Wednesday, January 16, 2008

ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் - உச்சநீதிமன்றம் நிபந்தனை


புகைப்படம்: கோ.சுகுமாரன்
(2007-இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது எடுத்தப் படம்)


ஜல்லிக்கட்டுக் காளைகள் மைதானத்திற்குள் நடந்துதான் வர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கம். இதில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு கடந்த 11-01-2008 அன்று தடை விதித்தது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தடையை மீறி பல கிராமங்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்தன. அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 15-01-2008அன்று பொங்கல் விழா கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தடையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு 15-01-2008 அன்று தலைமை நீதிபதி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது 400 ஆண்டு காலமாக பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்குத் தடை விதிப்பதால் மக்களின் மத உணர்வைப் பாதிக்கும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தடையை நீக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு நிலைப் பாதிக்கப்படும். தடையை மீறி வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமங்களில் மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதையும் தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத உணர்வு பற்றிய பிரச்சினையை இழுத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.வி. ரவிந்திரன், ஜே.எம். பச்சால் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் கூறுகையில், "11-ஆம் நாளன்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி (தடையை நீக்க) தமிழக அரசு கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மத உணர்வை தமிழக அரசு இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இன்னொரு வழக்கில்
(சேது சமுத்திரத் திட்ட வழக்கு) அவர்களது (தமிழக அரசு) நிலை என்ன என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இன்னொரு வழக்கு என்ன என்பதை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை'' என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது. அவை:

1) ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நல்ல உடல் நிலையில் தான் உள்ளன என்று கால்நடைத்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்.

2) காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

4) காளைகளை ஓட ஓட துரத்தக் கூடாது. அவை மைதானத்துக்கு நடந்து தான் வர வேண்டும்.

5) காளைகள், பார்வையாளர்கள் காயமடைவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

6) ஜல்லிக்கட்டு நடத்துவோர் 3 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

7) விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

8) ஜல்லிக்கட்டு நடந்த பின் 2 வாரங்களில் ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வெளிநாட்டுப் பெண் போராட்டம்:

இதற்கிடையே இன்று (16-01-2008) கோவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தி சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடியபடி ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினார்.

'பீட்டா' விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண் காந்தி பூங்காவிற்குச் சென்று காந்தி சிலையின் கண்கள் மீது கறுப்புத் துணியைக் கட்டி விட்டு, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்குமாறு முழக்கமிட்டுச் சென்று விட்டார்.

இது குறித்து காலதாமதமாக கேள்விப்பட்ட போலீசார் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பலத்தப் போலீசு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: