Saturday, March 08, 2008

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சர் வல்சராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!


விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் 07-03-2008 அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு அளித்த மனு:

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிப்பது என்பது வழக்கு விசாரணைக்குப் பல்வேறு வகையில் குந்தகம் விளைவிக்கும் என அஞ்சுகிறோம். அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கு ஆவணங்களைத் திருத்தவும், சாட்சிகளைக் கலைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. தார்மீக அடிப்படையிலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

எனவே, நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் தொடர்ந்து பதவியில் நீடிப்பதால், புதுச்சேரி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையின் விசாரணை முறையாகவும், நேர்மையாகவும் நடக்காது எனக் கருதுகிறோம்.

மேலும், ஊழல் அமைச்சர் இ.வல்சராஜ் ஆதரவாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வி.நாராயணசாமியும், சில அமைச்சர்களும் வெளிப்படையாகவே ஆதரவளிப்பதோடு, ஊழலுக்குத் துணைப் போவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

எனவே, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டு, வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருக்கிற நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள அமைச்சர் இ.வல்சராஜ் நடத்தும் கூட்டங்களில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையைப் பொறுப்பில் வைத்திருக்கும் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துக் கொள்வது ஏற்புடையதாக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரும், புலன் விசாரணை மேற்கொள்ளும் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரியும் ஒன்றாக ஒரே இடத்தில் கூடிப் பேசுவது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, இதுபோன்ற கூட்டங்களில் தலைமைச் செயலர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொள்வதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வரும் 13-03-2008 வியாழனன்று புதுச்சேரி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Notebook, I hope you enjoy. The address is http://notebooks-brasil.blogspot.com. A hug.