Friday, August 07, 2009

முஸ்லீம் இடஒதுக்கீட்டை நிறைவேற முடியாத சூழலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி விட்டது!

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 07.08.2009 அன்று விடுத்துள்ள அறிக்கை:

முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து பட்ஜெட்டில் அறிவித்ததில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதன் மூலம் முஸ்லீம் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த முடியாத சூழலை ஏற்படுத்தி, அம்மக்களை ஏமாற்றும் புதுச்சேரி காங்கிரஸ் அரசை ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டில் முஸ்லீம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1 சதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் 1.5 சதமும் எடுத்து அளிக்கப் போவதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்ததை ரத்து செய்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அம்மாநில அரசு பிற்படுத்தப்பட்டோரில் உள்ள மூஸ்லீம்களை கண்டறிந்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

தமிழக அரசும் நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முஸ்லீம்களை தனியாக பிரித்து அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி முஸ்லீம் இடஒதுக்கீட்டில் குளறுபடிகளை செய்து அம்மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லீம் மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள போது அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து 1.5 சதவீதம் எடுத்து இடஒதுக்கீடு அளிப்பது சட்டவிரோதமானது. சமூக நீதிக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முஸ்லீகளுக்கு சட்டரீதியாக முறைப்படி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால், அவர் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய பரிந்துரைப்படி அரசு இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் இடஒதுக்கீடு பற்றி எந்தவித அடிப்படையும் அறியாதவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கோஷ்டிக்கு ஒருவர் என உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களாக சமூக நீதியில் அக்கறையுள்ள, தெளிவு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.

முஸ்லீம் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். ஆனால், அதனை சட்ட ரீதியாகவும், சமூக நீதி அடிப்படையிலும் செய்ய வேண்டியது அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்ய வேண்டும்.

பிந்தங்கியுள்ள முஸ்லீம் மக்களுக்கு நீதியரசர் சச்சார் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும், பிரதமர் அறிவித்துள்ள 15 அம்ச திட்டங்களையும் நிறைவேற்ற புதுச்சேரி அரசு ஆவன செய்ய வேண்டும்.

No comments: