Showing posts with label சிறைவாசி. Show all posts
Showing posts with label சிறைவாசி. Show all posts

Sunday, January 12, 2025

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம்: உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (12.01.2025) விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த 10.01.2025 அன்று காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி நாராயணன் (வயது 45) நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பியுள்ளார். சிறையில் உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காலாப்பட்டு காவல்நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்துபோன நாராயணனின் உறவினர்கள் அவருக்குச் சின்ன வயது, எவ்வித நோயும் இல்லை என்பதால் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

கடந்த 16.09.2024 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைச் சிறைவாசியான பிரதீஷ் (வயது 23) கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீஷ் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முழு விவரங்களையும் அளிக்குமாறு டி.ஜி.பி., காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் சிறைகளில் சிறைவாசிகள் மரணம் அடிக்கடி நடக்கிறது. சிறைவாசிகளைப் பாதுகாப்பதில் புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தோல்வி அடைந்துள்ளது.

சிறைவாசி நாராயணன் மரணத்திற்கு புதுச்சேரி அரசும் சிறைத்துறையும் பொறுப்பு (Vicariously liable) என்பதால், அவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோன சிறைவாசிகள் விவேகானந்தன், பிரதீஷ் குடும்பத்தினருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

 எனவே, காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

 இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு விரிவான புகார் அனுப்ப உள்ளோம்.

Thursday, December 05, 2024

காரைக்கால் சிறையில் சிறைவாசி தற்கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்? விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவு!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.12.2024) விடுத்துள்ள அறிக்கை:

காரைக்கால் மாவட்ட சிறையில் தண்டனைச் சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன்? என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்திரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த 08.06.2024 அன்று, காரைக்கால் மாவட்டச் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் (வயது 23) த/பெ. பழனிச்சாமி என்பவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த 18.06.2024 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி இருந்தோம். அதில் பிரதீஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்குச் சிறைத் துறையும், புதுச்சேரி அரசும்தான் பொறுப்பு. பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தோம்.

இப்புகாரைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 26.11.2024 அன்று உத்திரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவகத்தில் (Registry) இந்த காவல் மரணம் தொடர்பாக எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, காரைக்கால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர், காரைக்கால் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இக்காவல் மரணம் பற்றி தகவல் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. இந்த உத்திரவின் நகல் டி.ஜி.பிக்கும் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மரணம் ஏற்பட்டதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணைய வடிவப்படி காலாப்பட்டு மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சுகாதாரப் பரிசோதனை அறிக்கை, காலவரிசைப்படி முந்தைய சிறை உள்ளிட்ட சிறைகளில் நோய்களுக்குச் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் சிகிச்சை அளிக்கப்பட்ட முழு மருத்துவ ஆவணங்கள், பிரேத விசாரணை அறிக்கை, தட்டச்சு செய்யப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கை, விசரா, ஹிஸ்டோபேத்தாலஜி ஆய்வுகள், தடய அறிவியல் துறை அறிக்கையின் அடிப்படையிலான மரணத்திற்கான காரணம், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

மேலும், நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, இறுதி முடிவு மற்றும் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை, குற்ற நடவடிக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 14.12.1993 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு வழிகாட்டுதல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையப் பதிவாளருக்கு 24 மணிநேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக கருதப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த 21.06.1993 அன்று மேற்சொன்ன வழிகாட்டல் காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் குறித்து மட்டுமல்ல, நீதித்துறைக் காவலில் நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டல் ஒன்றை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியுள்ளது.

எனவே, காவல் மரணம் மற்றும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடந்தால் மாவட்ட நடுவர் (மாவட்ட ஆட்சியர்), காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் 24 மணிநேரத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

Friday, September 20, 2024

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி விவேகானந்தன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 16.09.2024 அன்று கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றக் காவலில் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என்பதோடு, இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சிறைச்சாலைகள் சிறைவாசிகளைத் திருத்தும் மையங்களாக (Correctional Centers) இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

மேலும், சிறைவாசி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

சிறைவாசி விவேகாந்தன் உயிரிழப்பிற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.