Sunday, July 06, 2025

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (06.07.2025) விடுத்துள்ள அறிக்கை: 

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

புதுச்சேரி அரசின் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலராக இருந்தவர் கண்ணன். இவர் சென்ற மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்குப் பணி நீட்டிப்பு வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. 

விஜிலன்ஸ் துறையின் ஓய்வுபெற்ற சார்புச் செயலர் கண்ணன் பணியில் இருந்தபோது ஊழல், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக காப்பாற்றி உள்ளார். 

குறிப்பாக சட்டத்துறைச் சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் ரயில் நிலையத்திற்கு எதிரே ரூ.5 கோடி மதிப்பிலான இடத்தில் சொகுசு தங்கும் விடுதி, பல வீட்டு மனைகள் ஆகிய சொத்துக் கணக்குகளைக் காட்டாமல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளார் என பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner) உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்பினோம். இப்புகார்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமைக் கண்காணிப்பு அதிகாரியான (Chief Vigilance Commissioner) தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல்துறை (Vigilance and Anti-Corruption Police Unit) ஆய்வாளர் என்னிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றார். மூன்று முறை சம்மன் அனுப்பியும் மேற்சொன்ன ஜான்சி (எ) ஜனாஸ் ராபி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதோடு காவல்துறை அதிகாரிகளையே மிரட்டினார். 

இந்நிலையில், சார்புச் செயலர் கண்ணன் இக்கோப்பைக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் இருந்து திரும்பப் பெற்று, சட்டத்துறைச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அக்கோப்பை முடித்து வைத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட புகாரை முடித்து வைக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருந்தவர் சார்புச் செயலர் கண்ணன். இது குற்றமிழைத்த சார்புச் செயலர் ஜான்சி (எ) ஜனாஸ் ராபியை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் செயலாகும். 

எனவே, பணியிலிருந்த போது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் கண்ணுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம். 

மேலும், அரசு காலம் தாழ்த்தாமல் விஜிலன்ஸ் துறையின் சார்புச் செயலர் பதவிக்கு திறமையான, நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும். 

இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய கண்காணிப்பு ஆணையர் உள்ளிட்டோருக்குப் புகார் அனுப்ப உள்ளோம்.

Saturday, July 05, 2025

'மக்கள் உரிமைப் போராளி' கோ.நேரு (எ) குப்புசாமி..


புதுச்சேரி உருளையன்பேட்டை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி அவர்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத் தகுதிக்கான போராட்டத்தில் நெருங்கிப் பழகி வருகிறேன். அரசியல் சூழ்ச்சி, கரவு இல்லாத மிகவும் வெளிப்படையான மனிதர். அவரை குறை கூற வேண்டும், விமர்சிக்க வேண்டுமென்று சில அரைவேக்காடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அவை மக்களிடையே எடுபடவில்லை. 

சென்ற 27.06.2025 அன்று, தில்லி ஜந்தர் மந்தரில் மாநிலத் தகுதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். ஏறக்குறை 250 பேரை ஒன்று திரட்டி, தில்லிக்கு அழைத்துச் சென்று, எவ்வித விமர்சனமும் இல்லாமல் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமை அவரை மட்டுமே சாரும். 

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ரயில் கட்டணம், சிறப்பான தங்குமிடம், உணவு என அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தவர். பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் வந்த தோழர்களையும் தாயுள்ளத்தோடு கவனித்த கொண்டது என்றும் மறக்கவியலாது. 

தில்லி மாநிலத் தகுதிப் போராட்டம் மக்களிடையே பெருமளவில் சென்றடைந்துள்ளது. ஊடகங்கள் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் போராட்ட செய்திகள் நிரம்பி வழிந்தன. தில்லியிலிருந்து திரும்பியவுடன் இன்றைக்கும் பலரும் பார்க்கும் இடமெல்லாம் கைக் குலுக்கிப் பாராட்டி வருகின்றனர். 

புதுச்சேரி பிரெஞ்சுக் காலத்தில் மாநிலமாக இருந்தது. 1.11.1954-இல் பிரெஞ்சு அரசிடமிருந்து விடுதலைப் பெற்றது (De Facto Merger).16.08.1962-இல் இந்திய ஒன்றிய அரசோடு இணைந்தது (De Jure Transfer Day). அப்போது ஏற்படுத்தப்பட்ட பிரெஞ்சிந்திய ஒப்பந்தம் செயல்பாட்டிலேயே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. பிரதமர் நேரு அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. பின்னர் யூனியன் பிரதேச சட்டம் 1963 மூலம் யூனியன் பிரதேசமாக சுருக்கப்பட்டது. இன்றைக்குப் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் ஏதுமின்றி, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசின் நேரடி ஆட்சி நடக்கிறது. 

இதை எதிர்த்துப் போராடும் அரசியல் வலிமையின்றி முதலைமைச்சர் ந.ரங்கசாமி உள்ளார். சட்டமன்றத்தில் மாநிலத் தகுதி வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 16ஆவது தீர்மானம் இன்னமும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மாநிலத் தகுதிக்காக 1 இலட்சம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தவிர்த்து பாஜகவினரும், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் தவிர்த்து திமுகவினரும் கையெழுத்திடவில்லை. பாஜகவும், திமுகவும் ஓரணியில் இருப்பது ஆச்சரியமில்லை. 

கோ.நேரு அவர்கள் என் பால் மிகுந்த அன்பும், அக்கறையும் உடையவர். தில்லி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை அணியும்படி எடுக்கப்பட்ட முடிவு பற்றி அறியாமல் நான் வண்ணச் சட்டை அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு,  வெள்ளைச் சட்டை ஒன்றை அளித்து அணியச் செய்தது நெகிழ்வான தருணம். 

சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு (எ) குப்புசாமி மாநிலத் தகுதிக்காக மட்டுமல்ல, மக்கள் பிரச்சனைகளுக்காகவும் சமரசமின்றி போராடி வருபவர். அவரின் அர்ப்பணிப்பான மக்கள் தொண்டிற்கு எந்தக் கொம்பனாலும், கொம்பியாலும் கலங்கம் கற்பித்துவிட முடியாது.