Wednesday, July 11, 2007

போலீஸ் தொல்லையால் அரவாணி தற்கொலை : ரூ.5 லட்சம் நட்டஈடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

போலீசாரின் பாலியல் தொல்லையால் அரவாணி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது சகோதரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் காய்கறி கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருட்டு புகார் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் இவரை கடந்த மே 2006-இல் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியெ வந்த அவர் தினமும் வியாசர்படி காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டு வந்தார்.

தினமும் காலை 8 முதல் இரவு 11.30 மணி வரை அவரை காவல் நிலையதிலேயே தங்க வைத்த போலீசார் சின்னபாண்டியன், திருநாவுக்கரசு, குமார், ரவி, சம்பத் ஆகியோர் அரவாணியான பாண்டியனை பாலியல் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். இந்த கொடுமை தாங்காமல் தன் அக்கா ஜெயலட்சுமியிடமும் போலிசாரிடமும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

இதன் பின்னரும் போலிசாரின் பாலியல் தொந்தரவு தொடர்ந்ததால் பாண்டியன் போலீஸ் நிலையம் முன்பே உடலில் மண்எண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார். படுகாயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சைதாப்பேட்டை நீதிபதியிடம் போலிசார் தன்னை துன்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக மரண வாக்குமூலம் அளித்தார். இதனிடையே சிகிச்சைப் பலன் அளிக்காமல் கடந்த 29.6.2006 அன்று மரணமடைந்தார்.

போலீசாரின் பாலியல் கொடுமையால் தனது சகோதரர் மரணம் அடைந்தார் என்றும், எனவே தனக்கு ரூ.10 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அவருடைய சகோதரி ஜெயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் விசாரித்தனர். கொடுமை தாங்காமல் அரவாணி பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது சகோதரிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நட்டஈடு வழங்க வேண்டுமென்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

மேலும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

“வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்நீதிமன்றம் பரிசீலித்தது. போலீஸ் அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரங்கள் உள்ளன. பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது 5 போலீசாரின் நடத்தையால் தான் நடந்துள்ளது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

துன்புறுத்தலுக்கு ஆளானதால் பாண்டியன் மரணம் அடைந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.5 லட்சத்தை அரசு நட்ட ஈடாக வழங்க வேண்டும். சின்னபாண்டியன் உள்பட 5 போலீசார் மீதும் ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நட்டஈடு தொகையை 5 போலீஸ்காரர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் முடிவைப் பொறுத்தது.’’

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி.கீதா ஆஜராகி இத்தீர்ப்பை பெற்றுத் தந்ததின் மூலம் நீதியை நிலைநாட்டியுள்ளார்.

1 comment:

Anonymous said...

Its very sad to read the news about Aravani's suicide. Police atrocities are brutal now a days.

But the Court has given some relief.

Thanks for the news Sugumaran.