Wednesday, August 15, 2007

வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று, தேர்தல் நடத்த புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தல்


புதுச்சேரியில் உள்ள வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 14-08-2007 அன்று புதுவை முதல்வர் ந.ரங்கசாமியிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவின் விவரம்:

கடந்த 1966 ஜூலை 17-ஆம் நாளன்று வணிக அவைக்கான தேர்தல் அறிவிப்பை புதுச்சேரி ஆளுநர் வெளியிட்டார். மேயர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதுதான் வணிக அவையில் நடந்த கடைசி தேர்தல்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிந்த பின்னரும் இதுவரை வணிக அவைக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. வணிக அவைக்குத் தேர்தல் நடத்துவது புதுச்சேரி அரசின் கடமை.

தேர்தலை நடத்தத் தவறியதால் வணிக அவையின் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன. பிரெஞ்சு டிகிரியின்படி உருவாக்கப்பட்ட வணிக அவை ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வணிக அவையின் சொத்துகள் இச்சங்கத்தின் சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வணிக அவையை உண்மையான வியாபாரிகளின் அமைப்பாக மாற்றுவதற்கு வணிகர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப் பிரச்சி்னையில் தாங்கள் தலையிட்டு வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் வணிக அவையின் சொத்துகளை அரசே ஏற்று தேர்தலை நடத்தி வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

இம் மனு அளிக்கும்போது முதலியார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.இராஜசேகரன், செயலர் ஆர்.திருவேங்கடம், ஆலோசகர் இரா.அழகிரி, புதுவை மளிகை மொத்த வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.கே.தண்டபாணி, நுகர்பொருள் விநியோகிப்பாளர் சங்கச் செயலர் மொ.தேவகுமார், பெரிய மார்க்கெட் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எ.சதாசிவம், செயலர் வி.இராமலிங்கம், வணிக அவை உறுப்பினர் ஏ.எஸ்.முகமது நிஜாம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments: