Showing posts with label துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு. Show all posts
Showing posts with label துறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு. Show all posts

Sunday, June 03, 2007

புதுச்சேரி தேங்காய்த்திட்டில் அய்யா வே.ஆனைமுத்து






துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தேங்காய்த்திட்டு மக்களை மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யா வே.ஆனைமுத்து 26-05-2007 அன்று சந்தித்தார். முன்னதாக ஊர்பெரியவர்கள் திரண்டு அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தப்பட உள்ள பசுமையான விளைநிலங்களைப் பார்வையிட்டார். பிறகு பழைய மீன்பிடி துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். உடன் இருந்த தேங்காய்த்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் ஊர் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார். அனைத்துத் தகவல்களையும் தான் கொண்டுவந்த சுவடியில் குறித்துக் கொண்டார்.

போராடும் மக்களுக்கு ஆதரவு அளித்ததோடு அம்மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் முன்னோர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். அவருடைய உறவினர்கள் பலரது வீடுகளுக்கும் சென்று பழைய நினைவுகளை அசை போட்டார்.

தேங்காய்த்திட்டு சுயமரியாதைப் பாவலர் ’புதுவை முரசு’ இதழ் ஆசிரியர் இராமகிருட்டினர் இல்லத்திற்குச் சென்று அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடைய நூற்றாண்டு விரைவில் வர உள்ளதால், அவ்விழாவைச் சிறப்பாக கொண்டாட வலியுறுத்தினார்.

பின்னர், முதுபெரும் தியாகி டி.கே.இராமாநுஜம் இல்லத்திற்குச் சென்றார். அவருடைய படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். தியாகி டி.கே.இராமாநுஜம் தீவிரக் பொதுவுடைமைவாதி். தலை சிறந்த தொழிற்சங்கவாதி. உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் இவரை ’குறிப்பிடத் தகுந்த போராளி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

’துறைமுக விரிவாக்கத் திட்டம் மக்களுக்குத் தேவையற்றது, இது குறித்து முதல்வர் ந.ரங்கசாமியிடம் பேசுகிறேன், சிந்தனையாளன் இதழில் எழுதுகிறேன்’ என்று போராடும் மக்களுக்கு உறுதி கூறினார் அய்யா வே.ஆனைமுத்து.

மதிமுக பொறுப்பாளர் சடகோபன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் தலைவர் கு.இராம்மூர்த்தி, புதுவைக் குயில் பாசறை ச.ஆனந்தகுமார், த.செயமூர்த்தி, சிவகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Thursday, May 31, 2007

துறைமுகத் திட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் போராட்டம் - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யாத கெடுதல்களை இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்து வருகின்றனர். புதுச்சேரியின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகின்றன.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் ரூ.2700 கோடியில் தனியார் பங்கேற்புடன் செயல்படுத்த அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கியது தவறு. இத்திட்டம் மக்களைப் பாதிக்கும் திட்டமாக உள்ளது.

இதுபோன்ற பெரிய திட்டத்திற்கு உடனடியாகவும், விதிமுறைகளை மீறியும் அரசு அனுமதி அளித்தது எப்படி? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணி, துறைமுக விரிவாக்கத் திட்டம் இரண்டையும் ஒரே நிறுவனத்திற்கு தந்துள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது சிறப்பு சுரண்டல் மண்டலமாக மாறிவிடும்.

அரசுக்கு சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில் தனியார் நிறுவனத்திற்கு அரசு தந்துள்ளது. அரசின் சொத்தை இதுபோன்ற தனியாரிடம் ஒப்படைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மாநில - யூனியன் பிரதேச அரசுகள் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமை.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோது, உள்துறை அனுமதி அளிக்காதபோது, அரசு 153 ஏக்கர் பொதுச் சொத்தை தனியாருக்கு ஒப்படைத்துள்ளது எப்படி?

இத்திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு துறைமுக திட்டங்களை நிறைவேற்றிய முன் அனுபவம் எதுவும் கிடையாது. இப்பிரச்சினையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.

வளர்ச்சித் திட்டம் என்றால் மக்களுக்கு உண்மையில் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் சுற்றுலா மற்றும் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அந்த வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலை மேம்படுத்தலாம். மீன்பிடி படகுகள் தங்குவதற்கு வசதியாக கடலில் அணைக்கரை கட்டலாம். மீன்களைப் பாதுகாக்க குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளிக்கலாம். இதனால் மீனுக்குக் கூடுதல் மதிப்பு கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு பெருகும்.

வல்லுநர் குழு அமைத்து கருத்துக்களைக் கேட்டு முடிவு எடுப்போம் என அரசு கூறுவது கண்துடைப்பு. எந்த வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். திட்டங்களின் தேவை குறித்து முடிவு எடுப்பதற்கு மக்கள்தான் வல்லுநர்கள்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதன் அங்கமாக தேங்காய்த்திட்டில் தரிசாக கிடக்கும் 107 ஏக்கர் நிலத்தில் மக்கள் விவசாயப் பணியைத் தொடங்கி உள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

எளிய மக்களின் வருவாயைப் பெருக்க மாற்றுத் திட்டங்கள் தேவை. ஆனால், அழிவு ஏற்படுத்தும் திட்டம் தேவையில்லை. இயற்கைக்கு மாறான இந்த மனித சுனாமி மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற திட்டங்கள் வந்தால் தேங்காய்த்திட்டு மட்டுமல்ல புதுச்சேரியின் ராஜ்நிவாஸ் தப்புமா என்பதே சந்தேகம்.

அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மக்கள் போராட்டம் நடத்தவில்லை. பேரழிவு ஏற்படுத்தக் கூடிய திட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடி வருகின்றனர்.
பேரழிவு ஏற்படுத்தும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோளாகவும் சவாலாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களுக்கு எதிரான வளர்ச்சியை எதிர்க்கிறோம். தொன்மையான தேங்காய்த்திட்டு பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். புதுச்சேரி பாதுகாக்கப்பட வேண்டும்.

வரும் ஜுன் மாதம் 6,7 ஆகிய நாட்களில் பூனா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற உள்ள தேசிய இயக்கங்கள் மக்கள் கூட்டமைப்பின் இந்திய அளவிலான கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிப்போம். இத்திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை இந்திய அளவில் விரிவுபடுத்துவோம் என்றார்.

இப்போட்டியின் போது, சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், தேங்காய்த்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன், மனித உரிமை இயக்கம், பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு அமைப்புப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி, கவிஞர் மாலதி மைத்ரி உட்பட பலர் உடனிருந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் திரளாக திரண்டிருந்தனர்.

Wednesday, May 30, 2007

`கடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட வேண்டும்' - மேதா பட்கர்


துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த `சுற்றுச் சூழல் போராளி' மேதா பட்கர் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கிறோம் என்ற பெயரில் கடலை மறித்து 100 மீட்டர் அளவுக்கு பாறாங்கற்களைக் கொட்டியுள்ளனர். வங்காள விரிகுடா தெற்கிலிருந்து மேற்கு நோக்கி மணல் நகர்வு ஏற்படும் கடற்பகுதியாகும். இந்த மணல் நகர்வை செயற்கையாக தடுத்து நிறுத்தினால் கடற்கரை மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்.

பிரெஞ்சுக் காலத்தில் புதுச்சேரியில் கட்டப்பட்ட பழைய துறைமுகமும் தற்போது இருக்கும் புதிய துறைமுகமும் கடலை மறித்துக் கட்டாமல், தூண்கள் அமைத்து கட்டப்பட்டுள்ளன. இதனால், மணல் நகர்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததோடு கடற்கரையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழல் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் மேற்சொன்னவாறு வீராம்பட்டினத்தில் துறைமுகத்திற்காக கடல் மறிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தந்திராயன்குப்பம் என்ற மீனவக் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கடல் உட்புகுந்து கடற்கரை மணல் பரப்பே இல்லாமல் போனதோடு மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு தடுப்பு அரண் அமைக்கிறோம் என்ற பெயரில் மேலும் கடலுக்குள் பாறாங்கற்களைக் கொட்டி வருகிறது.

`இது நிரந்தர தீர்வு அல்ல. கடலை மறிப்பதனால் மேலும் மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலோர மீனவக் கிராமங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும்' என கடல்சார் வல்லுநர்கள் எச்சரித்தும் புதுச்சேரி - தமிழக அரசுகள் கவலைப்படாமல் இருந்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட தந்திராயன்குப்பம் மீனவ கிராமத்திற்கு மேதா பட்கர் சென்றார். மீனவர்களின் வீடுகள் கடல் அரிப்பால் சிதைந்துப் போனதைப் பார்வையிட்டார். அங்கிருந்த மீனவ மக்களிடம் பேசினார். கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் கூறினர். கடல் அரிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து மீனவ மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது ஏன்? என்று மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அம்மக்களிடையே பேசிய மேதா பட்கர் `இதுபோன்ற இயற்கைக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க மீனவ மக்கள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும். கடல் அரிப்பு மட்டுமல்ல உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற கொள்கையால் மீனவர்களை கடலை விட்டு அப்புறப்படுத்தும் சதி அரங்கேறி வருகிறது. சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் ஒருபுறம், சுற்றுச்சூழல் அழிப்பு என்ற மனிதன் ஏற்படுத்தும் சுனாமி மறுபுறம் என மீனவ மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் சார்ந்த மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதோடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக செயல்பாட்டு இயக்கங்கள் முன்கை எடுக்க வேண்டும். அரசு இதற்கு சிறப்புக் கவனம் செலுத்தி திட்டங்களைத் தீட்டவேண்டும்’ என்றார்.

புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி பாதிப்புகள் குறித்து மேதா பட்கரிடம் விளக்கினார். அப்போது அருகிலிருந்த மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி ஆகியோரிடம் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இந்த மீனவ மக்களையும் அணிதிரட்டி பங்கேற்க செய்யுங்கள்' என்றார்.

மேலும், அங்கு கூடியிருந்த மீனவ மக்களிடையே `புதுச்சேரியில் சிறிய அளவில் கடலை மறித்து கட்டப்பட்ட துறைமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பே இவ்வளவு என்றால், தற்போது கட்டப்படவுள்ள புதிய துறைமுக விரிவாக்கத்தால் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களை ஒன்றுதிரட்டி தமிழகத்தில் போராடுங்கள். அப்போதுதான் கடலோரக் கிராமங்களைப் பாதுகாக்க முடியும்' என்றார் மேதா பட்கர்.

பிறகு வீராம்பட்டினம் மீனவ கிராமத்திற்குச் சென்றார். வழியில் அரியாங்குப்பம், இராதாகிருஷ்ணன் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலையருகில், பெரியாரி தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்த செயல்வீரர்கள் வரவேற்பு அளித்தனர். தந்தை பெரியார் சிலையருகில் மேதா பட்கர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வீராம்பட்டினத்தில் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் கவுன்சிலர் பா. சக்திவேல் தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட ஊர்மக்கள் கூடியிருந்து வரவேற்றனர். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஆ. காங்கேயன், நெய்தல் நில உரிமை மீட்பு இயக்கப் பொதுச் செயலாளர் பா. இராமஜெயம், பொருளாளர் சு. இளந்திரையன் உட்பட பலர் உடனிருந்தனர். மீனவக் கிராமப் பெண்கள் மேதா பட்கருக்கு மலர் மாலை அணிவித்து தங்கள் வரவேற்பையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

அப்போது அம்மக்களிடையே கலந்துரையாடிய மேதா பட்கர் `துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதோடு நின்றுவிடாமல் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி தொழிலோடு தொடர்புடைய லாபம் தரக்கூடிய தொழில்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களின் நிதிகள் பெற்று தொழில் தொடங்க முயல வேண்டும்' என்றார்.

மேதா பட்கரின் வருகை மீனவ மக்களிடையே பெரும் உற்சாகத்தைத் தந்தது. மீனவ மக்களை அமைப்பாகத் திரட்டப் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தினார் மேதா பட்கர்.

Monday, May 28, 2007

“புதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்’’ - மேதா பட்கர்








புதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி' மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார்.

முன்னதாக காலை 10 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் அவரை மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், மனித உரிமை இயக்கம் - பெண்கள் இயக்கப் பொறுப்பாளர் வழக்கறிஞர் லூசி, புதுச்சேரி குடிமக்கள் செயல்பாட்டு இயக்கப் பொறுப்பாளர் புரோபீர் பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது குறித்து அவர் கூறினார். மேலும், கடந்த 24 மணிநேரமும் இடைவிடாமல் பயணம் செய்தது குறித்துக் கூறினார். நர்மதா அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றிலிருந்து முதலில் படகு மூலமும் பிறகு ஒரு பேருந்து, மூன்று கார்கள், கடைசியாக ரயிலைப் பிடித்து மும்பை வந்த அனுபவத்தைக் கூறினார். இவர் வருகைக்காக ரயில் 15 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதைக் கூறினார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்ததாகக் கூறினார். தான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்பட்ட சிரமங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

மதியம் 12-30 மணியளவில், துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடப் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி போராடி வரும் தேங்காய்த்திட்டு கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேங்காய்த்திட்டு கவுன்சிலரும் போராட்டக்குழு முன்னோடியுமான எஸ்.பாஸ்கரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் உட்பட பலர் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

கிராமப் பெண்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை திரும்பவும் கிராமப் பெண்களுக்கே அணிவித்து மகிழ்ந்தார். வரவேற்பு அளித்த பெண்களிடம் அவர்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசினார்.

பிறகு, பிள்ளையார் கோயில் அருகில் திரண்டிருந்த ஊர் பொது மக்களிடையே பேசினார். பெண்கள் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தங்கள் ஊர் முழுவதும் கையகப்படுத்தப்பட இருப்பதைக் கூறினார். துறைமுகப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தின்போது போலீசு நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

அப்போது அவர் பேசியதாவது :

`நாட்டில் நமது உரிமைக்காகப் போராடி வருகிறீர்கள். செம்மையான வழியில் அமைதியாக இயற்கையைப் பாதுகாக்க சுற்றுலா உள்ளிட்ட அரசின் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்த உங்களது போராட்டம் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்திற்கு பெண்கள் முன்னிலையில் இருந்து போராடி வருகிறீர்கள். வீட்டில் பதுங்கிக்கிடந்த பெண்கள் உரிமைகளுக்காகப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது.

2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுச்சேரி அரசு கொண்டுவரவுள்ள இத்திட்டத்தை பாரம்பரிய அழிவிலிருந்து காப்பாற்ற நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த சவால் பாராட்டத்தக்கது. அரசு கையகப்படுத்த இருந்த தரிசு நிலத்தில் விவசாயம் செய்து அமைதியான வழியில் உங்கள் போராட்டத்தை நிலை நிறுத்தியிருப்பது இந்த எதிர்ப்புக் குரலுக்கு அமைதியான அடித்தளம்.

உங்களுடைய இந்த ஒற்றுமை நாட்டின் மிகப்பெரிய வலிமை. இயற்கைக்கு ஆதரவாக திரண்டுள்ள இந்த ஒற்றுமை கண்டிப்பாக விலைபோகாது. இந்தப் போராட்டம் நாம் எல்லோரும் இணைந்துப் போராட வேண்டிய முக்கியப் போராட்டம். 2007-ஆம் ஆண்டில் நாட்டில் தலைதூக்கியுள்ள முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட கோரி நாம் தொடர்ந்துள்ள நமது அறவழிப் போராட்டம் இத்திட்டம் கைவிடப்படும் வரை தொடர வேண்டும். இதற்காக நாம் ஓரணியில் திரள வேண்டும்' என்றார்.

பின்னர் மக்களிடையே கலந்துரையாடினார். அப்போது 62 வயதான ராஜலட்சுமி என்ற பெண்மணி தான் புதுச்சேரியின் விடுதலைக்குப் போராடிய தியாகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரை அரவணைத்துக் கொண்டு `இதுவும், மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தான்' என்று கூறி மக்களுக்கு உற்சாகமூட்டினார்.

மேலும், `காப்போம்! காப்போம்! புதுச்சேரியைக் காப்போம்! கட்டுவோம்! கட்டுவோம்! புதுச்சேரியைக் கட்டுவோம்' என்று தமிழில் முழக்கமிட்டார். அனைவரும் அவருடன் சேர்ந்து முழக்கமிட்து எழுச்சியாக இருந்தது.

பின்னர் தேங்காய்த்திட்டில் உள்ள ஜெயராம் நாய்க்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேதா பட்கர் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல்.

மதிய உணவிற்குப் பிறகு துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களைப் பார்வையிட்டார். மேலும், தேங்காய்த்திட்டு மக்களிடம் விவசாயம் குறித்துக் கேட்டறிந்தார். அதோடு பச்சைப் பசேலேன இருந்த வயல்களைப் பார்த்து அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் விவசாயம் குறித்து விசாரித்தார்.

பிறகு தரிசாக கிடக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அந்த இடங்களையும் பார்வையிட்டார். அப்போது `கூட்டு விவசாயப் பண்ணை அமைத்து விவசாயம் நடத்துங்கள் போராட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொரு நாளுக்கு ஒரு கட்சி, இயக்கம் என பொறுப்பேற்று விவசாயத்தை உயிரோட்டமானதாக்க ``சிரமதானம்'' மேற்கொள்ளுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

போராடும் மக்களிடையே மேதா பட்கர் அதிக நேரம் செலவிட்டு ஆதரவளித்தது அம்மக்களுக்கு உற்சாகமாகவும் ஊக்கமாகவும் இருந்தது மேலும், நர்மதை அணைப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அவரை `மேதா தாய்' என்று அழைப்பதைப் போல், தேங்காய்த்திட்டு மக்களும் மேதா பட்கரை `மேதா தாய்' என்று அழைக்க வைத்துள்ளது.

Monday, May 14, 2007

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரி வருகை


சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் கட்டுவதால் பழங்குடியினர் வாழும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிவதை எதிர்த்து தொடர்ந்துப் போராடி வருபவர். அதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் நிற்கும் களப்பணியாளர்.

தமிழகத்தில் கடந்த 15-02-2007 அன்று கூடங்குளம் பகுதியில் அணுமின் நிலையம் கட்டப்படுவதால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டு, அதை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தார். போராடும் மக்களுக்கு ஆதரவளித்தார்.

இது போன்று மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கு பெரும் கேடு விளைவிக்கும், மீனவ கிராமங்களை அழிக்கும், ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே எதிரான இத்திட்டத்தை எதிர்த்து தேங்காய்த்திட்டு மக்களும்,ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களும் போராடி வருகின்றனர். துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

ஆனால், புதுச்சேரி அரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்து வருகிறது. முதல்வர் ந.ரங்கசாமியை பலமுறை சந்தித்து முறையிட்டும் எந்த பயனும் இல்லை. துறைமுகம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி ஒரு உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள்படி முடிவு எடுப்போம் என முதல்வர் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால், இதுநாள் வரை வல்லுநர் குழு கூட அமைக்கப்படவில்லை. இதனால், போராடும் மக்கள் அரசு மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும், புதுச்சேரி அளவில் நடைபெறும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிபடுத்தவும், போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும், சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கரை புதுச்சேரிக்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. போராடும் மக்களின் அழைப்பை ஏற்று, அவர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார்.

வரும் மே 17 வியாழனன்று காலையில் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், மதியம் புதுச்சேரி வந்து சேருகிறார். போராட்டம் நடத்தி வரும் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்திக்கிறார். கடந்த 13-04-2007 அன்று சவப்பாடை ஊர்வலம் நடத்தி துறைமுகத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தி்ன் போது போலீஸ் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

புதிதாக துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள இடங்களைப் பார்வையிடுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட அரியாங்குப்பம் துறைமுகத்தையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நேரிடையாக பார்க்கிறார். மேலும், இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் மீனவர் கிராமங்களை பார்வையிடுவதோடு, மீனவ மக்களையும் சந்திக்கிறார். பிறகு நடக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், புதுச்சேரியின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள், மனித உரிமை அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் வருகை துறைமுக விரிவாக்கத் திட்டப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tuesday, April 17, 2007

துறைமுகத் திட்டத்தைக் கைவிட தொடர் முழக்கப் போராட்டம்




புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடிய தேங்காய்த்திட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் பாதுகாப்புக் குழு சார்பில் 16-04-2007 திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுத் தலைவர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.இளங்கோ போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பாலாஜி, மக்கள் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் சி.எச்.பாலமோகன், பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அபிசேகம், சலீம், ஆனந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், கிராம பஞ்சாயத்துத் தலைவர் காங்கேயன், மத சார்ப்பற்ற ஜனதா தளத் தலைவர் கணேசன், சி.பி.ஐ. எம்-எல் சோ.பாலசுப்ரமனியன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், செம்படுகை நன்னீரகம் கு.இராம்மூர்த்தி, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முடிவில் மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் நன்றி கூறி போராட்டததை முடித்து வைத்தார்.

இப் போராட்டத்தையொட்டி தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000 பேர் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையை சுற்றியும், துறைமுக துறை அமைச்சர் இ.வல்சராஜ் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதுச்சேரி துறைமுகப் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மக்கள் போராட்டத்தின் போது துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Monday, April 16, 2007

போலீஸ் தடியடி : உண்மை அறியும் குழு விசாரணை


தேங்காய்த்திட்டில் போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் தலைமையில் உண்மை கண்டறியும் குழு புதுச்சேரியில் 15-04-2007 ஞாயிறன்று தனது விசாரணையத் தொடங்கியது.

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றன. இந்தப் பிரச்னைக்காக சில தினங்களுக்கு முன்பு தேங்காய்த்திட்டு கிராமத்தில் அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிப்புச் சம்பவம் நடந்தது. அதைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும் தேங்காய்த்திட்டு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். தேங்காய்த்திட்டு கிராம மக்கள் 257 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தடியடி சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடத்தி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தன. கவுன்சிலர் பாஸ்கரன் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் போலீஸ் சீனியர் எஸ்.பி. ஸ்ரீகாந்தை சந்தித்துப் புகார் கொடுத்தனர். கவுன்சிலர் மற்றும் பொது மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு கிராமத்தில் நடந்த தடியடி சம்பவத்தின் உண்மை நிலையைக் கண்டறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கை தர குழு ஒன்று 15-04-2007 ஞாயிறன்று புதுச்சேரி வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம், விருத்தாசலம் வழக்கறிஞர் ராஜி, விழுப்புரம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்று தடியடி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தேங்காய்திட்டு கவுன்சிலர் பாஸ்கரன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கள் உட்பட ஏராளமானவர்கள் போலீசார் மீது புகார் கூறினர்.

இந்தக் குழுவினர் வருகை குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் கூறும் போது, உண்மை அறியும் குழுவானது தேங்காய்த்திட்டு பகுதியில் சென்று விசாரணை நடத்தியது.

தடியடி சம்பவத்தில் உள்ள உண்மை நிலைகளை அவர்கள் விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைப்பார்கள். அதன் பேரில் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மக்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.

நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு அமைப்பளர் எஸ்.காளியப்பன்,மககள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு துணைத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி இரா.சுகுமாரன், மனித உரிமை ஆர்வலர் இரா.முருகப்பன் ஆகியோர் உடன்ருந்தனர்.

போலீசார் அத்துமீறல் : நீதி விசாரணை நடத்த வேண்டும்

புதுச்சேரியில் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.

போராட்டக் குழுவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் க.லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் 13-04-2007 வெள்ளிக்கிழமை கூறியது:

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து இதுவரை அமைதியான முறையில்தான் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது அரசு திட்டமிட்டு தடியடி நடத்தியுள்ளது. இப்போராட்ட இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை, 3 போலீஸ் கண்காணிப்பாளர்கள் உள்பட அதிக அளவில் போலசார் குவிக்கப்பட்டதே இதற்கு ஆதாரம். போலீஸ் அதிகாரிகள் தகாத வார்த்தைகளைக் கூறியது அவமானமாக இருந்தது.

இத்தாக்குதலை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.

போராட்டம் நடத்தும் தேங்காய்த்திட்டு மக்களை ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது தவறு.

தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இப் பிரச்சினையில் மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் இறங்குவது என்பது தொடர்பாக 14-04-2007 சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றனர்.

போலீஸ் தாக்குதலில் காயபட்டவர்கள் செய்தியாளர்களிடம் போலீஸ் அத்துமீறல் குறித்து விளக்கினர். தங்கள் உடம்பில் பட்ட காயங்களைக் காட்டினர்.

இப் பேட்டியின்போது போராட்டக் குழு அமைப்பாளர் பாலமோகனன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு : போலீஸ் அத்துமீறல்





புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சரின் உருவ பொம்மையுடன் 13-04-2007 வெள்ளிக்கிழமை சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலசார் தடியடி நடத்தினர்.

இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். அரசு பேருந்து கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், போலீஸ் ஜீப்பின் முகப்பு விளக்கும் உடைக்கப்பட்டது.

புதுச்சேரியில் தனியார் பங்கேற்புடன் ரூ. 2700 கோடி மதிப்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அமல் செய்ய புதுச்சேரி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத் திட்டத்துக்கு தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேங்காய்த்திட்டு மக்கள் 13-04-2007 வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஒன்றாகத் திரண்டனர். சுகாதாரம் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் இ.வல்சராஜின் உருவ பொம்மையைத் தயார் செய்தனர். அதை தென்னை ஓலையில் பின்னப்பட்ட பாடையில் வைத்து அலங்கரித்து, சவ ஊர்வலம் போன்று பொரி வீசிக் கொண்டு ஆட்டம்-பாட்டம் மேளதாளத்துடன் கடலூர் சாலையை நோக்கி புறப்பட்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதையறிந்த போலீசார், வசந்த நகர் அருகே போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் போலீசார் பாடையைப் பிடுங்கினர். ஆனால், உருவப்பொம்மை போராட்டக் குழுவினரின் கையில் இருந்தது. போலீசாரின் வளையத்தைத் தாண்டி அதை எடுத்துச் சென்று மரப்பாலம் சந்திப்பு அருகே எரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்தனர்.

அப்போது திரண்டிருந்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். இதில் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட 12 பேர் பலத்தக் காயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஜிப்பர் மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்றனர்.


போலீஸ் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியவர்கள் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், புதுச்சேரியில் செயல்படும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் சக்திவேல், புஷ்பதியாகு, இளஞ்செழியன் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 20 பேர் உள்பட 250 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Monday, April 09, 2007

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு வீடு, மனை, நிலம் ஆர்ஜீத எதிர்ப்புக் குழு சார்பில் கட்சிகள், இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் 6-4-2007 அன்று மாலை 6 மணியளவில் தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் விஸ்வேஸ்வரன், பாரதிய ஜனதா கட்சி, மா.இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அபிசேகம், சலீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சு.பாவாணன், விடுதலைச் சிறுத்தைகள், குமாரவேல், தேமுதிக., கணேசன், மதசார்பற்ற ஜனதாதளம், சடகோபன், மறுமலர்ச்சி தி.மு.க., சி.எச். பாலமோகனன், அமைப்பாளர், மக்கள் பாதுகாப்புக் குழு, கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, லோகு.அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகம்,ஆனந்தராஜ், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம், இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், பா.சக்திவேல், கவுன்சிலர், வீராம்பட்டினம், விஸ்வநாதன், மீனவர் விடுதலை வேங்கைகள்,இருதயராசு, பகுஜன் சமாஜ் கட்சி, ஜெகநாதன், கிராம பஞ்சாயத்து ஒருங்கிணைப்பு ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

1. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியபோது, `துறைமுகம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி வல்லுநர் குழு அமைத்து, மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் நல்ல முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார். இதனை இக்கூட்டம் நிராகரிக்கிறது.

கடந்த 23-03-2007 அன்று வணிக வரித்துறை வளாகத்தில் முதல்வர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வல்லுநர் குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியபோதே அதை போராட்டக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் அதையே சட்டமன்றத்தில் கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

ஏற்கனவே, துறைமுக விரிவாக்கம் குறித்து டில்லியுள்ள தேசிய துறைமுக மேலாண்மைக் கழகம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடிசவ ஆயயேபநஅநவே (சூஐஞஆ)) அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் புதுச்சேரிக்கு இந்த துறைமுக விரிவாக்கம் தேவையற்றது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்கு தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் கடுமையான பாதிப்புகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

உண்மைநிலை இப்படியிருக்க, மீண்டும் வல்லுநர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது போராட்டத்தை திசை திருப்பி மழுங்கடிக்கும் செயல் என்பதை இக்கூட்டம் அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது. நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதபோதே கடந்த பிப்ரவரி 2-ந் தேதியன்று துறைமுகத்தையும், அதையொட்டிய 153 ஏக்கர் நிலத்தையும் புதுச்சேரி அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வல்லுநர் குழு கருத்தறியும் வரை துறைமுக விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். துறைமுகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள துறைமுகத்தையும் 153 ஏக்கர் நிலத்தையும் திரும்பப்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து உறுப்பினர்களும் புகார் கூறியுள்ளனர். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

Sunday, April 08, 2007

துறைமுகத் திட்டம் : சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 03-04-2007 அன்று வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் அமைக்கப்பட இருந்த துணை நகர திட்டத்தைக் கைவிட்டு சட்டப் பேரவையில் அறிவித்துள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மனதார பாராட்டுகிறேன்.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி துணைநகரம் அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்த்துப் போராடியதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதேபோல், மக்கள் நலனுக்கு எதிரான துறைமுக விரிவாக்கத் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளையும் கைவிட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து தேங்காய்திட்டு மக்களும், பல்வேறு அமைப்புகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். துணைநகர திட்டத்தைக் கைவிட்ட அரசு துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றி சட்டப் பேரவையில் எந்த அறிவிப்பும் செய்யாதது போராடும் மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.

02-04-2007 அன்று சட்டப்பேரவையில் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல் அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதில் அளிப்பதாக இருந்தது. சட்டப்பேரவை அலுவல் பட்டியலில் இருந்தும் திடீரென எவ்வித காரணமுமின்றி துறைமுக விரிவாக்கத் திட்டம் பற்றிய கேள்விகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போடப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுவரும் தனியார் நிறுவனம் துறைமுக துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வல்சராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதுகுறித்து புதுவை அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.

இதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்ப உள்ளோம்.

Thursday, March 29, 2007

துறைமுகத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம்


புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை இனியும் அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று தேங்காய்திட்டு வீடு, மனை மற்றும் நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இது குறித்து குழுவின் அமைப்பாளர் எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் 27-03-2007 அன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் ஆழ்கடல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரி சட்டப்பேரவை முற்றுகை போராட்டம், ரேசன் அட்டை நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவை வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களோடு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இனியும் காலம் தாழத்தாமல் புதுச்சேரி அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சில அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர் இந்த திட்டத்தைக் கைவிட்டு விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். அதனை ஏற்று பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே போராட்டத்துக்கு அணி திரட்டினோம். இனியும் துறைமுக விரிவாக்கத் திட்டம் கைவிடப்படாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று திரட்டி பிரமாண்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றனர்.

Wednesday, March 28, 2007

துறைமுகத் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் : 3000 பேர் கைது


புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து 27-03-2007 செவ்வாய்க்கிழமை சட்டசபை முற்றுகைப் போராட்டம் மற்றும் ரேசன் அட்டை நகல்கள் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், தேங்காய்த்திட்டு பகுதி மக்களை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இத் திட்டத்தை எதிர்த்துப் போராட தேங்காய்த்திட்டு பகுதி மக்கள் நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பு மக்களை ஒன்றிணைத்து குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இக் குழு சார்பில் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவை கூடும் நாளன்று ரேசன் அட்டை நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சட்டப்பேரவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. ஊழியர்கள்கூட தீவிர சோதனைக்குப் பிறகே சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த மொத்த போலீசாரும் சட்டப்பேரவை அருகேயும், மக்கள் ஊர்வலம் செல்லும் பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர்.

நகல் எரிப்புப் போராட்டம் நடத்த இருந்த பொதுமக்கள், பழைய பேருந்து நிலையம் அருகே கூடி, ஊர்வலமாக சட்டப்பேரவையை நோக்கி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் தேங்காய்த்திட்டு நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த எஸ்.காளியப்பன், கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் க.லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்து, வி.கே.கணபதி, பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன், அரசு ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலாளர் பாலமோகனன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அரசு.வணங்காமுடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பாலாஜி, மா.இளங்கோ, வீராம்பட்டினம் கவுன்சிலர் பா.சக்திவேல், தலைவர் காங்கேயன், முன்னாள் தலைவர் விசுவநாதன், இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் சஞ்சீவி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்க வி.இராஜசேகரன் உள்ளிட்ட 3000 பேர் பங்கேற்றனர்.

ரேசன் அட்டை நகல் எரிப்பு


அண்ணாசாலை வழியாக ஊர்வலம் வந்த இவர்கள் துறைமுகத்துறை அமைச்சர் வல்சராஜுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் காமராஜர் சிலை அருகே வரும்போது போலீசார் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சட்டப்பேரவையில் ஒப்படைக்க கொண்டு வந்த ரேசன் அட்டை நகல்களை சாலையின் நடுவில் போட்டு தீ வைத்து எரித்தனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதையடுத்து 1000 பெண்கள் உள்பட 3000 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டையில் கடையடைப்பு

முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியிலுள்ள கடைகள் அனைத்தையும் மூடியிருந்தனர்.



போராட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சாயா சர்மா தலைமையில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன், ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் சிவதாசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Friday, March 09, 2007

துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் 08-03-2007 அன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை:

ரூ.2700 கோடி மதிப்பிலான புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வளர்ச்சி பெறுவதைக் காட்டிலும் பேரழிவைச் சந்திக்கும் நிலை உள்ளது.

மேலும் இத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் ஆதாயத்துக்காக புதுச்சேரி மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத் திட்டத்தின் காரணமாக தேங்காய்த்திட்டு என்ற கிராமம் முற்றிலும் அழியும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாதிக்கும்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் விளைவாக மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வரும் என்றும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுவது வெற்று வாக்குறுதிகளே.

இதனால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாவார்கள். துறைமுகப் பகுதிக்குள் அவர்கள் நுழைவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேங்காய்த்திட்டு பகுதியில் வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு புதியதாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று கூறுவது மோசடியாகும்.

இத் துறைமுக திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இத் திட்டத்தை நிறைவேற்ற முயலுவது மக்கள் விரோதப் போக்காகும். எனவே இதை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் சிறிய நிலப்பகுதியான புதுச்சேரியில் துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் சுமார் 1000 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரியைச் சுற்றியுள்ள எல்லா நிலத்தையும் இப்படி தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டால் புதுச்சேரி மக்கள் எங்கு போவார்கள்? தனியார் நலன்களுக்காக பொதுமக்களின் நலன்களைப் பாதிக்கும் இத் திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.

Wednesday, March 07, 2007

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மக்களுடன் பழ.நெடுமாறன்


4-3-2007 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேங்காய்த்திட்டுப் பகுதி மக்களைச் சந்தித்து பேசினார்.

புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேங்காய்த்திட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.

இந் நிலையில் புதுச்சேரி வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தேங்காய்த்திட்டு பகுதிக்குச் சென்றார். அவருக்கு மரப்பாலம் அருகே நில ஆர்ஜித எதிர்ப்புக் குழுவின் தலைவர் காளியப்பன் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தேங்காய்த்திட்டு மக்களைச் சந்தித்து அவர் பேசினார். அப்போது "துறைமுக விரிவாக்கத்துக்காக தேங்காய்த்திட்டு பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் தங்கள் கிராமத்தை காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், "உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விளை நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. விளை நிலங்களை இதுபோன்ற காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

இது உலக அளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆதரவான செயலாகும். இதை மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.

துறைமுக விரிவாக்கத் திட்டம் தொடர்பாக தேங்காய்த்திட்டு மக்களின் போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு மக்களுக்கு எதிராக விளைநிலங்களை ஆர்ஜிதம் செய்து அளிக்கக் கூடாது. இதனை தடுக்க இயக்கம் நடத்தி, போராடவும் தயாராக வேண்டும்' என்றார்.

புதுவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், செம்படுகை நன்னீரகம் கு.இராமமூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, இராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தி.சஞ்சீவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Thursday, February 22, 2007

சட்டமன்ற உறுப்பினர் முற்றுகை: மக்கள் ஆவேசம்

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குத் தேங்காய்திட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதனிடையே தேங்காய்திட்டு உள்ளடக்கிய முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் என்னைச் சந்தித்து விளக்கம் கேட்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், 21-02-2007 அன்று, தேங்காய்திட்டு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியனின் அலுவலகத்திற்குச் சென்று முற்றுகையிட்டனர். அப்போது அவர் விளக்கம் கொடுக்க முயன்ற போது காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. உடன் அங்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் மக்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 19-02-2007 அன்று விடுத்த அறிக்கை:

துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது மக்கள் விரோத செயல் குறித்து, திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தினால் தேங்காய்திட்டு மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரியே பாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக கப்பல் போக்குவரத்துக்காக 90 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு கடல் மண் எடுத்து, கடலை ஆழப்படுத்த உள்ளனர். இதனால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதோடு, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடரின் போது கடற்கரை மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச் சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், துறைமுக கரையை செயற்கையாக அமைப்பதற்கு 10 மில்லியன் சதுர மீட்டர் அளவு கடல் மண் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அரியாங்குப்பம் ஆற்றில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டதால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய திட்டத்தினால் வடக்கே மகாபலிபுரம் வரை தெற்கே சிதம்பரம் வரை கடற்கரை பாதிக்கப்பட உள்ளது. மீனவர்கள் கடல் பகுதியை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ வேண்டிய ஆபத்துள்ளது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் இத்திட்டத்தை எதிர்ப்பில்லாமல் செயல்படுத்த ஆட்சியாளர்களுக்கும், கட்சியினருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ளது பல்வேறு சந்தேங்களுக்கு வழிவகுக்கிறது.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் அரசுக்குத் தாக்கல் செய்துள்ள சுற்றுச் சூழல் அறிக்கையில் முற்றிலுமாகப் பாதிப்பு இல்லை எனக் கூறவில்லை. துறைமுகம் கட்டும்போதும், கப்பல் போக்குவரத்தின் போதும் இரைச்சலும், அதிர்வுகளும் இருக்கும். 14 மீட்டர் அளவுக்கு கடல் தூர்வாரப்படுவதால் உப்புநீர் புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கும், கடலில் எண்ணை கசிவும், கட்டுமானப் பணியின் போது கடலில் கனமான உலோக பொருட்களும், நீரகமும், காரியகமும் கலக்கும் என தெரிவித்துள்ளது.

உண்மைநிலை இப்படியிருக்க சட்டமன்ற உறுப்பினர்
எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பது ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த தேங்காய்திட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும். மேலும், போராடும் மக்களை சந்தித்து விளக்கம் அளிக்காமல் சந்தேகமிருந்தால் தன்னை சந்தித்துக் கேட்கலாம் எனக் கூறுவது மக்களை அலட்சியப் படுத்துவதாகும்.

புதுச்சேரியின் அனைத்துதரப்பு மக்களையும் பாதிக்கும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். இதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு துணை நிற்கும்.