Thursday, August 27, 2009

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட அதிகாரி மாற்றம் - கண்டனம்!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 26.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்ட காரணத்தினால், துணை ஆட்சியர் விஜயகுமார் பித்ரியை மிசோரோம் மாநிலத்திற்கு மாற்றம் செய்து, உடனடியாக அவரை பணியிலிருந்து விடுவிக்க கட்டாயப்படுத்தும் அரசின் பழிவாங்கும் போக்கை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரி வடக்குப் பகுதியின் துணை ஆட்சியராக இருப்பவர் விஜயகுமார் பித்ரி. கடந்த 2 ஆண்டு காலமாக இவர் புதுச்சேரியில் நேர்மையாகவும், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தும் பணியாற்றி வந்துள்ளார்.

1973-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உபரி நிலங்களில் 125 ஏக்கர் நிலத்தை 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது துணிச்சலான, உறுதியான நடவடிக்கையால் கையகப்படுத்தியுள்ளார். இவரின் முயற்சியால் டி.என்.பாளையம், கிருமாம்பாக்கம், தவளகுப்பம், மணவெளி, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள 82 இடங்கள் அரசுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நிலம் கையகப்படுத்தப்படுவதை கைவிட வேண்டும் என ஆட்சியாளர்களின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் சட்டப்படி செயல்பட்ட காரணத்தினால் இப்போது அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விஜயகுமார் பித்ரி பதவியேற்ற 2 ஆண்டு காலத்திற்குள் கடந்த 1977-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள சட்டம்–ஒழுங்கு சம்பந்தப்பட்ட சுமார் 700 வழக்குகளை விசாரித்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் ரூ. 5000 மதிப்பீட்டில் பல்வேறு கிராமங்களுக்கு சுமார் 419 வீடுகளுக்கு கழிவறைகள் கட்டித் தந்துள்ளார்.

இவ்வாறு மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தி செயல்பட்ட விஜயகுமார் பித்ரியின் மாற்றல் உத்தரவை ரத்து செய்து அவரை புதுச்சேரியிலேயே பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் நலன் கருதி அரசை வலியுறுத்துகிறோம்.

No comments: