Saturday, July 04, 2009

குற்றவாளிகளை ஜாமீனில் விட நீதிபதியை நிர்பந்தம் செய்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ம்ற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு 03.07.2009 அன்று அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரையில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அவரது மகன் கிருபா ஸ்ரீதர் ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், மேற்சொன்ன டாக்டர் மற்றும் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது கடந்த 30.06.2009 அன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி ஆர்.ரகுபதி அவர்கள், ‘மனுதாரர்களுக்கு சாதகமாக உத்தரவிட மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை நிர்பந்தித்தார்’ என கூறியுள்ளார். இந்த செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நீதித்துறையின் செயல்பாட்டில் இந்த தலையீடு குறித்து நீதிமன்றத்தில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் தகவல் தெரிவித்த நீதிபதிக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மேற்சொன்ன நீதிபதி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட ஆவன செய்ய வேண்டுகிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடப்பேன் என பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஒருவரால் நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவாலுக்கு இந்திய அளவில் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சரின் இந்த செயல் தண்டனைக்குரிய நீதிமன்ற அவமதிப்பு எனக் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா அவர்கள் ‘இதுபோன்ற அதிகாரம்மிக்க, உயர் பொறுப்பிலுள்ள பலமிக்கவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சிறு குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதில் பொருளில்லை’ எனக் கூறியுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நீதிபதிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும் இச்சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் திருத்திய மோசடியில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் கூட்டாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடியை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக தேர்வுக் கட்டுபாட்டுத் துறை ஊழியர் ஜெயராமன் கடந்த 20.05.2008 அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் குற்றவாளிகள் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இறந்து போனவரின் அண்ணன் துரைராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன் தம்பி கொலையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சம்பத், மற்றும் கெளரிபாய் உட்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.

மேலும், மேற்சொன்ன ஜெயராமன் 18.02.2008 அன்று தற்கொலைக்கு முயன்று பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவரிடம் காலாபட்டு போலீசார் ஒரு மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றனர். அதில், மேற்சொன்ன இருவரும் மதிப்பெண் மோசடி குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி தன்னை வற்புறுத்தியாதாக கூறுயுள்ளார். அவரின் வாக்குமூலம் இன்றைக்கும் குற்றாவாளிகளை வெளிப்படுத்தும் மரண வாக்குமூலமாக திகழ்கிறது.

எனவே, புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும், இம்மோசடியை அமபலப்படுத்திய பல்கலைக்கழக ஊழியர் ஜெயராமன் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவும் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

No comments: