Sunday, December 16, 2007

புதுச்சேரி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் குற்றச் செயல்கள் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பாவாடைராயன் ஆகியோர் 14-12-2007 அன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த 12-12-2007 அன்று மாலை 6.30 மணியளவில், அரியாங்குப்பம் இராவணன் படிப்பகத்தில் அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், இரா.சு.வெங்கடேசபெருமாள், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, கொள்கைப் பரப்புச் செயலாளர் பாவாடைராயன், மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் இர.அபிமன்னன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் சு.கந்தவேலு, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை பெ.பாலமுருகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள்:

1) முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் சட்டத்திற்கு புறம்பாகவும், குற்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து, புதுச்சேரி அரசு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

2) சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கோடு புதுச்சேரி அரசு செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தவறு செய்யும் அதிகாரிகள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மக்கள் அச்சமின்றி வாழ ஆவன செய்ய வேண்டும்.


3) வில்லியனூர், கணுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி என்பவரின் டாடா சுமோ வண்டியை அச்சுறுத்தி, மிரட்டி பறித்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிய வேண்டுமென தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்ந்தீமன்றம் கடந்த 16-11-2007 அன்று உத்தரவிட்டுள்ளது. உயர்நிதீமன்ற உத்தரவை மதித்து உடனடியாக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

4) மேற்சொன்ன வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், முதல் தகவல் அறிக்கைகூட பதியாமல் புகார் கொடுத்தவரை அச்சுறுத்தி, புகார் மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்று தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எழுதி வாங்கியுள்ளனர். இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ள தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் கந்தநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய தேங்காய்த்திட்டு பெண்கள் உட்பட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அடக்குமுறை ஏவிய போலீஸ் அதிகாரிகள் மீது புதுச்சேரி அரசு உடனடியாக வழக்குப் பதிய வேண்டும். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

6) தேங்காய்த்திட்டு இளைஞர் பாலா (எ) தெவசிகாமணி கொலையை மூடி மறைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்று போலீசார் மீது புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து விசாரித்த துணை ஆட்சியர் விஜய்குமார் பித்ரி அரசுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.

7) புதுச்சேரியில் சட்டத்திற்குப் புறம்பாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள போலீஸ் அதிகரிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும். இது குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட வேண்டும்.

8) மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 20-12-2007 வியாழனன்று, காலை 10 மணிக்கு, புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆட்சியரிடம் மனு அளிப்பது. மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) உள்ளிடவர்களுக்கும் மனு அளிப்பது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

No comments: