Showing posts with label பாலியல் வன்கொடுமை. Show all posts
Showing posts with label பாலியல் வன்கொடுமை. Show all posts

Sunday, March 23, 2025

1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (23.03.2025) விடுத்துள்ள அறிக்கை:

தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 1ஆம் வகுப்பு மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

கடந்த பிப்ரவரி 15 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவரிடம் சென்ற தனியார் பள்ளி 1ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரால் தொடர்ந்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுத்த தவளக்குப்பம் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் 7 மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்திய பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றமிழைத்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 கடந்த 13.03.2025 அன்று முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இதுவரையில் நிவாரணம் வழங்கப்படவில்லை.

மாணவிக்குத் தொடர் பாலியல் வன்கொடுமை நடந்ததைத் தடுக்கத் தவறியதோடு, உடந்தையாக இருந்த பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் இன்னமும் வழக்கில் சேர்த்து கைது செய்யப்படவில்லை. பள்ளி தாளாளர் ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் அரசும், காவல்துறையும் குற்றமிழைத்த இருவரையும் காப்பாற்றி வருகிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், இதுவரையில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இப்பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிக் கிடைக்கக் குரல் கொடுக்கவில்லை.

 கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக கண்காணிக்க தவறியதால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அரசுதான் முழுப் பொறுப்பு (Vicariously liable) ஆகும்.

எனவே, அரசு இனியும் காலங்கடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் உடனே வழங்க வேண்டும். இல்லையேல், கட்சி, அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.


Thursday, March 13, 2025

1ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளி தாளாளர், முதல்வரை போக்சோ வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

 


முதலமைச்சரிடம் பொதுநல அமைப்புகள் மனு!!

புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பில் நேற்று (13.03.2025) மாலையில் முதலமைச்சர் திரு. ந.ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் களம் செயலாளர் கோ.அழகர், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பி.பிரகாஷ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஜெ.சம்சுதீன், புரட்சியாளர்  அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், புதுவை எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், சுற்றுச்சூழல் கலாச்சார புரட்சி இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத் தலைவர் இரா.சுகுமாரன், மக்கள் மன்றத் தலைவர் மு.நாராயணசாமி, பி போல்ட் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவி (வயது 7) ஆசிரியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வழக்கில் அப்பள்ளியின் ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ சட்டப் பிரிவு 6-ன்கீழ் வழக்குப் பதிந்து,  கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற போதுதான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பள்ளி தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இதன்மூலம், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது போக்சோ சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. 

எனவே, பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியின் தாளாளர் ராமு, முதல்வர் யுவராஜ் ஆகியோரை மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், மேற்சொன்ன வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குப் பிணை கிடைக்காமல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் வைத்தே புலன்விசாரணை முடித்து, குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கை நடத்தி தண்டனைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியான மாணவிக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கவும், உளவியல் கவுன்சிலிங் வழங்கவும், ரூபாய் 25 இலட்சம் நிவாரணம் வழங்கவும் வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு உள்துறை அமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், டிஜிபி, டி.ஐ.ஜி., சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. உள்ளிட்டோருக்கும் அளிக்கப்பட்டது.

Monday, August 19, 2024

பாப்பாநாடு இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டும்!


மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தில் கடந்த 12.08.2024 அன்று மதியம் 3.00 மணி அளவில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவரை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

12.08.2024 அன்று வங்கிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 23 வயதுடைய இளம் பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கொட்டகைக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கத்திய அப்பெண்ணை பீர் பாட்டலால் தலை, கழுத்தில் தாக்கியுள்ளனர். அடித்து உதைத்துள்ளனர். பாலியல் வன்புணர்வில் 4 பேர் அடுத்தடுத்து ஈடுபட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக 2 பேர் காவல் இருந்துள்ளனர்.

அன்றைய தினம் சுமார் மாலை 4.20 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் பாப்பாநாடு காவல்நிலையம் சென்று, அங்குப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா என்பவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். ஆனால், காவல் உதவி ஆய்வாளர் புகாரை எழுதி முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, வழக்கறிஞர் மூலம் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எனக்கு உடல்நிலை சரியில்லை, புகார் எழுத முடியவில்லை என்று கூறிய பின்னரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. மேலும், நடந்த சம்பவம் குறித்து மேற்சொன்ன காவல் அதிகாரி ஆண் காவலர்கள் இருவர் முன்னிலையியே விசாரித்துள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தை மற்றும் உறவினர்களோடு பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு காவல்நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர், அன்றைய தினமே இரவு சுமார் 1.00 மணியளவில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைப் புகார் கூறியுள்ளனர். அங்குப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறும்படி கூறியுள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் 12.08.2024 – 13.08.2024 இரவு சுமார் 3.00 மணியளவில் தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவனைக்குச் சென்று அங்குப் பணியில் இருந்த மருத்துவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறி சிகிச்சை அளிக்கக் கோரியுள்ளனர். மருத்துவர்கள் உடனே உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதன்பின்னர்தான், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, 13.08.2024 காலை 7.00 மணிக்கு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர். (Cr.No.13/2024 u/s 127(2), 118(1), 70(1), 351(3), 308(5), 61(2) Bharatiya Nyaya Sanhita (BNS), 2023). இதன்பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுப் பதிவு செய்துள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் 1) கவி (எ) கவிதாசன், 2) திவாகர், 3) பிரவீன், 4) ஒரு சிறுவன் ஆகிய 4 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் புகார் வாக்குமூலத்திலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவரிடம் அளித்த வாக்குமூலத்திலும் கூறிய 1) வேல்முருகன், 2) ஒரு சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இவர்கள் இருவரும் பாலியல் வன்புணர்வு சம்பவம் நடக்கும்போது யாராவது வருகிறார்களா எனப் பார்த்துக் கொண்டு காவல் இருந்தவர்கள். குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை முடிந்து தனது வீட்டில் பாதுகாப்பு இல்லாததால், வேறு பாதுகாப்பான இடத்தில் தங்கி இருந்து வருகிறார். அவர் தலை, முதுகு போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், உளவியல் ரீதியான சிகிச்சையும் தேவைப்படுகிறது.

குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த 1/2 பவுன் தோடு, 1 கிராம் பவுன் வளையம், செல்போன், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பேன் அட்டை ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இதில் தங்க நகைகளை பட்டுக்கோட்டையில் விற்றுள்ளனர். இவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரியவில்லை. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆதாரங்களைத் திரட்டியதாகவும் தெரியவில்லை.

சம்பவம் நடந்தது முதல் பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களைச் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் நோக்கிலேயே செயல்பட்டுள்ளார். தற்போது அவர் ஒரத்தநாடு காவல்நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கடமையில் இருந்து தவறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சம்பவம் நடந்த கொட்டகைதான் கஞ்சா வியாபாரம் நடத்தும் இடமாகவும் இருந்துள்ளது. பாப்பாநாடு பகுதிகளில் காவல்துறை ஆதரவோடு கஞ்சா விற்பனைப் பல காலமாக நடந்து வருகிறது.

இன்று (19.08.2024) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டியும், குற்றமிழைத்த இருவரையும் கைது செய்யவும் வலியுறுத்தி பாப்பாநாடு பொதுமக்கள், வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:

1) இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கை ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி புலன்விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

2) குற்றமிழைத்த வேல்முருகன் மற்றும் ஒரு சிறுவன் இருவரையும் இவ்வழக்கில் சேர்த்து உடனே கைது செய்ய வேண்டும்.

3) பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்யாததோடு, மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சையும், மருத்துவப் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா மீதும், சிகிச்சை அளிக்க மறுத்ததோடு, மருத்துவப் பரிசோதனையை உரிய நேரத்தில் செய்யாமல் வழக்கின் முக்கிய ஆதாரங்கள் திட்டமிட்டே அழிய காரணமான பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4) பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா, பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

5) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு செலவில் உயர் மருத்துவச் சிகிச்சையும், உளவியல் ரீதியான சிகிச்சையும் உடனே அளிக்க வேண்டும்.

6) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடைக்கால இழப்பீடாக 5 இலட்சம் ரூபாயும், அவரின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியும் உடனே வழங்க வேண்டும்.

7) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

8) பாப்பாநாடு பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாள்: 19.08.2024

இடம்: பாப்பாநாடு

இவண்,

கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்நாடு – புதுச்சேரி.

சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.

அரச முருகுபாண்டியன், மக்கள் சிவில் உரிமைக் கழகம், காரைக்குடி.

அ.சிம்சன், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.

ஆ. ரேவதி, மாநிலத் தலைவர், அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்.

பழ. ஆசைத்தம்பி, மாநிலச் செயலர் , இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (லிபரேஷன்).

படம்: சம்பவம் நடந்த கொட்டகை.