி.ஜி.பி., மக்கள் ஆணையத்தைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசிடம் கோரினார். இதனைத் தொடர்ந்து மக்கள் ஆணையம் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவும், நீதித் துறைக்கு இணை அமைப்பாக செயல்படுவதாகவும் கூறி, அதைத் தடை செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. வழக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டு போனதால், மக்கள் ஆணையம் செயல்பட இயலவில்லை. எனவே, "பஞ்சாபில் காணாமல் போனவர்கள் விசாரணைக் குழு' அவ்விசாரணையை மேற்கொண்டது. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தும், நடந்த கொடூரங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க, அச்சத்தின் காரணமாக எவரும் முன்வரவில்லை. இந்நிலையில், இக்குழுவால் வெறும் 838 சம்பவங்களை மட்டுமே ஆதாரத்துடன் தொகுக்க முடிந்தது. ஏற்கனவே மக்கள் ஆணையத்திற்கு வந்த 523 புகார்களும் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், அந்த புகார்களை இக்குழு கணக்கில் எடுத்துக் கொள்ள இயலவில்லை. பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 112 வழக்குகளையும் இக்குழு பரிசீலித்தது.

கொல்லப்பட்ட 838 பேரில் 241 பேர், அவர்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர். 222 வழக்குகளில் பாதுகாப்புப் படையினரும், 224 வழக்குகளில் காவல் துறையினரும் கொல்லப்பட்டவர்களின் உடைமைகளை சட்ட விரோதமாக சேதப்படுத்தி அழித்துள்ளனர். 290 வழக்குளில் காணாமல் போனவர்கள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவர்களின் உறவினர்கள் கொல்லப்பட்டவர்களை காவல் நிலைய, விசாரணை மய்ய லாக்கப்புகளில் பார்த்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 149 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போதும், அவற்றில் பெரும்பான்மையான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 689 பேர் காவல் துறையின் அச்சுறுத்தல், வறுமை போன்ற காரணங்களால் நீதிமன்றத்தை அணுகவில்லை.

காவல் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த பத்திரிகை செய்திகளில், 467 சம்பவங்கள் மோதல் சாவுகளாகவே சித்தரிக்கப்பட்டன. 517 வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள், சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு காவல் துறை காவலில் கொல்லப்பட்டு, மோதலில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. 193 வழக்குகளில் ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 74 வழக்குகளில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் உடல்கள், உறவினர்களிடம் இறுதிச் சடங்கிற்காக திருப்பித் தரப்பட்டன. 759 வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களது உறவினர்களும் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் உட்பட கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் காவல் துறையினரால் ரகசியமாக பரித்காட், கபூர்தாலா, லூதியானா, மன்சா, மோகா, ஜீரா ஆகிய இடங்களில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான சுடுகாடுகளில் எரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சுடுகாடுகளில் எரிக்கப்பட்டவர்களின் பட்டியல் அடங்கிய பதிவேட்டை இக்குழுவினர் பார்வையிட்டு தகவல்களை சேகரித்துள்ளனர். இதன்படி பஞ்சாப் காவல் துறையினர் மட்டும் 934 உடல்களை எரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடல்களை எரிக்கும்போது, நகராட்சி ஊழியர்கள் யாரையும் உடல்களைப் பார்க்க காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

பரித்காட்டிலுள்ள சுடுகாட்டில் இருந்த பதிவேடுகளைப் பார்வையிடும்போது, 18 ஏப்ரல் 1989 தல் 7 ஏப்ரல் 1991 வரையான பதிவேட்டில் உள்ள தகவல்களை மட்டும் காட்ட மறுத்துள்ளனர். ஏனெனில், அந்த காலகட்டத்தில்தான் பாதுகாப்புப் படையினராலும் காவல் துறையினராலும் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தைத் தவிர்த்து, 1987 முதல் 1992 வரை மொத்தம் 164 பேர் இச்சுடுகாட்டில் எரிக்கப்பட்டுள்ளனர். கபூர்தலாவிலுள்ள சுடுகாட்டில் 1988 முதல் 1994 வரை மொத்தம் 149 உடல்களும், லூதியானாவில் 1987 முதல் 1993 வரை 94 உடல்களும், மன்சாவில் 1992 தல் 1994 வரை 74 உடல்களும், மோகாவில் 1988 முதல் 1994 வரை 165 உடல்களும், ஜீராவில் 1988 முதல் 1994 வரை 288 உடல்களும் காவல் துறையினரால் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த அறிக்கை, பஞ்சாபில் நடந்த அடக்குமுறைக்குப் பல்வேறு தரப்பு மக்களும் பலியானதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலே இதற்குச் சான்று. எந்த அளவிற்கு கொடூரம் நடந்துள்ளது என்பதையும், எவ்வாறு ஏதுமறியாத அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்பதையும் காட்டுவதற்கு இந்த சம்பவங்களே போதுமானவை.

20.12.1991 அன்று, அமர்தசரஸ் மாவட்டத்திலுள்ள ஒதியன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான குல்விந்தர் சிங், தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எல்லோராலும் நன்கு அறியப்பட்ட போராளியான பல்வீந்தர்சிங் சோனா என்பவர், அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக அவரது ஆய்வாளர் அஜாய்பு சிங், இருவரையும் பிடித்துச் சென்றார். குல்வந்தர்சிங் உண்மை நிலையை விளக்கியும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனிடையே பல்வீந்தர்சிங் சோனா மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் குல்வந்தர்சிங் குடும்பத்தினர் பதட்டமடைந்தனர். 55 வயதான அவரது தந்தை அஜாய்பு சிங் மகனை மீட்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ஆய்வாளர் அஜாய்பு சிங்கிற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து மகனை விடுவிக்கக் கோரினார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அவரை விடுவிக்கவில்லை. குல்வந்தர்சிங்கின் நிலை தெரியாமல் அவரது குடும்பத்தினர் பெரிதும் கலங்கினர்.

விடா முயற்சியின் காரணமாக மார்ச் 1993இல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சவாண், பஞ்சாப் டி.ஜி.பி.கே.பி.எஸ். கில்லிடம் பேசியதன் மூலம் குல்வந்தர் சிங் கொல்லப்பட்ட செய்தியை குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். தனது மகன் எவ்வித காரணமின்றி கொல்லப்பட்டதற்கு நியாயம் வேண்டி அஜாய்பு சிங், உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியும் பயனில்லை. கடைசி முயற்சியாக, அப்போது ஆட்சிக்கு வந்த அகாலிதள முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதலிடம் மனு அளித்தார். இதன் மீது மே 1997இல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சூன் 26 அன்று திடீரென விசாரணை முடிக்கப்பட்டது.

தன் மகன் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்காததால் மிகவும் மனமுடைந்து போன அஜாய்பு சிங், பொற்கோயிலுக்குச் சென்று அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அவர் எழுதி வைத்த மிக நீண்ட தற்கொலைக் குறிப்பில் "என் மகனின் சாம்பலைக்கூட, நான் பெற முடியவில்லை... தற்போது என் பேனாவில் உள்ள மையும் இந்த உலகில் எனக்கான நேரம் முடியப் போகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இறந்த பின்பும்கூட காவல் துறையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்தது. அஜாய்பு சிங் மாரடைப்பால் இறந்து விட்டதாகக் கூற வேண்டுமென அக்குடும்பத்தினரை காவல் துறையினர் வற்புறுத்தினர். அதை ஏற்க மறுத்த அவர்கள் அஜாய்பு சிங் விட்டுச் சென்ற தற்கொலைக் குறிப்பை பத்திரிகைகள் மூலம் உலகறியச் செய்து காவல் துறையின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினர்.

24.11.1992 அன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கய்ரோன் கிராமத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங் தன் மனைவி நரேந்தர் கவுர், மைத்துனர் அமர்ஜித் சிங் ஆகியோருடன் தன் தங்கையின் வீட்டிற்குச் சென்றார். மறுநாள் அதிகாலை அய்ந்து மணியளவில் கய்ரோன் காவல் சாவடியைச் சேர்ந்த காவல் அதிகாரி நவ்ரங்சிங், பல்தேவி சிங், அமர்ஜித் சிங் இருவரையும் கைகளைப் பின் பக்கமாக கட்டி காவல் நிலையத்திற்குத் தூக்கிச் சென்றார். சில தினங்கள் கழித்து அவர்களது உறவினர்கள் காவல் துறை அதிகாரியை சந்தித்து இருவரையும் விடுவிக்கக் கோரினர். காவல் துறையினர் கேட்டதன் அடிப்படையில், ஒரு லட்சத்தி முப்பத்தி அய்ந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தனர். அப்போது இருவரும் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, காவல் சாவடி லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் 2.12.1992 அன்று, பல்தேவ் சிங், அமர்ஜித் சிங் ஆகியோர் காவல் துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டாதகச் செய்திகள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் காவல் துறையினரால் பட்டி சுடுகாட்டில் எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சில நாட்கள் கழித்து இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தபோது அதில் யாரும் கலந்து கொள்ளக் கூடாதென காவல் துறையினர் கடுமையாக எச்சரித்தனர். இந்த சோகத்தினால் பல்தேவ் சிங்கின் தாயார் சரண் கவுர் மனநிலை பாதிக்கப்பட்டார். அவரது தந்தை ஜாகிர் சிங் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

இப்படியான அடக்குமுறைக்கு பாதுகாப்புப் படை, காவல் துறையைச் சேர்ந்தவர்களும் தப்பவில்லை. அமிர்தசரஸ் மாவட்டத்தில் ரய்ப்பூர் கலான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குருதேவ் சிங். திருமணமாகாத 22 வயது இளைஞரான அவர், ஜாண்டியாலா குரு காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வந்தார். இவர் பணி புரியும் காவல் நிலையத்தில், பலரை அழைத்து வந்து இவரது மேல் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இதற்கு இவர் உடன்படாமல் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்நிலையில், 25.10.1992 அன்று, அதிகாலையில் குருதேவ் சிங் அவரது வீட்டிலிருந்து பஞ்சாப் கமாண்டோ காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவர் நிலை என்ன என்று தெரியாததால், அவரது குடும்பத்தினர் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு முறையீடுகள் செய்தனர்.

குருதேவின் சகோதரர் நரேந்தர் சிங் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் குடியரசுத் தலைவர் பாதுகாப்புப் படையில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றினார். இதனால் தனது உயர் அதிகாரிகள் மூலம் குருதேவ் சிங் நிலை குறித்து அறிய முயன்றார். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. அவரது குடும்பத்தினர் ராணுவத்தில் பணியாற்றும் தங்கள் மகனின் எதிர்காலத்தைக் கருதி, எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குருதேவ் சிங்கின் தந்தை மிகவும் மனமுடைந்து இறந்து போனார். இதுநாள் வரை குருதேவ் சிங் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

பஞ்சாபில் நடைபெற்ற காலிஸ்தான் தனி நாட்டிற்கானப் போராட்டத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சீக்கியர்களையே "குற்றப்பரம்பரை' போன்று சித்தரித்து சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்று குவித்ததை மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கையில் வெளிக் கொணரப்பட்டது, உண்மையில் நடந்ததில் 10 சதவிகிதம்கூட இல்லை என்பதுததான் மிகவும் வேதனைக்குரியது. இப்படி வெளிவந்த சம்பவங்களில்கூட அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அறிக்கையில் குறிக்கப்பட்ட 838 வழக்குகளிலும், இது நாள் வரையில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

இத்தகையதொரு நிலை, மனித உரிமைக்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால் என்பதோடு, இந்திய சனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடைபெற்று வரும் காஷ்மீரம், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்துள்ளன; தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அலறல்கள், நீதி கேட்டு இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆக்கம்: கோ. சுகுமாரன்

நன்றி : தலித் முரசு

Tuesday, May 16, 2006

அரசியல் அதிகாரப் போட்டியில்

நேர்காணல் : கோ. சுகுமாரன் .

அரசியல் அதிகாரப் போட்டியில் முதல் பலி சமூக மாற்றத்திற்கானப் போராட்டமே-

டாக்டர் கே. பாலகோபால்

மக்கள் யுத்தக் குழுவுக்கும், அரசுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும், இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

தற்பொழுதுள்ள நிலையில் சி.பி.அய். (மாவோயிஸ்ட்) க்கும், ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்லப்பட்டாலும், அதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஏனெனில், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சந்திரபாபு (நாயுடு) வலியுறுத்தினார். இது, முற்றிலும் நடைமுறைச் சாத்தியமற்ற முன்நிபந்தனையாகும். ஏனெனில், நக்சலைட்டுகள் பொது நீரோட்டத்திற்கு வர விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு ஒரு மதிப்புமிக்க வழியை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பதும் யாரும் நம்பக்கூடியதாக இல்லை. அவர்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி, ஆயுதப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



புரட்சிகரப் போராட்டத்திற்கும், அதற்கெதிரான அரசின் கொடூரத் தாக்குதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பொது மக்களின் நிலையிலிருந்துதான் அனுபவம் மிக்க பொது நல ஆர்வலர்களைக் கொண்ட "அக்கறையுள்ள குடிமக்களின் குழு', விவாதத்திற்குரிய இப்பேச்சுவார்த்தையை முன்வைத்தது. இப்பேச்சுவார்த்தைகூட, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ராஜசேகர (ரெட்டி), தொடக்க நிலையில் எந்த முன்நிபந்தனைகளையும் வைக்காததால்தான் நடைபெற்றது. காங்கிரஸ் அரசு, நக்சலைட்டுகளுடன் முன்நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது. நக்சலைட்டுகளும் தங்கள் சார்பில் இத்தகையதொரு போர் நிறுத்தத்தை ஏற்று, பேச்சுவார்த்தைக்கென எந்த முன்நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. விவாதத்திற்குரிய ஒரே பொருள் என்னவெனில், பேச்சுவார்த்தை காலங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியை அளித்திருக்கும் நக்சலைட்டுகள், ஆயுதங்களுடன் வருவார்களா, இல்லையா என்பதே. மாவோயிஸ்டுகள் குறைந்தபட்ச அளவில்கூட ஆயுதங்களைக் கீழே வைக்க முடியாது என்பதை வலியுறுத்தினர்.

ஆனால், ஆயுதப் போராட்டத்தையே அவர்கள் கைவிட வேண்டும் என்று முன் நிபந்தனையிடும் அரசு, பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த காலங்களில் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை விரும்ப வில்லை. நாங்கள் ஆயுதமேந்தத் தவறினால், எதிரிகளால் தாக்கப்படுவோம் என்று மாவோயிஸ்டுகள் அச்சப்பட்டிருந்தால், அரசு அவர்கள் தங்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒப்புக் கொண்டிருக்கும். ஆனால், மாவோயிஸ்டுகளின் ஆட்சேபனை வெறும் அடையாளத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டதாக இருந்தது. இத்தகையதொரு அணுகுறை, பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருந்திருக்க வேண்டியதில்லை.பேச்சுவார்த்தைக்கான தேவையை மாவோயிஸ்டுகளோ, அரசோ மிக உறுதியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் உள்ள ஆளும் கட்சியினர்தான், பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.

இருப்பினும், கடந்த கால நிகழ்வுகளுக்கு எதிராக, ராஜசேகர (ரெட்டி) மிகவும் தந்திரமாக நடந்து கொண்டார். இப்பிரச்சினையில் இவருக்கு முன்பிருந்த சந்திரபாபு (நாயுடு)வின் கருத்தையே கொண்டிருந்த இவர், தான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். எனவே, இப்பிரச்சனையில் அவர் எதையும் சொல்லாமல், அவருடைய உள்துறை அமைச்சரே எல்லா பேச்சுவார்த்தையிலும் முன்னின்று நடத்துமாறு பார்த்துக் கொண்டார். எந்தவொரு நோக்கமற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை, ஊடகங்கள் மட்டுமே முக்கியச் செய்தியாக்கின. ஆனால், சந்திரபாபு (நாயுடு) எழுப்பிய அதே சந்தேகங்களைத்தான் ராஜசேகர (ரெட்டி)யும் எழுப்பினார்: சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, சட்டத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் போராளிகளுடன் அவர்கள் ஆயுதத்தைக் கீழே போடாத நிலையில் எப்படிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அதே நேரத்தில், இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கவும் காவல் துறைக்கு அனுமதியளித்து, "என்கவுன்டர்' மரணத்தையும் நடத்தத் தொடங்கினார். அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, மாவோயிஸ்ட் கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டு விட்டது. இனி என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
முன்னெப்போதைக் காட்டிலும், தற்பொழுது நிலவும் சூழல் மிகவும் ஆபத்தானது. மாவோயிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, கவலைக்குரிய செய்தி அல்ல. ஏனெனில், 1992 லிருந்து 2004 வரை அது தடை செய்யப்பட்டிருந்தது. மக்கள் எழுச்சியை முடக்குவதற்கான கொடூர வழிறைகள் இல்லாவிடில் அனுதாபிகளுக்கும், மாவோயிஸ்டு உறுப்பினர்களுக்கும் பெரிய அளவில் நேரடியான பாதிப்பு இருந்திருக்காது. ஆனால், மக்கள் எழுச்சியை முடக்குவதற்கான இந்தப் புதுவித வழிமுறைகள் தான் கவலையை ஏற்படுத்துகின்றன.

இதனால்தான் பெயரே தெரியாத சில குழுக்கள் தங்களை "டைகர்', "கோப்ரா' என்று சித்தரித்துக் கொண்டு, மக்கள் அமைப்புகளின் தொண்டர்களைத் தாக்கி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு நெருக்கமாக உள்ள ஜனநாயக சக்திகளை வெளிப்படையாகவே கொன்று வருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் குழுவைச் சேர்ந்த புருஷோத்தம் மற்றும் முகமது ஆசாம் அலி என்ற இரண்டு சிவில் உரிமைப் போராளிகளை, இந்த "டைகர்'கள் முதலில் கொன்றனர் என்பது உண்மைதான். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு "கோப்ரா'க்கள் இதற்கு முன்பு இல்லாத வகையில் பரவலாக செயல்படத் தொடங்கி விட்டனர். அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும், ஆறு மாதத்திற்குள்ளாகவே மிகப் பெருமளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் ஆசியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக அல்லது மறைமுகமாக அரசு வன்முறைக்கு எதிராகப் பேசுகின்றவர்களாக இருந்தாலும் இந்த அமைப்புகள் மிகக் கொடூரமாகக் கொன்றுள்ளன. பல்வேறு அமைப்புகளில் இருந்த தனிப்பட்ட போராளிகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த அமைப்புகளுமே இத்தகைய முகமூடி கொலைகாரர்களைக் கண்டு, தங்கள்அமைப்பைக் கலைத்து விட்டனர். மனித உரிமை அமைப்பினர் மட்டுமே செயல்பட்டு வந்தனர். இதைச் சொல்லும் போதே, அப்படி நடந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் ஏற்படுகிறது.

வன்முறையை அவர்களால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கேட்டால், மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிப்புக்குள்ளானவர்கள், அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக தாங்களாகவே ஆயுதமேந்தியிருக்கலாம்; எப்படி (காவல்துறை) அவர்களால் மாவோயிஸ்ட்டு வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அதேபோல அவர்களால் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வன்முறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய கூலிப்பட்டாளங்களில் உள்ள சிலர், நக்சலைட்டுகளால் பாதிப்படைந்தவர்களாகவோ, இல்லாமலோ இருக்கலாம். ஆனால், எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் என்பதில் உண்மையில்லை. நம்முடைய சந்தேகம் என்னவெனில், பெரும்பான்மையான "கோப்ரா'க்களும் "டைகர்'களும் போலிஸ்காரர்கள் என்பதுதான். இன்னொரு சந்தேகம், குற்றவாளிகளாக மாறிய முன்னாள் நக்சலைட்டுகள் சிலர், முன்னாள் தோழர்களுக்கு எதிராக, போலிஸ் பாதுகாப்புடன் செயல்படுகிறார்கள் என்பதும் உண்மையே. இத்தகைய போக்குகள், மிகவும் ஆபத்தானவை; இது பல்வேறு கொடிய வன்முறையாளர்களையே உருவாக்கும். காவல் துறைக்கு காட்டிக் கொடுப்பவர்களும், தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு கருதி, இத்தகைய கொலைக்கூட்டங்களில் சேருகிறார்கள் என்றும் மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.

ஒரு மனித உரிமைப் போராளியாக உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட தாக்குதல்கள் பற்றி சொல்லுங்கள்.


மனித உரிமைகளுக்காக களப்பணியாற்றுவது, எப்போதுமே ஆபத்துகள் நிறைந்தது. 1985 சூன் மாதம்தான் நான் முதல் முறையாக "அகில இந்திய வித்யார்த்தி பஷத்' ஆட்களால் வன் முறைக்கு ஆளானேன். கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜக்டியல் என்ற பேருந்து நிலையத்தில், இரும்பு நாற்காலிகளாலும், ஹாக்கி மட்டைகளாலும் நான் தாக்கப்பட்டேன். இதற்குப் பழிவாங்கும் வகையில், அவர்களில் இருவர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டனர். ஆனால், இதற்கும் முன்னதாகவே "ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக'த்தைச் சேர்ந்த கோபி ராஜண்ணா என்ற போராளி, சனவரி மாதம் இதே ஊரில் சங்பரிவார் கும்பலால் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு அதே ஆண்டு, செப்டம்பர் 3 அன்று, ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ராமநாதம், வாரங்கல்லில் பட்டப் பகலிலேயே கொல்லப்பட்டார். இது, காஜிப் பட்டு என்ற இடத்தின் காவல் துணை கண்காணிப்பாளரை, நக்சலைட்டுகள் (அப்போதைய மக்கள் யுத்தக் குழு) கொன்றதற்கானப் பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தபோது, 7.12.91 அன்று வாரங்கல்லில் நாராபிரபாகர் (ரெட்டி) யும், 7.12.86 அன்று கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள அங்குனூல் ஜபா லட்சுமணன் (ரெட்டி)யும் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவருமே ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகப் போராளிகளாவர்.

1989 இல், நான் கம்மம் அருகில் அய்தராபாத்தை நோக்கிப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டேன். நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட காவலர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இரண்டு இரவுகள் கண் கட்டப்பட்டு பிணைக் கைதியாக நான் வைக்கப்பட்டிருந்தேன். 1991 ஆம் ஆண்டு கம்மம் மாவட்டம் கோதகுடம் என்ற இடத்தில் மீண்டும் போலிஸ் ஏற்பாடு செய்த கிரிமினல்களால் தாக்கப்பட்டேன். என் முகத்தில் கடுமையாகத் தாக்கினார்கள். டாக்டர் ராமநாதம் என்பவர் பெயரில், நினைவு மண்டபம் எழுப்புவதற்காக நான் சேகரித்த பணத்தையெல்லாம் அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தலித் இயக்கங்கள் பற்றி தங்களுடைய பார்வை என்ன?

ஆந்திரப் பிரதேசத்தில் 1985 இல் எழுச்சியுடன் தோன்றிய தலித் இயக்கம்தான், பார்ப்பனியத்தின் மீதான முதல் தாக்குதலாகும். இம்மாநிலத்தின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம், தமிழ் நாட்டைப் போல வலுவாக இல்லை. இங்கு அதற்கான இடத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது. அது சில வழிகளில் ஒரு பரந்த செயல் திட்டத்தைக் கொண்டிருப்பினும், பார்ப்பனியத்தை விமர்சிப்பதில் அது பலவீனமுடனேயே இருக்கிறது. ஒரு துடிப்பான பகுத்தறிவு நாத்திக இயக்கம் இருந்தாலும், அது சூத்திரர்களில் மேலடுக்கில் உள்ள சாதியினரால் நடத்தப்படுகிறது. எனவே, அது பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சில எல்லைகளைக் கொண்டிருக்கிறது. "கம்மா' மற்றும் "ரெட்டி' சாதிகளைக் கொண்ட இவ்வியக்கம், கொள்கையளவில் வர்ணாசிரம தர்மக் கோட்பாட்டை விமர்சிக்கிறது. ஆனால், தங்களைப் பார்ப்பனர்களுக்கு ஏற்புடையவர்களாகவும், அதே நேரத்தில் சூத்திரர்களிலேயே ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சமத்துவத்தை, உரிமைகளை மறுப்பவர்களாகவுமே உள்ளனர். பஞ்சமர்கள் என்று வந்து விட்டால், இதைவிட மோசமாக நடந்து கொள்கின்றனர்.

இதற்கும் மேலாக, பகுத்தறிவு இயக்கத்தில் இருந்த கணிசமான பிரிவினர் மார்க்சிஸ்டுகளாக இருப்பது, பார்ப்பனியத்தை விமர்சிப்பதற்குத் தடையாக இருக்கிறது. மார்க்சியத்தின் கருதுகோள்களான அடித்தளம், மேல்கட்டுமானம், வர்க்கப் போராட்டம் போன்றவை, பார்ப்பனியத்தை எதிர்கொள்ளும் திறனற்றவையாக உள்ளன. பார்ப்பனியத்தை, அது முன்வைக்கும் வாழ்க்கை முறையை அதனளவிலேயே ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும். புலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், பார்ப்பனிய எதிர்ப்பு என்பதில் அவர்களுடைய வழிமுறை மிகச் சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

17.7.1985 அன்று கரம்சேடு என்ற இடத்தில் "கம்மா' சாதியினரால் தலித் மக்கள் கொல்லப்பட்டபோதுதான் "ஆந்திரப் பிரதேச தலித் மகாசபா' என்ற தலித் இயக்கம் தோன்றியது. அதற்குப் பிறகுதான், ஒரு சிறு குழுவிற்குள் முடங்கியிருந்த அம்பேத்கரின் சிந்தனைகள், ஒரு மாபெரும் அரசியல் கொள்கையாக மாறியது. எண்பதுகளின் பிற்பகுதியில் மிகப் பிரபலமாக இருந்த "தலித் மகாசபா', தொண்ணூறுகளின் தொடக்கம்வரை ஆற்றலுடனேயே செயல்பட்டது. தலித் மக்களின் அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளையொட்டி அவர்களை ஒருங்கிணைக்காததாலும், கொள்கைத் தளர்ச்சியினாலும்தான் அது படிப்படியாக சரிவை சந்தித்தது. முற்போக்கு அமைப்புகளின் அடிப்படைகளைத் தகர்க்கும் பலவீனங்கள், தலித் அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.

எல்லா முற்போக்கு இயக்கங்களைப் போலவே தலித் இயக்கத்திலும் ஊழல், சுயநலம், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரைப் போல, எல்லா போராட்டங்களுக்கும் மத்தியில் சுகங்களை அனுபவிப்பது போன்றவையும் ஒரு காரணம். கொள்கை அளவில் அரசு அதிகாரம் என்ற மாயையின் பின்னால் தொடர்ந்து செல்வது, முக்கியத் தடையாக இருக்கிறது. தலித் சிந்தனையாளர்கள் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் ஒருங்கிணைப்பை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுவது, மிகச் சாதாரணமாகிவிட்டது. இதனால் சமூக மாற்றத்திற்கானப் போராட்டம்தான் முதலில் பலியாகிறது. சீர்திருத்தம் அல்லது புரட்சி என்று எப்படி அழைத்தாலும் அதுதான் புலே, பெரியார் மற்றும் அம்பேத்கர் காண விரும்பியதாகும்.

- பேட்டி அடுத்த இதழிலும்...

நன்றி: தலித முரசு