Friday, September 20, 2024

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி தூக்குப் போட்டுத் தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (20.09.2024) விடுத்துள்ள அறிக்கை:

காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை சிறைவாசி விவேகானந்தன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்.

சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விசாரணை சிறைவாசியான விவேகானந்தன் (வயது 56) காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 16.09.2024 அன்று கழிவறையில் துண்டால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றக் காவலில் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு அரசும், சிறைத்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். சிறையில் பணியில் அலட்சியமாக இருந்த சிறைத்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 08.06.2024 அன்று காரைக்கால் கிளைச் சிறையில் ஆயுள் தண்டனைச் சிறைவாசி பிரதீஷ் கைலியால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரையில் அரசும், சிறைத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுச்சேரி சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என்பதோடு, இவை அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். சிறைச்சாலைகள் சிறைவாசிகளைத் திருத்தும் மையங்களாக (Correctional Centers) இருக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது.

மேலும், சிறைவாசி விவேகானந்தன் தற்கொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

சிறைவாசி விவேகாந்தன் உயிரிழப்பிற்கு அரசும், சிறைத்துறையும் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார் அனுப்பி உள்ளோம்.

No comments: