Thursday, December 11, 2008

புதுச்சேரி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 11.12.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான வருவாய்த் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

புதுச்சேரி பகுதியான ஏனாமில் தனக்குச் சொந்தமான இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு சட்டத்திற்குப் புறம்பாக, முறைகேடாக அராசாங்க நிதியை ஒதுக்கியதன் மூலம் ஊழல் புரிந்துள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டிற்கு ஆளானவர் புதுச்சேரி அரசின் உயர்பொறுப்பில் உள்ளவர் என்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாமல் போனதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டிய முதலமைச்சர் வைத்திலிங்கம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை பாதுகாக்கும் நோக்கோடு அனைத்து அமைச்சர்களையும் உடன் வைத்துக் கொண்டு பேட்டியளித்தது நீதிமன்ற விசாரணையை திசை திருப்புவதோடு, ஊழலை மூடிமறைக்கும் செயலாகும்.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேர்மையாக, முறையாக நடைபெற வேண்டுமானால், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், அவரை பதவியை விட்டு நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment:

Che Kaliraj said...

oolal perutha arasialvathikal india muzhuvathum ullanar. yaar avarkalai ethirtu poraduvathu, appadi poradinaal enna vilaivu nerum enru kadantha kala varalaaru namakku kaattikkonduthan irukkirathu? naam enna seithom nattukku?