Showing posts with label போலி மருந்து வழக்கு. Show all posts
Showing posts with label போலி மருந்து வழக்கு. Show all posts

Monday, March 09, 2026

போலி மருந்து வழக்குகளை திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (09.03.2026) விடுத்துள்ள அறிக்கை:

போலி மருந்து வழக்குகளை நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம். 

புதுச்சேரியில் அனுமதி இல்லாமல் போலி மாத்திரைகள் தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர். போலி மருந்துகள் வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்தனர். மருந்துக் கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். 

போலி மருந்து வழக்குகளில் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-இன்படி காவல்துறை வழக்குப் பதிவு செய்ய முடியாது, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைதான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-இன்படி 4 வழக்குகளை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

இதனிடையே, போலி மருந்து வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 03.03.2026 அன்று சிபிஐ போலி மருந்துகள் குறித்து 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சட்டத்துறை அதிகாரி ஒருவரின் வாய்மொழி அறிவுறுத்தலின்படி, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மேற்சொன்ன 4 வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றுள்ளார். அச்சட்டத்துறை அதிகாரி போலி மருந்து வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதால், வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், அச்சட்டத்துறை அதிகாரி வழக்குகள் நிலுவையில் இருந்த நீதிமன்றத்திலும் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளார். இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது. 

நாட்டையே உலுக்கிய போலி மருந்து வழக்குகளை தன்னிச்சையாக திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இதுகுறித்து, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், சட்டத்துறைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனு அனுப்பியுள்ளோம்.